http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 14 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :25, 26 & 27. ஞானாதித்தன், சிவாதித்தன், பசுலக்கணம்-பிராணன் - பாடல்கள்: 008, 004, 002




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை
..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி.............
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.
பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்..........
.பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்......
.பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசுலக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -027
கூடுதல் பாடல்கள்  (257+008+004+002 =271)

==============================================
ஏழாம் தந்திரம் - 25. ஞானாதித்தன்- பாடல்கள்: 008
பாடல் எண் : 1
விந்து அபரம் பரம்இரண் டாய்விரிந்(து)
அந்த அபர பரநாத மாகியே
வந்தன தம்மில் பரம்கலை யாதிவைத்(து)
உந்தும் அருணோ தயம்என்ன உள்ளத்தே.

பொழிப்புரை :  சுத்த மாயையின் ஒருகூறு சிவனது சத்தியால் உலகத் தோற்றம் நிகழத்ற்குக் காரணமாகப் பக்குவப்படுத்தப்படும். அங்ஙனம் பக்குவப்படுத்தப்பட்ட பகுதி, `மேற்பகுதியும் கீழ்ப் பகுதியும்` என இரண்டு பகுதியாய் விரியும். அவை முறையே `பரவிந்து` என்றும், `அபரவிந்து` என்றும் பெயர் பெறும். அவற்றினின்றும் முறையே சொல்லுலகத்தின் அதிசூக்கும நிலையாகிய பரநாதமும், சூக்கும நிலையாகிய அபர நாதமும் தோன்றும். (இவையே அதிசூக்குமை வாக்கும், சூக்குமை வாக்கும் ஆகும்.) பின்பு அவற்றினின்றும் வைகரி முதலிய வாக்கு வடிவமான சொல்லுலகத்தையும், `கலை, தத்துவம், புவனம்` என்னும் அத்துவாக்களையும் சிவன் தோற்றுவித்து, அவை வழியாக ஆன்ம அறிவினிடத்தே அருணோதயம் போன்ற ஒளியை விளங்கச் செய்வான்.
=======================================
பாடல் எண் : 2
உள்ள அருணோ தயத்தெழும் ஓசைதான்
தெள்ளும் பரநாதத் தின்செயல் ஆதலால்
வள்ளல் பரவிந்து வைகரி யாதிவாக்(கு)
உள்ளன ஐங்கலைக் கொன்றும் உதயமே.

பொழிப்புரை :  ஆன்ம அறிவில் அருணோதயம் போலத் தோன்றுவதாக முன் மந்திரத்திற் குறித்த விளக்கத்திற்குக் காரணமான எழுத்தோசை, `பர நாதத்தின் காரியம்` என ஆகமங்களில் சொல்லப் படுதலால், அந்தப் பரநாதத்திற்குக் காரணமாக மேற்குறிக்கப்பட்ட அந்தப் பரவிந்துவிலிருந்தே வைகரி முதலிய வாக்குக்களால் நிவிர்த்தி முதலிய ஐங்கலைகளிலும் அறிவு விளக்கம் சிவனால் உண்டாவதாகும்.
=======================================
பாடல் எண் : 3
தேவர் பிரான்திசை பத்துத யம்செய்யும்
மூவர் பிரான்என முன்னொரு காலத்து
நால்வர் பிரான் நடுவாய்உரை யாநிற்கும்
மேவு பிரான் என்பர் விண்ணவர் தாமே.

பொழிப்புரை :  `தேவர்கள் தம் தம் பதவி விருப்பத்தால் விரும்பு கின்ற முழுமுதற் கடவுளாவான் பத்துத் திசைகளிலும் நின்று காவல் புரிகின்ற நூற்றெட்டு உருத்திரர்கட்கும் தலைவன்` என்றும், `பொது வாக - மும்மூர்த்திகள் என்று யாவராலும் சொல்லப்படுகின்ற - அயன், அரி, அரன் - என்பவர்கட்குத் தலைவன்` என்றும் தொன்மையாக பலர் சொல்லிவர, `முதற்கடவுள் அவ்வளவில் நில்லாது மேற்குறித்த மூவர்க்கும் மேலாய் நான்காமவனாய் உள்ள மகேசுரனை உள்ளிட்ட நால்வர்க்கும் தலைவனாவான்` எனச் சமயக் கணக்குக்களைக் கடந்து நிற்கின்ற உண்மை நூல்கள் உண்மையைச் சொல்லா நிற்கும் என உயர்ந்தோர் கூறுவர்.
. =======================================
பாடல் எண் : 4
பொய்யிலன் மெய்யன் புவனா பதிஎந்தை
மையிருள் நீக்கும் மதி அங்கி ஞாயிறு
செய்யிருள் நீக்கும் திருவுடை நந்திஎன்
கையிருள் நீக்கக் கலந்தெழுந் தானே.

பொழிப்புரை :  முன்மந்திரத்திற் கூறியவாறு சதாசிவ மூர்த்தியாய் நின்று ஐந்தொழில் நடாத்தும் முதல்வன் அவ்வாறு தொழில்புரிய நிற்பதற்கு முன்பே என்னை இயல்பாகவே பற்றி நிற்கின்ற, வெறுக்கத் தக்க அக இருளை நீக்குதற் பொருட்டு என் உயிருக்கு உயிராய்க் கலந்து நின்று, அதன் பின்பு தொழில் புரிய எழுந்தான்.
=======================================
பாடல் எண் : 5
தனிச்சுடர் எற்றித்தாய் அங்கிருள் நீங்க
அனித்திடும் மேலை அருங்கனி யூறல்
கனிச்சுட ராய கயிலையில் ஈசன்
நனிச்சுடர் மேல்கொண்ட வண்ணமும் ஆமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் கூறியபடி உயிர்களது இருளை நீக்கவேண்டி அவற்றினுள்ளே உள்ள சிவனது, `திரு` எனப்பட்ட ஒப்பற்ற ஒளி தாக்கிப் பரவுதலால் அவ்விடத்துள்ள இருளாகிய மலம் நீங்கும். அது நீங்கினால் அந்த ஒளிக்கு மேலே உள்ள சிவமாகிய அரிய கனியின் சாறு அக்கனியினின்று வெளிப்பட்டு ஒழுகி இனிக்கும் அப்பொழுது ஊழிக் காலத்தும் அழியாத ஒளியினதாய் விளங்கும் கயிலாய மலைமேல் சிவன் நண்ணிப் பேரொளியுடன் திருமேனி கொண்டு வீற்றிருக்கும் காரணமும் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 6
நேரறி வாக நிரம்பிய பேரொளி
போரறி யாது புவனங்கள் போய்வரும்
தேரறி யாத திசைஒளி யாயிடும்
ஆரறி வார்அது நாயகம் ஆமே.

பொழிப்புரை :  உயிர்களது அறிவினுள்ளே நுண்ணறிவாய் நிறைந்து நிற்கின்ற ஒரு பெரிய ஒளி, தடையின்றி எங்கும் போய் வருகின்ற பகலவனது தேர் செல்லாத இடத்தில் அங்குள்ள இருளை நீக்குகின்ற ஒளியாய் இருக்கும். இம்மறை பொருளை உணரும் அறிவுடையோர் யாவர்? எவரேனும் இருப்பாராயின் அவரது அறிவே தலைமை சான்ற அறிவாகும்.
=======================================
பாடல் எண் : 7
மண்டலத் துள்ளே மலர்ந்தெழும் ஆதித்தன்
கண்டிடத் துள்ளே கதிரொளி யாயிடும்
சென்றிடத் தெட்டுத் திசைதொறும் போய்வரும்
நின்றிடத் தேநிலை நேரறி வார்க்கே.

பொழிப்புரை :  அண்டத்தில் ஒரு வட்ட வடிவினனாய்க் காணப்படுகின்ற ஆதித்தன் உலகில் எட்டுத் திக்கிலும் சென்று அலமருவார்க்கு அவர் சென்ற இடத்தில் எல்லாம் காணப்பட்டு ஒளியை வழங்குவான். வெளியில் அங்ஙனம் அலமரும் நிலையை விட்டு முன் மந்திரத்தில் கூறிய நுண்ணிறிவை அறிந்து அகத்தே நோக்குபவர்க்கு அவன் உட்பினுள் காண்கின்ற பல இடத்திலும் விளங்கி ஒளிதருகின்றவன் ஆவான்.
=======================================
பாடல் எண் : 8
நாவிகண் நாசி நயன நடுவினும்
தூவியோ டைந்தும் சுடர்விடு சோதியைத்
தேவர்கள் ஈசன் திருமால் பிரமனும்
மூவரு மாக உணர்ந்திருந் தாரே.

பொழிப்புரை :  கொப்பூழ், கண், மூக்கு, புருவநடு, தலைக்குப் பன்னிரண்டங்குலத்திற்கு மேல் என்னும் ஐந்திடங்களிலும் தோன்றி ஒளி வீசுகின்ற அந்த ஆதித்தனைத் தேவர்கள், `உருத்திரன், மால், அயன்` என்னும் மும்மூர்த்திகளாக அறிந்து இன்புற்றிருக்கின்றனர்.
=======================================
ஏழாம் தந்திரம் - 26. சிவாதித்தன்-பாடல்கள்:004
பாடல் எண் : 1
அன்றிய பாச இருளும்அஞ் ஞானமும்
சென்றிடும் ஞானச் சிவப்பிர காசத்தால்
ஒன்றும் இராவ ரும்அரு ணோதயந்
துன்றிருள் நீங்குதல் போலத் தொலைந்ததே.

பொழிப்புரை :  உயிர் அடைந்த ஞான ஒளியினுள்ளே வந்து எழுகின்ற சிவத்தினது ஒளியால் அக ஒளியாகிய அறிவை மறைந்திருந்த அக இருளாகிய ஆணவ மலமும், அதனால் விளைந்த அறியாமையும் இராக்காலத்திலே பொருந்தி எழுகின்ற அருணோதயத்தால் அதற்கு முன் திணிந்திருந்த இருள் நீங்குதல் போல நீங்கியொழியும்.
=======================================
பாடல் எண் : 2
கடங்கடந் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்(து)
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே.

பொழிப்புரை :  நில உலகின்கண் நீர் நிரம்பிய குடங்களில் ஆதித்தனை நோக்கி வாயைத் திறந்துள்ள குடங்களில் தான் ஆதித்தன் விளங்குவான். அவ்வாறின்றி ஆதித்தனை நோக்காதவாறு மூடி வைக்கப்பட்ட குடங்களில் யாதொன்றன் நீரிலும் ஆதித்தன் விளங் குதல் இல்லை. சிவன் உடல்தோறும் உள்ள உயிர்களில் விளங்குதலும் ஆதித்தன் குடத்து நீரில் விளங்குதல் போல்வதுதான்.
=======================================
பாடல் எண் : 3
தானே விரிசுடர் மூன்றும்ஒன் றாய்நிற்கும்
தானே அயன்மால் எனநின்று தாபிக்கும்
தானே உடல்உயிர் வேறன்றி நின்றுளன்
தானே வெளிஒளி தான்இருட் டாகுமே.

பொழிப்புரை :  இங்குக் கூறிவரும் சிவாதித்தன் தான் ஒருவனே யாயினும் சுடர்களை எங்கும் வீசுகின்ற ஞாயிறு, திங்கள், தீ என்னும் முச்சுடர்களும் ஒன்று கூடினாற் போன்ற பேரொளியாய் இருப்பான்; தன்னை அழிப்பவனாகப் பலர் கருதினானுலும் அயனாய் நின்று படைப் பவனும், அரியாய் நின்று காப்பவனும் தானேயாகும். மேலும் அவன் உயிர்களில் மட்டுமன்றி, உடல்களிலும் வேற்றுமையின்றிக் கலந்து நிற்கின்றான். இன்னும் தான் ஒருவனே ஆகாயமாயும், அதன் கண் விளங்குகின்ற ஒளிகளாயும் நிற்றலேயன்றி இருளாகவும் ஆகின்றான்.

=======================================
பாடல் எண் : 4
தெய்வச் சுடர்அங்கி ஞாயிறுந் திங்களும்
வையம் புனல்அனல் மாருதம் வானகம்
சைவப் பெரும்பதி தாங்கிய பல்லுயிர்
ஐவர்க் கிடம்மிடை ஆறங்க மாமே.

பொழிப்புரை :  தெய்வச் சுடர் அங்கி, வேள்வித் தீ ஞாயிறுமுதல் வானகம் ஈறாயினவும் ``பல்லுயிர்`` என்றதும் வெளிப்படை. ஐவர், பிரமன் முதல் சதாசிவன் ஈறானவர். அவர்க்கு இடம் ஆவன சுவாதிட்டானம் முதல் ஆஞ்ஞை ஈறாய் உள்ள ஐந்து ஆதாரங்கள். ஆறு அங்கம் ஆஞ்ஞையிலிருந்து கீழ்நோக்கி எண்ண ஆறாவதாகும் மூலாதாரம். சைவப் பெரும்பதி - இவை யாவும் சிவத் தலங்களாகும்.
=======================================
ஏழாம் தந்திரம்-27. பசு லக்கணம்–பிராணன் : பாடல்கள்: 002
பாடல் எண் : 1
உன்னு மளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயனென் றறிந்துகொண் டேனே.

பொழிப்புரை :  சிவன் தன்னை நினைப்பவரையே தான் நினைப்பான். பல பொருள்களையும் சொல்லுகின்ற வேதங்கள் பிறரைப்போல அல்லது தன்னைப் பலவிடத்தும் பெரும்பான்மை எடுத்துச் சொல்ல நிற்பவன். என் உள்ளே என்றும் ஒளிகுறையாத விளக்காய் உள்ளவன். `அவன் உயிர்களிடத்து அன்னப் புள்ளாய் இருக்கின்றான்` என்னும் அரிய உண்மையினை நான் திருவருளால் அறியப்பெற்றேன்.
=======================================
பாடல் எண் : 2
அன்னம் இரண்டுள ஆற்றங் கரையினில்;
துன்னி இரண்டும் துணைப்பிரியா; தன்னந்
தன்னிலை அன்னம் தனிஒன்(று);அ தென்றக்கால்
பின்ன மடஅன்னம் பேறணு காதே.

பொழிப்புரை :  இங்கு ``ஆறு`` என்றது பிராணன் இயங்கும் வழியினை. ``அதன் கரையில் உள்ள இரு அன்னங்கள்`` என்றது, அந்தப் பிராணனை ஒட்டி நிற்கின்ற `சிவன், சீவன்` என்னும் இருவரையும். அவ்வன்னம் இரண்டும் என்றும் இணைந்து நிற்றலினின்றும் நீங்கித் தனித்தனியே பிரிதல் இல்லை. அவற்றுள் ஒன்று அறிவுமிக்கது. ஆதலின் அது தனியே பிரிந்து நிற்பினும் யாதொன்றினை இழத்தல் இன்றி, இனிது வாழும். மற்றொன்று அறிவு குறைந்தது ஆதலால் அது பிரிந்து தனி நிற்பின் எந்தப் பயனையும் பெறாது துன்பத்தில் ஆழும் என்றது சிவ சீவர்களது இயல்பினை விளக்கியதாம்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.


No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!