http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 7 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :21. விந்துசயம் - பாடல்கள்: 037 (இரண்டாம் பாகம்)




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி..............பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்..........
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -021
கூடுதல் பாடல்கள்  (226+037 =263)

==============================================
ஏழாம் தந்திரம் - 21. விந்துசயம்-பாடல்கள்: 021-037:(இரண்டாம் பாகம்)
பாடல் எண் : 21
விந்து விளையும் விளைவின் பயன்முற்றும்
அந்த வழியும் அடக்கத்தின் ஆக்கமும்
நந்திய நாசமும் நாசத்தால் பேதமும்
தந்துணர் வோர்க்குச் சயமாகும் விந்துவே.

பொழிப்புரை :  விந்து உண்டாகும் முறையும், அஃது உண்டாகி முதிர்வதனால் விளைகின்ற பயனும், அதனை வீண்போகாது அடக்குதற்குரிய வழியும், அவ்வழிப்படி அதனை அடக்குதலால் வரும் ஆக்கங்களும், விந்து கெடுவதாகிய கேடும், அக்கேட்டினால் விளையும் விளைவுகளின் வகையும் ஆகிய இவற்றை யெல்லாம் முறையாக மனத்திற் கொணர்ந்து, ஆய்ந்து உணர்பவர்க்கு விந்து சயம் உண்டாக வழி ஏற்படும்.
=======================================
பாடல் எண் : 22
விந்துவென் வீசத்தை மேவிய மூலத்து
நந்திய அங்கியி னாலே நயந்தெரிந்(து)
அந்தமில் பானு அதிகண்ட மேலேற்றிச்
சந்திரன் சார்புறத் தண்ணமு தாமே.

பொழிப்புரை :  [இமந்திரத்திலும் மேல், ``அண்ணல் உடலாகி`` என்னும் மந்திரத்துட் கூறப்பட்ட பொருளே, `அண்ணல் உடலாதல்` ஆகிய அவ்வொன்றொழியக் கூறப்பட்டது.].
குறிப்புரை : அது சிவயோகியர்க்கு ஆகும் சிறப்புமுறை. இது யோகியர் எல்லோர்க்கும் ஆகும் பொதுமுறை. அதனால் `அறிவாதல்` நீக்கி, `அமுதாதல்` மட்டும் கூறப்பட்டது. வீசம் - (பீசம்) வித்து. நந்திய - வளர்ந்த.  யோக முறையில் மூலாதாரம் முதல், கொப்பூழ் வரையுள்ள பகுதி அக்கினி கண்டமாகவும், கொப்பூழ் முதல் இருதயம் முதல் கண்டம் வரையுள்ள பகுதி சூரிய கண்டமாகவும், அதற்குமேல் உள்ள பகுதி சந்திர கண்டமாகவும் சொல்லப்படும். அதிகண்டர் - அக்கினி கண்டத்திற்கு மேல் உள்ள கண்டம். ``சந்திரன்`` என்றதும் சந்திர கண்டத்தை.
=======================================
பாடல் எண் : 23
அமுதச் சசிவிந்து ஆம்விந்து மாள
அமுதப் புனலோடி அங்கியின் மாள
அமுதச் சிவபோகம் ஆதலால் சித்தி
அமுதப் பிலாவனம் ஆங்குறும் யோகிக்கே.

பொழிப்புரை :  சந்திர மண்டலத்தில் ஊறுகின்ற அமுதமாகிய துளிகளில், யோகியினது உடம்பில் உண்டாகின்ற விந்து முன் மந்திரத்தில் கூறிய முறையில் சென்று ஒடுங்க, மற்று உடம்பைக் காக்கின்ற அமுதமாய் நீர்க்கூறுகள் விரையச் சுழன்று மூலாக்கினியால் வற்ற, அவ்வாற்றால் அமுதம் போலும் இனிய சிவபோகம் விளையும் ஆதலால், அவ்யோகிக்கு அப்பொழுதுதான் அடைந்தபேறு அமுத மழை பொழிதல் போல அமையும்.
=======================================
பாடல் எண் : 24
யோகம்அவ் விந்து ஒழியா வகைபுணர்ந்(து)
ஆகம் இரண்டும் கலந்தாலும் ஆங்குறாப்
போகம் சிவபோகம் போகிநற் போகமாம்
மோகம் கெடமுயங் காரிமூடர் மாதர்க்கே.

பொழிப்புரை :  மாதும், ஆடவனும் ஒருங்கு கூடி, இருவர் உடலும் `ஓர் உடலே` எனும்படி இறுகப் புல்லியவிடத்தும் ஆடவனுக்கு அப்புல்லுதல் காரணமாக வெளிப்படுதற்குரிய விந்து வெளிப்படாதிருக்கப் பெறுதலே உண்மை யோகமாகும். ஆயினும் அவ்விடத்து இன்ப நுகர்ச்சி இல்லாதொழியாது; உள்ளதேயாகும். அவ்வின்ப நுகர்ச்சி உடலின்ப நுகர்ச்சியாகாது சிவ இன்ப நுகர்ச்சியாகவே அமையும். அதுவே இன்ப நுகர்ச்சியை உடையவனுக்குத் தீங்கினை விளையாது, நன்மையையே விளைக்கும் இன்ப நுகர்ச்சியாம். இந்நுகர்ச்சியைப் பெறும் வகையில் மாதரைப் புணர அறியாதார் புணர்ச்சிக் காலத்தில் அவரை உடல் இன்ப மயக்கமின்றிப் புணர மாட்டார்.
=======================================
பாடல் எண் : 25

மாத ரிடத்தே செலுத்தினால் அவ்விந்து
காதலி னால்விடார் யோகம் கலந்தவர்
மாதர் உயிராசை கைக்கொண்ட வாகுவார்
காதலர் போன்றங்ஙன் காதலாம் சாற்றிலே.

பொழிப்புரை :  யோகத்தைப் பொருந்தியவர் மாதரிடத்தே அவர் விழைவு நோக்கி விந்துவை விடுத்தாராயினும் அவர்மேல் கொண்ட மோகத்தால் விடுத்தாரல்லர். ஏனெனின், அவர் மாதர்பால் காட்டுகின்ற மோகத்தைச் சொல்லுமிடத்து ஏனையோர் மோகம் போன்றதாயிருப்பினும் அது வேறேயாம். (`பொதுவாக யாவர்மீதும் உளதாகிய அருளேயாம்` என்பதாம்.) இனி, யோகத்தில் பொருந்தாதவர் மாதர்மேல் தம் உயிர்மேல் வைத்திருக்கும் ஆசையைப்போலும் ஆசையை வைத்து அதனால் மெலிவெய்துவர்.
=======================================
பாடல் எண் : 26
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை எழமூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோ(டு)
ஆற்றி அமுதம் அருந்தவிந் தாருமே.

பொழிப்புரை :  [இம்மந்திரத்திலும் மேல் ``வற்ற அனலை`` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட முறையே ``சுழி அனல் சொருகிச் சுடருற்று`` என்பதொழியச் சொல்லப்பட்டது.]
குறிப்புரை :  விந்து ஆரும் - விந்து பெருகும், பின்பு, ``சத்தியால் சயமாகும்`` என முதல் அடியை இறுதியில் கூட்டியுரைக்க. ``சத்தியால்`` என்பது இரட்டுற மொழிதலாய், `திருவருளாகிய சத்தியின் வழிச் செயற்படும் தனது சத்தியால்` எனப்பொருள் தந்தது. `செய்பவர் செய்திப் பயன் விளைக்கும் செய்யே போத்வதாகிய திருவருள்`* யோக முயற்சியுடையார்க்கு அதற்கு ஏற்றவாறு அருள்செய்யும் என்பதற்கு. திருவருட் சத்தியும் உடன் கூறப்பட்டது. `ஓடாது` என்பதன் ஈறு தொகுத்தலாயிற்று நாதம் ஆஞ்ஞைக்கு மேல் உள்ள இடத்தில் தோன்றுவது என்பது மேல் ``மேலாம் நிலத்து எழு`` என்னும் மந்திரத்து உரையிலும் கூறப்பட்டது.  இதனால், `முன் மந்திரத்தில் கூறியபடி யோகியர்க்கு விந்து சயம் கூடுதல் திருவருட் குறிப்பால் என்பது கூறப்பட்டது.
=======================================
பாடல் எண் : 27
விந்துவும் நாதமும் மேவக் கனல்மூலம்
அந்த அனல்மயிர்க் கால்தோறும் மன்னிடைச்
சிந்தனை மாறச் சிவம்அகம் ஆகவே
விந்துவும் மாளும்மெய்க் காயத்தில் வித்திலே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு செய்யும் யோகத்தால் மூலாக் கினியால் விந்துவும், நாதமும் கலந்த ஒன்றாதலும், அவ்வக் கினியின் வெம்மை உடம்பின் மயிக்கால்தோறும் பரவி நிற்றலும் நிகழ, அவ்வாற்றால் உள்ளம் உலகை வெறுத்துச் சிவத்தினிடத்தே செல்ல, பின்பு, `சிவம் நான்` என்பதாகிய சிவோகம் பாவனை உண்டாக, அதனால் விந்து அழியா உடம்பில் அதற்கு வித்தாய், அதனுள்ளே சுவறி நிற்கும்.
=======================================
பாடல் எண் : 28
வித்தக்குற் றுண்பான் விளைவறி யாதவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்தச்சுட் டுண்பவன்
வித்துக்குற் றுண்பானில் வேறலன் நீற்றவன்
வித்துக்குற் றாண்ணாமல் வித்துவிற் றானன்றே.

பொழிப்புரை :  விதைக்கு வைத்திருக்கும் நெல்லைக்குற்றி உணவாக்கிக் கொள்பவன் வித்தினால் விளையக் கூடிய பெரும்பயனை இழந்தவனாவன். இனி, விதை நெல்லைக்குற்றி உண்ணாமல், பொரியாக வறுத்து உண்பவனும் முன் சொல்லப்பட்டவனைவிட அறிவுடையவன் ஆகமாட்டான். (ஏனெனில், அவனும் விளைவை இழக்கின்றானன்றோ!) ஆகையால் சிவயோகி விதையைக் குற்றி, அல்லது வறுத்து உண்ணாமலும், பலரும் செய்கிறபடி நிலத்தில் விதைத்தலைச் செய்யாமலும் பொன்னுக்கு விற்பவனைப் போன்றவன் ஆவான்.
=======================================
பாடல் எண் : 29
அன்னத்தில் விந்து அடங்கும் படிகண்டு
மன்னப் பிராணனாம் விந்து மறித்திட்டு
மின்னொத்த விந்துநா தாந்தத்து விட்டிட
வன்னத் திருவிந்து மாயும்கா யத்திலே.

பொழிப்புரை :  உணவிலே விந்து காரணரூபமாய் அடங்கியிருத்தலை அறிந்து உணவை நன்முறையில் ஒழுங்காக உண்டு வருதலாலும், பின்பு பிராணனின் அவ்வாறுள்ள விந்துவை அந்தப் பிராணனை ஒழுங்கான முறை இயக்குதலால் ஒளிவடிவாக எழச் செய்து ஒலிவடிவாகிய விந்துநாதத் தானங்களில் ஏற்றி அதற்கு மேலும் செலுத்துதலாலும் அக்கர வடிவாய் நின்று அறிவைத் தோற்றுவிக்கின்ற பெரிய சுத்த மாயையும் உடம்பினுள்ளே அடங்கி நேரிதாம்.
=======================================
பாடல் எண் : 30
அன்னம் பிராணன்என்(று) ஆர்க்கும் இருவிந்து
தன்னை அறிந்துண்டு சாதிக்க வல்லார்க்குச்
சொன்னமுமாம் உருத்தோன்றும் எண்சித்தியாம்
அன்னவ ரெல்லாம் அழிவற நின்றதே.

பொழிப்புரை :  ஆடவர் எல்லோர்க்கும் அன்னவிந்து, பிராணவிந்து` என இரு விந்துக்கள் உள்ளன. அந்த உண்மையை உணர்ந்து, அன்னத்தையும், பிராணனையும் நெறிபடுத்தி நிற்க வல்லவர்க்கு மேனி பொன்போல விளங்கும். அட்டமா சித்திகள் கூடும். மேலும் அத்தன்மையுள்ள யோகிகள் யாவரும் நீண்ட காலம் வாழ்ந்தமை வெளிப்படை.
=======================================
பாடல் எண் : 31
நின்ற சிகாரம் நினைக்கும் பிராணனாய்
ஒன்று மகாரம் ஒருமூன்றோ டொன்ற வை
சென்று பராசத்தி விந்துசயந் தன்னை
ஒன்ற உரைக்க உபதேசந் தானே.

பொழிப்புரை :  (நீயே விந்து சயத்தைப் பெற்று விடலாம் என்று நினையாமல்) திருவருளும் அம்முயற்சியில் தலைப்பட்டு உடன் நிற்றற் பொருட்டுத் திருவைந்தெழுத்தில் உயிராய் உள்ள சிகாரத்தின் பொருளாகிய சிவனை அகார உகார மகாரங்களோடு உடன் வைத்துத் தியானிக்க விந்து சய மார்க்கத்தைப் பிறருக்கு உபதேசிக்கும் பொழுதும் இவ்வாறே உபதேசிப்பாயாக.
=======================================
பாடல் எண் : 32
தானே உபதேசம் தானல்லா தொன்றில்லை
வானேய் உயர்விந்து வந்த பதினான்கு
மானேர் அடங்க அதன்பின்பு புத்தியும்
தானே சிவகதித் தன்மையு மாமே.

பொழிப்புரை :  முன்மந்திரத்தில், `அகாரம் முதலிய மூன்றோடு உடன் வைத்துத் தியானிக்க` எனக் கூறிய கூற்றில் சுட்டப்பட்ட சிவத்தை உபதேசிக்கும் உபதேசமே உண்மை உபதேசமாகும். ஏனெனில், சிவம் இன்றி யாதொரு பொருளும் இல்லை. இனி ஆகாயம்போல் எப்பொருட்கும் வியாபகமாய் உள்ள சுத்தமாயையினின்றும் பிரணவ வடிவாய்த் தோன்றுகின்ற வாக்குக்கள் பதினாறு கலைகளாக வைத்துத் தியானிக்கப்படும்பொழுது ஆதார யோகத்தில் ஏழாம் தானத்துடன் உலகியல் உணர்வோடு நிகழும் முதற் பதினான்கு கலைகள் ஆதார சத்திகளோடு அடங்கி விடும். உலகியல் நீங்க சிவ உணர்வோடே நிகழும் எஞ்சிய ஏனை இருகலைகள் நிராதார யோகத்தில் நிராதார சத்திகளோடு அடங்கிவிடும். அந்நிலையே சிவத்துவ நிலையாம்.
=======================================
பாடல் எண் : 33
விந்துவுள் நாதம் விளைய விளைந்தது
வந்தஇப் பல்லுயிர் மன்னுயி ருக்கெலாம்
அந்தமும் ஆதியும் ஆம்மந் திரங்களும்
விந்து அடங்க விளையும் சிவோகமே.

பொழிப்புரை :  சுத்த மாயையினின்றும் தூலமாகவும், சூக்குமமாகவும் தோன்றுகின்ற வாக்குக்களால்தான் இங்குக் காணப்படுகின்ற பலவாகிய உயிர்களும் உளவாயின. அதனால், மந்திரங்களின் தோற்ற முடிவுகளே உயிர்களின் தோற்ற முடிவுகளாய் அமைகின்றன. ஆகவே அவ்வாக்குக்கள் பிராசாத யோகத்தால் தம் சத்திகள் அடங்கப் பெறுமாயின், சிவோகம் பாவனை உண்மையாய்ப் பயன் தரும்.
=======================================
பாடல் எண் : 34
வறுக்கின்ற வாறும் மனத்துலா வெற்றி
நிறுக்கின்ற வாறும்அந் நீள்வரை யெட்டில்
பொறிக்கின்ற வாறும்அப் பொல்லா வினையை
அறுக்கின்ற நாள்வரும் அத்தப் பழமே.

பொழிப்புரை :  விந்துவை வற்றச் செய்யும் முறையும், மனம் எங்கும் உலா வருவதில் அடைகின்ற வெற்றியைத் தடுத்து நிறுத்தும் முறையும், அந்த வெற்றியை எட்டுத் திக்கிலும் உயர்ந்து நிற்கின்ற மலைகளில் எழுதிப் புகழ் பெறுதலும் ஆகிய எல்லாம் உடம்பு வினைத் தொடர்பை அறுத்துக்கொள்கின்ற காலத்திலேதான் ஒருவனுக்குக் கைவரும்.
=======================================
பாடல் எண் : 35
விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச்
சந்திர னோடே தலைப்படு மாயிடில்
அந்தர வானத் தமுதம்வந் தூறிடும்
அங்குதி மந்திரம் ஆகுதி யாகுமே.

மனத்தொடு சத்து மனஞ்செவி யென்ன
இனத்தெழு வார்கள் இசைந்தன நாடி
மனத்தில் எழுகின்ற வாக்கு வசனம்
கனத்த இரதம்அக் காமத்தை நாடிலே.

பொழிப்புரை :  மேல், ``மேலாம் நிலத்தெழும் விந்துவும்`` என்னும் மந்திரத்திலும், ``விந்துவின் வீசத்தை`` என்னும் மந்திரத்திலும் சொல்லப்பட்டபடி விந்துவும், நாதமும் ஒன்றாகிச் சந்திர மண்டலத்தை அடைந்த பொழுது அங்கு நின்றும் அமுதம் ஒழுகும் காலத்தில் அதனுடன் கலக்கத்தக்க அவிசு `நின்ற சிகாரம்` என்னும் மந்திரத்தில் சொல்லப்பட்ட பிரணவ மந்திரமேயாகும்.
=======================================
பாடல் எண் : 36
சத்தமும் சத்த மனமும் மனக்கருத்(து)
ஒத்தறி கின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறி கின்ற இடம்அறி வாளர்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே.

பொழிப்புரை :  சூக்குமை முதலிய வாக்குக்களும், அவ்வாக்குக்களால் இயக்கப் படுகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களும், அந்த அந்தக்கரணங்களால் உண்டாகின்ற உணர்வுகளும் ஆகிய இவை ஒருங்கு தொக்க நிலையாகிய அறிவின் நிலையை உலகர் அறியமாட்டார். அதனை உள்ளவாறு அறியவல்லவர் ஆசான்ம மூர்த்தியின் அருள் பெற்றவரே ஆவர். அவர்க்கு அந்த நிலையே சிவனது இருப்பிடமாதல் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 37
உரவடி மேதினி உந்தியில் அப்பாம்
விரவிய நன்முலை மேவியகீழ் அங்கி
கருமுலை மீமிசைக் ககை்கீழிற் காலாம்
விரவிய கந்தர மேல்வெளி யாமே.

பொழிப்புரை :  மனித உடம்பில் எல்லாவற்றையும் தாங்கும் வலிமையுடைய கலில் (இடைக்குக் கீழ் உள்ள பகுதியில்) `நிலம்` என்னும் பூதமும், அதற்கு மேல் கொப்பூழ்வரை உள்ள பகுதியில் `நீர்` என்னும் பூதமும், கொப்பூழ் முதல் முலையிருக்கும் பரந்த இடமாகிய மார்பு பகுதியில் `தீ` என்னும் பூதமும் (இதனுள் முலையும் அடங்குதல் அறிக.) மார்பிற்குமேல் கைகளுக்கு ஆதாரமாய்க் கழுத்து வரையில் உள்ள பகுதியில் `வளி` என்னும் பூதமும், (இதனுள் கைகளும் அடங்குதல் அறிக.) கழுத்திற்கு மேல் உள்ள பகுதியில் `வெளி` என்னும் பூதமும் நிற்கும்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.







No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!