http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 20 May, 2012

திருமந்திரம்-தந்திரம்04:பதிகம் எண்:02/4. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:71-89/89)பாகம்-IV







 
பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
================================================================== 

நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ...............................பாடல்கள்: 030
நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
========================================================(030+089=119)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:02. திருவம்பலச் சக்கரம் (பாடல்கள்:71-89/89)பாகம்-IV
பாடல் எண் : 71
நவமும் சிவமும் உயிர்பர மாகும்
தவம்ஒன் றிலாதன தத்துவ மாகும்
சிவம்ஒன்றி ஆய்பவர் ஆதர வால்அச்
சிவம்என்ப தானாம் எனும்தெளி வுற்றதே.

பொழிப்புரை :  பிரணவமும், சிவமந்திரமும் என்னும் இரண்டுமே உயிர் சிவமாதற்குரிய சாதனமாகும். அவற்றோடே நில்லாமல் பிறவற்றோடு பொருந்தி நிற்பனவெல்லாம் கருவிக் கூட்டத்துள்ளே நிறுத்துவனவே. சிவத்தோடு ஒன்றிய நிலையில் எல்லா வற்றையும் காண்கின்ற அனுபூதிச் செல்வர்களும் தமக்குத் தாம் சிவமேயாய் நிற்கும் தெளிவு உண்டானது அச்சிவமந்திரத்தால் என்றே ஆர்வத்துடன் கூறுவர்.
=============================================
பாடல் எண் : 72
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துள் ளேவைத்து
ஆடிய ஐவரும் அங்குற வாவர்கள்
தேடி யதனைத் தெளிந்தறி யீரே.

பொழிப்புரை :  அறிவுடையோர் நாடி நிற்கின்ற சிவனை அறிவின் கண் உள்ளவனாக உணர்ந்து, அவ்வறிவைப் பெறுதற்கு அகார உகாரங்களின் கூட்டாகிய ஓகாரத்தையாவது அல்லது யகாரத்தை யாவது நீயாக மனம் ஒருங்கித் தியானி. அங்ஙனம் தியானித்தால் இது காறும் உன்னோடு மாறுபட்டுப் போராடி வந்த பஞ்சேந்திரியங்களும் உன் வயத்தனவாய் உனக்குத் துணைசெய்து நிற்கும். ஆதலால், அவ் இந்திரியங்களை வயப்படுத்த நீ தேடிக்கொண்டிருந்த வழியை இவ்வாறு தெளிந்தறிக.
=============================================
பாடல் எண் : 73
எட்டும் இரண்டும் இனிதறி கின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்கெனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே.

பொழிப்புரை :  மேல், ``எட்டும் இரண்டும்`` என்னும் குறிப்பு மொழியால் உணர்த்தப்பட்ட அப்பொருள்களை அனுபவமாக உணராதவர், `, ` என்று எழுத்தை அறியத் தொடங்கும் அத் தொடக்க அறிவுகூட இல்லாதவரேயாவர். இன்னும், எட்டு என்னும் எண்ணையும் இரண்டு என்னும் எண்ணையும் கூட்டுத்தொகை காணும் அறிவும் இல்லாதவரே யாவர். இனி, ``எட்டும், இரண்டும்`` என்பதற்கு, மேற் சொல்லப்பட்ட இருபொருள்களில் பின்னதாகிய `பத்து` எனக் கொண்டு யகாரத்தைக் கொள்ளுதலே சிவாகமங்களின் ஞானபாதக் கருத்தாகும்.
=============================================
பாடல் எண் : 74
எட்டு வரையின்மேல் எட்டு வரைகீறி
யிட்ட நடுவுள் இறைவன் எழுத்தொன்றில்
வட்டத்தி லேஅறை நாற்பத்தெட் டும்இட்டுச்
சிட்டஞ் செழுத்தும் செபிசீக் கிரமே.

பொழிப்புரை :  செங்குத்தாக எட்டு நேர்க்கோடு கிழித்து, அவற்றின் மேல் குறுக்காக எட்டுக் கோடுகளை இழுக்க நாற்பத்தொன்பது அறைகள் உண்டாகும்; அவற்றுள் நடு அறையில் இறைவன் எழுத் தாகிய சிகாரம் அமையுமாறு மேல் (906) மேற்கூறியபடி திருவைந் தெழுத்தை ஐந்து வகையாக மாற்றி முறையே இருபத்தைந்து அறைகளில் பொறித்தபின், நடு அறையொழிந்த நாற்பத்தெட்டு அறைகளிலும் எழுத்துக்கள் இருக்கச்செய்ய வேண்டும்; அஃதாவது எஞ்சிய இருபத்து நான்கு அறைகளிலும் பிற எழுத்துக்களைப் பொறிக்க வேண்டும். அவ்வாறு செய்தவுடன் சக்கரத்தை வழிபட்டுத் திருவைந்தெழுத்தைச் செபிக்கத் தொடங்கலாம்.
=============================================
பாடல் எண் : 75
தானவர் சிட்டர் சதுரர் இருவர்
ஆனஇம் மூவரோ டாற்ற அராதிகள்
ஏனைப் பதினைந்தும் விந்துவும் நாதமும்
சேனையும் செய்சிவ சக்கரந் தானே.

பொழிப்புரை :  தானம் - இடம். தானவர் -இடங்காவலர்; (க்ஷேத்திர பாலகர்) பைரவர். சட்டர் - செப்பம் செய்பவர்; குற்றம் செய் தோரை ஒறுத்துத் திருத்துபவர்; வீரபத்திரர். சதுரர் இருவர் - திறமுடைய மகார் இருவர்; பிள்ளையாரும், முருகரும். ஆன இம் மூவர் - இவ்வாறு மூன்று வகையாகச் சொல்ல நின்றவர். ஆற்ற அராதிகள் - நெறியில் உள்ள உருத்திரர் முதலியோர்; உருத்திரர் முதலாகக் கீழ் நோக்கி எண்ண வருகின்ற மாலும், அயனும், உருத்திரர் முதலாக மேல்நோக்கி எண்ண வருகின்ற மகேசுரர், சதாசிவரும் ஆக ஐவர். ஏனைப் பதினைந்தும் - மேற்சொல்லிய ஒன்பதின்மரது எழுத்துக்களையும் பொறித்தபின் எஞ்சி நிற்கின்ற பதினைந்து அறைகளிலும், விந்து, நாதம், சூழ்படை (பரிவாரங்கள்) என்பவற்றது எழுத்துக்களைப் பொறிக்கச் சிவசக்கரம் அமையும்.
=============================================
பாடல் எண் : 76
பட்டன மாதவம் ஆற்றும் பராபரம்
விட்டனர் தம்மை விகிர்தா நம என்பர்
எட்டனை யாயினும் ஈசன் திறத்திறம்
ஒட்டுவன் பேசுவன் ஒன்றறி யேனே.

பொழிப்புரை :  இயன்ற அளவு செய்யப்பட்ட சிவன் பணியே, மேலானவற்றிற் கெல்லாம் மேலான வீட்டினைப் பெறுவிப்பதாகும். அதனால், தற்போதத்தை விட்டவர்கள் சிவனையே புகலிடமாக அடைவர். ஆகலின், யானும் அவனது பணி வகைகள் பலவற்றில் ஏதேனும் ஒன்றில் எள்ளளவாயினும் மேற்கொள்வேன்; போற்றுங்கால் அவனது திருநாமத்தையன்றி வேறொன்றைச் சொல்ல அறியேன்.
=============================================
பாடல் எண் : 77
சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றான
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதல் சங்கரன் தன்பெயர் தானே.

பொழிப்புரை :  [இம்மந்திரம் மேலே 89 ஆம் மந்திரமாகவும் வந்திருத்தலால் இதன் பொருளை அவ்விடத்தே கண்டு கொள்க].
=============================================
பாடல் எண் : 78
வித்தாஞ் செகமய மாக வரைகீறி
நத்தார் கலைகள் பதினாறு நாட்டிப்பின்
உத்தாரம் பன்னிரண் டாதிகலை தொகும்
பத்தாம் பிரம சடங்குபார்த் தோதிடே.

பொழிப்புரை :  உலகத்திற்குக் காரணமாகிய தத்துவங்களின் எண்ணிக்கை (முப்பத்தாறு) அளவில் அறைகள் கீறி, அவற்றுள் இடப்பால் பதினாறு அறைகளைச் சந்திரன் கூறாகக் கொண்டு ஐம்பத்தோரெழுத்துக்களில் ஐவருக்கத்தில் இடைநின்ற பதினைந்தும் நீக்கி ஒடுக்க முறையில் க்ஷகாரம் முதலாக டகாரம் ஈறாக உள்ள பதினாறு எழுத்துக் களையும் சந்திரனது பதினாறு கலைகளாகப் பாவித்தும், வலப்பால் பன்னிரண்டு அறையில் ஞகாரம் முதலாக உயிரெழுத்துக்களில் எகர ஒகரக் குறில்களையும் சேர்த்து எகரம் ஈறாகப் பன்னிரண்டெழுத்துக்களையும் சூரியனது கலைகளாகப் பாவித்தும், எஞ்சி நின்ற எட்டு அறைகளோடு மேற்பக்கத்தில் கொடு முடிபோல நடுவிரண்டு அறைக்கு நேராக இரண்டு அறைகள் நிராதாரமாகப் பரசிவன் பராசத்திகளுக்குக் கீறி, ஆகப் பத்து அறைகளில் எஞ்சிய, ளுகாரம் (ளு) முதலிய பத்து உயிரெழுத்துக்களையும் அக்கினி கலைகளாகப் பாவித்தும் பொறித்துக் காயத்திரியை முறைப்படி செபித்தபின், இவ்வெழுத்துக்களை விந்து ஈறாக ஓதுக.
=============================================
பாடல் எண் : 79
கண்டெழுந் தேன்கம லம்மல ருள்ளிடைக்
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்பழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமஎன லாமே.

பொழிப்புரை :  யான் சிவனை இச்சக்கரத்தின் வழியே கண்டு உயர்வு பெற்றேன்; அதனால், பின்பு அவனை நான் எனது உள்ளத் தாமரையிலே அடங்கக் கொண்டு மேலும் உயர்வு பெற்றேன்; ஆகவே, இனித் தன் இயல்பு கெடாத பதிஞானத்தின் வழியே சென்று அழியாத அன்புடன் திருவைந்தெழுத்தைச் செபிக்கும் பேற்றினைப் பெறுதல் திண்ணம்.
=============================================
பாடல் எண் : 80
புண்ணிய வானவர் பூமழை தூவிநின்
றெண்ணுவர் அண்ணல் இணையடி மந்திரம்
நண்ணுவர் நண்ணி நமஎன்னும் நாமத்தைக்
கண்ணென உன்னிக் கலந்துநின் றாரே.

பொழிப்புரை :  தேவர்களுக்குள் பக்குவம் எய்தினோர் பூக்களை மழைபோலத் தூவிச் சிவசக்கரத்தில் உள்ள திருவைந்தெழுத்து வாயிலாகச் சிவபெருமானது இரண்டு திருவடிகளைத் தியானிப் பார்கள். பின்னும் அம்மந்திரத்தையே துணையாகப் பற்றி அத்திருவடிகளைக் கண்போலச் சிறந்தனவாக உணர்ந்து அவற்றில் இரண்டறக் கலந்து நிற்பார்கள்.
=============================================
பாடல் எண் : 81
ஆறெழுத் தாகுவ ஆறு சமயங்கள்
ஆறுக்கு நாலே இருபத்து நாலென்பர்
சாவித் திரியில் தலைஎழுத் தொன்றுளது
பேதிக்க வல்லார் பிறவியற் றார்களே.

பொழிப்புரை :  பிரணவத்தோடு கூடிய ஆறாகிநிற்கும் திருவைந் தெழுத்து மந்திரத்தையே ஆறு சமயங்களும் பற்றி நிற்றல் வெளிப் படை. ஆயினும், சிலர் `அந்த ஆறெழுத்து மந்திரத்தினும் இருபத்து நான்கு எழுத்தாகிய காயத்திரி மந்திரமே சிறந்தது` என மயங்குவர். `ஆறு` என்னும் எண்ணினது நான்மடங்கே இருபத்து நான்கு என்னும் எண்ணியல்பை நோக்கினாலே, `திருவைந்தெழுத்தில் அடங்குவது காயத்திரி` என்பது புலனாய் விடும். இன்னும் காயத்திரியின் முதலிலே `ஓம்` என்ற ஓர் எழுத்து உள்ளது. அதனைப் பகுத்தறிய வல்லவர் திருவைந்தெழுத்தின் உண்மையையும் உணர்ந்து பிறவி நீங்கவல்லவராவர்.
=============================================
பாடல் எண் : 82
எட்டினில் எட்டறை யிட்டோ ரறையிலே
கட்டிய ஒன்றெட்டாய்க் காண நிறையிட்டுச்
சுட்டி இவற்றைப் பிரணவம் சூழ்ந்திட்டே
ஒட்டும் உயிர்கட் குமாபதி யானுண்டே.

பொழிப்புரை :  வெளியில் நான்கு கோடுகளும், உள்ளால் நான்கு கோடுகளும் ஆக எட்டுக் கோடுகளால் சுற்றிலும் எட்டு அறைகள் உண்டாக்கி, அவற்றின் நடுவில் உள்ள ஓர் அறை எட்டின் வடிவமாகிய அகாரத்தைப் பெற்று எட்டு முகமாய் அந்த எட்டு அறைகளையும் நோக்கும்படி அவற்றைப் பிரணவ கலைகளால் நிரப்பிப் பின்பு எல்லா அறைகளையும் உட்படுத்துச் சூழும்படி ஓங்காரத்தைப் பொறித்து அவற்றைப் பொருந்திச் செபிப்போர்க்குச் சிவன் உமா சகாயனாய் வெளிப்படுவான்.
=============================================
பாடல் எண் : 83
நம்முதல் அவ்வொடு நாவின ராகியே
அம்முத லாகிய எட்டிடை யுற்றிட்டு
உம்முத லாக உணர்பவர் உச்சிமேல்
உம்முத லாயவன் உற்றுநின் றானே.

பொழிப்புரை :  மேற்கூறிய சக்கரத்தின்படியே சமட்டிப் பிரணவத்தை முன்வைத்து வியட்டிப் பிரணவத்தைச் செபிக்குங்கால் இடையே நகார முதலும் யகார ஈறுமான தூல பஞ்சாக்கரத்தை ஓதுதலையும் முறையாகக் கொண்டு, `இச்செபம் உகாரத்தை முதலிற் கொண்ட மந்திரத்திற்குரிய உமாதேவியின் தலைவனாகிய சிவனுக்கு உரியது` என்பதனை ஐயம் அறத் தெளிந்து செபிப்பவர் சென்னிமேல் அந்த உமாபதியாகிய சிவன் எழுந்தருளியிருப்பன்.
=============================================
பாடல் எண் : 84
நின்ற அரசம் பலகைமேல் நேராக
ஒன்றிட மவ்விட்டு ஓலையில் சாதகம்
துன்ற மெழுகைஉள் பூசிச் சுடரிடைத்
தன்றன் வெதுப்பிடத் தம்பனம் காணுமே.

பொழிப்புரை :  மாந்திரிக முறையில் `அட்ட கன்மவித்தை` என்ற ஒரு முறை சிறப்பாகச் சொல்லப்படுவது. `அவற்றுள் சிறந்தன ஆறே` என்பர். அந்த ஆறனையும் இது முதலாக ஆறு மந்திரங்களும் கூறுகின்றன. இவை வாம மார்க்கமாய் உயர்ந்தோர்கட்குரியன அல்ல ஆகையால், திவ்வியாகமப் பொருளாதல் அமையாது. அதனால், இவை பிறரால் சேர்க்கப் பட்டனவோ என எண்ண வேண்டியுள்ளது.  அட்ட கன்ம வித்தையுள் இது தம்பனம் கூறுகின்றது தம்பனமாவது பிறபொருள்களின் ஆற்றலைக் கட்டுப்படுத்துதல். நீரை அமிழ்த்தவொட்டாது தரைபோல நின்று தாங்கச் செய்வது `ஜலத்தம்பனம்` என்றும், நெருப்பைச் சுடவொட்டாது தடுத்து அதன்கண் இருத்தல், அதனைக் கையிற் கொள்ளுதல் முதலியவற்றைச் செய்தல் `அக்கினித் தம்பனம்` என்றும், காற்றை மோதி அலைக்க வொட்டாது தடுத்தலும், மூச்சுக்காற்றினை இயங்காது உள்நிறுத்தி உடம்பை மேலெழுப்பப் பண்ணுதலும் `வாயுத்தம்பனம்` என்றும் இவ்வாறு பல தம்பனங்கள் சொல்லப் படுகின்றன. மக்களை அசைய வொட்டாது தூண்கள் போல நிற்கச் செய்வதும், ஓடுகின்ற ஊர்திகளை ஓடவொட் டாமல் நிறுத்திவிடுதலும் போல்வனவும் இத்தம்பன வித்தையேயாம்.
தம்பனம் முதலிய ஒவ்வொன்றிற்கும் வேண்டப் படுவன மரப்பலகை, அதில் பொறிக்கப்படும் மந்திரம், ஓலையின் மேல் பூசத்தக்க பூச்சுப்பொருள், அவ்வோலையை இடும் இடம் முதலியன.
அவற்றுள் தம்பனத்திற்குப் பலகை, அரசமரப் பலகை. அதில், மேல் தொள்ளாயிரத்து ஆறாம் (906 ஆம்) மந்திரத்துள் சொல்லப்பட்ட ஐந்தெழுத்து மாற்று முறைகளில் இரண்டாவதனை முதலாகக் கொண்டு ஐயைந்து இருபத்தைந்தாகிய சதுரச் சக்கர அறைகளில் பொறித்து, அம்மந்திரம் முயற்சியால் பயனளித்தற்பொருட்டு ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் எந்த மெழுகையேனும் பூசி, விளக்கிலே அதன் வெப்பம் தாக்கும்படி அவ்வோலையைக் காய்ச்சி, யந்திரத்தை வழிபட்டு, மந்திரத்தை அம்முறையிலே செபித்து வர, `தம்பனம்` என்னும் வித்தை கைவரும்.
=============================================
பாடல் எண் : 85
கரண இறலிப் பலகை யமன்திசை
மரணமிட் டேட்டில் மகார எழுத்திட்டு
அரணமில் ஐங்காயம் பூசி அடுப்பில்
முரணப் புதைத்திட மோகனம் ஆகுமே.

பொழிப்புரை :  இதற்குப் பலகை கொன்றை மரப்பலகை. மந்திரம் மேற்சொல்லிய வாறேயாம். மகாரத்தை முதலிற் கொண்டு நிற்றலால் இதுவே மாரண மந்திரமுமாம். (மலம். `மிருத்தியு` எனவும், `மூர்ச்ை\\\\u2970?` எனவும் சொல்லப்படுதலால், அதனைக் குறிக்கும் எழுத்தை முதலில் உடைய இம் மந்திரமே அவற்றையெல்லாம் தருவதாம். இவ்வாறன்றி, `நசி என மாறித்தொடர்வதே மாரண மந்திரம்` என்னும் கருத்திற்கு இங்கு ஆசிரியர் நேர்ச்சி காணப்படவில்லை). மந்திரம் மேற்கூறியவாறே யாயினும், அவற்றைச் சக்கரத்திலும், ஏட்டிலும் யமன் திசையாகிய தெற்கில் உள்ள வரிசையை முதலாகவும், வடக்கில் உள்ள வரிசையை இரண்டாவதாகவும் கொண்டு முறையே எழுதி ஓலையில் ஐங்காயத்தை அரைத்துப் பூசி அதனை அடுப்பு வாயில் அழுந்தப் புதைத்துச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தைக் கீழ் விளிம்பு தொடங்கி மேற்கூறிய முறையிலே செபித்து வர, `மோகனம்` என்னும் வித்தை கைவரும்.
=============================================
பாடல் எண் : 86
ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்தில்
பாங்கு படவே பலாசப் பலகையில்
காண்கரு வேட்டில் கடுப்பூசி விந்துவிட்
டோங்காரம் வைத்திடு உச்சா டனத்துக்கே.

பொழிப்புரை :  இஃது உச்சாடனம் என்னும் வித்தை கூறுகின்றது. உச்சாடனம் - ஓட்டுதல். மேல்மயங்கிப் பண்ணின உயிர்களையே விலகி ஓடப் பண்ணுதல் உச்சாடனம் என்க.
இதற்குப் பலகை புரசம் (பூவரசம்) பலகை. சக்கரத்திலும், ஏட்டிலும் எழுத வேண்டிய மந்திரம் மேற்கூறிய வாறேயாம். ஓலையில் கரியும், நஞ்சும் பூசி, ஓங்காரத்தில் மகாரத்தை நீக்கி ஓகாரம் மட்டும் பலகையிலும், ஓலையிலும் சக்கரத்தைச் சுற்றி வளைத்து எழுதி, அதை ஒருமுறை பலகையோடு வழிபட்டு ஓலையைக் கொண்டுபோய் ஐயனார் கோவிலில் வடமேற்கு மூலையில் பாதுகாப்பாகப் புதைத்து விட்டுச் சக்கரத்தை வழிபட்டு, மந்திரத்தை மேற்கூறியவாறே செபித்து வர, `உச்சாடனம்` என்னும் வித்தை கைவரும்.
=============================================
பாடல் எண் : 87
உச்சியம் போதில் ஒளிவன்னி மூலையில்
பச்சோலையில் பஞ்ச காயத்தைப் பாரித்து
முச்சது ரத்தில் முதுகாட்டில் வைத்திடு
வைச்சபின் மேலுமோர் மாரணம் வேண்டிலே.

பொழிப்புரை :  இது `மாரணம்` என்னும் வித்தை கூறுகின்றது. மாரணம் - மரணத்துன்பம். `அழிக்கப்படற்பாலன` என்று எண்ணும் உயிர்களை அழித்தொழிப்பதே மாரணம் என்க. உச்சாடனத்திற்குமேல் மாரணம் செய்ய விரும்பினால், மேலே சொல்லியவாறு செய்தபின் மற்றோர் ஓலை அதுபோல எழுதி, ஐங்காயம் பூசி உச்சி வேளையில் (நண்பகற்போதில்) சுடு காட்டிற் கொண்டுபோய் அக்கினிமூலையில் ஒன்றின்மேல் ஒன்றாய் எட்டு மூலை உண்டாக இரண்டு சதுரங்களையும் அவற்றின் உள்ளே ஒரு சதுரத்தையும் வரைந்து உள்ளே புதைத்துவிட்டு வந்து வழிபாட்டினையும், செபத்தையும் முன்போலச் செய்துவர, `மாரணம்` என்னும் வித்தை கைவரும்.
=============================================
பாடல் எண் : 88
ஏய்ந்த அரிதாரம் ஏட்டின்மே லேபூசி
ஏய்ந்த அகார உகார எழுத்திட்டு
வாய்ந்ததோர் வில்லம் பலகை வசியத்துக்
கேய்ந்தவைத் தெண்பதி னாயிரம் வேண்டிலே.


பொழிப்புரை :  இது, `வசியம்` என்னும் வித்தை கூறுகின்றது. மோகனம் செய்யப் பட்டேனும், அது செய்யப்படாது இயல்பாகவேனும் தம்வழி நிற்கும் உயிர்களை எவ்வாற்றானும் பிரிந்து போகாதபடி தம்வசப்படுத்தி வைப்பதே வசியம் என்க. இதற்குப் பலகை, வில்வமரப் பலகை. மந்திரம் அகார உகாரங்கள், அகார உகாரங்கள் விந்துவோடு கூடினவையாக மேற் சொல்லிய சக்கரத்தில் ஈசான மூலையிலிருந்து தொடங்கிப் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் அரிதாரத்தை (மஞ்சள் நிறமுடைய ஒன்றை)ப் பூசி, அதனை அந்தப் பலகைமேலே வைத்து வழிபட்டு அம்மந்திரத்தை எண்பதினாயிரம் உருச் செபித்தால், `வசியம்` என்னும் வித்தை கைகூடுவதாகும்.
=============================================
பாடல் எண் : 89
எண்ஆக் கருடணைக் கேட்டின் யகாரமிட்
டெண்ணாப் பொன் நாளில் எழுவெள்ளி பூசிடா
வெண்ணாவ லின்பல கையிட்டு மேற்குநோக்
கெண்ணாஎழுத்தொடண்ணாயிரம்வேண்டியே.


பொழிப்புரை :  இஃது, `ஆகருடணம்` என்னும் வித்தை கூறுகின்றது. உயிர்ப் பொருளா யினும், உயிரல் பொருளாயினும் தொலைவில் உள்ளவற்றைத் தான் இருந்த இடத்தில் இருந்தே வரவழைத்தல் `ஆகருடணம்` என்னும் வித்தையாம். இதற்குப் பலகை வெண்ணாவல் மரப்பலகை. மந்திரம் மேற்கூறிய ஐந்தெழுத்து மாறலில் யகராம் முதலாக அமைவது யகாரம் முதலாக உள்ளது முதல் ஐந்து தொடர்களையும் முறையே ஐந்து வரிசை அறைகளில் பொறித்து, ஓலையிலும் அவ்வாறே எழுதி, அதன்மேல் யாதேனும் ஒரு வெண்பூச்சினைப் பூசி வியாழக் கிழமையில் மேற் சொன்ன பலகை மேல்வைத்து வழிபட்டு அன்று முதலாக மேற்கு நோக்கி அமர்ந்து அம்மந்திரங்களை அசபாமந்திரத்தோடே எண் ஆயிர உரு விரும்பிச் செபித்தால், `ஆகருடணம்` என்னும் வித்தை கைவரும்.
=============================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!