http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 29 September, 2012

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம் எண் :13. நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:076-100) பாகம் IV




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ...பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.......................பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:05: சத்தி பேதம்......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:06: வயிரவி மந்திரம்............பாடல்கள்: 050
நான்காம் தந்திரம்:பதிக எண்:07: பூரண சத்தி......................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:08: ஆதார ஆதேயம்.............பாடல்கள்: 100 
நான்காம் தந்திரம்:பதிக எண்:09: ஏரொளிச் சக்கரம்..........பாடல்கள்: 036
நான்காம் தந்திரம்:பதிக எண்:10: வைரவச் சக்கரம்...........பாடல்கள்: 006
நான்காம் தந்திரம்:பதிக எண்:11: சாம்பவிமண்டலச் சக்கரம் .பாடல்கள்:009
நான்காம் தந்திரம்:பதிக எண்:12: புவனாபதிச் சக்கரம்......பாடல்கள்: 012
நான்காம் தந்திரம்:பதிக எண்:13: நவாக்கரிச் சக்கரம்.......பாடல்கள்: 100

======================================================(434+100=534)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:13.
நவாக்கரிச் சக்கரம் (பாடல்கள்:076-100) பாகம் IV


பாடல் எண் : 75
உகந்தனள் பொன்முடி முத்தார மாகப்
பரந்த பவளமும் பட்டாடை சாத்தி
மலர்ந்தெழு கொங்கை மணிக்கச் சணிந்து
தழைந்தங் கிருந்தவள் தான்பச்சை யாமே.

பொழிப்புரை : மேற்கூறிய வீர சத்தி பச்சை நிறங்கொண்டவள்; பொன்முடியை விரும்பிக் கவித்தவள்; ஆரமாகப் பரந்த முத்துக் களையும், பவளங்களையும் அணிந்து, பட்டாடை உடுத்து, புடை பரந்த கொங்கைகளின்மேல் இரத்தினக் கச்சு அணிந்து, மிகவும் பொலிவுடன் விளங்குவாள்.  

==============================================
பாடல் எண் : 76
பச்சை இவளுக்குப் பங்கிமார் ஆறெட்டு
கொச்சையார் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சணி கொங்கைகள் கையிருங் காப்பதாய்
எய்ச்ச இடைச்சி இனிதிருந் தாளே.

பொழிப்புரை : பச்சை நிறம் உடைய இச்சத்திக்குப் பொதுமைப் பாங்கியர் நாற்பத்தெண்மரும், அணுக்கப்பாங்கியர் எண்மரும் சேர்ந்து பணிவிடை புரிந்து வருதலால், அவர்கள் எம்மருங்கும் பெரிய காவலாய் இருக்க இவள் பெருமையோடு வீற்றிருக்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 77
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்து `கம் ஜம்` என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.

பொழிப்புரை : நாவடியில் பொருந்திய ஒளிவடிவாய் விளங்குகின்ற சத்தியைப் பிராண வாயுத்துணையாக, `கம், ஜம்` என்று செபிக்கும் செபத்தால் தலைப்பட்டு அன்போடு வழிபட்டு, அதன் பயனாக மிக்க ஒளியுடைய உடம்போடு வானத்தில் இயங்கும் (ஆகாய கமனம் செய்யும்) ஆற்றலைப் பெறுவாயாக.
==============================================
பாடல் எண் : 78
விண்ணமர் நாபி இருதய மாங்கிடைக் கண்ணமர் கூபம் கலந்து வருதலால் பண்ணமர்ந் தாதித்த மண்டல மானது தண்ணமர் கூபம் தழைத்தது காணுமே.

பொழிப்புரை : நன்கமைந்த சூரிய மண்டலமானது பிராணவாயு கும்பிக்கப்பட்டுத் தங்கியிருக்கின்ற, கொப்பூழின் அடியாகிய சுவாதிட்டானத்திற்கும், இருதயத்திற்கும் இடைக்கண் உள்ள மணிபூரகத்திலும் கலந்து நிற்றலால், குளிர்ச்சியுடைய அந்த மணிபூரகமும் சிறந்து நிற்கின்றது.
==============================================
பாடல் எண் : 79
கூபத்துச் சத்தி குளிர்முகம் பத்துள
தாபத்துச் சத்தி தயங்கி வருதலால்
ஆபத்துக் கைகள் அடைந்தன நாலைந்து
பாபத் தறுக்கப் பரந்தன சூலமே.

பொழிப்புரை : சூரிய மண்டலத்துச் சத்தியின் கூறு மணிபூரக சத்தி யோடு கலந்து நிற்றலால், மணிபூரக சத்திக்குப் பத்து முகங்கள் உள்ளனவாம். பத்து முகங்கள் உளவாகவே கைகள் இருபது உள்ளன. பாபத்தை அறுப்பது சூலம் ஆதலால், சூலங்கள் பல கைகளில் உள்ளன.
==============================================
பாடல் எண் : 80
சூலந்தண் டொள்வாள் சுடர்பர ஞானமாம்
வேலம்பு தமருகம் மாகிளி வில்செண்டு
காலம்பூப் பாசம் மழுகத்தி கைக்கொண்டு
கோலஞ்சேர் சங்கு குவிந்தகை எண்ணதே.

பொழிப்புரை : மேற்கூறிய சத்திதன் கைகள் இருபதில் மேற்கூறியவாறு பல சூலங்களுடன், `தண்டு, வாள், நெருப்பு, மேலான ஞான மாகிய வேல், அம்பு, தமருகம், கிளி` வில், செண்டு, தாமரை மலர், பாசம், மழு, கத்தி, சங்கு என்பன உள.
==============================================
பாடல் எண் : 81
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நாலுடன்
எண்ணமர் சத்திகள் நாற்பத்து நால்வராய்
எண்ணிய பூவித ழுள்ளே யிருந்தவள்
எண்ணிய எண்ணம் கடந்துநின் றாளே.

பொழிப்புரை : தியானத்திற்குப் பொருந்திய சுவாதிட்டானம் முதலிய நான்கு ஆதாரங்களில் உள்ள தாமரையிதழ்கள் நாற்பத்து நான்கில் அமர்ந்திருக்கும் நாற்பத்து நான்கு சத்திகளோடும் தானும் நாற்பத்து நான்கு சத்தியாய் அந்த நாற்பத்து நான்கு இதழ்களிலும் வீற்றிருக்கின்ற சிவ சத்தி, அவ்வாதாரங்களில் வைத்துத் தியானிக்கின்ற தியானத்தைக் கடந்தவளாவாள்.
==============================================
பாடல் எண் : 82
கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்துப் பவளம் கச்சாகப்
படர்ந்தல்குற் பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே.

பொழிப்புரை : கீழ் நிலங்களைக் கடந்து மேல் நிலத்தில் இருப்பவளாகிய அச்சத்தி அடியவர் பொருட்டு, தலையிற் கவிக்கும் முடி பொன்னால் இயன்றதும், காதில் அணியும் தோடு மாணிக்கத்தால் இயன்றதும், கழுத்து முதலியவற்றில் தொடரப் பொருந்திய அணிகள் முத்துக்களால் இயன்றனவும், கச்சுப் பவளத்தால் இயன்றதும், அரையில் உடுத்திய உடை பட்டினால் இயன்றதும், பாதத்தில் அணிவது சிலம்புமாக, இளம் பெண்ணாய்க் கீழ் நிலங்களிலும் வந்த நிற்கின்றாள்.
==============================================
பாடல் எண் : 83
நின்றஇச் சத்தி நிரந்தர மாகவே
கண்டிடு மேரு அணிமாதி தானாகிப்
பண்டைய வானின் பகட்டை அறுத்திட்டு
ஒன்றிய தீபம் உணர்ந்தாற்குண் டாமே.

பொழிப்புரை : படிமுறையால் மேருவின்மேல் ஏறிச் சென்று, முடிவாகப் பார்க்கின்ற அதன் உச்சியில் அணிமா ஆதி அட்ட சித்திகளும் கைவந்தவனாய் நின்று, பழைய வெளியிடத்தில் உள்ள புறக் கவர்ச்சிகளை ஒதுக்கித் தள்ளி அவ்விடத்தில் பொருந்திய ஒளியை உணர்ந்து நிற்பவனுக்கு, மேற் சொல்லிய சத்தி இடையறாது உடன் நிற்றல் உளதாகும்.
==============================================
பாடல் எண் : 84
உண்டோர் அதோமுகம் உத்தம மானது
கண்டஇச் சத்தி சாதாசிவ நாயகி
கொண்ட முகம்ஐந்து கூறுங் கரங்களும்
ஒன்றிரண் டாகவே மூன்றுநா லானவே.

பொழிப்புரை : சதாசிவனது சத்தியாகிய சதாசிவைக்கு (அவனைப் போலவே) யாவரும் காண உள்ள முகங்கள் ஐந்து. எனினும், ஆறாவதாக அதோமுகம் ஒன்றும் (அங்ஙனமே) உண்டு. மேலான அந்தமுகமே, மேல் ``சிறியள்`` (வாலை - 1382) எனப்பட்ட சத்தி. இனிச் சதாசிவைக்கு முகம் ஆறானதற்கு ஏற்பக் கரங்களும் ஒருமுகத்துக்கு இரண்டாகப் பன்னிரண்டு ஆயின.
==============================================
பாடல் எண் : 85
நன்மணி சூலம் கபாலம் கிளியுடன்
பன்மணி நாகம் மழுகத்தி பந்தாகும்
கன்மணி தாமரை கையில் தமருகம்
பொன்மணி பூணாரம் பூசனைக் கானவே.

பொழிப்புரை : சதாசிவையின் கைகளில், `நல்ல ஒலியை எழுப்புகின்ற மணி, சூலம், கபாலம், கிளி, பாம்பு, மழு, கத்தி, பந்து, தாமரை மலர், தமருகம்` என்னும் இவைகள் இருத்தலாலும், பொன்னாலும், மணியாலும் ஆகிய அணிகலன்கள், மாலைகள் என்பவற்றை அவள் அணிந்திருத்தலாலும் அவனது கூறாகிய சத்திகளது வழிபாட்டிலும் இவை கொள்ளப்படும் பொருள்களாயின.
==============================================
பாடல் எண் : 86
பூசனைக் கன்னிகள் எண்ணைவர் சூழவே
நேசவண் சத்திகள் நாற்பத்து நேரதாய்க்
காசினிச் சக்கரத் துள்ளே கலந்தவர்
மாசடை யாமல் மகிழந்திருந் தார்களே.

பொழிப்புரை : நவாக்கரி சக்கரங்களின் அடியில் சதுரமாய் உள்ள `பூபுரம்` என்பதின் நான்கு மூலைகளிலும் ஒரு மூலைக்குப் பதின் மராக, வழிபடுதற்குறிய நாற்பதின்மர் தேவியர் சூழப் பொருந்தி யிருப்பவர்கள், அருள்வடிவாகிய சிவசத்திக் கூறுகள் தங்களிடம் சேர்ந்திருத்தலாலே, இடையூறின்றி, மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள்.
==============================================
பாடல் எண் : 87
தாரத்தி னுள்ளே தயங்கிய சோதியைப்
பாரத்தி னுள்ளே பரந்துள் ளெழுந்திட
ஏரது ஒன்றி எழுந்த மனோமயம்
காரது போலக் கலந்தெழும் மண்ணிலே.

பொழிப்புரை : மேற்கூறிய பூபுர தேவியர்பால் விளங்குகின்ற ஒளிவடிவான சிவசத்தியை உடன்பின் அகத்திலே ஆதாரங்களில் தியானிக்கின். எழுச்சி பெற்றுப் புற விடயங்களின் மேல் செல்லுகின்ற மனம், நிலத்திற் கலந்த நீர் அந்நிலத்தின் தன்மையதே ஆனாற் போலத்தியானிப்போனது தன்மைக்கு மாறாகாமல் அவனோடே பொருந்தி நிற்கும்.
==============================================
பாடல் எண் : 88
மண்ணில் எழுந்த மகார உகாரங்கள்
விண்ணில் எழுந்த சிவாய நமஎன்று
கண்ணில் எழுந்தது காண்பரி தன்றுகொல்
கண்ணில் எழுந்தது காட்சி தரஎன்றே.

பொழிப்புரை : பிருதிவி மண்டலமாகிய மூலாதரத்தினின்று பிரணவமாகிய சூக்கும எழுத்தாய்ப் புறப்பட்ட நாதம், பின் வளர்ச்சி யுற்று ஆகாச மண்டலமாகிய ஆஞ்ஞையில் `சிவாய நம` என்னும் தூல எழுத்தாய் வெளிப்பட்டு, அதற்குப் பின் கண்ணில் ஒளி வடிவாயும் என்னிடத்துப் பதிந்து நின்றது. ஆதலின் ஒளிக்காட்சி ஒருவராலும் காணப்படாதது அன்று; மற்றும் அது தன்னைக் காணுலுறுவார்க்குக் காட்சி தரவேண்டும் என்றே முன் வரும் இயல்புடையது.
==============================================
பாடல் எண் : 89
என்றங் கிருந்த அமுத கலையிடைச்
சென்றங் கிருந்த அமுத பயோதரி
கண்ட கரம்இரு வெள்ளிபொன் மண்டைவாய்க்
கொண்டங் கிருந்தது வண்ண அமுதே.

பொழிப்புரை : சூரிய மண்டலமாகிய விந்துத்தானத்தில் உள்ள சிவசத்தி, தன்னிடத்தில் காணப்படும் கரங்களில் இரண்டில் வெள்ளியாலான மண்டையிலும், பொன்னாலான மண்டையிலும் வைத்திருப்பது அழகிய அமுதமே.
==============================================
பாடல் எண் : 90
அமுதம தாக அழகிய மேனி
படிகம தாகப் பரந்தெழும் உள்ளே
குமுதம தாகக் குளிர்ந்தெழு முத்துக்
கெழுமும தாகிய கேடிலி தானே.

பொழிப்புரை : ஆம்பல் போலும் வாயிடத்துக் குளிர்ந்த முத்துப் போலும் நகை பொருந்தி விளங்கும் அந்நிலையினளான, அழிவற்ற அச்சத்தி, தன் அடியவர்க்குச் சந்திர மண்டலத்து அமுதம் உளதாகும்படி தனது அழகிய மேனி படிகம் போல்வதாகக் கொண்டு அவர்தம் அகத்தே நிறைந்து விளங்கி நிற்பாள்.
==============================================
பாடல் எண் : 91
கேடிலி சத்திகள் முப்பத் தறுவரும்
நாடிலி கன்னிகள் நாலொன் பதின்மரும்
பூவிலி பூவித ழுள்ளே யிருந்திவர்
நாளிலி தன்னை நணுகிநின் றார்களே.

பொழிப்புரை : வியட்டியாய் நின்ற சிவ சத்திகள் முப்பத்தறுவரும், அவரைத் தேட வேண்டாது தம்மிடத்தே பொருந்தப் பெற்ற தேவியர் முப்பத்தறுவரும் ஆகப் பூபுரத்தையிடமாகக் கொண்டு விளங்கும் தாமரைமலர்களின் இதழ்களில் உள்ள இவர்கள் நாள் வரையறையின்றி எந்நாளும் வழிபடுகின்ற அடியவன்பால் பொருந்தி நிற்பார்கள்.
==============================================
பாடல் எண் : 92
நின்றது புந்தி நிறைந்திடும் வன்னியும்
கண்டது சோதி கருத்துள் இருந்திடக்
கொண்டது ஓராண்டு கூடி வருதற்கு
விண்ட ஔகாரம் விளங்கின அன்றே.

பொழிப்புரை : இயல்பாக உள்ளத்தில் உள்ள, நிரம்பிய விளக் கொளியாகிய சத்தி, நவாக்கரி சக்கரத்தில் கட்புலனாம் விளக்கொளியாய் விட்டது. இனி அவ்வொளி உள்ளத்திலும் தோன்றி விளங்குதற்கு வேண்டப்பட்ட காலம் ஓராண்டு. அப்பயன் கைக்கூடுதற்குத் துணை யாகவே மேற்கூறப்பட்ட ஔகாரம் முதலிய பீசாக்கரங்கள் அச்சக்கரத்தில் விளங்கி நிற்கின்றன.
==============================================
பாடல் எண் : 93
விளங்கிடு வானிடை நின்றவ ரெல்லாம்
வணங்கிடு மண்டலம் மன்னுயி ராக
நலங்கிளர் நன்மைகள் நாரண னொத்துச்
சுணங்கிடை நின்றவை சொல்லலு மாமே.

பொழிப்புரை : ஒளிவிட்டு விளங்குகின்ற வானுலகத்தில் உள்ள தேவர் யாவரும் வழிபடுகின்ற நவாக்கரி சக்கரம் மக்கள் உள்ளத்தில் நிலைபெற்ற பின் அதனால் உண்டாகும் இன்பம் மிகுகின்ற நன்மைகள் பரம பதத்தில் இருக்கும் மாயோனுக்கு உள்ள நன்மைகளை ஒக்குமாயின், அவற்றின் பெருமைகளை வினைத்துன்பத்தில் நின்று கொண்டு சொல்ல இயலுமோ!
==============================================
பாடல் எண் : 94
ஆமே அதோமுகம் மேலே அமுதமாய்த்
தானே உகாரம் தழைத்தெழும் சோமனும்
காமேல் வருகின்ற கற்பக மானது
பூமேல் வருகின்ற பொற்கொடி யானதே.

பொழிப்புரை : பிரணவ கலைகளுள் உகாரகலை மிகுந்து ஓங்கி முற்றுகின்ற சந்திர மண்டலம் நெற்றிநடு முதலாகிய மேல் நிலங்களில் அமுதமாய், கீழ்நோக்கியுள்ள ஆயிர இதழ்த் தாமரையாய் விளங்கும். சோலைகளில் வெளிநிற்கின்ற கற்பகத் தருபோலும் சிவசத்தி, அச்சந்திர மண்டலத்தின் கீழுள்ள தாமரை மலர்களில் தேவியர் பலராய் விளங்குவாள்.
==============================================
பாடல் எண் : 95
பொற்கொடி யாரிடைப் பூசனை செய்திட
அக்களி யாகிய ஆங்காரம் போயிடும்
மற்கட மாகிய மண்டலந் தன்னுளே
பிற்கொடி யாகிய பேதையைக் காணுமே.

பொழிப்புரை : ஆதாரங்களில் விளங்கும் சாதன தேவியரைச் சிவச் சத்தியுடன் கூட வழிபடின், போக்குதற்கரிதாகிய அகங்காரம் நீங்கும். அங்ஙனம் வழிபட்டவன் அகங்காரத்தினின்று நீங்கி, நிறைந்த அமுதக்குடம்போலும் சந்திர மண்டலத்தில் சாத்திய தேவியாகிய சிவசத்தியைத் தலைப்படுவான்.
==============================================
பாடல் எண் : 96
பேதை இவளுக்குப் பெண்மை அழகாகும்
தாதை இவளுக்குத் தாணுவுமாய் நிற்கும்
மாதை இவளுக்கு மன்னும் திலகமாக்
கோதையர் சூழக் குவிந்திடங் காணுமே.

பொழிப்புரை : பெண்ணாகக் காணப்படுகின்ற இச்சத்திக்கு அங்ஙனம் காணப் படுதலே ஏற்புடைத்து. இவளுக்குத் தலைவனாய் உள்ள சிவன் அங்ஙனம் தலைவனாதலேயன்றித் தந்தையாயும் நிற்கும் இயல்புடையவனாவான். அழகியாய் உள்ள இச்சத்திக்கு இப்பூ மண்டலமே நெற்றித் திலகமாய் நிற்க, எண்ணிறந்த சத்திகள் சூழ்ந்து பணி செய்ய, இவள் உயரிய ஆசனத்தில் வீற்றிருக்கும் பெருமையுடையள்.
==============================================
பாடல் எண் : 97
குவிந்தனர் சத்திகள் முப்பத் திருவர்
நடந்தனர் கன்னிகள் நாலெண்மர் சூழப்
பரந்தித ழாகிய பங்கயத் துள்ளே
இருந்தனர் காணும் இடம்பல கொண்டே.

பொழிப்புரை : சிவ சத்தியின் கூறாகிய முப்பத்திருவர் சத்திகள் தலைமை பெற்று நிற்கின்றனர். அவர்கள் வழிப்பட்டு முப்பத்திருவர் தேவியர் ஒழுகுகின்றார்கள். இவ்விருதிறத்தாரும் ஒரு தாமரை மலரில் சூழ விரிந்தபல இதழ்களில் இடம் பெற்று இருக்கின்றனர்.
==============================================
பாடல் எண் : 98
கொண்டங் கிருந்தனர் கூத்தன் ஒளியினைக்
கண்டங் கிருந்தனர் காரணத் துள்ளது
பண்டை மறைகள் பரந்தெங்குந் தேடுமால்
இன்றென் மனத்துள்ளே இல்லடைந் தாளுமே.

பொழிப்புரை : சிவனது விளக்கமாம் சத்திகளையும், அவள்வழி நிற்கும் தேவியரையும் பல சக்கரங்களிலும் உடம்பினுள் ஆதார பங்கயங்களிலும் வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள், உலகத்திற்குக் காரணமாய் உள்ள முதற் பொருளைக் கண்டிருப்பார்கள். அம்முதற் பொருளை வேதங்களும் எங்கும் சென்று தேடி அலைகின்றன. ஆயினும் இஃது இன்று எனது உள்ளத்தையே இல்லமாகக் கொண்டு அதனை ஆளுகின்று.
==============================================
பாடல் எண் : 99
இல்லடைந் தானுக்கும் இல்லாத தொன்றில்லை
இல்லடைந் தானுக் கிரப்பது தானில்லை
இல்லடைந் தானுக் கிமையவர் தாமொவ்வார்
இல்லடைந் தானுக்கில் லாததில் லானையே.

பொழிப்புரை : இல்லத்தைத் திறமையாக ஆளுகின்ற துணைவியைப் பெற்றால், அவளுக்கேயன்றி, பெற்ற அவனுக்கும் இல்லாத நன்மை ஒன்று இல்லை. (எல்லா நன்மைகளும் குறைவின்றி உளவாம்.) அதனால், அவன் பிறரிடம் சென்று இரந்து பெற வேண்டுவது யாதும் இல்லை. ஆகவே, இன்ப நுகர்ச்சியில் தேவரும் அவனுக்கு நிகராகார். ஆதலின், `இல்லாதது` என்பது யாதும் இல்லாதவனாகிய சிவனையே அவனுக்கு உவமிக்க.
==============================================
பாடல் எண் : 100
ஆனை மயக்கும் அறுபத்து நால்தறி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்ஒளி
ஆனை யிருக்கும் அறுபத்து நால்அறை
ஆனையும் கோடும் அறுபத்து நாலிலே.

பொழிப்புரை : ஐம்புலன்களாகிய யானைகளையும் மயங்கி அடங்கச் செய்து கட்டி வைக்கும் அறுபத்து நான்கு தறிகளாயும், இடப வாகனத்தில்மேல் வருகின்ற தலைவனாகிய சிவபிரானிடத்தில் உள்ள அறுபத்து நான்கு சத்திகளாயும் விளங்குவன. பிரணவத்தை முதலாகக் கொண்ட பிராசாத மந்திரத்தின் அக்கரங்கள் அடங்கிய சக்கரத்தில் உள்ள அறுபத்து நான்கு அறைகள். அவ் அறைகளையுடைய சக்கரத்தை வழிபட்டால், மத யானையும் வணங்கும் கடவுள் தன்மையைப் பெறலாம்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!