http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 1 May, 2012

திருமந்திரம்-தந்திரம்03-பதிகம்:1,2,3&4: 1.அட்டாங்கயோகம்(பாடல்கள்:4) 2.இமயம்(பாடல்கள் :1) 3.நியமம் (பாடல்கள் :2) 4.ஆதனம்(பாடல்கள்:6)







பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
==================================================================
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:01: அட்டாங்க யோகம்........பாடல்கள்: 004
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:02: இமயம்................................பாடல்கள்: 001
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:03: நியமம்................................பாடல்கள்: 002 
மூன்றாம் தந்திரம்:பதிக எண்:04: ஆதனம்..............................பாடல்கள்: 006
=================================================================(013)

மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:1. அட்டாங்கயோகம் (பாடல்கள்:4)
பாடல் எண் : 1
உரைத்தன வற்கரி ஒன்று முடிய
நிரைத்த இராசி நிரைமுறை எண்ணிப்
பிரச்சதம் எட்டும் முன்பேசிய நந்தி
நிரைத்த இயமம் நியமஞ்செய் தானே.
பொழிப்புரை : கணிநூலில் (சோதிட நூலில்) சொல்லப்பட்ட வரிசையான பன்னிரண்டு இராசிகளையும் யாடும் (மேடமும்), அரிமாவும் (சிங்கமும்) முதலாய் நிற்பத் தொடங்கி முடியும் வகைகளில் முறையானே எண்ணி யோக உறுப்புக்கள் எட்டனையும் முன்பு உணர்த்தியருளிய நந்திபெருமான், அவைகளில் முறையான விலக்கு விதிகளை அருளிச் செய்தார்.
=======================================
பாடல் எண் : 2
செய்த இயம நியமஞ் சமாதிசென்
றுய்யப் பராசத்தி உத்தர பூருவம்
எய்தக் கவச நியாசங்கள் முத்திரை
எய்த வுரைசெய்வன் இந்நிலை தானே. 
பொழிப்புரை :  மேற்கூறியவாறு நந்திபெருமான் அருளிச்செய்த விலக்கு விதிகளால் சமாதி நிலையை அடைந்து யாவரும் உய்தற் பொருட்டு, ஞானம் இறுதித் தந்திரங்களில் வர நிறுத்தி, முன்னே உள்ள சில தந்திரங்களில் கிரியைகளாகிய கவசம், நியாசம், முத்திரை முதலியவைகளுடன் யோக நெறியையும் கூறுவேன். `இயம நியமத்தால்` என உருபு விரிக்க.
=======================================
பாடல் எண் : 3
அந்நெறி இந்நெறி என்னாதே அட்டாங்கந்
தன்னெறி சென்று சமாதியி லேநின்மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில் ஏகலாம்
புன்னெறி ஆகத்திற் போக்கில்லை யாகுமே. 
பொழிப்புரை :  `நாம் கொண்ட நெறி நன்றோ, இது வல்லாத பிறிதொரு நெறி நன்றோ` என்று ஐயுற்று அலமராது, எந்நெறிக்கும் வேண்டப்படுவதாகிய அட்டாங்கத்தை உடைய யோக நெறியிலே சென்று, உம்மால் விரும்பப்படுகின்ற பொருளிலே உள்ளம் ஒடுங்குங்கள். இவ்வாறு ஒடுங்கும் நன்னெறியில் நிற்பவர்க்கு ஞானத்தை எளிதில் தலைப்படுதல் கூடும். பின்பு அந்த ஞானத்தின் பயனாகப் பிறவியாகிய இழி நெறியிற் செல்லுதல் இல்லையாம்.
=======================================
பாடல் எண் : 4
இயம நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்
சயமிகு தாரணை தியானஞ் சமாதி
அயமுறும் அட்டாங்க மாவது மாமே. 
பொழிப்புரை :  அட்டாங்கம் (யோகத்தின் எட்டுறுப்புக்கள்) ஆவன, `இயமம், நியமம், ஆதனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி` என்பன.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:2. இமயம் (பாடல்:1)
பாடல் எண் : 1
கொல்லான்பொய் கூறான் களவிலான் எள்குணன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்துண்பான் மாசிலான் கட்காமம்
இல்லான் நியமத் திடையில்நின் றானே. 
பொழிப்புரை :  கொல்லாமை, பொய்யாமை, விருப்பு வெறுப்புக்கள் இன்மை, கரவாமை, மாசின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை, என்னும் பத்தனையும் முற்ற உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான்.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:3. நியமம் (பாடல்கள்:2)
பாடல் எண் : 1
ஆதியை வேதத்தின் அப்பொரு ளானைச்
சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
பாதியுள் மன்னும் பராசத்தி யோடுடன்
நீதி யுணர்ந்து நியமத்த னாமே.

தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
காமம் களவு கொலையெனக் காண்பவை
நேமியீ ரைந்து நியமத்த னாமே.
பொழிப்புரை :  சிவபெருமானைச் சத்தியோடு உடனாய் நிற்பவனாக உணர்பவனே நியமத்தில் நிற்க வல்லவனாவான்.
=======================================
பாடல் எண் : 2
தவம்செபம் சந்தோடம் ஆத்திகம் தானம்
சிவன்றன் விரதமே, சித்தாந்தக் கேள்வி,
மகம்சிவ பூசைஒண் மதிசொல் ஈரைந்து
நிவம்பல செய்யின் நியமத்த னாமே.
பொழிப்புரை :  தவம் முதலாக மதி ஈறாகச் சொல்லப்பட்ட பத்தினையும் நியமமாகக் கொண்டவன் நியம யோகியாவான்.
=======================================
மூன்றாம் தந்திரம்-பதிகஎண்:4. ஆதனம்(பாடல்கள்:6)
பாடல் எண் : 1
பங்கய மாதி பரந்தபல் ஆதனம்
அங்குள வாம்இரு நாலும் அவற்றினுள்
சொங்கில்லை யாகச் சுவத்தி யெனமிகத்
தங்க இருப்பத் தலைவனு மாமே. 
பொழிப்புரை :  ``பதுமம்`` முதலியவற்றின் வடிவத்தால் அவ்வப் பெயரைப் பெற்று பரந்து நிற்கும் ஆதனங்கள் யோக முறையில் பல உள்ளன. அவற்றுள் எட்டு ஆதனங்கள் தாழ்வில்லாது உயர்ந்தனவாய் நிற்க, அவற்றுள்ளும், ``சுவத்தி`` ஆதனத்தில் ஒருவன் இருப்பனாயின் யோகத்தில் மிக்கவனாவான்.
=======================================
பாடல் எண் : 2
ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்
டார வலித்ததன் மேல்வைத் தழகுறச்
சீர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
பார்திகழ் பத்மா சனமென லாகுமே. 
பொழிப்புரை :  பாதங்கள் துடைகளின்மேல் ஒன்றாகப் பொருந்துமாறு ஏற்றி, பின் நன்றாக வலித்து இழுத்து அவை துடைகளின் புறம் நிற்குமாறு செய்து, அப்பாதங்களின்மேலே இரு கைகளையும் மலர வைப்பின், அந்நிலை தாமரை மலர் வடிவிற்றாய், ``பதுமாதனம்`` என்று சொல்லுதலைப் பெறும்.
=======================================
பாடல் எண் : 3
துரிசில் வலக்காலைத் தோன்றவே மேல்வைத்து
அரிய முழந்தாளில் அங்கையை நீட்டி
உருசி யொடும்உடல் செவ்வே யிருத்திப்
பரிசு பெறுமது பத்திரா சனமே. 
பொழிப்புரை :  ``பதுமாதனத்தைச் சிறிது வேறுபடுக்கப் பத்திராதனமாம்`` என்கின்றார். பத்திரம் - வாள்.
பதுமாதனத்தினின்றும், வலக்காலை எடுத்து இடமுழந்தாள் மேலாக ஊன்றி, இரண்டு கைகளையும் அவ்வலக்கால் முழந்தாளின்மேல் நீட்டி, உடலை நேர் நிற்க நிறுத்தினால், அந்நிலை வாளின் வடிவிற்றாய், `பத்திராதனம்` என்னும் பெயரைப் பெறும்.
=======================================
பாடல் எண் : 4
ஒக்க அடியிணை யூருவில் ஏறிட்டு
முக்கி யுடலை முழங்கை தனில்ஏற்றித்
தொக்க அறிந்து துளங்கா திருந்திடிற்
குக்குட ஆசனங் கொள்ளலு மாமே. 
பொழிப்புரை :  ``பதுமாதனத்தை வேறொரு வகையாக மாற்றக் குக்குடாதனமாம்`` என்கின்றார். குக்குடம் - கோழி.
பதுமாதனத்தில் மேல்வைக்கப்பட்ட கைகளை உள்ளே விடுத்து நிலத்தில் அழுந்த ஊன்றி, அவ்வாறே முயன்று முழங் கையளவாக மேலெழுந்து சுமைமுழுதும் கைகளில் நிற்றலை அறிந்து வீழாது நின்றால், அந்நிலை கோழி வடிவிற்றாய், ``குக்குடாதனம்`` எனக் கொள்ளத்தகுவதாம்.
=======================================
பாடல் எண் : 5
பாத முழந்தாளிற் பாணி களைநீட்டி
ஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்
கோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்
சீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே.
பொழிப்புரை :  `குக்குடாதனத்தை வேறுபடுக்கச் சிங்காதனமாம்` என்கின்றார்.
இருகைகளையும் இருமுழந்தாள்களின் இடையே புகச் செலுத்தி இருபாதங்களிலும் படுமாறு நீட்டி, வாயைத் திறந்து கொண்டு, இருகண்களும் மூக்கு நுனியை நோக்க இருக்கின், அவ் இருக்கை சிங்கவடிவிற்றாய், `சிங்காதனம்` என்று பெயர் சொல்லப் படும்.
=======================================
பாடல் எண் : 6
பத்திரங் கோமுகம் பங்கயம் கேசரி
சொத்திரம் வீரம் சுகாதனம் ஓரேழும்
உத்தம மாம்முது ஆசனம் எட்டெட்டுப்
பத்தொடு நூறு பலஆ சனமே. 
பொழிப்புரை :  `பத்திரம், கோமுகம், பதுமம், சிங்கம், திரம், வீரம், சுகம்` எனப் பெயர் பெற்ற ஏழ் ஆதனங்களும் உத்தம ஆதனங்களாம். அவற்றொடு உத்தமோத்தம ஆதனமாக முதலிற் கூறப்பட்ட சுவத்திகாதனமும் கூடச் சிறப்புடைய ஆதனங்கள் எட்டாகும். ஆதனங்களை இவ்வாறு `எட்டு` என்பதேயன்றி, `பத்து` என்றும், `நூறு` என்றும், மற்றும் பலவாகவும் கூறுவர்.
=======================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமூலரின் திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!