http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 25 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :28, 29, 30 & 31. புருடன், சீவன், பசு, போதன் - பாடல்கள்: 004, 004, 002 &006




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.
பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............
பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................
பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -031
கூடுதல் பாடல்கள்  (278+004+004+002+006 =294)

==============================================
ஏழாம் தந்திரம் - 28. புருடன் : பாடல்கள்: 004
பாடல் எண் : 1
வைகரி யாதியும் மாய்ஆ மலாதியும்
பொய்கரி யான புருடாதி பேதமும்
மெய்கரி ஞானம் கிரியா விசேடத்தால்
செய்கரி ஈசன் அனாதியே செய்ததே.

பொழிப்புரை :  தோன்றியழிகின்ற வைகரி முதலிய வாக்குக்களாகிய சொல்லுலகங்களையும். மற்றும் பொருளுலகங்களையும், அவைகளைப் பற்றி நின்று `புருடன், உருத்திரன், சிவன்` என உயிர்கள் அடையும் நிலையற்ற வேறுபாடுகளையும் தனது உண்மைத் துணையாகிய ஞானம், கிரியை என்னும் வேறுபாடுகளையுடைய தனது சத்தியால் செய்கின்ற நிலையான முதல்வன் சிவபெருமானே. இவ்வமைப்பு அனாதியே அமைந்த அமைப்பாகும்.
=======================================
பாடல் எண் : 2
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்(டு)
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்(கு)
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

பொழிப்புரை :  ஆணவ பந்தத்தால் தனது வியாபக நிலையை இழந்து அணுத்தன்மை எய்த நிற்கின்ற உயிரை அணுவிலும் பல கூற்றில் ஒரு கூற்றளவினதாகப் பாவித்து, `அணுவுக்கும் அணு` எனப்படுகின்ற நுண்ணியனாகிய சிவனை அணுக வல்லவர்கட்கே அவனை அடைதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 3
படர்கொண்ட ஆலதின் வித்தது போலச்
சுடர்கொண் டணுவினைத் தூவழி செய்ய
இடர்கொண்ட பாச இருளற ஓட்டி
நடர்கொண்ட நல்வழி நாடலு மாமே.

பொழிப்புரை :  சிவனது திருவருளாகிய ஒளியினை ஆன்மா, பல கிளைகளும் விழுதுகளுமாய் விரிவடையும் ஆற்றலைத் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆலம் விதைபோலத் தன்னுள் அடக்குமாற்றால் தன்னை அச்சிவத்திற்கு ஏற்ற தூய இடமாகச் செய்யுமானால், அந்தத் திருவருள் ஒளி துணையாக, துன்பத்தையே தனது இயல்பாகக் கொண்ட ஆணவமாகிய இருளை ஓட்டி, அம்பலத்தில் ஞான நடனத்தைச் செய்கின்ற அப்பெருமான் தரக் கருதும் நல்வழியைத் தான் உணரும் வாய்ப்பு உண்டாகும்.
=======================================
பாடல் எண் : 4
அணுவுள் அவனும் அவனுள் அணுவும்
கணுவற நின்ற கலப்ப துணரார்
இணையிலி ஈசன் அவன்எங்கு மாகித்
தணிவற நின்றனன் சராசரந் தானே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில், `உயிர் ஆலம் விதைபோலவும், சிவன் அவ்விதையில் அடங்கியுள்ள கிளை முதலியன போலவும் ஆதல் வேண்டும்` என்றது ஒருபுடை உவமையேயன்றி, முற்றுவமையன்று. மற்று, உண்மை நிலையாது` எனின், `உயிர் மேல்; சிவன் உள்` என்றாயினும், `சிவன்மேல்; உயிர் உள்` என்றாயினும் ஒருபடித்தாக வரையறுத்தல் கூடாதபடி, புறவேற்றுமையேயன்றி, அகவேற்றுமை தானும் இன்றி ஒன்றி நிற்கின்ற கலப்பே உண்மை நிலையாகும். இவ்வுண்மையை உணர்வார் ஒருவரும் இல்லை. இனித் தன்னொப்பில்லாத் தனிப்பெரும் பொருளாகிய சிவன் எல்லாப்பொருளிலும் ஒரு படித்தாக நீக்கமின்றி நிறைந்து நிற்கின் இயங்குவனவும், நிற்பனவுமாய்க் காணப்படுகின்ற உயிர்கள் பலவும் அவனிடத்தில் தத்தமக்கு இயலும் முறையில் கலந்து நிற்கின்றன.
=======================================
ஏழாம் தந்திரம் - 29. சீவன்-பாடல்கள்: 004
பாடல் எண் : 1
மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது ஆயிர மாயினால்
ஆவியின் கூறது நூறா யிரத்தொன்றே.

பொழிப்புரை :  உயிர் பருப்பொருளாகக் கருதிக்கொண்டு, `அதன் அகல, நீர், கன அளவுகள் எத்துணையன` என வினாவுவார்க்கு விடை கூறின், `பசுவின் மயிர்களில் ஒன்றை எடுத்து அதனைப் பல நூறாயிரங் கூறு செய்தால் அவற்றுள் ஒரு கூற்றின் அகல, நீள, கன அளவுகளே உயிரின் அகல, நீள, கன அளவுகள்` எனக் கூறலாம்.
=======================================
பாடல் எண் : 2
ஏனோர் பெருமைய னாயினும் எம்மிறை
ஊனே சிறுமையி னுட்கலந் தங்குளன்
வானோ ரறியும் அளவல்லன் மாதேவன்
தானே அறியும் தவத்தின் அளவே.

பொழிப்புரை :  கட்புலனாகாப் பொருள் சிவன் ஒருவனேயாக, பலவாகிய உயிர்களையும் அத்தகைய பொருளாகக் கூறுதல் கூடுமோஎனின், கூடும். ஏனெனில், சிவனது பெருமையை நோக்குமிடத்து ஏனைத் தேவர் அனைவர் பெருமையினும் பெரிது. ஆயினும் பருப்பொருளாகிய உடம்புகளில் சூக்குமமாய் நிறைந்திருக்கின்ற உயிர்களினுள்ளே அவற்றினும் அதிசூக்குமமாய் அவன் நிறைந்திருக்கின்றான். (எனவே, உயிர் சூக்குமப் பொருளும், சிவன் அதி சூக்குமப் பொருளுமாம் ஆதலின் அதுபற்றி ஐயமில்லை என்றபடி,) சிவன் இத்தகைய அதிசூக்குமப் பொருளாதலின் அவன் தேவர்களாலும் எளிதில் அறியத்தக்கவனல்லன். ஆயினும் அவனே அவரவரது தவத்தின் அளவையறிந்து அவ்வளவிற்கு ஏற்ப விளங்கி நிற்பன்.
=======================================
பாடல் எண் : 3
உண்டு தெளிவன் றுரைக்க வியோகமே
கொண்டு பயிலும் குணமில்லை யாயினும்
பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்
கண்டு சிவன்உருக் கொள்வர் கருத்துளே.

பொழிப்புரை :  உயிர்கட்கு முதற் காலத்திலே, `சிவனை அறியும் வாயில் உண்டு` எனக் கூறுதற்கு அவனைத் தம்முன்னே கொண்டு யோகம் பயில்கின்ற குணம் இல்லாவிட்டாலும் பின்பு அக்குணத்தை அடைந்து தம்முன்னே கொண்டு யோகம் பயிலும். ஆகவே, உயிர்கட்கு என்றாயினும் ஒருநாள் சிவனைத் தெளிவாக உணரும் உணர்வு உண்டாகவே செய்யும்.
=======================================
பாடல் எண் : 4
மாயா உபாதி வசத்தாகும் சேதனத்(து)
ஆய குருஅரு ளாலே அதில் தூண்ட
ஓயும் உபாதியோ டொன்றின்ஒன் றாதுயிர்
ஆய துரியம் புகுந்தறி வாகவே.

பொழிப்புரை :  மாயா காரியமாகிய கருவிக்கூட்டம் சடமாகலின், அது சித்தாகிய உயிருக்குக் கூடாப் பொருளாய்க் குற்றமாகும். ஆயினும் அவ்வுயிரின் உள்ளே என்றும் உள்ள சிவன் அதனது பக்குவம் அறிந்து அருள் காரணமாகக் குருவாகி எதிர் வந்து அதனை அக்குற்றத்தினின்றும் பிரிவிக்க, அஃது அங்ஙனமே பிரிந்து திருவருளில் புகுந்து, அதன் கண் பேருறக்கத்தை எய்தி அமைதியுற்றிருக்கும். அருள் உறக்கம், இருள் உறக்கம் அன்றாகலின் அந்நிலையில் உயிர் அறிவே வடிவாய் விளங்கும்.
=======================================
ஏழாம் தந்திரம் - 30. பசு-பாடல்கள்: 002
பாடல் எண் : 1
கற்ற பசுக்கள் கதறித் திரியினும்
கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்
உற்ற பசுக்கள் ஒருகுடம் பால் போதும்;
மற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.

பொழிப்புரை :  கருவுறும் பருவம் வாயாத இளம் பசுக்கள் இனச் சார்பால் கதற மட்டும் தெரிந்து கொண்டு, கன்றை ஈன்ற பசுக்கள் தம் கன்றினை அழைக்கக் கதறுவதுபோலத் தாமும் கதறித் திரியும். கன்றை ஈனாது கருவுற்று மட்டும் உள்ள பசுக்கள் தமக்குரிய புல்லை விடுத்து மனிதர்க்கு உரிய பயிரில் சென்று மேயாதபடி அதன்தலைவன் புல்வெளியில் ஓரிடத்தில் முளையடித்து நீண்ட கயிற்றால் கட்டி வைக்க, அக்கயிற்றின் அளவிற்கு அவை கட்டில்லாதது போலத் தம் விருப்பப்படி சென்று புல்லை மேயும். எனினும் கன்றை ஈன்று தாய்மையை எய்திய பசுக்களே ஒன்று ஒரு குடம்போல நிரம்பப் பால் பொழியும் பசுக்களாகும். அவை தவிர மேற்சொன்ன மற்ற இருவகைப் பசுக்களும் பயன்படாத பசுக்களாகவே இருக்கும்.
=======================================
பாடல் எண் : 2
கொல்லையில் மேயும் பசுக்களைச் செய்வதென்
எல்லை கடப்பித் திறைவ னடிகூட்டி
வல்லசெய்(து) ஆற்ற மதித்தபின் அல்லது
கொல்லைசெய் நெஞ்சம் குறிப்பறி யாதே.

பொழிப்புரை :  காப்பாருமின்றி, மேய்ப்பாருமின்றி, கறப்பாருமின்றித் தம் விருப்பம்போல் காட்டில் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டுப் பசுப்போன்ற மக்களை எப்படித் திருத்த முடியும். (அவர் யாருக்கும் அடங்குபவரல்லர்.) அவர் தாமே தமது இழிநிலையை உணர்ந்து ஆசிரியரை அடைக்கலமாக அடைவாராயின் அவரை ஆசிரியர் கல்லில் நார் உரிப்பதுபோலவும், கல்லைப் பிசைந்து கனியாக்குதல் போலவும்* தமது திருவருள் திறத்தால் அவரது நிலையினின்றும் நீக்கிச் சீர்செய்து, அவர் சீர்ப்பட்டமையை நன்குணர்ந்து சிவமாக்கிய பின்பல்லது அதற்கு முன் காடும், மேடும், கல்லும், முள்ளுமாய்க் கிடக்கின்ற நிலம் போன்றுள்ள அவரது மனம் உணர வேண்டியவற்றை உணராது.
=======================================
ஏழாம் தந்திரம் - 31. போதன்-பாடல்கள்: 006
பாடல் எண் : 1
சீவன் எனச்சிவன் என்னவெவ் வேறில்லை
சீவ னார்சிவ னாரை யறிகிலர்
சீவ னார்சிவ னாரை அறிந்தபின்
சீவ னார்சிவ னாயிட் டிருப்பரே.

பொழிப்புரை :  `சீவன்` எனவும், `சிவன்` எனவும் வேறு வேறாய்த் தனித்து எக்காலத்தும் இல்லை, உடலும், உயிரும் போல என்றும் ஒன்றியே நிற்கும். அவ்வாறிருந்தும் சீவன் சிவனை அறிந்ததில்லை. ஏன்? பாசங்கள் சீவனது அறிவை மறைத்து நிற்கின்றன. (அம்மறைப்பு நீங்கிச்) சீவன் சிவனை அறியுமாயின் அது சீவனாய் இராது, சிவமாகவே இருக்கும்.
=======================================
பாடல் எண் : 2
குணவிளக் காகிய கூத்தப் பிரானும்
மனவிளக் காகிய மன்னுயிர்க் கெல்லாம்
பணவிளக் காகிய பஃறலை நாகம்
கணவிளக் காகிய கண்காணி யாமே.

பொழிப்புரை :  எண்குணங்களையுடைய கூத்தப்பிரான், மனத்தை விளக்காகக் கொண்டு பொருள்களை அறிந்து வருகின்ற, நிலைபெற்ற உயிர்களுக்கெல்லாம், படந்தோறும் மணியாகிய விளக்கினையுடைய பலதலைப் பாம்புபோலவும், இரவிலும் பல விளக்குக்களை ஏற்றி வைத்துக் கொண்டு பொருள்களைக் காவல் செய்கின்ற கண்காணி போலவும் இருக்கின்றான்.
=======================================
பாடல் எண் : 3
அறிவாய் அறியாமை நீங்கி யவனே
பொறிவாய் ஒழிந்தெங்கும் தான்ஆன போதன்
அறிவாய் அவற்றினுள் தான்ஆய் அறிவன்
செறிவாகி நின்றஅச் சீவனும் ஆகுமே.

பொழிப்புரை :  சிவன் அறியாமையோடு விரவாது அறிவாயே இருப்பவன். அவன் சீவன்களின் அறிவில் பொருந்திச் சீவர்கள் அறிவனவற்றையெல்லாம் தான் உடனாய்நின்று அறிவன். அதனால் அவன் சீவன்களாகியும் இருப்பான். ஆகையால் இந்நிலையை உணர்கின்ற சீவன் தானும் அச்சிவனேயாய் நிற்கும் ஆதலால், அத்தகைய சீவனே யாதும் அறியாத இருள் நிலையும், பொறிகளின் வழிப்பட்டு உலகை ஏகதேசமாய் அறிகின்ற மருள் நிலையும் ஆகிய இவற்றினின்றும் நீங்கிச் சிவனைப் போல எங்கும் வியாபகமாய் நின்று அறியும் நிலையை எய்தி, `போதன்` எனப்படுவதாகும்.
=======================================
பாடல் எண் : 4
ஆறாறின் தன்மை அறியா திருந்தேனுக்கு
ஆறாறின் தன்மை அறிவித்தான் பேர்நந்தி
ஆறாறின் தன்மை அருளால் அறிந்தபின்
ஆறாறுக் கப்புற மாகிநின் றானே.

பொழிப்புரை :  `தத்துவங்கள் சடம்` என்று அறியாமல், அவைகளையே யானாக மயங்கிக் கிடந்த எனக்குச் சிவபிரான் தனது அருளைப் பற்றி நின்று அவ்வுண்மையை நான் உணர்ந்தபின் அவ்வாறு உணர்த்திய அவன் தத்துவங்கட்கு அப்பாற்பட்டு நிற்றலையும் உணர்ந்தேன்.
=======================================
பாடல் எண் : 5
சிவமா கியஅருள் நின்றறிந் தோரார்
அவமாம் மலம்ஐந்தும் ஆவதறியார்
தவமான செய்து தலைப்பறி கின்றார்
நவமான தத்துவம் நாடகி லாரே.

பொழிப்புரை :  பிற ஆகமங்களிலன்றிச் சைவாகமங்களில் சொல்லப்படுகின்ற தத்துவங்களின் உயர்வை உணர்ந்து அவற்றைத் தெளியமாட்டாதவர் சிவமுதற் பொருளையும், அதனது ஆற்றலின் சிறப்பையும் உணர்ந்து அதிலே பழகியறியார். அதனால் அவர் உயிர் பஞ்ச மலங்களால் போதம் இழந்து நிற்றலையும் உணர மாட்டார். பிற பிற சமய நூல்களில் எல்லாம் சொல்லப்படுகின்ற தவங்களைச் செய்து, தாம் அடையவேண்டிய பயனை அடையாது இளைக்கின்றவராகின்றனர்.
=======================================
பாடல் எண் : 6
நாடொறும் ஈசன் நடத்து தொழில் உன்னார்
நாடொறும் ஈசன் நயந்தூட்டல் நாடிடார்
நாடொறும் ஈசன்நல் லோர்க்கருள் நல்கல்தான்
நாடொறும் நாடார்கள் நாள்வினை யாளரே.

பொழிப்புரை :   நாளும் நாளும் தம்பால் நிகழ்வன யாவும் சிவ பெருமான் நிகழ்த்துவிக்க நிகழ்வனவே யாதலையும் ஊன்றியுணரார்; அங்ஙனம் அவன் நிகழ்த்துவித்தல் தாம் செய்த வினையின் பயன்களைத் தமக்குத் தனது அருள் காரணமாக ஊட்டுவித்தலே யாதலையும் கேட்டல் சிந்தித்தல்களின்வழி எண்ணிப்பாரார். சிவன் தனது அருளைத் தான் நேரே வழங்குதல் மேற்சொல்லிய உண்மைகளை ஆசிரியரது அருளால் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்தவர் கட்கே என்பதையும் எண்ணமாட்டார். யார் எனில், நாள்தோறும் முன் மந்திரத்தில் கூறிய ஐம்பாசங்களின் வழியே உழைத்து நாட்களைக் கழிக்கின்றவர் என்க.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!