http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 10 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:14/1 காலச்சக்கரம் (பாடல்கள்:01-15/30) பாகம் I







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி........................பாடல்கள்: 016
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:14: காலச் சக்கரம்.................பாடல்கள்: 030

========================================================(185+030=215)
மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:14. காலச் சக்கரம் (பாடல்கள்:01-15/30 ) பகுதி-I
பாடல் எண் : 1

மதிவட்ட மாக வரையைந்தும் நாடி
இதுவிட்டிங் கீரா றமர்ந்த அதனால்
பதிவட்டத் துள்நின்று பாலிக்கு மாறும்
அதுவிட்டுப் போமாறும் ஆயலுற் றேனே. 

பொழிப்புரை :  திங்களினது சுற்றாக வரையறுக்கப்படுகின்ற ஐந்து பகுதிகளையும் முன்னே ஆராய்ந்து, பின்பு அதனை விடுத்து, ஞாயிறு பன்னிரண்டும் பொருந்திய அக் கூற்றினால் இறைவன் கால சக்கரத்துள் நின்று உடலைக் காக்கின்ற வகையையும், பின்பு அங்ஙனம் காக்கப்படுகின்ற உடலை விட்டு உயிர் போகின்ற வகையையும் இங்கு ஆராயத்தொடங்கினேன்.
=======================================
பாடல் எண் : 2
உற்றறி வைந்தும் உணர்ந்தறி வாறேழும்
கற்றறி வெட்டும் கலந்தறி வொன்பதும்
பற்றிய பத்தும் பலவகை நாழிகை
அற்ற தறியா தழிகின்ற வாறே.

பொழிப்புரை : உடற் கூற்றால் ஐம்புலன்களை ஐம்பொறிகள் பொருந்திப் பொதுவாக அறிகின்ற ஐந்தினாலும், பொறிகள் பொதுவாக அறிந்தவற்றை மனம் முதலிய உட்கருவினைப் பற்றி நின்று சிறப்பாக அறிகின்ற நிலையில் அந்த ஆறினாலும், மனம் சிறப்பாக அறிபவற்றில் உயிர் அழுந்தி நிற்கும் நிலையில் அந்த ஏழினாலும், உயிர்க்கு உறுதி தேட எண்ணி நூல்களைக் கற்கும் நிலையில் அந்த எட்டினாலும் கற்றவற்றை அநுபவமாக உணரும் நிலையில் அந்த ஒன்பதினாலும், அநுபவமாக உணர்ந்த நூற் பொருளைக் கடைப்பிடிக்கும் நிலையில் அந்தப் பத்தினாலும் இவ்வாறு பலவகைத் தொழிலால் உடலிற்கு அளந்த நாழிகை, கழிந்தது தெரியாமல் கழிந்து போவது இரங்கத்தக்கது.
=======================================
பாடல் எண் : 3
அழிகின்ற ஆண்டவை ஐயைஞ்சு மூன்று
மொழிகின்ற முப்பத்து மூன்றென்ப தாகும்
கழிகின்ற கால்அறு பத்திரண் டெண்ப
தெழுகின்ற ஈரைம்ப தெண்ணல் திருந்தே. 

பொழிப்புரை : உலகர்க்குப் பதின்மூன்றாண்டுகள் பயனின்றி இறக்கும் எல்லையாகவும், முப்பத்து மூன்று ஆண்டுகள், பலரும் இரங்கிப் பேச இறக்கும் எல்லையாகவும், அறுபத்திரண்டாண்டுகள் பயன் பெற்று இறக்கும் எல்லையாகவும் எண்பது ஆண்டுகளும், நூறாண்டுகளும் நிறைந்து முற்றிய எல்லையாகவும் கணக்கிடப்படுதல் கால சக்கரத்தின் முறையாகும்.
=======================================
பாடல் எண் : 4
திருந்து தினமத் தினத்தி னொடுநின்
றிருந்தறி நாளொன் றிரண்டிரு மூன்று
பொருந்திய நாளொடு புக்கறிந் தோங்கி
வருந்துத லின்றி மனைபுக லாமே. 

பொழிப்புரை : பிறந்த நட்சத்திரமும், அதனோடு ``இரண்டு, நான்கு, ஆறு`` என்பவற்றைக் கூட்ட வருகின்ற ``மூன்று, ஐந்து, ஏழு`` என்னும் எண்ணுமுறைக்கண் வருகின்ற நட்சத்திரங்களும் ஒழித்து மற்றைய நட்சத்திரங்களிலே, இல்வாழ்க்கைக்குரிய யாதொரு செயலையும் தொடங்குதல் பொருந்தும்.
=======================================
பாடல் எண் : 5
மனைபுகு வீரும் மகத்திடை நாடி
எனைஇரு பத்தஞ்சும் ஈரா றதனால்
தனையறிந் தேறட்டுத் தற்குறி யாறு
வினையறி யாறு விளங்கிய நாலே. 

பொழிப்புரை : ஞாயிற்றின் வட்டத்துள், `முப்பது நாள் ஒரு கூறாகப் பன்னிரண்டு கூறு கூடியது ஒருவட்டம்` என்று அறிந்து, அவ்வட்டம் சிலபோது, பன்னிரண்டு கூறும் கூட வருகின்ற முந்நூற்றறுபது நாள்களுக்கு மேல் ஆறு நாளும், சில போது நான்கு நாளும் கூடி நிற்றலையும் உங்கள் மனத்தில் நன்கு ஆராய்ந்து மேற்சொல்லிய செயல்களில் புகுவீராக.
=======================================
பாடல் எண் : 6
நாலுங் கடந்தது நால்வரும் நால்ஐந்தும்
பாலங் கடந்தது பத்துப் பதினைந்து
கோலங் கடந்த குணத்தாண்டு மூவிரண்
டாலங் கடந்ததொன் றாரறி வாரே. 

பொழிப்புரை : ஒருவன் பிறந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தானாயின், பின்னும் நான்கு நான்கு ஆண்டாக இருமுறை கடத்தல் வேண்டும். இனி, ஐந்து ஆண்டுகளைக் கடந்தானாயின், அப்பால் பின்னும் பத்து, பதினைந்து என்னும் ஆண்டுகளைக் கடத்தல் வேண்டும். எனவே, நான்கு, ஐந்து, எட்டு, பத்து, பன்னிரண்டு, பதினைந்து என்னும் ஆண்டுகள் வாழ்நாள் இடையறும் காலமாகும் என்பது அறியப்படும். பதினைந்துயாண்டு வரையில் ஒருவன் யோகத்தைத் தொடங்க இயலாது. ஆகவே, அதுகாறும் வாழ்நாளை நீட்டித்துக்கொள்ளுதலும் இயலாது. அதனால், இவ்வாறு, பிறந்து, ஆண்டுகள் பலவாக வளர்கின்ற உடம்பினை, உடம்பினை உடையதாகாத தன்மையுடைய ஒரு பொருளால் அருள்புரியப்பட்டு மேற்சொல்லிய ஆறு இடையறவுகளையும் (கண்டங்களையும்) கடந்த ஓர் அருமையை அறிகின்றவர் உலகில் யார் உளர்!
=======================================
பாடல் எண் : 7
ஆறும் இருபதுக் கையைஞ்சு மூன்றுக்குந்
தேறு மிரண்டு மிருபத்தொ டாறிவை
கூறு மதியொன் றினுக்கிரு பத்தேழு
வேறு பதிஅங்கண் நாள்விதித் தானே.

பொழிப்புரை : முதல் ஆறு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபதும், அடுத்த மூன்று திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத்தைந்தும், அடுத்த இரண்டு திங்கட்குத் தனித்தனி நாள்கள் இருபத்தாறும், இறுதி ஒருதிங்கட்கு நாள் இருபத்தேழும் என்று இவ்வாறு இறைவன் யோகத்திற்குரிய திங்களின் நாட்கணக்கை உலகியலுக்கு வேறாக வகுத்துள்ளான்.
=======================================
பாடல் எண் : 8
விதித்த இருபத்தெட் டொடுமூன் றறையாகத்
தொகுத்தறி முப்பத்து மூன்று தொகுமின்
பதித்தறி பத்தெட்டும் பாரா திகள்நால்
உதித்தறி மூன்றிரண் டொன்றின் முறையே. 

பொழிப்புரை : யோகத்தில் நிற்க விரும்புகின்ற நீ! தத்துவங்களைச் சுருக்கி எண்ண வேண்டின், அசுத்த தத்துவங்களில் மூன்று நீங்கலாக ஏனைய இருபத்தெட்டோடு, சுத்த தத்துவம் ஐந்தனையும் அங்ஙனமே கொண்டு, ``தத்துவம் முப்பத்து மூன்று`` என வைத்துக்கொள். இனி அத்தத்துவங்களில் இந்திரியம் பத்து சூக்கும தேகமாய் உள்ள எட்டு இவைகளையும் நிலம் முதலிய பஞ்ச பூதங்களில் அடங்கி நிற்பனவாகவே பாவித்துக்கொள். இனி நிலம் முதலிய அப்பூதங்கள் ஐந்தும் ஒன்றின் ஒன்று - அஃதாவது, ஐந்தாவது பூதமாகிய நிலம் நான்காவது பூதமாகிய நீரிலும், நான்காவது பூதமாகிய நீர் மூன்றாவது பூதமாகிய தீயிலும் இவ்வாறு முறையே தோன்றின என்பதை உணர்.
=======================================
பாடல் எண் : 9
முறைமுறை யாய்ந்து முயன்றில ராகில்
இறையிறை யார்க்கும் இருக்க அரிது
மறையது காரணம் மற்றொன்று மில்லை
பறையறை யாது பணிந்து முடியே. 

பொழிப்புரை : யோகம் முயலும்பொழுது இங்குச் சொல்லிய முறைகளை எல்லாம் முறையாக உணர்ந்து முயலாது, அவரவர் தாம் தாம் அறிந்தவாறே முயல்வார்களாயின், ஒருவர்க்கும் காலத்தைச் சிறிது வென்று நிலைபெறுதலும் இயலாது. இம்முறைகளைப் பெரியோர் வெளிப்படச் சொல்லாமல் மறைத்துச் சொல்லுதற்குக் காரணம் வேறொன்று மில்லை; யோகத்தோடு சிறிதும் இயல்பில்லாதவரும் வாளா வாய்ப்பறை சாற்றிப் பெருமை பேசிக்கொள்ளாமல், விருப்பம் உடையவர்கள் தக்காரை அணுகிப் பணிந்து கேட்டு முயன்று கருத்தை முடிக்க வேண்டும் என்பது ஒன்றுதான் காரணம்.
=======================================
பாடல் எண் : 10
முடிந்த தறியார் முயல்கின்ற மூர்க்கர்
இடிஞ்சில் இருக்க விளக்கெரி கொண்டு
கடிந்தனல் மூளக் கதுவவல் லார்க்கு
நடந்திடும் பாரினில் நண்ணலு மாமே. 

பொழிப்புரை : அகல் இனித் தேட வேண்டாது முன்பே கிடைத்திருக்க, விளக்கெரியப் பண்ணி முன்னே இருளை நீக்கிப் பின் அதனானே நெருப்பை, மூண்டு எரியும்படி மூட்ட வல்லவர்க்கு, கால சக்கரம் சுழன்றவழியே சுழன்று செல்லும். இவ்வுலகத்தில் அச் சுழற்சியுட்படாமல், ஒரு நிலையாய் நிற்றலும் கூடும். இம் முறையால் பலருக்கு விளைந்த பயனை, வேறு வழியில் முயலும் மடவோர் அறியமாட்டார்.
=======================================
பாடல் எண் : 11
நண்ணும் சிறுவிரல் நாணாக மூன்றுக்கும்
பின்னிய மார்பிடைப் பேராமல் ஒத்திடும்
சென்னியில் மூன்றுக்குஞ் சேரவே நின்றிடும்
உன்னி உணர்ந்திடும் ஓவியந் தானே. 

பொழிப்புரை : உற்று நினைக்கத்தக்க இடை, பிங்கலை, சுழுமுனை என்னும் மூன்று நாடிகளும் கையில் சிறுவிரலைப் பெருவிரலோடு சேர்த்து நாண்போல ஆக்க மேல் நிற்கும் ஏனை மூன்று விரல்களைப் போல, இருதயத்தில் வேறு வேறு நிற்கும். பின்பு தலையில், `புருவநடு, நெற்றிநடு, உச்சித் துளை` என்னும் மூன்றிடங்களிலும், அதன்பின், தலைக்குமேல் `சூரியன், சந்திரன், அக்கினி` எனப்படும் மூன்று மண்டலங்களிலும் வேறு வேறாய் நில்லாது ஒன்றியேவிடும்.
=======================================
பாடல் எண் : 12
ஓவிய மான உணர்வை அறிமின்கள்
பாவிகள் இத்தின் பயனறி வாரில்லை;
தீவினை யாம்உடல் மண்டலம் மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே. 

பொழிப்புரை : ஓவியம்போல உணர்வு அலைவற நிற்றற்குரிய வழியை அறியுங்கள். இவ்வுணர்வினால் காலத்தை வெல்வதாகிய பயன் விளைதலை முன்னை நல்வினை இல்லாதோர் அறியமாட்டார்; (அதனால் அவர் வேறு உபாயங்களைத் தேடி அலைவர்.) இனி அவ்வழியாவது, பந்தமாய் நிற்கும் வினை காரணமாக வந்த இவ்வுடலில் உள்ள சூரிய சந்திர அக்கினி மண்டலங்கள் மூன்றிற்கும் ஓர் இணைப்பாகப் பல தாமரை மலர்களில் ஊடுருவி நிற்கும், யோகத்திற்கு ஏதுவாகிய தண்டேயாம்.
=======================================
பாடல் எண் : 13
தண்டுடன் ஓடித் தலைப்பெய்த யோகிக்கு
மண்டல மூன்றும் மகிழ்ந்துடல் ஒத்திடும்;
கண்டவர் கண்டனர் காணார் வினைப்பயன்
பிண்டம் பிரியப் பிணங்குகின் றாரே. 

பொழிப்புரை : மேற்சொல்லியவாறு புண்ணியத்தண்டின்வழிச் சென்று உணர்வைப் பிரமரந்திரத்தில் வைத்த யோகிக்கு உடலில் `சூரியன், சந்திரன், அக்கினி` என்னும் மூன்று மண்டலங்களும் தக்கவாறு அமைந்திருக்கும். ஆகவே, உடல், காலத்தால் வாதிக்கப் படாதாம். இந்நிலையைக் கண்டவர், உடல் கால வயப்படாது நிற்கும் பயனைக் கண்டனர். காணாது வேறு உபாயங்களில் சென்றோர், உடல் கால வயப்பட்டு நீங்க, அதனைக்கண்டு துன்புறுகின்றார்கள்.
=======================================
பாடல் எண் : 14
பிணங்கி அழிந்திடும் பேறது கேள்நீ
அணங்குடன் ஆதித்தன் ஆறு விரியின்
வணங்குட னேவந்த வாழ்வு குலைந்து
சுணங்கனுக் காகச் சுழல்கின்ற வாறே. 

பொழிப்புரை : யோகம் செய்யாது பிணங்குகின்றவனுக்கு அவன் அடையத்தக்கதாகிய பயன் கிட்டாது கெடும். அஃது அங்ஙனம் ஆகின்றவாற்றை நீ கேட்பாயாக; பெண்டுடன் கூடுகின்ற நாள் மிகுமாயின், முற்பிறப்பில் இறைவனை வணங்கிய புண்ணியத்தால் வந்த மானுடப் பிறப்பின் வாழ்நாள் அளவு தேய, தான் சிலநாள் வாழ்கின்ற வாழ்வும், நாய்க்காக உடம்பை வளர்க்க முயல்வதாய் முடியும்.
=======================================
பாடல் எண் : 15
சுழல்கின்ற ஆறின் துணைமலர் காணான்
தழலிடைப் புக்கிடுந் தன்னு ளிலாமல்
கழல்கண்டு போம்வழி காணவல் லார்க்குக்
குழல்வழி நின்றிடுங் கூத்தனு மாமே. 

பொழிப்புரை : `சக்கரம்` எனப்படுகின்ற ஆறு ஆதாரங்களிலும் சிவனது திருவடியாகிய திருவருளைக் காணாதவன், அத்திருவருளினுள் புகாமல், நெருப்பில் புகுந்து அழிவான். அவற்றில் அத்திருவருளைக் கண்டு அதனுட்புகும் உபாயத்தை அறிய வல்லவர்க்கு, ஐந்தொழிற் கூத்தினை இயற்றுகின்ற சிவன் அவ்வாதாரங்களில் விளங்கியே நிற்பன்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:13 காரியசித்தி (பாடல்கள்:16)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:10: அட்டாங்க யோகப்பேறு (பாடல்கள்: 008
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:11: அட்டமாசித்தி....................பாடல்கள்: 071
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:12: கலைநிலை......................பாடல்கள்: 012
மூன்றாம்தந்திரம்:பதிக எண்:13: காரிய சித்தி........................பாடல்கள்: 016
========================================================(169+016=185)

மூன்றாம் தந்திரம்-பதிகம்எண்: 13. காரியசித்தி (பாடல்கள்:16 )
பாடல் எண் : 1
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பபை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. 

பொழிப்புரை :  உடம்பு அழியுமாயின், அதனைப் பெற்றுள்ள உயிரும் அழிந்ததுபோலச் செயலன்றி நிற்பதாம். ஆகவே, உடம்பு அழிந்தபின், அவ்வுடம்பைத் துணைக்கொண்டு இயங்கிய உயிர், தவமாகிய துணையைப் பெறவும், பின் அதனால் இறையுணர்வை அடையவும் இயலாததாய்விடும். இதுபற்றி, உடம்பை நிலைபெறுவிக்கும் வழியை அறிந்து அவ்வழியில் அதனை நிலைபெறுவித்த யான், உயிரை நலம் பெறச் செய்தவனே ஆயினேன்.
=======================================
பாடல் எண் : 2
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்
றுடம்பினை யானிருந் தோம்புகின் றேனே. 

பொழிப்புரை :  சிவ நூல் கேட்பதற்கு முன்பெல்லாம் உடம்பை அழுக்கு ஒன்றையே உடையதாகக் கருதி இகழ்ந்திருந்தேன். சிவநூல் கேட்ட பின்னர், அதற்குள்தானே பயனை அடைதற்குரிய வழிகள் பலவும் இருத்தலை அறிந்தேன். அதனால், அவ்வறிவின் வழியே, உடம்பிற்குள் தானே இறைவன் தனக்கு இடம் அமைத்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் அறிந்து, இப்பொழுது நான் உடம்பைக் கேடுறாதவாறு குறிக்கொண்டு காக்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 3
சுழற்றிக் கொடுக்கவே சுற்றிக் கழியும்
கழற்றி மலத்தைக் கமலத்தைப் பூரித்
துழற்றிக் கொடுக்கும் உபாயம் அறிவார்க்
கழற்றித் தவிர்ந்துடல் அஞ்சன மாமே. 

பொழிப்புரை :  பிராண வாயுவை வாங்கியும், விட்டும் சுழலும்படி செய்ய, உடம்பில் உள்ள மாசுகளும் அதனோடே சுழன்று நீங்கும். அவ்வாற்றால் மாசுகளைப் போக்கித் தூய்தான பிராணவாயுவை ஆதாரத் தாமரைகளில் நிரப்பி, அவை வழியாக உடம்பில் உள்ள எல்லா நாடியினுள்ளும் அவ்வாயுச் சென்று உலவும்படி செய்து, அதன் ஆற்றலை அந்நாடிகட்குத் தருகின்ற இவ்வுபாயத்தை முறையறிந்து செய்ய வல்லவர்க்கு, உடம்பு நெருப்பிலிட்டுச் சுடப்படுதலினின்றும் நீங்கி, உயிரினுள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய இறைவனைப் புலப்படக் காட்டும் மந்திரமையாய் அமையும்.
=======================================
பாடல் எண் : 4
அஞ்சனம் போலுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும்மத்தி யானத்தில்
செஞ்சிறு காலையிற் செய்திடில் பித்தறும்
நஞ்சறச் சொன்னோம் நரைதிரை நாசமே. 

பொழிப்புரை :  மந்திரமைபோல நின்று பயன்தரத் தக்கதாகிய உடலை. அன்ன தாகாத வாறு, `, வளி, பித்து` என்னும் மூன்றானும் தோன்றிக் கெடுக்கின்ற நோய்கள், முறையே, `மாலை, நண்பகல், காலை` என்னும் பொழுதுகளில் செய்யும் பிராணாயாமத்தால் நீங்கும். அதுவேயன்றி, முப்பொழுதும் செய்யும் பிராணாயாமத்தாலும் நரை திரைகள் வாரா தொழியும். இவ்வுபாயத்தை இங்கு, உடலைக் கொல்லும் நஞ்சுபோன்ற தீமைகள் நீங்குதல் நோக்கிக் கூறினோம்.
=======================================
பாடல் எண் : 5
மூன்று மடக்குடைப் பாம்பிரண் டெட்டுள
ஏன்ற இயந்திரம் பன்னிரண் டங்குலம்
நான்றஇம் மூட்டை யிரண்டையுங் கட்டியிட்
டூன்றி யிருக்க உடம்பழி யாதே.

பொழிப்புரை :  மூன்று வளைவை யுடையதாகிய பாம்பு, பதினாறு அங்குல அளவின வாகிய கயிறுகளைக் கொண்ட பூட்டையில் அழுந்தப் பொருந்தி யிருக்குமாயின், உடம்பு அழியாது நிலை பெற்றிருக்கும். அப்பாம்பு அங்ஙனம் பொருந்தி நிற்றற்கு, மேற்கூறிய பூட்டையில், அவிழ்ந்து கிடக்கும் நிலையினவாய்ப் பன்னிரண்டங்குல நீளம் தொங்கு கின்ற இரண்டு மூட்டைகள், அவிழ்ந்து வீழாதவாறு கட்டப்படல் வேண்டும்.
=======================================
பாடல் எண் : 6
நூறும் அறுபதும் ஆறும் வலம்வர
நூறும் அறுபதும் ஆறும் இடம்வர
நூறும் அறுபதும் ஆறும் எதிரிட
நூறும் அறுபதும் ஆறும் புகுவரே. 

பொழிப்புரை :  நூறு மாத்திரை காலமேயாயினும், அறுபது மாத்திரை காலமேயாயினும், ஆறு மாத்திரை காலமேயாயினும் பிராண வாயு சுழுமுனை நாடியை வலமாகச் சூழ்ந்தும் இடமாகக் சூழ்ந்தும், அதன் உட்புகுந்து மேலேறியும் வருமாயின், அத்துணை ஆண்டுக்கால வாழ்நாளினை மக்கள் எய்துவர்.
=======================================
பாடல் எண் : 7
சத்தியார் கோயில் இடம்வலம் சாதித்தால்
மத்தியா னத்திலே வாத்தியங் கேட்கலாம்
தித்தித்த கூத்தும் சிவனும் வெளிப்படும்
சத்தியம் சொன்னோம் சதாநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  மூன்று மடக்குடைப் பாம்புபோல உடம்பில் உள்ள குண்டலி சத்தி, மேற் கூறியவாறு ஊன்றியிருக்கும் இடமாகிய நடுநாடியைப் பிராண வாயு வலமும் இடமுமாகச் சுற்றிவருகின்ற சாதனையைப் புரிந்தால், உலக நோக்கில் இருக்கும் பொழுதே உடலில் உள்ள பத்து நாடிகளில் உண்டாவனவாக மேல் (பா.593) கூறிய ``மணி, கடல், யானை`` முதலியவற்றின் ஓசைபோலும் ஒலிகளைக் கேட்டல் கூடும். இனிச் சிவ பெருமான். தாள அறுதிக்கு இயைய ஆடும் ஆட்டத்தின் ஓசையும் கேட்கப்பட்டுப் பின் அப்பெருமானே விளங்கித் தோன்றுவான். மெய்யான இன்பமே வடிவமான எங்கள் ஆசிரியர் மேல் ஆணையாக, இவ்வாறு நாம் உண்மையையே உங்கட்குச் சொன்னோம்.
=======================================
பாடல் எண் : 8
திறத்திறம் விந்து திகழும் அகாரம்
உறப்பெற வேநினைந் தோதும் சகாரம்
மறிப்பது மந்திரம் மன்னிய நாதம்
அறப்பெறல் யோகிக் கறநெறி யாமே.

பொழிப்புரை :  நாதத்தை முற்றப் பெறக் கருதிச் சொல்லப்படுகின்ற, முறையே மகர மெய்யையும் புள்ளி வடிவினதாய எழுத்தையும் உடன் கொண்டு விளங்கும் அகரமும், சகரமுமே பிராணவாயுவைத் தடுத்தற்குரிய மந்திரமாம்; ஏனெனில், நாதத்தை முற்றும் உணரப் பெறுதலே யோகம் கைவந்தவனுக்குரிய தன்மையாதலின்.
=======================================
பாடல் எண் : 9
உந்திச் சுழியி னுடனேர் பிராணனைச்
சிந்தித் தெழுப்பிச் சிவமந் திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித் தெழுப்பச் சிவனவ னாமே.

பொழிப்புரை :  பூரக ரேசகங்களை மேற்கூறியவாறு அம்ஸ மந்திரத்தாற் செய்தபின் கும்பகம் செய்யும் பொழுது `ஹாம்` என்னும் வித்தெழுத்தாலே (பீஜாட்சரத்தாலே) பிராணனைச் சுழுமுனை நாடி வழியே கண்டத்தளவும் செலுத்திப் பின், `ஹௌம்` என்னும் வித்தெழுத்தால் ஆஞ்ஞையை அடைவித்து, அங்கே மலவெழுத்துக்கள் நீங்கிய திருவைந்தெழுத்து, `தத்துவமசி` மகாவாக்கியப் பொருளையும், `சோஹம்` என்பதன் பொருளையும் தருமாற்றை உபதேச முறையான் உணர்ந்து அதனானே அவ்வாயுவை அசையாது நிறுத்திப்பின் அபானவாயு எழத் தொடங்குமாயின், அதனைப் பிரணவத்தால் அடக்கிப் பிராணனை முன்போலவே மேலெழச் செய்யின், அவ்வாறு செய்பவன் சிவமாந் தன்மையை அடைவான்.
=======================================
பாடல் எண் : 10
மாறா மலக்குதந் தன்மேல் இருவிரல்
கூறா இலிங்கத்தின் கீழே குறிக்கொண்மின்
ஆறா உடம்பிடை அண்ணலும் அங்குளன்
கூறா உபதேசங் கொண்டது காணுமே. 

பொழிப்புரை :  அசுத்தத் தன்மை நீங்காதே எருவாய்க்கு இரண்டு விரற்கிடைமேலேயும், தன் சொல்லாற் சொல்லப்படாத குறிக்குக் கீழேயுமாய் உள்ள இடத்தில் தியானியுங்கள் `யாரை` எனின், உடம்பின் கண் ஆறு வகையில் உள்ள இறைவன் அங்கும் உளன். எனவே, அவனையே தியானியுங்கள் என்பதாம். அங்குத் தியானிக்குமிடத்து, ``ஊமை எழுத்து`` எனப்படும் பிரணவத்தால் தியானியுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
நீல நிறமுடை நேரிழை யாளொடுஞ்
சாலவும் புல்லிச் சதமென் றிருப்பார்க்கு
ஞாலம் அறிய நரைதிரை மாறிடும்
பாலனு மாவர் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :  பிராணனை முந்தி முகட்டில் நிறுத்திய பின், அதற்கு மேலே உள்ள ஏழாந் தானமாகிய உச்சியில் திருவருளோடு நேரே கூடி, ``இத்திருவருளல்லது பிறிதொன்றும் நிலையுடையதன்று`` என்பதை எவரேனும் உணர்ந்திருப்பார்களாயின், அவர்கள் ஆன்ம லாபத்தைப் பெறுதலேயன்றி, நரைதிரை அணுகாது, என்றும் இளமையோடு இருக்கும் நன்மையையும் அடைவர். இஃது எங்கள் ஆசிரியர் ஆணையாகச் சொல்லப்படும் உண்மை.
=======================================
பாடல் எண் : 12
அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை
பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்
உண்டி சுருங்கில் உபாயம் பலவுள
கண்டங் கறுத்த கபாலியு மாமே. 

பொழிப்புரை :  உணவுக் குறைவால் முகத்தில் தசை ஒட்டிக் கண் குழியுமாயினும், அதனால், உடலுக்கு அழிவு வந்துவிடாது. மாறாக, உடம்பு இளைத்தால் பிராணவாயு வசப்பட்டு காய சித்தி கைகூடும். ஆகவே, உணவு குறையின், உயிர், நலம் பெறுதற்குரிய வழிகள் பலவும் அமையும். அதனால், உண்டி சுருக்கியவன், இறவாமையாலும், இன்ப நிறைவாலும் சிவனோடொத்து நிற்பான்.
=======================================
பாடல் எண் : 13
பிண்டத்துள் உற்ற பிழைக்கடை வாசலை
அண்டத்துள் உற்ற தடுத்தடைத் தேவிடின்
வண்டிச்சிக் கும்மம் மலர்க்குழல் மாதரார்
கண்டிச்சிக் கும்மந்நற் காயமு மாமே. 

பொழிப்புரை :  உடலில் பொருந்தியுள்ள, தவ ஓழுக்கத்திற்கு இழுக்குத் தருகின்ற கடைப்பட்ட வழியை. உச்சியில் விளங்குவதாகிய திருவருளைத் தலைப்படுமாற்றால் அடைத்தே விடின், உடம்பு, மகளிர் கண்ட உடன் விரும்பத் தக்க அழகைப் பெற்று விளங்கும் பயனையும் அடையலாகும்.
=======================================
பாடல் எண் : 14
சுழலும் பெருங்கூற்றுத் தொல்லைமுன் சீறி
அழலும் இரதத்துள் அங்கியுள் ஈசன்
கழல்கொள் திருவடி காண்குறில் ஆங்கே
நிழலுளுந் தெற்றுளும் நிற்றலும் மாமே. 

பொழிப்புரை :  சிவபெருமான், எவ்வுயிரையும் அதன் உடலினின்றும் பிரித்துக் கொண்டு போதற்குச் சுற்றிக் கொண்டிருக் கின்ற கூற்றுவனைத் தொன்றுதொட்டே சினந்து, முக்கோண வடிவான மூலாதாரத்தில் உள்ள அக்கினியில் காய்ந்து கொண்டு இருக்கின்றான்; ஆகையால், அவ்விடத்தில் அவனது கழல் அணிந்த திருவடியைக் காணப்பெற்றால், பின்னர் நிழலில் நிற்பினும், வெயிலில் நிற்பினும் ஒன்றே; அஃதாவது, அவற்றால் வரும் கேடு ஒன்றுமில்லையாம்.
=======================================
பாடல் எண் : 15
நான்கண்ட வன்னியும் நாலு கலையேழுந்
தான்கண்ட வாயுச் சரீர முழுதொடும்
ஊன்கண்டு கொண்ட உணர்வு மருந்தாக
மான்கன்று நின்று வளர்கின்ற வாறே. 

பொழிப்புரை :  ஈசன் இருத்தலை மேல் நான் தெரிந்து சொல்லிய மூலாக்கினி, `அகார கலை, உகார கலை, மகார கலை, விந்துகலை` என்னும் நான்கு கலைகள், மூலாதாரம் முதல் பிரமரந்திரம் ஈறாக உள்ள ஏழு ஆதாரங்களைப் பொருந்திய பிராணவாயு, உடம்பு முழுதும் உள்ள ஊன் ஆகிய இவைகளையே தன் பசிப்பிணிக்கு மருந்தாக உண்டு, ஒரு மான் கன்று வளர்கின்றவாறு வியப்புடைத்து!
=======================================
பாடல் எண் : 16
ஆகுஞ் சனவேத சத்தியை அன்புற
நீகொள்ளின் நெல்லின் வளர்கின்ற நேர்மையைப்
பாகு படுத்திப்பல் கோடி களத்தினால்
ஊழ்கொண்ட மந்திரந் தன்னால் ஒடுங்கே. 

பொழிப்புரை :  மேன்மேல் வளரத்தக்கதாகிய காயசித்தி ஆற்றலைப்பெற நீ விரும்புவை யாயின், அச்சத்தி ஒவ்வொரு நெல்லின் அளவாக மெல்ல மெல்ல வளர்கின்ற நுட்பத்தை உடலில் அளவற்ற இடங்களில் பாகுபடுத்திக் கண்டு. அவ்விடங்களில் எல்லாம், மேற்பல வகையாலும் முறைப்படச் சொல்லிய மந்திரங்களின் வழி அதனுள் ஒடுங்குவாயாக.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.