http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 25 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 07: பதிகம் எண் :02 & 03.. அண்டலிங்கம் & பிண்டலிங்கம் - பாடல்கள்: 014 & 004 .




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்.......பாடல்கள்: 004 
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -002
கூடுதல் பாடல்கள்  (008 +014 + 004 =026)

==============================================
ஏழாம் தந்திரம் - 2. அண்டலிங்கம் - பாடல்கள்: 014
பாடல் எண் : 1
இலிங்கம தாகுவ தியாரும் அறியார்
இலிங்கம தாகுவ தெண்டிசை யெல்லாம்
இலிங்கம தாகுவ தெண்ணெண் கலையும்
இலிங்கம தாக எடுத்த துலகே.

பொழிப்புரை :  [ஏதோ ஒன்றை மட்டுமே `இலிங்கம்` என உலகவர் நினைத்தால்,] இலிங்கம் - என்பதன் உண்மையை உணர்ந்தவர் அரியர். எட்டுத் திசைகளாய் விரிந்து காணப்படும் உலகம் முழுதுமே இலிங்கம். அறுபத்து நான்காகச் சொல்லப்படுகின்ற கலைகளும் இலிங்கம். இறைவன் உலகத்தைத் தனது அருட்குறியாகவே உண்டாக்கினான்.
=======================================
பாடல் எண் : 2
உலகில் எடுத்தது சத்தி முதலா
உலகில் எடுத்தது சத்தி வடிவா
உலகில் எடுத்தது சத்தி குணமா
உலகம் எடுத்த சதாசிவன் றானே.

பொழிப்புரை :  உலகத்தைத் தோற்றுவித்த இறைவன் உலகில் அனைத்துப் பொருள்களையும் ஆக்கியது தனது சத்தியே பொருளாகவும், பொருளின் வடிவமைப்பாகவும், குணமாகவும் அமைத்தேயாம்.
=======================================
பாடல் எண் : 3
போகமும் முத்தியும் புத்தியும் சித்தியும்
ஆகமும் ஆறாறு தத்துவத் தப்பாலாம்
ஏகமும் நல்கி யிருக்கும் சதாசிவம்
ஆகம அத்துவா ஆறும் சிவமே.

பொழிப்புரை :  ஆன்மா முப்பத்தாறு தத்துவங்களினின்றும் நீங்கித் தான் தனித்து நிற்கும் நிலையையும், அதன்பின் அது தன்னைப் பெற்று நிற்கும் நிலையையும், அந்நிலைக்கண் விளைகின்ற தனது பரபோகத்தையும் தருதலேயன்றி, உடம்பும், அதனால் உண்டாகின்ற புலன் உணர்வும் அதனால் வரும் புலன் இன்பமும் என்னும் இவற்றையும் தந்து நிற்பான் சிவன் ஆதலின் அவன், சிவாகமங்களில் பாசக் கூட்டமாகச் சொல்லப்படுகின்ற ஆறத்துவாக்களாயும் விளங்குவான்.
=======================================
பாடல் எண் : 4
ஏத்தினர் எண்ணிலி தேவர்எம் மீசனை
வாழ்த்தினர் வாசப் பசுந்தென்றல் வள்ளலென்
றார்த்தனர் அண்டங் கடந்தப் புறம்நின்று
சாத்தனன் என்னும் கருத்தறி யாரே.

பொழிப்புரை :  தேவர் பலரும் தாம்செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவன் உருவத்திருமேனி கொண்டு வெளிப்படக் கண்டு புகழ்ந்தும், வாழ்த்தியும், இன்பப் பொருளாக உணர்ந்தும், வேண்டுவார் வேண்டுவதை அருளப்பெற்று, `வரையாது வழங்கும் வள்ளல்` என ஆரவாரித்தும் நின்றாராயினும், `அவன் உண்மையில் உலகங் கடந்தவனே` என்னும் உண்மையை உணர்கின்றிலர்.
=======================================
பாடல் எண் : 5
ஒண்சுட ரோன் அயன் மால் பிர சாபதி
ஒண்சுட ரான இரவியோ டிந்திரன்
கண்சுட ராகிக் கலந்தெங்குந் தேவர்கள்
தண்சுட ராய்எங்கும் தற்பரம் ஆமே.

பொழிப்புரை :  அந்தப் பரம்பொருளாகிய சிவம் தீக்கடவுள், அயன், மால், உபப்பிரமா, சூரியன், சந்திரன் ஆகியோரது கண்களுக்கு அவரவர் வழிபடும் இலிங்கமாகியும், அவ்விலிங்கங்களை வழிபடும் பொழுது அவர்கள் விரும்பியவற்றை வழங்க எங்கும் வெளிப்படும் அழகிய மூர்த்திகளாயும் விளங்கினும் எங்கும் கலந்து நிற்கும் பெரும்பொருளேயாகும்.
=======================================
பாடல் எண் : 6
தாபரத் துள்நின் றருளவல் லான் சிவன்
மாபரத் துண்மை வபடுவா ரில்லை
மாபரத் துண்மை வபடு வாருக்கும்
பூவகத் துள்நின்ற பொற்கொடி யாகுமே.

பொழிப்புரை :  சிவனது மிக மேலான உண்மை நிலையை உணர்ந்து அவனை வழிபடுவோர் மிக அரியர். அதனை உணர்ந்து வழிபடுகின்ற அவர்கட்கும் பூவைத் தன்னுள்ளே அடக்கியுள்ள அழகிய கொடி அப்பூவைச் சிறிது சிறிதாகவே வெளிப்படுத்துதல் போலத் தனது உண்மை நிலையை வெளிப்படுத்துவான். ஆகவே அவனது பொதுநிலையாகிய இலிங்க வடிவிலும் அவன் நின்று படிமுறையால் மேல் நிலையை அருளுவான்.
=======================================
பாடல் எண் : 7
தூய விமானமும் தூலம தாகுமால்
ஆய சதாசிவம் ஆகும்நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :  கருவறையின்மேல் உயர்ந்து விளங்கும் விமானங்கள், `தூலலிங்கம்` என்பதும், கருவறையில் மூலமாய் விளங்கும் இலிங்கம் `சூக்குமலிங்கம்` என்பதும், திருவாயிலின் முன் விரிந்து காணப்படும் பலிபீடம், `பத்திரலிங்கம்` என்பதும் சிவாலயங்களின் உண்மையைச் சிவாகம நெறியால் ஆராய்ந்துணர்வார்க்கு விளங்குவனவாகும்.
=======================================
பாடல் எண் : 8
முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்தும்அக் கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்றன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூமணல் லிங்கமே.

பொழிப்புரை :  முத்து முதலிய இவை பலவும் இலிங்கமாகச் செய்து கொள்ளுதற்குரிய பொருள்களாகும்.
=======================================
பாடல் எண் : 9
துன்றுந் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல்இர தம் சந்தம்
வன்றிறற் செங்கல் வடிவுடை வில்வம் பொன்
தென்றிருக் கொட்டை தெளிசிவ லிங்கமே.

பொழிப்புரை :  மேற்கூறிய முத்து முதலியனவே அன்றித் தயிர் முதலியனவும் இலிங்கம் ஆதற்குரிய மூலப்பொருள்களாகும். அவற்றுள் ஒன்றைத் தெரிந்தெடுத்துக்கொள்க.
=======================================
பாடல் எண் : 10
மறையவர் அற்சனை வண்படி கந்தான்
இறையவர் அற்சனை ஏய்பொன் னாகும்
குறைவில் வசியர்க்குக் கோமள மாகும்
துறையுடைச் சூத்திரர் சொல்வாண லிங்கமே.

பொழிப்புரை :  (இதன் பொருள் வெளிப்படை.)
=======================================
பாடல் எண் : 11
போது புனைகழல் பூமிய தாவது
மாது புனைமுடி வானக மாவது
நீதியுள் ஈசன் உடல்விதம் பாய்நிற்கும்
ஆதி உறநின்ற(து) அப்பரி சாமே.

பொழிப்புரை :  அண்டமாகிய இலிங்கத்தில் பூமி சிவனது திருவடி களாயும், அண்ட முகடு திருமுடியாயும், வானம் திருமேனியாயும் அமையும், ஆகவே, அண்டமாகிய இலிங்கத்துடன் சிவன் நிற்றல் மேற்கூறியவாறாகும்.
=======================================
பாடல் எண் : 12
தரைஉற்ற சத்தி தனிலிங்கம் விண்ணாம்
திரைபொரு நீரது மஞ்சனச் சாலை
வரைதவழ் மஞ்சுநீர் வான்உடு மாலை
கரைஅற்ற நந்தி கலைஉந்திக் காமே.

பொழிப்புரை :  இன்னும் அண்டலிங்கத்தில் பூமி பீடமாயும், வானம் பீடத்தின் மேல் உள்ள இலிங்கமாயும், கடல் நீர் திருமஞ்சனக் குடநீராயும், மேகம் அந்த நீரை முகக்கின்ற கலமாயும், திசைகள் எல்லையற்ற சிவனது உந்தியின்மேல் உடுக்கப்படும் உடையாயும் நிற்கும்.
=======================================
பாடல் எண் : 13
அதுஉணர்ந் தோன்ஒரு தன்மையை நாடி
எதுஉண ராவகை நின்றனன் ஈசன்
புதுஉணர் வான புவனங்கள் எட்டும்
இதுஉணர்ந் தென்னுடல் கோயில்கொண் டானே.

பொழிப்புரை :  உபநிடதங்களின் வழி தன்னை `அது` என்னும் அளவில் தன்னைப் பொதுவாக உணர்ந்தவன் பின்பு தனது ஒப்பற்ற இயல்புகளைச் சிறப்பாக உணர வேண்டி ஆராயும்பொழுது அவன் அவ்வியல்புகளுள் ஒன்றையேனும் உணராதபடி மறைந்து நிற்கின்ற சிவன், வேதாந்திகட்கு மிகவும் புதுமையாய்த் தோன்றுகின்ற அண்டலிங்கமாகிய இந்தத் தன்மையை உணர்ந்த என் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு விளங்குகின்றான்.
=======================================
பாடல் எண் : 14
அகலிட மாய்அறி யாமல் அடங்கும்
உகலிட மாய்நின்ற ஊனத னுள்ளே
பகலிட மாம்உளம் பாவ வினாசன்
புகலிட மாய்நின்ற புண்ணியன் றானே.

பொழிப்புரை :  அடியவரது பாவத்தை ஒழிப்பவனாகிய சிவன் அண்டமே இலிங்கமாகக் கொண்டு அமர்ந்திருத்தல் அன்றியும் உண்மையை உணராமையால் வீணாய் ஒழிகின்ற ஒரு நிலையில் பொருளாகிய உடம்பினுள்ளே அதன் நடுவிடமாகிய இருதய தாமரையைத் தான் எழுந்தருளியிருக்கும் இடமாகக் கொண்டு விளங்குகின்ற புண்ணிய மூர்த்தியாயும் இருக்கின்றான்.
=======================================

ஏழாம் தந்திரம்-3. பிண்டலிங்கம் பாடல்கள்:004

பாடல் எண் : 1
மானுடர் ஆக்கை வடிவு சிவலிங்கம்
மானுடர் ஆக்கை வடிவு சிதம்பரம்
மானுடர் ஆக்கை வடிவு சதாசிவம்
மானுடர் ஆக்கை வடிவு திருக்கூத்தே

பொழிப்புரை :  மக்களது உடம்புகள் யாவும் சிவலிங்க வடிவம்; சிதாகாச வடிவம்; சதாசிவ வடிவம்; திருக்கூத்து வடிவம்.
=======================================
பாடல் எண் : 2

உலந்திலிர் பின்னும் `உளர் என நிற்பீர்
நிலந்தரு நீர்தெளி ஊன்நவை செய்யப்
புலந்தரு பூதங்கள் ஐந்தும்ஒன் றாக
வலந்தரு தேவரை வந்திசெய் யீரே.

பொழிப்புரை :  உடம்பில் பொருந்தியுள்ள அழுக்கினை மண் குழைத்த நீர் போக்கித் தூய்மை செய்து, சிவனை அந்த உடம்பாகிய இலிங்கத்திலே வழிபடுங்கள்; இறந்த பின்னும் இறந்தவராக மாட்டீர்; என்றும் ஒரு பெற்றியை உடையிராய் வாழ்வீர்.
=======================================
பாடல் எண் : 3

கோயில்கொண் டன்றே குடிகொண்ட ஐவரும்
வாயில்கொண் டாங்கே வநின் றருளுவர்
தாயில்கொண் டாற்போல் தலைவன்என் னுட்புக
ஆயில்கொண் டீசனும் ஆளவந் தானே.

பொழிப்புரை :   உடம்பை இறைவன் தன் இருப்பிடமாகக் கொண்டு அதன்கண் எழுந்தருளியவுடன், அதனைத் தங்கள் இல்லமாகக் கொண்டு வாழ்ந்து அதில் உள்ள உயிரை அலைக்கழித்து வந்த ஐம்புல வேடர், தம் நிலைமாறி, அந்த உடம்பு தானே அதில் உள்ள உயிர்க்கு உய்யும் வழியாக உடன்பட்டு, அவ்வுயிரின் வழிநின்று அதற்குத் துணைபுரிவர். அந்த முறையில்தான் அந்த ஐம்புல வேடரை அவர் குறும்பை அடக்கி ஆளுதற்குரிய தலைவனாகிய மனம் அவர் வழிப்படுதலை விட்டு என்வழிப்பட்டது. அதனால், `அந்த உடம்பாகிய இல்லத்தைச் சிவன் தன் இல்லமாக ஏற்றுக்கொண்டு என்னை ஆட்கொள்ளுதற்கு அதன்கண் வந்து வீற்றிருக்கின்றான்` என்று உணர்கின்றேன்.
=======================================
பாடல் எண் : 4
கோயில்கொண் டான்அடி கொல்லைப் பெருமறை
வாயில்கொண் டான்அடி நாடிகள் பத்துள
பூசைகொண் டான்புலன் ஐந்தும் பிறகிட்டு
வாயில் கொண்டான் எங்கள் மாநந்தி தானே.

பொழிப்புரை :  எங்கள் பெரும்பெருமான் மக்கள் உடம்பைக் கோயிலாக் கொண்ட நிலையில் புழைக்கடையாகிய மூலாதாரத்தை யும், அதற்குமேல் குய்யத்திற்கு அணித்தாயுள்ள சுவாதிட்டானத்தை யும் தன்னை அக்கோயிலிலே காண்பதற்குரிய வழிகளாகக் கொண்டும், உடம்பின் உள்ளே உள்ள நாடிகளில் தலையானவையாம் பத்து நாடிகளின் செயற்பாடுகளை அக்கோயிலில் நிகழும் வழி பாட்டுச் செயல்களாக ஏற்றும் விளங்குதல் செய்து, அதனால் புலன்கள் ஐந்தனையும் அடங்கப் பண்ணி, , அவ்வுடம்பையே தான் மக்கள் உயிர்க்கு அருள் பண்ணும் வாயிலாகக் கொண்டிருக்கின்றான்.
=======================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!