http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 12 December, 2012

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 03 . அவத்தை பேதம் - பாடல்கள்: 025.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003
எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.........பாடல்கள்: 025 
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -003
கூடுதல் பாடல்கள்  (021+025 =046)

==============================================
எட்டாம் தந்திரம் - 3. அவத்தை பேதம்-பாடல்கள்: 025
பாடல் எண் : 1
ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம்
கய்கண்ட பன்னான்கில் கண்டங் கனாஎன்பர்
பொய்கண் டிலாதபுரு டன்னித யஞ்சுழுனை
மெய்கண் டவனுந்தி ஆகும் துரியமே.

பொழிப்புரை :  மேற்கூறிய அவத்தைகளில் மத்தியாலவத்தை ஐந்தும், கீழாலவத்தைச் சாக்கிரமும் நிகழும் இடம் புருவநடு, அவற்றுள் மத்தியாலவத்தைச் சாக்கிரமும் ஒன்றிலேதான் எல்லாக் கருவிகளும் குறைவின்றிச் செயற்படும். மற்றையவற்றில் சிற்சில கருவிகள் செயற்படாது நிற்கும். அவற்றைப் பிரிந்தும், கூடியும் வரும் கருவிகளாகக் கூறுவர். மத்தியாலவத்தையை விட்டு, ஆன்மாக் கீழாலவத்தையில் சாக்கிரத்தை அடைதற்குக் காரணம் ஆன்ம தத்துவங்களில் சிலவும், தாத்துவிகங் களில் சிலவும் குறைதலேயாகும். அந்நிலையில், கீழாலவத்தைச் சாக்கிரத்தில் செயற்படும் கருவிகள் முப்பத்தைந்து` என்று சொல்லப் படுகின்றது. `சாக்கிரம் முப்பத்தைந்து நுதலினில்` என்பது சிவஞான சித்தியார்.3 முப்பத்தைந்தில் தத்துவம் பதினைந்து; தாத்துவிகம் இருபது. ஞானேந்திரியம் ஐந்து, கன் மேந்திரியம் ஐந்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று. இவை தத்துவங்கள், ஞானேந்திரிய விடயம் ஐந்து, கன்மேந்திரிய விடயம் ஐந்து, பிராணாதி வாயுக்கள் பத்து. இவை தாத்துவிகங்கள். `முப்பத்தைந்து` எனத் தொகை கூறி வரையறுத்தது பிரிந்தும், கூடியும் வரும் நிலைமையுடைய கருவிகளை நோக்கியேயாம். ஆகவே, பிரிவின்றி எஞ்ஞான்றும் கூடியே நிற்கும் கருவிகள் இந்த அவத்தை பேதங்களில் நீங்குவன அல்ல. அவை வித்தியா தத்துவம் ஏழும், சிவ தத்துவம் ஐந்துமாம். `புருடன்` என்பது ஒரு தத்துவம் அன்று. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் ஐந்தும் கூடிய நிலையேயாம். இவை ஐந்திற்குக் காரணம் `மாயை` என்னும் தத்துவம். எனவே, புருடன்` என்றதனால், மேற்கூறியவற்றோடு சிவ தத்துவமும் பெறப்படும். ஆகையால் `முப்பத்தைந்து` எனச் சுருக்கமாகக் கூறியபோதிலும் `நாற்பத்தாறு` என்பதே உண்மையாம். எனவே, கீழாலவத்தை தொடங்குங்கால், தொண்ணூற்றாறு கருவிகளில், நீங்குவன ஐம்பதே` என்பது விளங்கும். ஐம்பதில் தத்துவம் பத்தும், தாத்துவிகம் நாற்பதும் ஆகும். தத்துவம் பத்தாவன மாபூதங்கள் ஐந்து; தன்மாத்திரை ஐந்து, தாத்துவிகம் நாற்பதவான. மேற்கூறிய சத்தாதி ஐந்து, வசனாதி ஐந்து, பிராணாதி பத்து ஆகிய இருபது தவிர மற்றவையாம்.
**********************************************
பாடல் எண் : 2
முப்பதோ டாறின் முதல்நனா ஐந்தாகும்
செப்பதில் நான்காய்த் திகழ்ந்திரண் டொன்றாகி
அப்பதி யாகும் நியதி முதலாகச்
செப்பும் சிவம்ஈறாய்த் தேர்ந்துகொள் வீரே.

பொழிப்புரை :  முப்பத்தாறு தத்துவங்களாலும் (எனவே, தாத்து விகம் அறுபதும் உளவாம் ஆதலின் தொண்ணூற்றாறு கருவிகளாலும்) நிரம்பிய அறிவாய்க் கீழாலவத்தைக்கு முன்னே உள்ள மத்தியாலவத்தையில் சாக்கிரம் நிகழும். அதுபொழுது சிவதத்துவம் ஐந்து உள்ளனவாம். அதன் பின் மத்திய சொப்பனம், மத்திய சுழுத்தி, மத்திய துரியம், மத்திய துரியாதீதம் - என்பவை முறையே சிவ தத்துவங் களில் ஒன்று, இரண்டு, மூன்று. நான்கு குறைய நிற்கும் தத்துவங்கள் நான்கு, மூன்று, ஒன்று, ஆகுமாற்றால் நிகழும் நீங்குவன சுத்த வித்தை முதலாகவாம் ஆதலின், இறுதியில் நிற்பது `சிவம்` என்பதொன்றுமே யாம். தத்துவங்கள் செலுத்துவனவும், கலை முதலிய ஐந்தும் செலுத்தப் படுவனவும் ஆதலின், செலுத்துவன நான்கும் நீங்கிய பொழுது செலுத்தப்படுவனவற்றிலும் நான்கும் நீங்கும். அவை, `அராகம், வித்தை, கலை, நியதி - என்பன. எனவே, எப்பொழுதும் நீங்காது நிற்பன `சிவம்` என்னும் தத்துவமும், அதனால், செலுத்தப்படுகின்ற காலமும் ஆம். ஆகவே, மத்திய துரியாதீதத்தில் நிற்பன அவை மட்டுமேயாம். இவற்றை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளுங்கள்.
**********************************************
பாடல் எண் : 3
இந்தியம் ஈரைந்தீ ரைந்துதன் மாத்திரை
மந்திர மாய்நின்ற மாருதம் ஈரைந்தும்
அந்தக் கரணம் ஒருநான்கும் ஆன்மாவும்
பந்தவச் சாக்கிரப் பாலது வாகுமே.

பொழிப்புரை :  கேவலம் வருமாறு செய்கின்ற அந்தச் சாக்கிராவத்தையானது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, அவற்றின் விடயங்கள் பத்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு, புருடன் ஒன்று-என்னும் முப்பத்தைந்து கருவிகளால் நிகழும்.
**********************************************
பாடல் எண் : 4
பாரது பொன்மைப் பசுமை யுடையது
நீரது வெண்மை செம்மை நெருப்பது
காரது மாருதம் கறுப்பை யுடையது
வானகம் தூமம் மறைந்துநின் றார்களே.

பொழிப்புரை :  (அவத்தைக்குக் காரணமான கருவிகளுள் மிக எளிதில் விளங்குவனவாகிய ஐம்பெரும் பூதங்களில்) நிலம் பசும் பொன்னிறத்தையும், நீர் வெண்மை நிறத்தையும், நெருப்புச் சிவப்பு நிறத்தையும், காற்றுக் கருப்பு நிறத்தையும், வானம் புகை நிறத்தையும் உடையன. இவற்றின் அதிதேவர்கள் இவைபோலப் புலனாகாது மறைந்து நிற்பார்கள்.
**********************************************
பாடல் எண் : 5
பூதங்கள் ஐந்தும் பொறியவை ஐயைந்தும்
ஏதம் படச்செய் திருந்த புறநிலை
ஓது மலம்குண மாகும்ஆ தாரமோ(டு)
ஆதி யவத்தைக் கருவிதொண் ணூற்றாறே.

பொழிப்புரை :  தத்துவம் முப்பத்தாறனுள் பூதம் ஐந்து, ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந் திரியம் ஐந்து ஆகப்பதினைந்தும் புறக்குற்றங்களில் மூழ்கச் செய்கின்ற புறக்கருவி களாம். ஆறு ஆதாரங்களும், ஒரு வகை மாயையாகச் சொல்லப் படுகின்ற பிரகிருதி குணங்களும் அவத்தைக்கு ஏதுவாகும். அந்நிலையில் ஐந்தவத்தைகளுள் முதலாவதாகிய சாக்கிராவத்தையில் தொண்ணூற்றாறு கருவிகளும் தொழிற்படுவனவாம்.
**********************************************
பாடல் எண் : 6
இடவகை சொல்லில் இருபத்தஞ் சானை
படுபர சேனைகள் பாய்பரி ஐந்தும்
உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர்
அடைய நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை :  மேற்கூறிய மத்தியலாவத்தையின் இயல்பைக் கூறுமிடத்து உயிரினது செயற்பாடு, அனைத்துச் சுற்றங்களும் சூழ அரசன் உலாவருதல் போன்றதாகும். யானை இருபத்தைந்து, (இவை ஆன்மதத்துவங்கள்) குதிரை ஐந்து, (இவை காமம், வெகுளி, உலோபம், யோகம், மதம், என்னும் உணர்ச்சிகள்) அமைச்சர் நால்வர். (இவை நால்வகை வாக்குக்கள்) புறஞ் சூழ்ந்து வரும் சேனைகள் காலாட்படைகள் (இவை வித்தியா தத்துவங்களும், சிவ தத்துவங்களும்) சென்று சென்று நிற்கும் வாயில்கள் ஒன்பது. (இவை நவத் துவாரங்கள்) இங்ஙனமாக அறிக.
**********************************************
பாடல் எண் : 7
உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே.

பொழிப்புரை :  அதிசூக்கும சரீரம் முதலில் சூக்கும சரீரத்தைப் பற்றிப் பின்பு அவ்விரண்டும் கூடித் தூல சரீரத்தைப் பற்றுதலினால் உயிர் அம்மூன்று சரீரத்தோடும் பொருந்தித் தனது செயலைச் செய்துவரும் நிலையைப் பலர் அறியாது, `உடம்புதான் உயிர்` என மயங்குகின்றனர். உடம்போடு உயிருக்குள்ள தொடர்பு, வினை காரணமாகச் சிறிது கால அளவினதே என அறியாதவர்கள் தூய திருமடங்களின் உள்ளே எவ்வாறோ புகுந்துவிட்ட நாய் `இந்த இடம் நமக்கு நிலையாது` என்பதை உணராமல், நிலைத்த ஒன்றுபோல நினைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உணவைத் தனக்கே உரியன வாக எண்ணிக் களிப்பதுபோலக் களித்திருக்கின்றார்கள்.
**********************************************
பாடல் எண் : 8
இருக்கின்ற வாறொன் றறிகிலர் ஏழைகள்
முருக்கும் அசபையை மாற்றி முகந்து
கருக்கொண்டு காமாரி சார முகந்தேர்ந்
துருக்கொண்டு தொக்க உடல்அழி யாதே.

பொழிப்புரை :  அறிவில்லாதவர்கள், `உலகத்தில் நாம் எவ்வாற்றால் உயிர் வாழ்கின்றோம்` என்பதைச் சிறிதும் உணர மாட்டார்கள். (உள்வாங்கியும், வெளிப் போக்கியும் பிராண வாயுவை ஓய்வின்றி இயக்குதலால்தான் அவர்கள் வாழ்கின் றனர். ஆகையால் அதனையறிந்து) பிறவியை அறுக்கின்ற அசபா மந்திரத்தால் பிராண வாயுவை மேற்சொல்லியவாறு இயக்கிப் பயின்று தூயராய்ப் பின் அவ்வாயுவை உள்ளே நிறுத்தி` அம்மந்திரத்தை, `சிவன் நான்` எனப் பொருள்படும் வகையில் மாற்றி நினைந்து அவ்வாற்றால், காமனை அழித்தோனாகிய சிவன் தம்மிடத்தில் பதிந்து பின் நீங்காது விளங்கும் படி செய்தலாகிய இம்முறையை உணர்ந்து, அதனால் அவன் அருளே தமது உடம்பாகச் செய்து கொள்வார்க்கு, அங்ஙனம் அமைந்த உடம்பு அழிந்தொழியாது; நிலைத்திருக்கும்.
**********************************************
பாடல் எண் : 9
ஒளித்திட் டிருக்கும் ஒருபதி னாறை
அளித்தனன் என்னுள்ளே ஆரியன் வந்து
அளிக்குங் கலைகளி னால்அறு பத்துள்
ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே.

பொழிப்புரை : அறிவுப் பொருளேயாயினும் ஆணவ மறைப்பால் அவ்வறிவை இழந்து நின்ற உயிரை இறைவன் கருவிக் கூட்டத்துள் மறைந்து நிற்கும்படி செய்தான். (பின்பு அவ்வுயிர் பக்குவம் எய்திய காலத்தில்) குருவாகி வந்து எனக்கு உபதேசித்த நூல்கள் வழியாக என் உடம்பினுள்ளே மறைந்திருந்த பிராசாத கலைகள் பதினாறையும் விளக்கினான்.
**********************************************
பாடல் எண் : 10
மண்ணினில் ஒன்றும் மலர்நீர் மருங்காரும்
பொன்னினில் அங்கி புகழ்வளி ஆகாயம்
மன்னும் மனோபுத்தி ஆங்காரம் ஓரொன்றாய்
உன்னின் முடிந்த தொருபூ தசயமே.

பொழிப்புரை : மண்ணிலிருந்து தோன்றிய பல மலர்களை உடைத்தாய் விளங்குகின்ற நீர், பொன்னிறத்தை உடைத்தாகிய தீயினின்றும் அதற்குப்பின் தோன்றியதாம். இனி அத்தீக் காற்றிலிருந்தும், காற்று ஆகாயத்திலிருந்தும் தோன்றினவாம். புத்தியினின்றும் தோன்றியதாகிய அகங்காரத்திலிருந்து தோன்றியது மனம். இவ்வாறு தூல சூக்கும தேகங்களின் உற்பத்தியைப் பகுத்துப் பகுத்து உணர்ந்தால், அவற்றை ஒடுக்கி, ஆன்மாத் தூய்மை அடைகின்ற நிலை கைகூடும்.
**********************************************
பாடல் எண் : 11
முன்னிக் கொருமகன் மூர்த்திக் கிருவர்
வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர்
கன்னிக்குப் பிள்ளைகள் ஐவர்முன் நாள்இல்லை
கன்னியைக் கன்னியே காதலித் தானே.

பொழிப்புரை :  ஐவர் சத்திகளில் முன்னவளாகிய மனோன்மணிக்கு மகன் ஒருவன் தான். அவளிடத்தினின்றும் தோன்றிய மகேசுரனுக்கு மக்கள் இருவர். நெருப்புப் போலும் உருவத்தையுடைய உருத்திரனுக்கு மக்கள் மூவர். மணமகள்போல அழகுமிக உடைய திருமகளுக்கு மக்கள் நால்வர். கணவனது இயல்பு நோக்கிக் கன்னியாகச் சொல்லத்தக்க வாணிக்கு மக்கள் ஐவர். இவையெல்லாம் அநாதியில் யில்லை. ஆயினும் அநாதியாகிய சிவன் அவ்வாறாகிய தனது சத்தியை அநாதியே தாய்மை அடையுமாறு கருதினான்.
**********************************************
பாடல் எண் : 12
கண்டகன வைந்தும் கலந்தன தாம்ஐந்தும்
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய னாகிப் பரந்த வச்சாக்கிரத்
தண்டமுந் தானாய் அமர்ந்துநின் றானே.

பொழிப்புரை :  சுழுத்திக்குப் பின் கண்ட கனவிலே செயற்பட்ட ஓசை முதலிய புலன்கள் ஐந்தும், பின்னர்ச் சென்று கலந்த பொறிகள் ஐந்தோடும் கூடியிருக்கும் நிலையில் அப்பொறிகளின் வழியாகப் புறப்பொருள்களை அந்தக்கரணங்கள் நான்கும் உணர்வுறும் நிலைமையை ஒருங்கே அடைந்தபின் புருடன் முன்னை நிலையை அடைந்து, விரிந்த பரந்த சிறந்த சாக்கிராவத்தையையுடையனாய், உலகமே தானாயது போன்ற வியாபகநிலையைப்பெற்று, வினைகளை நுகர்தலும் ஈட்டலும்செய்திருப்பான்.
**********************************************
பாடல் எண் : 13
நின்றவன் நிற்கப் பதினாலில் பத்துநீத்(து)
ஒன்றிய அந்தக் கரணங்கள் நான்குடன்
மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை
கன்றிய கண்டத்தில் கண்டான் கனவதே.

பொழிப்புரை :  ஞானேந்திரியமும், கன்மேந்திரியமும், அந்தக் கரணங்களும் ஆகிய பதினான்கு கருவிகளோடு கூடிச் சாக்கிராவத்தையில் நின்ற புருடன், அவ்வாறு நிற்கும் நிலையிற்றானே இருவகை இந்திரியங்களாகிய பத்துக் கருவிகளை நீக்கிவிட்டு, எஞ்சிய நான்காகிய அந்தக்கரணங்களோடு மட்டும் அழுத்தமான கண்டத் தானத்தில் சென்று, முன்பு சாக்கிரத்தில் புருவ நடுவில் நின்று நுகர்ந்த உலக நுகர்ச்சிகளின் வாசனையைக் கனவாகக் காண்பான்.
**********************************************
பாடல் எண் : 14
தானம் இழந்து தனிபுக் கிதயத்து
மானம் அழிந்து மதிகெட்டு மால்ஆகி
ஆன விரிவறி யாஅவ் வியத்தத்தின்
மேனி அழிந்து சுழுத்திய தாமே.

பொழிப்புரை :  மேற்கூறிய கண்டமாகிய தானத்தை (இடத்தை) விட்டுப்புருடன் கீழ் இறங்கி, அங்ஙனம் இறங்கும் நிலையில், முன்பு இருந்த அந்தக்கரணங்களுள் மானமாகிய அகங்காரத்தையும், மதியாகிய புத்தியையும் விடுத்து, யாதொன்றையும், பற்றி நினைக்க மாட்டாத நிலையையடைந்து, இருதயத்தில் தனியேசென்று, புலன் உணர்வையிழந்து இழப்பு நிலையில் உயிரினது சொரூபமே காணப்படாது கிடக்கும் நிலையே சுழுத்தியவத்தையாம்.
**********************************************
பாடல் எண் : 15
சுழுனையைச் சேர்ந்துள மூன்றுளதன் காட்சி
கெழுமிய சித்தம் பிராணன்தன் காட்சி
ஒழுகக் கமலத்தின் உள்ளே யிருந்து
விழும்அப் பொருளுடன் மேவிநின் றானே.

பொழிப்புரை :  சுழுத்தியில் உள்ள மூன்று கருவிகளுள் புருடனுக்கு அறிவைத் தருவதாகிய சித்தம் நீங்கிப்போக, உந்திக் கமலத்தின்கண் பிராணவாயு ஒன்று மட்டுமே அவனுக்கு அறிவைத் தருவதாய் அமைய அங்கு இருந்துகொண்டு, ஆன்ம தத்துவங்கள் யாவும் தன்கண்வந்து ஒடுங்க நிற்பதாகிய மூலப்பிரகிருதியைத் தான் சிறிது அறிதலை அவன் செய்து கொண்டிருப்பான்.
**********************************************
பாடல் எண் : 16
தானத் தெழுந்து தருந்துரி யத்தினின்
வானத் தெழுந்துபோய் வையம் பிறகிட்டுக்
கானத் தெழுந்த கருத்தின் தலையிலே
ஊனத்த வித்தைவிட் டூமன்நின் றானே.

பொழிப்புரை :  உயர் தனக்குச் சிறப்பிடமாகிய இருதயத்தினின்றும் புறப்பட்டவழி அதற்குத் தரப்படும் துரியத்தானத்தில் நின்று பின்பு அதனையும் விட்டு அப்பாற் சென்று, உலகத்தைப் பின் தள்ளிவிட்டு, நாதத்தால் உணர்வு விளங்குமாறு நிற்கின்ற குண்டலினி சத்தியின் தலைபொருந்தியுள்ள மூலாதாரத்தை அடைந்து, அவ்விடத்தில் பொருள்களை மயங்கியறிதலாகிய அந்த அறிவும் இன்றி அறிவேயில்லாதது போலக் கிடக்கும்.
**********************************************
பாடல் எண் : 17
ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்
ஓம்மயம் உற்றது உள்ளொளி பெற்றது
நாம்மயம் அற்றது நாம்அறி யோமே.

பொழிப்புரை :   [நால்வகை வாக்குக்களில் மிகவும் தூலமாகிய வைகரிவாக்குச் சகல ஐந்தவத்தையிலும் தூலமாகிய மத்திமை வாக்கு கேவல ஐந்தவத்தையிலும், சூக்குமமாகிய பைசந்தி வாக்கு யோகாலவத்தையிலும், மிகவும் சூக்குமமாகிய சூக்குமை வாக்கு சுத்த ஐந்த வத்தையிலும் செயற்படும். அதுபற்றித்தான் வாக்குக்கள் அவத்தைக்கு ஏதுவாம் கருவிகளாக எண்ணப்படவில்லை. மேற்கூறிய நால்வகை ஐந்தவத்தைகளில் மேற்கூறியவாறு நால்வகை வாக்குக்கள் செயற்படுங்கால், சாக்கிரம் முதலிய ஐந்திலும் முறையே, தூலதமம், தூலதரம், தூலம், சூக்குமம், அதிசூக்குமம்` என்னும் நிலையில் செயற்படும் அதிசூக்குமமே ``ஊமையெழுத்து`` என்றும் ஏனையவை ``பேசும் எழுத்து`` என்றும் மறைபொருட் கூற்றாகக் கூறப்பட்டன. அதிகாரம் கீழாலவத்தையாதலின் இங்குக் கூறப்பட்ட, `பேசும் எழுத்து, ஊமையெழுத்து` - என்பன கீழாலவத்தையில் செயற்படுவதாகிய மத்திமை வாக்கின் `அதிசூக்குமம், சூக்குமம்` என்பவற்றையாம். தூலதமம், தூலதரத்திலும், தூலதரம் தூலத்திலும், தூலம் சூக்குமத்திலும் ஒடுங்கிவிடப் பின்பு சூக்குமமும் அதிசூக்குமத்தில் ஒடுங்கிவிட்டால் பெத்தநிலையில் உள்ள உயிர் புறப்பொருள்களில் யாதொன்றையும் அறியமாட்டாது உணர்வை முற்றிலுமாக இழந்து, பிரகிருதிமயமாகியே கிடக்கும். இதுவே கீழாலவத் தையில் துரியா தீதத்தின் நிலைமை. இதனையே,

``ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறின்
ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும்``.. என்றார்.

`ஆமை` என்றது உயிரை. இஃது உருவகம். அஞ்சு - ஐம் புலன்கள்மேல் சென்று அவற்றைக் கவர்கின்ற உணர்வு. அவ்வுணர்வு சிறிதும் வெளிச்செல்லாது உயிரோடு உயிராய் ஒட்டிக் கிடத்தல், ஆமையின் ஐந்து உறுப்புக்கள் அதனது ஓட்டிற்குள்ளே அடங்கி வெளித் தோன்றாதிருத்தலோடு ஒத்திருத்தல் பற்றி, உயிர் ஆமையாக உருவகம் செய்யப்பட்டது. சுழுத்தி துரியங்களிலும் அஞ்சும் அடங்கி யிருப்பினும் சித்தமும், பிராணனும் செயற்படுதலால் `அவற்றின் வாசனை சிறிதாயினும் இருக்கும்` என எண்ண இடம் உண்டு. உயிர்ப்பு அடங்கி விட்டமையால் அதீதத்தில் அவ்வாறு எண்ணச் சிறிதும் இடம் இல்லாமை பற்றி, இவ்விடத்திற்றானே ``அஞ்சும் அடங்கிடும்`` எனக் கூறினார். `தமோமாய்` (இருள்மயமாய்) நிற்கும் அதீத நிலையை சிவத்தில் அழுந்தி ஒளிமயமாய் நிற்கும் நிலையாகக் கூறுபவர் யாதும் அறியாதவர்` என்பதை உணர்த்துதற்குப் பின்னிரண்டடிகளைக் கூறினார். அவற்றுள் `ஓம்` என்றது அதன் உண்மைப் பொருளாய் நிற்கும் சிவத்தை.  `சுத்த துரியாதீதத்தில் சிவத்தை அடைந்த சிவமயமான உயிர், இருள் முழுவதும் நீங்கி ஒளிமயமானதாகும். அதனால் அது `நாம்` என்னும் சீவபோதமும் இல்லாததாகும். அந்த நிலையை நாம் அறிந்திலோம் என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.
**********************************************
பாடல் எண் : 18
துரியம் இறுப்பது சாக்கிரத் துள்ள
நரிகள் பதினாலும் நஞ்சுண்டு செத்தன
பரிய புரவியும் பாறிப் பறந்தது
துரியம் இறந்திடம் சொல்லஒண் ணாதே.

பொழிப்புரை :  சுழுத்தியைக் கடந்து உள்ள `துரியம், துரியாதீதம்` - என்னும் இரண்டனுள் துரியம், `எவ்வாறு இருந்தது` என வினாவுபவர்க்கு, `இவ்வாறு இருந்தது` என விடை யிறுக்கக் கூடியதாகும். துரியா தீதமோ எனில், அவ்வாறு வினாவுவார்க்கு இவ்வாறு இருந்தது` எனச் சொல்ல வாராத நிலையாகும். ஏனெனில், சாக்கிராவத்தையில் அடக்கினும் அடங்காது, யாதானும் ஓர் ஆற்றால் தப்பிப் புறத்தே ஓடுதலால், `நரிகள்` என்று சொல்லத்தக்கனவாகிய ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம் என்னும் பதினான்கு பொறிகளும் (கரணங்களும்) பிரகிருதியின் தமோ குணமாகிய விடத்தை உண்டமையால் இறந்து போய்விட்டன. அப்பொறிகளின் வழிச் செல்லும் உணர்விற்கு ஊர்தியாகிய `பிராணன்` என்னும் குதிரையும் தனது ஓட்டம் அடங்கி ஒழிந்தது.
**********************************************
பாடல் எண் : 19
மாறா மலம்ஐந்தான் மன்னும் அவத்தையின்
வேறாய மாயா தனுகர ணாதிக்கிங்(கு)
ஈறாகா தேஎவ் வுயிரும் பிறந்திறந்(து)
ஆறாத வல்வினை யால்அடி யுண்ணுமே.

பொழிப்புரை :  முத்தி பெறுங்காறும் விட்டு நீங்காதிருக்கின்ற ஐந்து மலங்களால் நிலை பெறுவதாகிய சகலாவத்தையில் தனியொரு சிறப்பினையுடைய மாயேயமாகிய தனு, கரணம் முதலியவற்றிற்கு இந்தச் சகல நிலையில் முடிவேயில்லாமையால், எல்லா வகையான உயிர்களும் ஒரு பிறப்பின் பிறந்து, பின் அதனை விட்டு நீங்கி, வேறொரு பிறப்பை அடைந்து அலமரும். அதற்குக் காரணம் தனது ஆற்றல் குன்றப்பெறாத வினையே.
**********************************************
பாடல் எண் : 20
உண்ணுந்தன் னூடாடா(து) ஊட்டிடும் மாயையும்
அண்ணல் அருள்பெறல் முத்திய தாவது
நண்ணல் இலாஉயிர் ஞானத்தி னால்பிறந்(து)
எண்ணுறு ஞானத்தின் ஏர்முத்தி யெய்துமே.

பொழிப்புரை :  இன்ப துன்பங்களை வினைக்கு ஏற்றவாறு விளைவித்து நிற்கின்ற மாயேயமாகிய உலகம், அந்த இன்பத் துன்பங்கள் தன்கண் வாதியாதபடி புளியம் பழத்தின் ஓடுபோல ஒட்டற்றுக் கழிய, இறைவனது திருவருளில் தோய்ந்து நிற்றலே முத்தியாகும். (என்றது, சீவன் முத்தி நிலையை, அதுவே சகலத்தில் சுத்தம் - என்க. இந்நிலைமுற்றாகக் கைகூடுதற்கு முன் பிராரத்தமாயினும் நீங்கிவிடுமாயின் அந்த உயிர் மற்றொரு பிறப்பை அடையும்) அத்தகைய உயிர் மற்றொரு பிறப்பை அடையு மாயினும் முன்னை ஞானத்தோடே பிறந்து, அது வழியாக அப்பிறப்பில் அது சீவன் முத்திநிலை முற்றாகக் கைகூடப்பெற்றுப் பின் முடிநிலையாகிய பரமுத்தியைடையும். 
**********************************************
பாடல் எண் : 21
அதிமூட நித்திரை ஆணவம் நந்த
அதனால் உணர்வோன் அருங்கன்மம் முன்னி
இதமான கேவலம் இத்திறம் சென்று
பரமாக ஐயவத் தைப்படு வானே.

பொழிப்புரை :  அறிவு சிறிதேனும் தொழிற்படாத, `ஒரு பேருறக்கம்` எனச்சொல்லத் தக்கது, ஆன்மா ஆணவத்தோடு மட்டும் இருக்கின்ற நிலை (அஃது `அநாதி கேவலம்` எனப்படும்). பின்பு அந்த ஆணவ மலத்தின் சத்தி மாயையினால் சிறிதே கெட, அந்த மாயை விளக்கும் அளவிற்கு அறிவு விளங்கப் பெற்ற உயிர், நீக்குதற்கரிய வினைக்கு ஈடான உணர்வையே உடையதாம் நிலையில் இன்பம்போல நிகழ்கின்ற அறியாமையில் செல்வதே சகலத்தில் கேவலம். இந்தக் கேவலத்தில்தான் ஆன்மாக் கீழாலவத்தை ஐந்தினையும் அடையும்.
**********************************************
பாடல் எண் : 22
ஆசான்முன் னேதுயில் மாண வகரைத்
தேசாய தண்டால் எழுப்பும் செயல்போல்
நேசாய ஈசனும் நீடா ணவத்தரை
ஏசாத மாயாள்தன் னாலே எழுப்புமே.

பொழிப்புரை :  அநாதியே பற்றி, இறுதியற்றிருக்கும் ஆணவ மலத்தால் அறிவிழந்து கிடக்கும் உயிர்களைக் கருணையே உருவாய் உள்ள இறைவன் எவ்வாறு அறிவை மறைத்தல் இன்றி, அதனை விளங்கச் செய்வதாகிய மாயையாகிய பணிப்பெண்ணை விட்டு ஆணவ உறக்கத்தினின்று தட்டி எழுப்பும்படி செய்வான். இது நல்லாசிரியன் ஒருவன் முன்நிலையில் சோம்பலால் உறங்கி விடுகின்ற சில மாணவர்களை அவ்வாசிரியன் மாணவர்களது அறிவை வளர்க்கத் தனது கையில் கொண்டுள்ள பிரம்பால் தட்டியெழுப்புதல் போல்வது.
**********************************************
பாடல் எண் : 23
மஞ்சொடு மந்தா கினிகுடம் ஆம்`என
விஞ்சறி வில்லோன் விளம்பும் மிகுமதி
எஞ்சலில் ஒன்றேனும் ஆ(று) என இவ்வுடல்
அஞ்சுணும் மன்னன் அன்றேபோம் அறவே.

பொழிப்புரை :  `காலம், இடம், கருவி, கரணம் ஆகிய இவற்றுள் எந்த ஒன்றினாலும் உட்படுத்தப்பட்டு, ஏகதேசப்படுதலை ஒரு ஞான்றும் எய்தாத பேரறிவாகிய அந்தப் பரப்பிரமந்தான் இந்த உயிர்` என ஏகான்மவாதி கூறும் அக்கூற்று, `ஒரு குடத்துள் அடங்கியுள்ள நீரைச்சுட்டி, - மேகம் என்பதும் இதுதான்;  கங்கா நதி - என்பதும் இதுதான் எனக் கூறுகின்ற மிக்க அறிவில்லாதவன் மிக்க அறிவுடையான் போன்று கூறுகின்ற கூற்றோடு ஒப்பதாய்ப் போக, இந்த உடம்பிற்குத் தலைவனாகிய உயிர் இதைவிட்டு நீங்கும் நாள் வருகின்ற வரையில் சாக்கிரம் முதலிய அஞ்சவத்தை களை இந்த உடம்பின்கண் எய்தி, ஏகதேசப்பட்டுத் துன்பன் உறும்.
**********************************************
பாடல் எண் : 24
படியுடை மன்னவன் பாய்பரி ஏறி
வடிவுடை மாநகர் தான்வரும் போது
அடியுடை ஐவரும் அங்குறை வோரும்
துடியில்லம் பற்றித் துயின்றனர் தாமே.

பொழிப்புரை :   இம்மந்திரம் ஒட்டணியாய் நின்று பொருளைத் தருகின்றது. படி - நாடு; என்றது புற உலகத்தை. அதனை இறைவன் ஆணையால் தனதாகக் கொண்டு இன்பத் துன்பங்களை எய்திவரும் உயிரையே, `உடை மன்னவன்` என்றார். வடிவு - பல உள்ளமைப்புக்கள். மாநகர் - கோநகர்; என்றது உடம்பை. வருதல் - உலாவருதல். என்றது, எல்லா இடங்களிலும் வியாபித்து, எல்லாப் புலன்களையும் உணர்ந்தும் அவற்றிற்கு ஏற்ற எல்லாச் செயல்களையும் செய்தும் வரும் சாக்கிராவத்தையை. அடியுடை ஐவர் - அணுக்கமாய் நிற்கும் அமைச்சர்கள். என்றது, ஞானேந்திரியங்கள் ஐந்தையும், அவற்றால் உணரப்படும் பொருள்கள் அந்தக்கரணங்களாலே தெளிவுபடும் ஆதலின், அந்த அந்தக்கரணங்களும் `ஐவர்` என்றதிலே அடங்கின. அங்கு உறைவோர் - அமைச்சர்களுக்குக் கீழாய் அரசனது உலாவில் பலவகைப் பணிகளையும் செய்து நிற்கும் பல பணியாளர்கள் என்றது பிறகருவிகளை. இம்முறையை, `கால்கொடுத்து இருகை மூட்டி` என்னும் ஞானாமிர்த அகவலிலும் காண்க. (அகவல் - 9) இச்சாக்கிர நிலை, ``படைகொடு பவனிபோதும் பார் மன்னன்`` எனச் சித்தியாரிலும் கூறப்பட்டது. (சுபக். சூ. 4)
**********************************************
பாடல் எண் : 25
நேரா மலத்தினை நீடைந் தவத்தையின்
நேரான வாறுன்னி நீடு நனவினில்
நேரா மலம்ஐந்தும் நேரே தரிசித்து
நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே.

பொழிப்புரை :  சகலத்திற் கேவலமாகவும், சகலத்திற் சகலமாகவும் இயல்பாக நிகழ்ந்து வருகின்ற அஞ்சவத்தைகளிலே பாகம் (பக்குவம்) எய்தாத ஆணவமலத்தைச் சகலத்தில் சுத்தமாய் நிகழும் சாக்கிராவத்தையில் பாகம் எய்தியதாக அறிந்து, அதனானே பஞ்ச மலங்களும் பாகமெய்தியவற்றையும் நன்கு கண்டு, எஞ்ஞான்றும் தனது செம்மை யினின்றும் திரிதல் இல்லாத மேலான பொருளோடுகூடி நிற்பதே உண்மைச் சுத்தாவத்தையாகும்.
**********************************************
 
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!