http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 4 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :07 & 08. யோகம் & ஞானம்.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
==========================================(037+010+010 = 057)
தந்திரம் 5-பதிகம்-7. யோகம்-பாடல்கள்:010விளக்கங்களுடன்
தந்திரம் 5-பதிகம்-8. ஞானம்-பாடல்கள்:010
விளக்கங்களுடன்

ஐந்தாம் தந்திரம்-பதிகம் எண்:07. யோகம் (பாடல்கள்:010) 


பாடல் எண் : 01
நெறிவழி யேசென்று நேர்மையுள் ஒன்றித்
தறிஇருந் தாற்போலத் தம்மை இருத்திச்
சொறியினும் தாக்கினும் துண்ணென் றுணராக்
குறிஅறி வாளர்க்குக் கூடலு மாமே.

பொழிப்புரை  வளி நிலை (பிராணாயாம) முறைப்படியே மூலாதார முதலிய ஆறு ஆதாரங்களிலும் உணர்வாய் ஏறிச்சென்று இறுதியில் சிவனது அருவத் திருமேனியில் நிலைத்து நின்று, ஊன்றி நிறுத்தப்பட்ட தூண்போலும்படி தமது உடலை நேராக நிமிர்த்துச் சிறிதும் அசைவற நிறுத்தி, அதனைப் பிறர் கீறினாலும், தாக்கினாலும் அவற்றால் உணர்வு  பிறழ்ந்து விரைய அவரை நோக்குதல் இல்லாது, தியானப்பொருள் ஒன்றையே உணர்ந்திருக்க வல்ல மாயோகிகட்கே அந்தத் தியானப் பொருளாகிய சிவனை அடைதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 02
ஊழிதொ றூழி யுணர்ந்தவர்க் கல்லது
ஊழிதொ றூழி உணரவுந் தானொட்டான்
ஆழி அமரும் அரிஅயன் என்றுளார்
ஊழி முயன்றும்ஓர் உச்சியு ளானே.

பொழிப்புரை யோகப் பயிற்சியால், பல ஊழிகள் செல்லவும் எடுத்த உடம்பு நீங்காது நிற்க, அதன்கண்  நின்று அவ்வூழிகளைக் காண வல்லவர்க்கல்லது, ஊழிகள்தோறும் காரணக் கடவுளர்களது தொழிலிற்பட்டுப் பிறந்து இறந்து உழல்பவர்கட்கு அப்பிறப்புக்களில் பல்லூழிகள் சென்றாலும் அவர் தன்னை உணர நில்லான் சிவன். பாற் கடலில் பள்ளி கொள்பவனாகிய மாயோனும், பிரமனும்` என்று சொல்லப்பட்ட தலைமைத் தேவர்களே பல்லூழிக் காலம் தேடியும் காணவராமல் அவர்களது ஆற்றலுக்கு அப்பாற்பட்டு அவன் நின்றதே அதற்குச் சான்று.
==============================================
பாடல் எண் : 03
பூவினிற் கந்தம் பொருந்திய வாறுபோல்
சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது
ஓவியம் போல உணரவல் லார்கட்கு
நாவி அணைந்த நடுதறி ஆமே.

பொழிப்புரை :  பூ மலர்தற்குமுன் அதன் மணம் அதனுள் அடங்கியிருத்தல் போல, உயிர் பக்குவப்படுதற்கு முன் அதன் அறிவுக்கு அறிவாய் அதனுள்ளே தோன்றாதிருந்த சிவம், பக்குவத்தால் உள்ளமும், உடலும், எழுதப்பட்ட ஓவியம் போல அசைவற்று நிற்கப் பெற்ற யோக உணர்வினர்க்கு வெளிப்பட்டு விளங்கும். அப்பொழுது அவர்களது உள்ளமும், உடலும் புனுகு பூனையால் கூடப்பட்ட மூங்கில் தறி அதன் மதநீரால் மணம் பெற்றுத் திகழ்ந்தது போலச் சிவமணம் கமழப்பெற்றுச் சிவதனுவும், சிவகரணமுமாய் விளங்கும்.
==============================================
பாடல் எண் : 04
உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர்
கந்த மலரிற் கலக்கின்ற நந்தியைச்
சிந்தை உறவே தெளிந்திருள் நீங்கினால்
முந்தைப் பிறவி மூலவித் தாழுமே.

பொழிப்புரை  உலகீர்! நீவீர், உய்திக்குக் காரணமாய்ப் பொருந்தியுள்ள பொருளை அறியவில்லை. ஆயினும், `யாம் உய்ந்தோம், உய்ந்தோம்` என்று மயங்கி உரைக்கின்றீர். மலரில் மணம்போல உம்மிடத்து உள்நின்று தோன்றக்கூடிய சிவனை, யோக நெறியால் உள்ளத்தில் பொருந்தக்கண்டு, அதனால் உம் மயக்கம் நீங்கப் பெற்றால், தொன்று தொட்டு வருகின்ற பிறவிக்கு மூல காரணமாய் உள்ள ஆணவ மலம், கீழ்ப்பட்டு அடங்கிவிடும்.
==============================================
பாடல் எண் : 05
எழுத்தொடு பாடலும் எண்ணெண் கலையும்
பழித்தலைப் பாசப் பிறவியை நீக்கா
அழித்தலைச் சோமனோ டங்கி அருக்கன்
வழித்தலைச் செய்யும் வகைஉணர்ந் தேனே.

பொழிப்புரை  இயல்நூற் கல்வி, பாடல்களை ஓதுதல், மற்றும் அறுபத்து நான்கு கலைகளையும் பயிலல் இவையெல்லாம் இகழ்ச்சிக்குரிய பாசத்தால் விளையும் பிறவியை நீக்கமாட்டா. அதனால், நான் அப்பிறவியை அழிக்கும் முறையை. `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` எனப் பெயர் பெறும் மூச்சின் இயக்கங்களை நெறிப்படச் செய்யும் வகையால் அறிந்து கொண்டேன்.
==============================================
பாடல் எண் : 06
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ னாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்யுணர் வாகும்
விரும்பிநின் றேசெயின் மெய்த்தவ மாகும்
விரும்பிநின் றேசெயின் விண்ணவ னாகுமே.
பொழிப்புரை யோகத்தைத் தியானப் பொருளிடத்து வைக்கும் பேரன்புடன் செய்த வழியே அதனால் விளையத்தக்க பயன்கள் யாவும் விளையும்.
==============================================
பாடல் எண் : 07
பேணிற் பிறவா உலகருள் செய்திடும்
காணில் தனது கலவியு ளேநிற்கும்.
நாணில் நரக நெறிக்கே வழிசெயும்
ஊனிற் சுடும்அங்கி உத்தமன் றானே.

பொழிப்புரை  உடம்பினுள் நின்று வெப்பத்தைத் தருகின்ற மூலாக்கினியாய் உள்ள சிவன், அவ்வக்கினியை அணையாது ஓம்பி நின்றால் வீட்டுலகத்தை அளித்தருள்வான். அவ்வக்கினியை எழுப்பிக் காணும் அளவில் நின்றால், அங்ஙனம் நிற்கும் யோகிக்கு அவன் உறவான பொருளாய்ப் பல நலங்களைச் செய்தருள்வான். இவ்விரண்டும் இன்றி, உலகரது பழிப்பு நோக்கி அந்நெறியிற் செல்ல ஒருவன் கூசுவனாயின், அவன் நரகத்தை நோக்கிப் போகும் வழிக்கே வகையைச் சிவன் உண்டாக்குவான்.
==============================================
பாடல் எண் : 08
ஒத்தசெங் கோலார் உலப்பிலி மாதவர்
எத்தனை ஆயிரர் வீழ்ந்தனர் எண்ணிலி
சித்தர்கள் தேவர்கள் மூவர் பெருமையாய்
அத்தன் இவனென்றே அன்புறு வார்களே.

பொழிப்புரை யோகத்தில் விருப்பங்கொண்டு, மேற்கூறியவாறு மூலாக்கினியை ஓம்பி நின்றவனைத் தனது பூத உடலை விட்டுப் போவதற்குள், நீதிக்கு ஒத்த செங்கோல் அரசராயும், அமர முனிவ ராயும் உள்ளோர் எத்தனை ஆயிரவர் இறந்தார்கள்! எண்ணில்லாதவர் இறந்தார்கள். அதனால், சித்தர், தேவர், மும்மூர்த்திகள் ஆகியோரும் மேற்கூறிய யோகியை, `இவனே சிவன்` என்று பெருமையாகப் பேசி, அவனிடத்து அன்புடையராவர்.
==============================================
பாடல் எண் : 09
யோகிக் கியோகாதி மூன்றுள தொண்டுற்றோற்
காகத் தகுங்கிரியை ஆதி சரியையாம்
தாகத்தை விட்ட சரியைஒன் றாம் ஒன்றுள்
ஆகித்தன் பத்தியுள் அன்புவைத் தேனே.

பொழிப்புரை  யோக நெறியில் நிற்பவனுக்கு, `யோகம், கிரியை, சரியை` என்னும் மூன்றும் செய்ய  உரிமை உண்டு. கிரியை நெறியில் நிற்பவனுக்கு, `கிரியை, சரியை` என்னும் இரண்டும் செய்ய உரிமை உண்டு. உலகியல் அவாவை விட்டுச் சரியையில் நிற்பவனுக்கு அஃது ஒன்றற்கு மட்டுமே உரிமை உண்டு. அங்ஙனமாயினும் எந்த ஒன்றில் அன்புடையவனாயினும் அவனது அன்பை நான் விரும்புகின்றேன்.
==============================================
பாடல் எண் : 10
யோகச் சமயமே யோகம் பலஉன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம்
யோகநிர் வாணமே உற்ற பரோதயம்
யோகாபி டேகமே ஒண்சித்தி உற்றலே.

பொழிப்புரை யோக நூல் பற்றி யோக வகைகள் பலவற்றையும் உணர்தல் `யோகத்தில் சரியை` எனப்படும். இயமம் நியமம் முதலிய எட்டு நிலைகளிலும் நிற்றல் `யோகத்தில் கிரியை` எனப்படும். உள்ளொளிக் காட்சி கிடைக்கப் பெற்று நிற்றல். `யோகத்தில் யோகம்` எனப்படும். மூன்றாம் தந்திரத்தில் `பரசித்தி` எனக் கூறப்பட்ட அவற்றைப் பெறுதல் `யோகத்தில் ஞானம்` எனப்படும்.
----------------------------------------------------------------------------------
தந்திரம் 5- பதிகம் 8. ஞானம்-பாடல்கள்: 010

பாடல் எண் : 01
ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.

பொழிப்புரை   ஞானத்திற்கும் மேலான ஓர் அறநெறி உலகத்தில் இல்லை. இருப்பதாகக் கருதும் சமயம் யாதேனும் உண்டாகுமானால், அது நல்ல சமயம் ஆகாது. ஞானத்தின் நீங்கிய எந்தச் சாதனங்களும் முடிநிலை முத்தியைத் தரமாட்டா. அதனால், ஞானத்திற் சிறந் தவர்களே மக்களுட் சிறந்தவராவர்.
==============================================
பாடல் எண் : 02
சத்தமும் சத்த மனமும் தகுமனம்
உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.
பொழிப்புரை  ஓசை முதலிய புலன் வகைகளும், அவற்றைப் பொறிகளின் வழிச்சென்று பற்றுகின்ற மனமும், பின்பு அம்மனம் பொதுப்படப்பற்றி ஐயுற்றதை ஒருதலையாகத் துணியும் புத்தியும், எவ்விடத்தும் எழுச்சியுற்று எவ்வுணர்வையும் உணரத் தூண்டுகின்ற அகங்காரமும். அம்மூன்றானும் பெற்ற தெளிவுணர்வைப் பதியக் கொண்டு பின்னும் நினைப்பதாகிய சித்தமும் என்னும் இவற்றினது இயல்பை நன்குணர்தலே ஓசை முதலிய ஐம்புலன்களையும் கடந்த ஞானிகள் பெற்ற ஞானமாகும்.
==============================================
பாடல் எண் : 03
தன்பால் உலகம் தனக்கரு காவதும்
அன்பால் எனக்கரு ளாவது மாவன
என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.

பொழிப்புரை   சிவனது வியாபகத்தில் உள்ள உலகம் சிவனது உடைமையும், அடிமையுமாய் அவனுக்கு உரித்தாதலை உணர் தலையே `ஞானம்` என்றும், சிவனிடத்து வைத்த அன்பு காரணமாக அவனது திருவருள் தமக்குக் கிடைக்கப் பெறுதலையே `சிவோகம் பாவனை` என்றும் ஞானிகள் கூறுவார்கள். அவ் இரண்டையும் பெற்றோர், அவற்றின் பயனாகப் பின்பு, அறியத்தக்க பொருளையே அறிந்து, அதில் அழுந்துவார்கள்.
==============================================
பாடல் எண் : 04
இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
வருக்கஞ் சராசர மாகும் உலகம்
தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.

பொழிப்புரை   மாறுபாடில்லாத ஞானத்தை ஓர்ந்துணர்ந்தவர்க்கு அவர் இருத்தற்குரிய பாதுகாவலான இடம் `பிரமம்` எனப்படுகின்ற சிவமே. ஏனெனில், உலகம் `இயங்கியற்பொருளும், நிலையியற் பொருளும்` என்னும் ஈரினமாய் நின்று உணர்வை அலைப்பனவாம். (ஆதலின் அவை அவர்க்கு இருத்தற்குரிய இடமாகா என்பதாம்.) ஆதலின், சிவ வியாபகத்தில் நிற்கின்ற பெருமகிழ்வோடு செய்கின்ற செயல்களே, எல்லா இன்பங்களையும் தருவனவாம்.
==============================================
பாடல் எண் : 05
அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.

பொழிப்புரை  தமது அறிவிற்குச் சிவனது அருளே முதலாதலை உணரும் உணர்வும், அவ்வுணர்வால் அதற்குட்டானே அடங்கி நிற்கும் அடக்கமும், அடங்கி, அதனைமறவாதுஉணர்கின்ற உணர்வால் பெருகுகின்ற அன்பும் என்னும் இவை ஒரு சேரக் கூடி நீங்கா திருக்கின்ற அந்த உள்ளமாகிய கோயிலிலே நீங்காதிருக்கின்ற பேரரு ளாளனாகிய சிவனது அருட்டிரு மேனி, அருட்குணம், ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடி இவைகளை மறவாதிருக்கின்ற முறையை உணர்ந்த ஞானிகட்கு இவ்வுலகமாகிய இருள் நீங்கி, ஞானமாகிய ஒளி பிரகாசிக்கும்.
==============================================
பாடல் எண் : 06
ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.

பொழிப்புரை  ஞானத்தை விரும்பி எழுச்சி பெற்ற உள்ளத்தில், பிராணவாயுவாகிய ஊர்தியை விரும்பி ஏறி மேலே செல்லும்பொழுது வழியில் எதிர்ப்படுகின்ற இடந்தோறும், சந்திர மண்டலத்திலிருந்து பெருகும் அமுத தாரை நிரம்பியிருக்கக் கண்டு, அதனால் உடற்கும், உள்ளத்திற்கும் வருவனவாகிய குறைகளைப்போக்கி நிலைபெற்று ஒளிமயமாக ஆகுங்கள்.
==============================================
பாடல் எண் : 07
ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
தானிக் குலத்தோர் சரியை கிரியையே.

பொழிப்புரை   ஞானத்தைத் தலைப்பட்டவனுக்கு, ஞானத்திற் சரியை முதலிய நான்கு படிகள் உள்ளன. நான்காவது படியிற் சென்று முற்றிய மௌன எல்லையை அடைந்தவனுக்குப் பின் இவை என்றும் வேண்டாவாம். ஞானத்தைத் தலைப்படுதற்குமுன் யோகத்தையே `ஞானம்` என மயங்கிச் சத்தி மண்டலத்திலே நின்று, அங்குள்ள சத்தியைத் தரிசித்தோர்க்கு அந்தச்சத்தி ஞானத்தைத் தருதலாகிய பயனைத்தரும். அதற்குக் கீழ் உள்ள ஆறு ஆதார சத்திகளை அடைந்தவர்கட்குக் கிடைக்கும் பயன் யோகத்தில் சரியை, யோகத்தில் கிரியை என்பனவேயாம்.
==============================================
பாடல் எண் : 08
ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.

பொழிப்புரை   ஞானத்தில் ஞானத்தை அடைந்தவனுக்கு, அந்த ஞானத்திற்குக் கீழுள்ள மூன்றும் முன்பே கைவந்தனவாம். ஞானத்தில் ஞானமாவது `யான், எனது` என்னும் ஞாதுரு ஞானங்கள் தோன்றாது, ஞேயம் ஒன்றேயாக அதனுள் அழுந்துதல். ஞானத்தில் யோகமாவது தத்துவாதீதத்தில் எல்லையற்ற சிவ ஒளியில் சேர்தல். ஞானத்தில் கிரியையாவது தத்துவக் கூட்டத்தினின்றும் விடுபடுமாற்றைச் சிந்தித்தல்.
==============================================
பாடல் எண் : 09
நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.

பொழிப்புரை  ஞானத்தில் ஞானம் முதலியவற்றை அடைவோன், முதற்கண் வினைக்கட்டு அற்றவனாயும், இரண்டாவது சிவஞானத் தால் ஞேயமாகிய சிவத்தைத் தரிசித்தவனாயும், மூன்றாவது மும் மலங்களின் வாசனையும் நீங்கிய நின்மலனாயும், முடிவில் சிவனை அனுபவமாய்ப் பெறுதலாகிய முத்தியை அடைந்த, முடிந்த பேறுடையவனாயும் விளங்குவன்.
==============================================
பாடல் எண் : 10
ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
ஞான விசேடமே நாடு பரோதயம்
ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
ஞானாபி டேகமே நற்குரு பாதமே.

பொழிப்புரை  ஞானத்திற் சரியை முதலிய நான்கையும் பெற்றோர் முறையே ஞான சமயி, ஞான புத்திரன், ஞான சாதகன், ஞான ஆசாரியன் என்பவராயும் நிற்பர்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

2 comments:

  1. அப்பப்பா! யோகம், ஞானம் பற்றி சீரான விளக்கங்கள். சித்தம் சிவனிடம் ஒன்றிவிடும் அருமையான பாடல்கள். விளக்கங்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துப் பதிவிற்கு மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் இனிய நண்பரே ஜெயச்சர் அவர்களே!! இதே போன்று சித்தர் சிவவாக்கியரின் 550 பாடல்களையும், விளக்கங்களையும் கண்டால், உங்களின் கருத்துப் பதிவு என்னவாயிருக்கும் என்று நினைக்கின்றேன். நேரம் இருப்பின் வலைப்பூவின் இணைப்பைச் சொடுக்கி சிவவாக்கியரின் பாடல்களை விளக்கங்களுடன் பார்க்கவும், ஒலிப் பேழையை சொடுக்கி பாடல்களை இனிய இசையில் கேட்கவும் செய்யுங்கள். மறவாமல் தங்களின் கருத்துப் பின்னூட்டத்தினையும் இட்டுச் செல்லும்படி கேட்டுக் கொள்கின்றேன். அன்புடன் கே.எம் தர்மா (முகநூல்)
      http://keyemdharmalingam.blogspot.in/search/label/SIVAVAAKKIYAM-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D
      http://sivavakiyar.blogspot.com/ நண்பர்களே லிங்கினை அழுத்தி சித்தர் சிவவாக்கியரின் சிந்தனை மற்றும் சிவனைப் பற்றிய 550 பாடல்களை இனிய சந்தத்தில் வேண்டும் பொழுது கேளுங்கள். மனதிற்கு மகிழ்வாக இருக்கும். ..அன்புடன் கே எம் தர்மா.
      ஓம் நமசிவய நமசிவய ஓம்!!!

      Delete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!