http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 6 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:9 சமாதி (பாடல்கள்:13)







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
===================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்...........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:05: பிரணாயாமம்...................பாடல்கள்: 014
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: பிரத்தியாகாரம்................பாடல்கள்: 010
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:07: தாரணை............................பாடல்கள்: 009
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:08: தியானம்.............................பாடல்கள்: 019
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:09: சமாதி ................................பாடல்கள்: 013 
=======================================================(065+013=078)

மூன்றாம் தந்திரம்-பதிகம் எண்:9. சமாதி(பாடல்கள்:13)

பாடல் எண் : 1
சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்
சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி
சமாதி யமாதியிற் றங்கினோர்க் கன்றே
சமாதி யமாதி தலைப்படுந் தானே.

பொழிப்புரை :  ``சமாதி`` என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏனை உறுப்புக்களில் வழுவாது நிற்றலாலே வாய்ப்பதாம். இச்சமாதி யேயன்றி அட்டமாசித்திகளும், இயமம் முதலிய அவ்வுறுப்புக்களால் விளையும். இத்துணைச் சிறப்புடைய இயமம் முதலியவற்றை முற்றிச் சமாதியில் நிலைபெற்றவர்க்கேயன்றோ யோகம் முற்றுப்பெறுவது!
=======================================
பாடல் எண் : 2
விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்
சந்தியி லான சமாதியிற் கூடிடும்
அந்த மிலாத அறிவின் அரும்பொருட்
சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே. 

பொழிப்புரை :  கருவிற்கு வித்தாய வெண்பாலும் (சுக்கிலமும்) குண்டலி சத்தியும் ஆஞ்ஞைத் தானத்தில் சோர்வின்றி நிற்குமாயின், அவ்விடத்தில் ஆன்மா சமாதியைத் தலைப்படும். அத்தலைப்பாட்டில் ஏகதேச உணர்வு நீங்கிய வியாபக உணர்வு தோன்ற, அதன்கண் அடைதற்கரிய பொருளாகிய அழகிய சிவம் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 3
மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு
மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை
மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு
மன்மனத் துள்ளே மனோலய மாமே. 

பொழிப்புரை :  புறப் பொருளிடத்தும், ஆன்மாவிடத்தும் நிற்கின்ற மனம் எப்பொழுது உண்டோ, அப்பொழுதெல்லாம் பிராண வாயுவின் இயக்கமும் உளதாகும்; அத்தன்மையான மனம் இல்லாத பொழுது, பிராணவாயுவின் இயக்கமும் இல்லையாம். மேற்கூறிய இரண்டையும் விடுத்து தேயப்பொருளில் (தியானிக்கப்படும் பொருளில்) நிலை பெற்ற மனத்தால் அல்லல் அற்று இன்புற்றிருப் பவர்க்கு, அத்தேயப் பொருளிடத்தே அவரது மனம் ஒடுங்கி நிற்கும்.
=======================================
பாடல் எண் : 4
விண்டலர் கூபமும் விந்தத் தடவியுங்
கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்
செண்டு வெளியிற் செழுங்கிரி யத்திடை
கொண்டு குதிரை குசைசெறுத் தானே. 

பொழிப்புரை :  சமாதி நிலை எய்தினவரைப் பிறர், மனத்தைப் புற விடயங்களில் ஓடவிட்டிருப்பவராகக் கருதிக் கொண்டிருப்பார்கள். ஆயினும், அவர்களோ தமது மனத்தைத் தேயப் பொருளில் ஒடுக்கி விட்டிருப்பர்.
=======================================
பாடல் எண் : 5
மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு
கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்
கண்டிட நிற்குங் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே.

பொழிப்புரை :  நாடு சுற்றும் ஒருவன் அங்ஙனம் சுற்றி வரும் நாடுகள் ஐந்து; அவற்றில் உள்ள மலைகள் பன்னிரண்டு; அங்கு வாழும் குடிகள் நாற்பத்தெட்டு வகையினர். அவைகளை எல்லாம் முழுதும் காணவேண்டும் என்று விரும்பிய அவனது மனம் இடையே ஒரு பெரு வெள்ளத்தைக் கண்டு அதில் அழுந்திவிட, அவன் அதனையே குடித்தும், அதனுள்ளே மூழ்கியும் இன்புற்றிருக்கின்றான்.
=======================================
பாடல் எண் : 6
பூட்டொத்து மெய்யிற் பொறிப்பட்ட வாயுவைத்
தேட்டற்ற அந்நிலஞ் சேரும் படிவைத்து
நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்
தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே. 

பொழிப்புரை :  கிணற்றில் உள்ள பூட்டைச் சுழல்போல, உடலில் முன்னும் பின்னுமாய் இயங்குதல் தன்மைபெற்று நிற்கும் பிராண வாயுவை, பிற பொருள்களைத் தேடித் திரியாது நிலைத்து நிற்கின்ற ஆஞ்ஞையில் சேர்ந்து அசையாதபடிநிறுத்தி, அதனாலே மனத்தையும் வெளிப்போகாதவாறு தடுத்துத் தியானப் பொருளில் நிலைத்து நிற்பவர்க்கு இன்பம் அங்குத் தானே கிடைக்கும்.
=======================================
பாடல் எண் : 7
உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்
கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்
அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்
திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே. 

பொழிப்புரை :  அகத்தே ஆஞ்ஞையாகிய மலையின் உச்சியை அடைந்து அங்குள்ள அமுதத்தைத் தேவர்களும் உண்ண மாட்டாராய்ப் புறத்தே பெரிய மலையைப் பெயர்த்துக் கொணர்ந்து திருப்பாற் கடலைக் கடைந்து, அதினின்றும் தோன்றிய அமுதத்தையே உண்டார்கள். (ஆயினும், அதனால் அவர் இறவாதிருக்கின்றார் களில்லை; ஆகவே) இறவாமைக்குப் பொருளாக அறியும் வழி ஒன்றே உண்டு; அஃது ஐம்புல வேட்கையை முடிவின்றிக் கொள்ளும் மனம் முற்றும் ஒடுங்கிய நிலையேயாம்.
=======================================
பாடல் எண் : 8
நம்பனை ஆதியை நான்மறை ஓதியைச்
செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை
அன்பினை யாக்கி அருத்தி ஒடுக்கிப்போய்க்
கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே. 

பொழிப்புரை :  சிவனது பெருமையை உணர்ந்தோர் அவன்பால் அன்பு செய்து, அவ்வன்பினாலே பிற ஆசைகளை ஒழித்து, அவனையே நோக்கி ஆஞ்ஞையை அடைந்து அவனை வணங்கி, அவனோடு ஒன்றாய்க் கலந்தார்கள்.
=======================================
பாடல் எண் : 9
மூலத்து மேலது முற்சது ரத்தது
காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்
மேலைப் பிறையினில் நெற்றிக்குநேர் நின்ற
கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே. 

பொழிப்புரை :  மூலாதாரத்திற்குமேல் முதற்கண் காணப்படுகின்ற நாற்கோண வடிவுள்ள இடத்தில் (சுவாதிட்டானத்தில்) நிற்பதாகிய பிராணவாயு அவ்விடத்தில் உள்நுழைகின்ற புழையின் (சுழுமுனை நாடிக்கு) மேலிடத்தில், வானத்தில் உள்ள பிறைபோன்ற புருவநடுவில் நிற்கின்ற பொருளின் வடிவங்கள் பலவாய்த் தோன்றும்.
=======================================
பாடல் எண் : 10
கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று
சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்
பொற்பனை நாடிப் புணர்மதி யோடுற்றுத்
தற்பர மாகத் தகுந்தண் சமாதியே. 

பொழிப்புரை :  மூலாதாரம் முதலிய ஆதாரங்களில் செய்யும் பாவனைகளை விடுத்து, அவ்வாதார யோகங்களால் மூண்டெழுந்த கனலைமட்டும் துணையாகப் பற்றி ஆஞ்ஞையிற் சென்று, அங்குச் சிவனது பேரொளித் தோற்றம் ஒன்றையே எதிர்நோக்கி அதனுள் ஒடுங்கும் அவா மிக்கிருந்து, அவ்வொளி தோன்றிய காலத்து அதனையே தனக்கு வியாபகமாகக் கொண்டு அதன்கண் புகுந்து ஒடுங்கி நிற்றலே சமாதியாகும்.
=======================================
பாடல் எண் : 11
தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்
வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளும்
குலைப்பட் டிருந்திடும் கோபம் அகலும்
துலைப்பட் டிருந்திடந் தூங்கவல் லார்க்கே. 

பொழிப்புரை :  துலை நாப்போல உள்ள ஆஞ்ஞையில் அசை வற்றிருக்க வல்லவர்க்கு, மெய்ப்பொருளைத் தலைப்பட்டிருக்குமாறு, அது, தானே கிடைக்கும். ஆணவமாகிய வலையில் தானே சென்று நின்று, அந்நிலை காரணமாகச் சினங்கொண்டவள்போல இருந்த அருட் சத்தியும் சினந்தணிந்து, பிறவிக் கடலுக்குக் கரையாகி நிற்பாள்.
=======================================
பாடல் எண் : 12
சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்
ஆதியும் உள்நின்ற சீவனு மாகுமால்
ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்
ஆதி அடிபணிந் தன்புறு வாரே. 

பொழிப்புரை :  சிவசமாதி கைவரப் பெற்ற நிலையில் சீவனும், சிவம் சத்திகளாய் நிற்கும். அதனால், அத்தகைய யோகீசுரனைப் பிரம விட்டுணுக்களும் வணங்குவர்.
=======================================
பாடல் எண் : 13
சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகம்
சமாதிகள் வேண்டா இறையுட னேகில்
சமாதிதா னில்லை தானவ னாகில்
சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே. 

பொழிப்புரை :  சமாதி யோகத்தைத் தலைப்பட்டவர்க்கு ``யோகம்`` எனப்படுவன பலவும் வாய்ப்புடையனவாய்ப் பயன் தரும். இனி, இறைவன் அருள்வழியே எச்செயலையும் செய்வார்க்கு இச் சமாதி யோகம் வேண்டுவதில்லை. சீவன் சிவமாய் நிற்கும் நிலையில் சமாதி என்னும் யோக நிலை இல்லை. (நிட்டை என்னும் ஞான நிலையே உளதாம்) சமாதி யோகத்தால் ஞானம் வருதலேயன்றி அறுபத்து நான்கு சித்திகளும் கிடைக்கும்.
=======================================

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!