http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 2 April, 2012

திருமந்திரம்-தந்திரம் 01: பதிகம்:25: கல்லாமை (பாடல்கள் :10)



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  






 






விநாயகர் வணக்கம்...............................................................பாடல்கள்: 001
பாயிரம். பதிக்க வரலாறு.......................................................பாடல்கள்: 039
முதல் தந்திரம்:பதிக எண்:01: சிவபரத்துவம்.....................பாடல்கள்: 056 முதல் தந்திரம்:பதிக எண்:02: வேதச் சிறப்பு .....................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:03: ஆகமச் சிறப்பு ....................பாடல்கள்: 010 முதல் தந்திரம்:பதிக எண்:04: உபதேசம்.............................பாடல்கள்: 030
முதல் தந்திரம்:பதிக எண்:05: யாக்கை நிலையாமை.....பாடல்கள்: 025 முதல் தந்திரம்:பதிக எண்:06: செல்வம் நிலையாமை....பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:07: இளமை நிலையாமை......பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:08: உயிர் நிலையாமை...........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:09: கொல்லாமை.....................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:10: புலால் மறுத்தல்.................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:11: பிறன்மனை நயவாமை.....பாடல்கள்: 003
முதல் தந்திரம்:பதிக எண்:12: மகளிர் இழிவு......................பாடல்கள்: 006
முதல் தந்திரம்:பதிக எண்:13: நல்குரவு................................பாடல்கள்: 005
முதல் தந்திரம்:பதிக எண்:14: அக்னி காரியம்.....................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:15: அந்தணர் ஒழுக்கம்............பாடல்கள்: 014
முதல் தந்திரம்:பதிக எண்:16: அரசாட்சி முறை.................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:17: வானச் சிறப்பு......................பாடல்கள்: 002
முதல் தந்திரம்:பதிக எண்:18: தானச் சிறப்பு.......................பாடல்கள்: 001
முதல் தந்திரம்:பதிக எண்:19: அறஞ் செய்வான் சிறப்பு...பாடல்கள்: 009
முதல் தந்திரம்:பதிக எண்:20: அறஞ் செயான் திறம்........பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:21: அன்புடைமை......................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:22: அன்புசெயவாரை அறிவன்சிவம்:பாடல்கள்: 010

முதல் தந்திரம்:பதிக எண்:23: அன்புடைமை......................பாடல்கள்: 010
முதல் தந்திரம்:பதிக எண்:24: கேள்வி கேட்டமைதல்......பாடல்கள்: 010

முதல் தந்திரம்:பதிக எண்:25: கல்லாமை..........................பாடல்கள்: 010
======================================================(309+010=319)
முதல் தந்திரம்: 27-பதிகங்கள்(பாடல்கள்:293+39+1 =333)
பதிகம் எண் :25.கல்லாமை (10பாடல்கள்)

பாடல் எண் : 1
கல்லா தவருங் கருத்தறி காட்சியை
வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 

பொழிப்புரை :  `கல்வி இல்லாதோரும் அறிவினுள்ளே காணும் மெய்ப்பொருட் காட்சியை வல்லவராவர்` என்று கூறுவதாயின் `கற்று வல்லோரும் கல்லாதார் ஒழுகும் உண்மை நெறியைப் பற்றுதலும், கல்லாதார் பெறும் பேரின்பத்தைப் பெறுதலும் மாட்டாதாராவர்` எனவும் கூறுதல் வேண்டும். `கற்றவரே வல்லவராவர்` என்னும் நியதியின்மையின், அவர் மாட்டாராதலுங் கூடுமாகலின்.
*********************************************************************
பாடல் எண் : 2
வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 

பொழிப்புரை :  கல்வி கேள்விகளில் வல்லவர்கள் மெய்ந்நெறியை ஒன்றாகத் துணிந்து அதன்கண் பொருந்தி உயர்வர். அவ்வன்மை இல்லாதவர்கள் மெய்ந்நெறியைப் பலவாகக்கண்டு தடுமாற்றம் எய்தி ஒன்றினும் நில்லாது தாழ்வார். அதனால் எங்கள் சிவபெருமான் எங்கும் நிறைந்து நிற்பினும்; கல்லாதவர் அவனை அடையும் நெறியை உணரமாட்டார்கள்.
*********************************************************************
பாடல் எண் : 3
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 

பொழிப்புரை :  நிலைபெறாத இயல்பினை உடைய பொருள் களையே நிலைபெற்ற பொருள்களாக நெஞ்சில் நினைத்து, அதனானே, நிலைபெறாத உடம்பையும் நிலைபெற்றதாக நினைக் கின்ற புல்லறிவாளரே, எங்கள் சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் முதல்வன் என்பது உண்மையேயாயினும், உம்மைப் போலக் கல்லாத புல்லறிவாளர் நெஞ்சில் அவனைக் காண இயலாது.
*********************************************************************
பாடல் எண் : 4
கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
கல்லேன் கழியநின் றாடவல் லேனே.

பொழிப்புரை :  நான் சிவன்நெறியைக் கல்லாதிருக்கும் தன்மையர் முன் கல்வி இல்லாதவனாய்த் தோன்றுகின்றேன். அதனால், அவர் போல வினையைச் செய்ய வல்லேனல்லேன்; உலகியலில் நின்று துன் புறுவார்க்கும் அயலாகினேன். கிடைத்த பொருளைப் பலர்க்கும் வழங்க வல்லனாயினேன்; அதனால், எதற்கும் மனத்தில் அச்சங் கொள்ளமாட்டேன்; இவற்றால் பற்றுக்கள் பலவும் நீங்கி நின்று களிநடம் புரிய வல்லேனாயினேன்.
*********************************************************************
பாடல் எண் : 5
நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
கல்லா மனித்தர் கயவர் உலகினில்
பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 

பொழிப்புரை :  கற்று வல்லார், இப்பிறப்பின் நிலையாமையை அறிந்து, `இல்லறம், துறவறம்` என்னும் இருவகை அறத்துள் தமக்கு இயைந்த தொன்றில் நிற்பர். இனிக் கல்லா மனிதர், கீழ்மக்கள் ஆதலின் தீவினையால் விளைகின்ற துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருப்பர்.
*********************************************************************
பாடல் எண் : 6
விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 

பொழிப்புரை :  நன்கு கனிந்து இனிதாகிய விளாம்பழம், வானளாவ உயர்ந்த கிளையிலே உள்ளது. அதனைக் கண் உடையவர் கண்டு தக்க வாற்றாற் பெற்று உண்டு களிக்கின்றனர். கண் இல்லாதவர் அதனைச் சொல்லளவால் அறிந்து நிலத்திலே கிடப்பதாக நினைத்து, உதிர்ந்து கிடக்கின்ற கருக்காய், வெதும்பிக் காய்ந்த பிஞ்சு முதலியவைகளைக் கையால் தடவி எடுத்து, `இத்துணைய` என்று எண்ணித் தொகையை மனத்துட் பதித்து, உண்டு பார்க்கும்பொழுது இனித்தல் இன்றிக் கைத்தும், புளித்தும் நிற்றலைக் கண்டு துன்புற்றொழிகின்றனர்.
*********************************************************************
பாடல் எண் : 7
கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.

பொழிப்புரை :  நூல்களைக் கற்றறிந்தவரே அந்நூலறிவால் மெய்ப்பொருளின் இயல்பை உணர்ந்து, பரவெளியில் கலந்து நிற்கும் முறையையும் உணர்கின்றனர். ஆதலின், நூல்களைக் கற்றறியாதவர்க்கு அவை கூடாவாம்.
*********************************************************************
பாடல் எண் : 8
கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

பொழிப்புரை :  கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.
*********************************************************************
பாடல் எண் : 9
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே. 

பொழிப்புரை: சிவநூல்களைக் கற்றும், அவற்றை மனம் பற்றி ஒழுகாதவர், அடுத்தாரைக் கெடுக்கும் முகடிகளாவர். அவர் தாமேயும் புறப்பற்றும், அகப்பற்றும் விட அறியார்; அவ்விருவகைப் பற்றும் விட்ட அறிவர் பலர் பலவிடங்களில் இருத்தலைக் கண்டும் அவற்றை விட அறியார். அதனால் அவர் கற்றும் கல்லாத மூடரேயாவர். ஆதலின், கற்றவண்ணம் ஒழுகுபவரே கற்றறிவுடையோராவர்.
*********************************************************************
பாடல் எண் : 10
ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 
பொழிப்புரை :  உயிர்க்கு உயிராய் அவற்றது அறிவினுள் நிற்கும் பேரறிவாகிய முதற்பொருள், பெத்தம், முத்தி இருநிலையினும் அவ்வாறு நின்று நடத்தும் அருள் தொடர்பினை அநுபவத்தால் அறிய மாட்டாதார், `யாம் முதல்வனது இயல்பு அனைத்தையும் கல்வி கேள்விகளானே முற்ற உணரவல்லோம்` என்று கூறுவர்.
*********************************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத் தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!