http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 14 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :05 & 06. தவம் & தவ தூடணம் - பாடல்கள்: 007 & 013




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
ஆறாம் தந்திரம்:பதிக எண்:03: ஞாதுரு ஞான  ஞேயம் .....பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:04: துறவு ...................................பாடல்கள்: 010

ஆறாம் தந்திரம்:பதிக எண்:05: தவம்...............................................பாடல்கள்: 007
ஆறாம் தந்திரம்:பதிக எண்:06: தவ தூடணம்......................பாடல்கள்: 013

==========================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -06
கூடுதல் பாடல்கள்  (050+007+013= 070)
தந்திரம் 6-பதிகம் 05. தவம் -----------------------------பாடல்கள்: 007
தந்திரம் 6-பதிகம் 06. தவ தூடணம்.....................பாடல்கள்: 013
=============================================
ஆறாம் தந்திரம் - 5.தவம் - பாடல்கள்: 07

பாடல் எண் : 01
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

பொழிப்புரை :   உலகப் பொருள்கள் மேற்பரந்து செல்லுதலை யொழிந்து இறைவனது திருவடிக்கீழே சென்று ஒடுங்கி நிலைப்பெற்ற உயர்ந்தோரது உள்ளங்கள் யாதொன்றற்கும் அஞ்சுதல் இல்லை ; அவர்கள்பால் கூற்றுவன் செல்லுதலும் இல்லை; எல்லாப் பற்றுக்களையும் முற்றும் விடுத்த அவர்கட்கு வரக்கடவொரு துன்பமும் இல்லை; இரவு பகல் முதலிய கால வேறுபாடுகள் இல்லை; உலகத்தில் விளைவதொரு பயனும் இல்லை.
=============================================
பாடல் எண் : 02
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமும்
செம்மா தவத்துச் செயலின் பெருமையும்
அம்மான் திருவருள் பெற்றவ ரேயல்லால்
இம்மா தவத்தின் இயல்பறி யாரே.

பொழிப்புரை : நமது அரிய உயிருணர்வும், அவ்வுணர்விற்கு இன்றியமையாததாய் உள்ள உலகம் உண்டாகி நிற்பதும், அங்ஙனம் நிற்குங்கால் அதன்கண் நிகழற் பாலதாய செவ்விய பெரிய தவச்செயலின் சிறப்பும் ஆகிய யாவும் இறைவன் திருவருளை அடிநிலையாகக் கொண்டனவேயாம். அதனால், இத்தவத்தன் இயல்பு இது` என்பதை யும் அவ்வருளைப் பெற்றவரல்லது பிறர் அறியமாட்டார்.
=============================================
பாடல் எண் : 03
பிறப்பறி யார்பல பிச்சைச்செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்
மறப்பில ராகியே மாதவம் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே.

பொழிப்புரை :   உலகப் பித்துப் பலவற்றையும் கொண்டு உழலுகின்ற மக்கள் பிறவித் துன்பத்தைச் சிறிதும் எண்ணுதல் இல்லை; (அதனால் அவர் அதனை நீககிக் கொள்ள முயல்வதும் இல்லை) வீடு பேற்றோடு தாம் விரும்பும் இம்மை மறுமைச் செல்வங்களையும் பெறுவார். இறைவனை ஒருஞான்றும் மறவாது பெரிய தவச்செயலைச் செய்பவரே யாதலின், அவரே பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளும் பெருமையைப் பெற்றாருமாவர்.
=============================================
பாடல் எண் : 04
இருந்து வருந்தி எழிற்றவம் செய்யும்
பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே
இருந்திந் திரனே எவரே எனினும்
திருந்தும்தம் சிந்தை சிவனவன் பாலே.

பொழிப்புரை : பொறி புலன்களை அடக்கியிருந்து, உண்டி சுருக்கல் முதலியவற்றால் மெய்வருந்தி உயர்ந்த தவத்தைச் செய்து நிற்கும் பெரியோரை மனம் கலங்கச் செய்வதற்கென்றே தமது இருப்பை வைத்து, இந்திரனேயாக, ஏனை எத்தேவரேயாக எதிர் வரினும் அப்பெரியோர்க்கு அவர்தம் உள்ளம் சிவனிடத்தே அசையாது அழுந்தி நிற்கும்.
=============================================
பாடல் எண் : 05
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்
பரந்த சடையன் பசும்பொன் னிறத்தன்
அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்
விரைந்து தொழப்படும் வெண்மதி யானே.

பொழிப்புரை :   அறிவரால் சிறிதும் தாழ்த்தலின்றி மிகவிரைந்து சார்ந்து தொழப் படுவோனாகிய சிவன், கண்ணுக்கும் புலனாகாது மறைந்திருப்போனாயினும் சிலருக்கு வெளிநிற் பவனாகின்றான். அச்சிலராவார் அரிய தவத்தவரே யாகலான், அவருக்கல்லது அவன் அணுகலாகாதவனாம்.
=============================================
பாடல் எண் : 06
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்
பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே
அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி
இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே.

பொழிப்புரை :   உலகில் நுண்ணறிவுமிக்க அமைச்சராய் விளங்கினோரும், போரில் வலிமிக்கு விளங்கிய யானைகளது கூட்டமும், ஆணையால் உயர்ந்து அரசராய்ப் பொலிந்தோரும் பிறர்மேல் பகைத்துச் சென்ற போரில் இறந்தாராய் ஒழிய, அவர்கள் நடுவிலே, தவத்தவராயினார், சிவன் உயிர்கட்குப் பொருந்த வைத்துச் சொல்லிய ஒப்பற்ற உண்மை ஞானத்தையும், அதனால் அடையப்படும் வீடு பேறாகிய உறுதிப்பொருளையுமே பொருளாக நோக்கி, கண் இமைத்தலும், அழிதலும், இல்லாத அமரராய் விளங்கினார்.
=============================================
பாடல் எண் : 07
சாத்திரம் ஓதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஅப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே.

பொழிப்புரை`நூல்களை ஓதுவதே பெருமை` எனக்கருதும் கருத்தை விடுத்து, நீவிர் ஒரு மாத்திரை காலமாயினும் அறிவை அகமுகப்படுத்தி அறிவினுள் நிற்கும் அறிவை  நோக்குங்கள்; அந்நோக்கம் பச்சைமரத்தில் அறையப்பட்ட ஆணி அதனுள் நன்கு பதிந்தாற்போல நும் அறிவுனுள்ளே நன்கு பதிய தொன்று தொட்டு உடம்பைப் பிணித்து வருகின்ற பிறப்புச் சேயதாக உம்மைவிட்டு ஓடிவிடும்.
=============================================
ஆறாம் தந்திரம்-6. தவதூடணம்-பாடல்கள்:13

பாடல் எண் : 01
தவம்வேண்டும் ஞானந் தலைப்பட வேண்டில்
தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்
தவம்வேண்டா அச்சக சன்மார்க்கத் தோர்க்குத்
தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே.

பொழிப்புரை : ஞானத்தைப் பெறுதற்பொருட்டே தவம் வேண்டப்படுகின்றதா தலின், அந்த ஞானப்பேறு கிடைத்துவிடின், அதன்பின் தவம் வேண்டாததாகும். ஆகவே, சிவயோக சிவபோக நிலையை எய்தினார்க்குத் தவம் கடப்பாடன்றாம். அதனால் சிலவிடத்து, `தவம் வேண்டா` எனச் சொல்லப்படும் சொல்லினது பொருளைப் பலர் அறியமாட்டார்.
=============================================
பாடல் எண் : 02
ஓதலும் வேண்டா உயிர்க்கு யிருள்ளுற்றால்
காதலும் வேண்டாமெய்க் காயம் இடங்கண்டால்
சாதலும் வேண்டா சமாதிகை கூடினால்
போதலும் வேண்டா புலன்வழி போதார்க்கே.

பொழிப்புரை : அறிவுக்கு அறிவாய் உள்ள பேரறிவாகிய சிவத்தைத் தன் அறிவினுள்ளே ஒருவன் தலைப்பட்டு விடுவானாயின் அதன்பின் அவன் ஞான நூல்களை ஓதவேண்டுவதில்லை. `பர காயம்` எனப்படும் திருவருளையே ஒருவன் தனக்கு நிலைக்களமாகக் கண்டுவிட்டால், பின்பு அவன் தான் அதனின், வேறாய் நின்று அதனைப் பெற அவாவ வேண்டுவதில்லை திருவருள் கண்ணாகச் சிவத்தை அறிந்து அதிலே அழுந்தி நிற்கும் நிலை ஒருவனுக்கு இப்பொழுது கூடுமாயின், அவன் இவ்வுடல் வீழ்ந்தொழிய வேண்டும் என இதனை வெறுக்க வேண்டுவதில்லை. சிவயோக நிலையினின்று மீளுதல் இல்லாதார்க்குப் புலன்கள் வந்து பற்றும் வழிகளாகிய பொறிகள் செயற்படாது கெட வேண்டுவதில்லை.
=============================================
பாடல் எண் : 03
கத்தவும் வேண்டா கருத்தறிந் தாறினால்
சத்தமும் வேண்டா சமாதிகை கூடினால்
சுத்தமும் வேண்டா துடக்கற்று நிற்றலால்
சித்தமும் வேண்டா செயலற் றிருக்கிலே.

பொழிப்புரை :உண்மை நூல்களின் கருத்தையறிந்து அதன்வழியே அடங்கி விட்டால் பின்பு அந்நூல்களைக் குரல் கம்ம ஓதவேண்டுவ தில்லை. சமாதி நிலை கைகூடிவிட்டால், துதித்தல் வேண்டுவதில்லை. அகத்தூய்மையாகிய பற்றறுதி உண்டாகி விட்டால், நீர் பலகால் மூழ்கல்l முதலிய புறத்தூய்மைக்குப் பெரிதும் முயலவேண்டுவ தில்லை. தன் முனைப்பு அற்று, எல்லாம் சிவச் செயலாக இருந்து விட்டால், ஒரு குறியைத் தியானிக்கும் தியானம் வேண்டுவதில்லை.
=============================================
பாடல் எண் : 04
விளைவறி வார்பண்டை மெய்த்தவம் செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்உரை செய்வார்
விளைவறி வார்பண்டை மெய்யறம் செய்வார்
விளைவறி வார்விண் ணின்மிக் காரே.

பொழிப்புரை : தொன்று தொட்டு அடிபட்டு வரும் தவம் வாய்மை, அறம் என்பவற்றைச் செய்வார் யாவரும், `அவற்றால் விளையும் பயன் இவை` என உணர்ந்தே செய்வர். அங்ஙனம் அறிந்து அவற்றைக் கடை போகச் செய்து அப்பயனைப் பெற்றவர்கள் விண், மண் என்னும் இரண்டுலகத்து உள்ளாரினும் மேம்பட்டவராவர்.
=============================================
பாடல் எண் : 05
கூடித் தவம்செய்து கண்டேன் குரைகழல்
தேடித் தவம்செய்து கண்டேன் சிவகதி
வாடித் தவம்செய்வ தேதம் இவைகளைந்(து)
ஊடிற் பலஉல கோர்எத் தவரே.

பொழிப்புரை :  சிவனடியார்களோடு கூடி, அவர்கள் செய்யும் தவத்தையே நானும் செய்து, அதன் பயனாகச் சிவனது திருவடியைத் தரிசித்தேன்; பின் அத்திருவடியின் கீழ் இருத்தலாகிய வீடுபேற்றை அடைய விரும்பியே பின்னும் தவத்தைச் செய்து அதனை அடைந்தேன். இவ் இருதன்மைகளையும் நீக்கி வாளா மெய்வருந்தச் செய்யும் தவம் தவமாகாது, அவமாம். ஆகவே, உலகோர் பலர் இவ்இரண்டையும் விரும்பாது பிணங்குவாராயின், அவரை எத்தவத்தோர் என்பது!.
=============================================
பாடல் எண் : 06
மனத்துரை மாகடல் ஏழுங்கை நீந்தித்
தவத்திடை யாளர்தம் சார்வத்து வந்தார்
பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்
முகத்திடை நந்தியை முந்தலு மாமே.

பொழிப்புரை : மனத்தின்கண் நிறைந்து நிற்கின்ற ஆசையாகிய பெரிய எழுகடல்களைக் கையாலே நீந்திக் கடந்து தவத்தில் நிற்பவரே தமக்கு என்றும் சார்பாகும் மெய்ப்பொருளை அடைவர். அது மாட்டாதே தவம்செய்து பிறவியில் அழுந்துவோர் மேற்குறிய அத் தவத்தோரை வழிபடுவாராயின், அவர் சிவனைத் தம் கண்முன்னாகவே காணுதலும் கூடும்.
=============================================
பாடல் எண் : 07
மனத்திடை நின்ற மதிவாள் உருவி
இனத்திடை நீக்கி இரண்டற வீர்ந்து
புனத்திடை அஞ்சும்போ காமல் மறித்தால்
தவத்திடை ஆறொளி தன்ணொளி யாமே.

பொழிப்புரை :  உள்ளமாகிய உறையிலே உள்ள ஞானமாகிய வாளை உருவி ஐம்பொறிகளாகிய பசுக்களைப் பிணித்துள்ள ஆசையாகிய கயிற்றை இரண்டு துண்டாய் அறும்படி அறுத்து அவைகளை ஏனைப் பசுக் கூட்டத்தினின்றும் நீக்கி, அப்பசுக்களோடு தாமும் கொல்லையிற் சென்று மேயாதபடி அவற்றை மடக்கி வைத்தல் ஒருவனுக்கு கூடுமாயின், தவத்தில் தோன்றுவனவாகிய ஆறு ஒளிகளும் அவனுக்கு உரிய ஒளிகளாகிப் பயன் தரும்.
=============================================
பாடல் எண் : 08
ஒத்து மிகவும்நின் றானை யுரைப்பது
பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுக்கும் முனிவ ரெனும்பதம்
சத்தான செய்வது தான்தவந் தானே.

பொழிப்புரை : அவரவரது பரிபாகநிலைக்கு ஏற்ப அவரோடு இயைந்து நீங்காது நின்று அருளுபவனாகிய இறைவனை அவனுக்கு அடியராய் நின்று வாயார வாழ்த்துதல் அவன்பால் பக்தியை மிகுவிக்கும். ஐம்பொறி யடக்கல் முதலிய நோன்புச் செயல்கள் அவர் முனிவராம் நிலையை நிலை பெறுவிக்கும். இறைவனை அடிபணிந்து தொண்டுகள் பலவும் செய்து நிற்றல் முத்தியைத் தரும்.
=============================================
பாடல் எண் : 09
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி
மலர்தொட்டுக் கொண்டேன் வரும்பலன்காணேன்
தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலைதொட்டுக் கண்டேன் தவங்கண்ட வாறே.

பொழிப்புரை :தலையாய நூல்களை அறியும் முன் நான் சிவனுக்கென்று கருதியே பச்சிலையைக் கிள்ளியும், பூவைப் பறித்தும், சில மலர்களைத் தொடுத்தும் பணிபுரிந்தேன். ஆயினும் அவற்றால் யாதொரு பயனும் விளையக் காணவில்லை. அந்நூல்களை அறிந்த பின் சிவனிடத்தே என் உள்ளம் குழைந்து நின்றது அதனால், சிவத்தைத் தலைப்பட்ட அனுபவத்தை அடைந்தேன். ஆகவே, நான் தவத்தை உணர்ந்தவாறு அதுவேயாயிற்று.
=============================================
பாடல் எண் : 10
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்
கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்
விடரடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில்
உடரடை செய்வதோ ருன்மத்த மாமே.

பொழிப்புரை :  விரிந்த சடைமுடியோடு பெரிய தவத்தை மேற் கொண்ட அடியவர்க்கு யாதொரு துன்பமும் வாராதவாறு இறைவன் தனது அருளை வழங்குவன். அவ்வருளைத் தெளியாது தமக்குத் துன்பம் வராமல் மணி மந்திர ஔடதங்களால் காப்புச் செய்து கொள்வதில் காலம் போக்குவாரது தவ நிலையை நோக்கின் அது, துன்பம் வந்து அடையும் வழியைத் தாமே ஆக்கிக்கொள்வதோர் பித்தச் செயலாகவே முடியும்.
=============================================
பாடல் எண் : 11
ஆற்றில் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்
ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட வாறொக்கும்
நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.

பொழிப்புரை :  நூல்முறைமையை அறியாதவர் பசி, வெயில், மழை முதலிய வற்றால் வரும் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு தவத்தைச் செய்ய மாட்டாராய், இல்லறத்தார் இடும் சோறு முதலிய வற்றைப் பெற்றுப் பிழைத்தற் பொருட்டுத் துறவு நிலையிற் புகுந்து தவத்தவர்போல வேடம்பூண்டு திரிதல், ஆற்றில் ஒருதுறைக்கண் முதலை இருத்தலைக் கண்டு அஞ்சி அதனைவிட்டு நீங்கி, மற்றொரு துறைக்கண் குட்டிகளை ஈன்ற கரடி அக்குட்டிகளோடு குளித்துக் கொண்டிருத்தலையறியாது அதன்கண் இறங்கி அக்கரடியினிடத்து அகப்பட்டாற் போல்வதாம்.
=============================================
பாடல் எண் : 12
பழுக்கின்ற வாறும் பழம்உண்ணு மாறும்
குழக்கன்று துள்ளிஅக் கோணியில் புல்காக்
குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்
இழுக்காது நெஞ்சத் திடஒன்று மாமே.

பொழிப்புரை :   தவ உணர்வாகிய பழம் பழுத்தற் பொருட்டும், பின் அத்தவத்தால் அனுபவம் பெறுதலாம் அப்பழத்தை உண்ணுதலைச் செய்தற் பொருட்டும், பிராண வாயுவாகிய இளங்கன்று துள்ளிச் சென்று அப்பழம் வைக்கப்பட்டுள்ள மனமாகிய அந்தக் கோணியில் புகுந்து அப்பழத்தைத் தின்றுவிடாதபடி - அஃதாவது தவ உணர்வைப் போக்கிவிடாதபடி - அதனைப் புருவ நடுவாகிய கொட்டிலில் கட்டி வைக்க வல்லவர்க்கு யாதொரு மனக்குற்றமும் உண்டாகாது; உள்ளமாகிய வயலில் ஊன்றுதற்கு ஞானமாகிய ஒப்பற்ற வித்தும் கிடைக்கும்.
=============================================
பாடல் எண் : 13
சித்தம் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்
சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்
சித்தஞ் சிவமாக வேசித்தி முத்திஆம்
சித்தம் சிவமாதல் செய்தவப் பேறே.

பொழிப்புரை :ஒருவர்க்கு அவரது உள்ளம் சிவமேயானபொழுது அவருக்குச் செய்யக் கடவ தவம் யாதும் இல்லையாம். அவரைப் போல உள்ளம் சிவமாய்ச் சிவானந்தத்திலே திளைத்திருக்கப் பெற்றோரது உறவே அவருக்கு உண்டாகும்; பிறரது உறவுகள் யாவும் அற்றொழியும். சித்தியும், வீடுபேறும் அவர்க்கு எளிதின் உளவாம். ஆகையால், உள்ளம் சிவமாதல் ஒன்றே உண்மைத் தவத்தால் பெறும் பயனாகும்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!