http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 20 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :10, 11, 12 & 13. திருநீறு, ஞான வேடம், சிவவேடம் & அபக்குவன் - பாடல்கள்: 003, 008, 004 & 009




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

=============================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
ஆறாம் தந்திரம்:பதிக எண்:03: ஞாதுரு ஞான  ஞேயம் ....பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:04: துறவு ....................................பாடல்கள்: 010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:05: தவம்.........................................பாடல்கள்: 007
ஆறாம் தந்திரம்:பதிக எண்:06: தவ தூடணம்.......................பாடல்கள்: 013
ஆறாம் தந்திரம்:பதிக எண்:07:அருளுடைமையின் ஞானம்வருதல் பாடல்கள்:010
ஆறாம் தந்திரம்:பதிக எண்:08: அவ வேடம்.........................பாடல்கள்: 006
ஆறாம் தந்திரம்:பதிக எண்:09: தவ வேடம்............................பாடல்கள்: 004

ஆறாம் தந்திரம்:பதிக எண்:10: திருநீறு ................................. பாடல்கள்-003
ஆறாம் தந்திரம்:பதிக எண்:11: ஞான வேடம்......................பாடல்கள்: 008
ஆறாம் தந்திரம்:பதிக எண்:12: சிவ வேடம்..........................பாடல்கள்: 004
ஆறாம் தந்திரம்:பதிக எண்:13: அபக்குவன்..........................பாடல்கள்: 009
=============================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -13
கூடுதல் பாடல்கள்  (090+003+008+004+009=114)

=============================================
ஆறாம் தந்திரம்-10. திருநீறு-பாடல்கள்:03
பாடல் எண் : 01
கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை
மங்காமற் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளும் சாரும் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே.

பொழிப்புரை :  யாவரேனும் எலும்புக் கூட்டைத் தோளிலே கொள்ளும் சிவபெருமான் பூசுவதும், அணிந்தோர் யாவர்க்கும் கவசமாய் நிற்பதும் ஆகிய திருநீற்றை அதன் வெள்ளொளி மிக விளங்குமாறு பூசி மகிழ்ச்சியுறுவராயின், அவரிடத்து வினைகள் தங்கியிரா. சிவகதி கூடும். சிவனது அழகிய திருவடியையும் அவர் அடைவர்.
==============================================
பாடல் எண் : 02
நூலும் சிகையும் உணரார்நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரம்உயிர்
ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே.

பொழிப்புரை :  அந்தணவேடத்துள் முதன்மை பெற்று விளங்கும் முப்புரிநூல், சிகை என்பவற்றது உண்மை இன்ன என்பதை முழு மூடராயுள்ளோர் சிறிதும் அறியமாட்டார். அவற்றின் உண்மையாவன யாவை எனின், `முப்புரிநூல்` என்பது வேதத்தின் முடிநிலைப் பகுதியாகிய உபநிடதங்களும், `சிகை` என்பது அவற்றின் பொருளுணர்வுமாம், நூலும், சிகையும் தம்பால் பொருந்தப் பெற்ற அந்தணர்கள், `பரமான்மா, சீவான்மா` என்னும் இரண்டையும் நன்குணர்வர் எனில், அது வேதத்தை நன்கு ஓதி, வேதாந்தத்தை நன்கு உணரும் பொழுதேயாம். வாளாநூலையும், சிகையையும் பொருந்த வைத்துக் கொள்வதனால் மட்டுமன்று.
==============================================
பாடல் எண் : 03
அரசுடன் ஆலத்தி ஆகும்அக் காரம்
விரவு கனலில் வியன்உரு மாறி
நிரவிய நின்மலந் தான்பெற்ற நீத
ருருவம் பிரம உயர்குல மாமே.

பொழிப்புரை :  பசுவின் சாணம் அரசு முதலிய சமித்துக்கள் பொருந்தப்பட்ட சிவாக்கினியில் வெந்து தனது முன்னைப் பருவுரு மாறி அமைந்த அந்தத் திருநீற்றை உடல் முழுவதும் பூசித் தூய்மையை அடைந்த நல்லோரது உடம்பே பிரம ஞானத்தை அடையும் உயர்ந்த குலத்து உடம்பாம்.
==============================================
ஆறாம் தந்திரம்-11. ஞானவேடம்-பாடல்கள்: 08
பாடல் எண் : 01
ஞான மிலார் வேடம் பூண்டும் நரகத்தார்
ஞானமுள் ளோர்வேடம் இன்றெனில் நன்முத்தர்
ஞான முளதாக வேண்டுவார் நக்கன்போல்
ஞான முளவேடம் நண்ணிநிற் பாரே.

பொழிப்புரை :  ஞானம் இல்லாதவர் ஞானிகட்குரிய வேடத்தைப் பூண்டிருப்பினும் நரகத்திற்கு உரியவரேயாவர். ஞானம் உள்ளவர்கள் தம்மிடத்தில் ஞானிகட்குரிய வேடம் இல்லாதொழியினும் பரமுத்திக்கு உரியவரே. அதனால், ஞானம் உண்டான பின்னர் அதற்குரிய வேடத்தை விரும்புவோர் சிவபிரானைப் போலவே அந்த வேடத்தைப் பூண்டிருப்பர்.
==============================================
பாடல் எண் : 02
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத் தோர்வேடம் பூணார் அருள்நண்ணி
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோர் ஒன்றும் பேசகி லாரே.

பொழிப்புரை :  இழிந்த ஞானத்தை உடையவர்கள் உயர்ந்த ஞானத்தை உடையவரது வேடத்தைப் பூண்பாராயினும், அதனால் அவர்க்கு வருவதொரு நன்மை இல்லை. உயர்ந்த ஞானத்தை உடையவர் இறைவனது அருளாகிய பயனைப் பெற்றுவிட்டமையால், `குறித்ததொரு வேடத்தைப் பூணவேண்டும்` என்னும் விருப்பமும் இலராவர். தமது ஞானத்தையே பெரிதாக மதிக்கும் குற்றத்தை உடையவர் ``தத்தம் மதங்களே அமைவதாக அரற்றிமலையும்``  சமயப் பூசலை உடையராவர். மற்று, உண்மை ஞானம் உடையோர் அதற்குத் தகுதியில்லாதாரைக் காணின் ஒன்றும் பேசாது வாளாதே போவர்.
==============================================
பாடல் எண் : 03
சிவஞானி கட்கும் சிவயோகி கட்கும்
அவமான சாதனம் ஆகாது தேரில்
நவமாம் அவர்க்கது சாதனம் நன்கும்
உவமான மில்பொருள் உள்ளுற லாமே.

பொழிப்புரை :  பயனில்லாத வேடம் சிவஞானிகட்கும், சிவயோகிகட்கும் ஆகாது. ஆராயுமிடத்து அது வேதாகமங்களாகிய தொன்னெறியல்லாத புதுநெறியில் நிற்போர்க்கு ஆவதாம். அது நிற்க, சரியை முதலிய நான்கு நெறிகட்குரிய வேடங்களே ஒருதனிச் செம்பொருளாகிய சிவம் உள்நிற்கும் வேடங்களாம்.
==============================================
பாடல் எண் : 04
கத்தித் திரிவர் கழுவடி நாய்கள்போல்
கொத்தித் திரிவர் குரற்களி ஞானிகள்
ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவும்
செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.

பொழிப்புரை :  அனுபவத்தால் இன்பம் உறாது, பேச்சினாலே இன்பமடையும் நூலறிவுடைய சிலர், கழுமரத்தடியில் நின்று அதன் உச்சியில் உள்ள உடல் எட்டாதபொழுது குரைத்தலையும், சிறிது எட்டிய பொழுது அதனைக் கடித்தலையும் செய்கின்ற நாய்களைப் போலத் தாம் அறிந்தவற்றைக் காலம், இடம், தகுதி முதலியவற்றை நோக்காமலே உரக்க எடுத்துப் பேசுதலும், காலம் முதலியன சிறிது வாய்த்த வழிக் கேட்பாரது உள்ளத்தை அலைத்தலும் செய்து திரிவார்கள். சிவஞானத்தை அனுபவமாக அடைந்தோர் வாக்கும், காயமும் வன்மை பெற்றிருப்பினும் செத்தவரைப் போலயாதும் உரையாதே, எவ்விடமும் இடமாக உலாவிவருவர்.
==============================================
பாடல் எண் : 05
அடியா ரவரே அடியா ரலாதார்?
அடியாரு மாகாதவ் வேடமு மாகா
அடியார் சிவஞான மானது பெற்றோர்
அடியா ராலாதார் அடியார்கள் அன்றே.

பொழிப்புரை :  குணத்தால் அடியவரல்லாதவர் பிறவாற்றால் அடியவராவரோ? ஆகார். அடியார் ஆகாத பொழது அவர்கட்கு அந்நிலைக்குரிய வேடங்களும் கூடா. அடியராவார் சிவஞானத்தை அடைந்தோர். ஆதலால், அத்தன்மையில்லாதவர் ஒருவாற்றானும் அடியரல்லர்.
==============================================
பாடல் எண் : 06
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாம்
தானுற்ற வேடமும் தற்சிவ யோகமே
ஆனஅவ் வேடம் அருள்ஞான சாதனம்
ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே.

பொழிப்புரை :  ஞானத்தைப் பெற்றவனுக்கு உலகர் கொள்ளும் அழகிய வேடமும், ஞானவேடமேயாய்ச் சிறந்து நிற்கும். அதனால், அவன் எந்த வேடத்தோடு இருப்பினும் அது பரமசிவனோடு ஒன்றி யிருத்தற்குரிய வேடமாயே அமையும். இனி, ஞானவேடமாகச் சொல்லப்பட்ட அவ்வேடம் ஞானம் சிறிதும் இல்லாதவனுக்கு ஏற்புடையதாதலும் உலகியலாய் உள்ளது.
==============================================
பாடல் எண் : 07
ஞானத்தி னாற்பதம் நண்ணும் சிவஞானி
தானத்தில் வைத்த தனிஆ லயத்தனாம்
மோனத்தின் ஆதலின் முத்தனாம் சித்தனாம்
ஏனைத் தவசி இவனென லாகுமே

பொழிப்புரை :  சிவஞானத்தை அடைந்தவன் அந்த ஞானத்தால் முடிவில் சிவனது திருவடியை அடைவான். அதற்கு முன்னேயும் தன்னைத்தான் சிவனது திருவடியிலே இருக்க வைத்த ஒப்பற்ற இருப்பிடத்தை உடையனாய் இருப்பன். சொல்லேயன்றி மனமும் அடங்கிவிட்ட நிலையை உடையனாதலின் அவன் இவ்வுலகில் இருப்பினும் முத்தி பெற்றவனேயாவன். அதனால் அவன்தான் பெறவேண்டிய பேற்றை முற்றப் பெற்றவனாம். சிவஞானத்தைப் பெறாது சிவான வேடத்தை மட்டும் புனைந்த மற்றையோனை இச்சிவஞானிபோல முத்தனும், சித்தனும் ஆவன் என்று சொல்லுதல் கூடுமோ! கூடாது.
==============================================
பாடல் எண் : 08
தானற்ற தன்மையும் தான் அவ னாதலும்
ஏனைய அச்சிவ மான இயற்கையும்
தானுறு சாதக முத்திரை சாத்தலும்
மோனமும் நந்தி பதமுத்தி பெற்றவே.

பொழிப்புரை :  தற்போதம் அற்றிருத்தல், தான் சிவமேயாய் நிற்றல், சிவனல்லாத ஏனை எல்லாப் பொருள்களிலும் சிவம் நிறைந்து நிற்றலை உணர்ந்து, அவற்றைச் சிவமாகவே காணுதல், ஞானத்தை நழுவாது நிலை நிறுத்தற்குத் துணையாய் உள்ள வேடங்களைப் பூணுதல் வாய் வாளாமை ஆகிய இவையாவும் சிவனது திருவடிப் பேறாகிய முத்தியைப் பெற்ற நிலையின் இயல்புகளாம்.
==============================================
ஆறாம் தந்திரம்-12. சிவவேடம்-பாடல்கள்: 04
பாடல் எண் : 01
அருளால் அரனுக் கடிமைய தாகிப்
பொருளாந் தனதுடற் பொற்பது நாடி
இருளான தின்றி இருஞ்செயல் அற்றோர்
தெருளாம் அடிமைச் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :  சிவனது சத்தி பதிவால் தாம் அவனுக்கு அடிமையாதலை உணர்ந்து அதற்கேற்ப ஒழுகும் ஒழுக்கம் உடையவராய்த் தமது உடம்பும் ஏனைய பொருள்கள் போலச் சிவனது உடைமயாம் சிறப்பை உணர்ந்து, அவ்விரண்டுணர்வையும் தடுத்து நிற்கும் இருள் நீங்கப்பெற்றுத் தம்செயல் அற்றிருப்போர் வேடமே, `சிவவேடம்` எனக் கொள்ளப்படும் சிறப்புடைய வேடமாம்.
==============================================
பாடல் எண் : 02
உடலில் துவக்குவே டம்முயிர்க் காகா
உடல்கழன்றால் வேடம் உடனே கழலும்
உடலுயிர் உண்மை என் றோர்ந்துகொள் ளாதார்
கடலில் அகப்பட்ட கட்டையொத் தாரே.

பொழிப்புரை :  உடம்பில் பொருத்தப்பட்ட வேடங்கள் உயிர்க்கு உரியன ஆகமாட்டா. அதனால், உடம்பு நீங்கினால் வேடமும் அதனோடே நீங்கிப் போதலன்றி உயிரோடு உடன் செல்லுதல் இல்லை. `உடம்பு, உயிர் சிறிது காலம் தங்கியிருக்கும் ஓர் இடமே` என்னும் உண்மையை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாதவர் கடலில் அகப்பட்ட மரத்துண்டு அதன் அலைகள் பலவற்றாலும் அலைக்கப்படுதல் போலப் பிறவியிற்பட்டு பல்வேறு உடம்புகளால் அலைக்கப்படுவர்.
==============================================
பாடல் எண் : 03
மயலற் றிருளற்று மாமனம் அற்றுக்
கயலுற்ற கண்ணியர் கையிணக் கற்றுத்
தயலற் றவரோடுந் தாமேதா மாகிச்
செயலற் றிருப்பர் சிவவேடத் தாரே.

பொழிப்புரை :  யாதும் அறியாமையும், மயங்கியறிதலும் ஆகிய இரண்டும் நீங்கி, அதனானே புலன்மேற் செல்லும் மனம் அடங்கி, அவ்வடக்கத்தானே மகளிர் ஆசை முதலிய ஆசைகளும் அற்று, தமக்கு முன்னே அங்ஙனம் அற்று நின்றாரை அடைந்து `அவர், தாம்` என்னும் வேற்றுமையின்றி அவரே தாமாய் ஒன்றியியங்கித் தம்செயல் அற்றிருப்பர் உண்மைச் சிவவேடத்தார்.
==============================================
பாடல் எண் : 04
ஓடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்
வேடங்கொண் டென்செய்வீர்? வேண்டா மனிதரே
நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்
தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே.

பொழிப்புரை :  மனிதர்காள், வேடமாத்திரத்தைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்! அந்த நிலை வேண்டுவதில்லை. ஓடுகின்ற குதிரைபோல உள்ள பிராண வாயுவை அதன் கடிவாளத்தை இறுகப் பிடித்து ஓட்டுதல் போல இரேசக பூரக கும்பக முறைகளை ஒழுங்காகக் கடைப் பிடித்தலால் அடக்குங்குள் அதனால், மனம் உம் வசப்பட, அதுகொண்டு நம் பெருமானாகிய சிவபெருமானை அடைய விரும்புங்கள். அவ்விருப்பம் நிறைவுறுதற்குரிய வழியில் செல்லுங்கள். பின்பு பேரின்பப் பொருளாகிய முதற்பொருளைச் சென்று அடையலாம்.
==============================================
ஆறாம் தந்திரம்-13. அபக்குவன்-பாடல்கள்: 09
பாடல் எண் : 01
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடுங் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடுங் குருடும் குழிவிழு மாறே.

பொழிப்புரை :  குருடாய இரண்டு குழந்தைகள் தம்மிற் கூடிக் கண்ணைமூடி ஆடும் ஒருவகை விளையாட்டை விளையாடி, அதனால் இரண்டும் பாழுங்குழியில் விழுந்து அழுந்தினாற் போலப்  பக்குவம் இல்லாத சிலர் தமது அறியாமையைப் போக்கும் ஆற்றலுடைய நல்ல குருவைக் கொள்ளாமல், அவ்வாற்றல் இல்லாத போலிக் குருவைக் குருவாகக் கொண்டு, அவர் அருள் வழங்க பெறுதலைச் செய்யின், இருவரும் பிறவித் துன்பத்தில் வீழ்ந்து அழுந்துவார்கள்.
==============================================
பாடல் எண் : 02
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனில் நிழலையும் காணார்
வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.

பொழிப்புரை :  உயிர்கட்கு முதற்றொட்டு அவற்றின் அறிவாகிய கண்ணிற்கு அமைந்த மாயையாகிய கண்ணாடி ஆணவமாகிய குற்றங் காரணமாகப் பொருளியல்பைத் திரித்துக் காட்டும் வாஞ்சனைக் கண்ணாடியாய் உள்ளது. கல்வி கேள்விகளால் பெற்ற அறிவுகொண்டு இதன் இயல்பை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாதவர் நல்லாசிரியர் அவர்களது வினை நீங்கும் வழியை விளக்கிக் கூறினாலும் விளங்கிக்கொள்ள மாட்டார். அவர் இயல்பு தலைவாயில் வழியைக் காட்டினாலும் புறக்கடை வாயிலை விரும்பி அதன்வழி நுழையும் இயல்பு போல்வதாம்.
==============================================
பாடல் எண் : 03
ஏயெனின் என்என மாட்டார் பிரசைகள்
வாய்முலை பெய்ய மதுரம்நின் றூறிடுந்
தாய்முலை யாவ தறியார் தமருளோர்
ஊனிலை செய்யும் உருவிலி தானே.

பொழிப்புரை :  உலக மக்கள், அறிவுடையரோ `` என அழைத்தால் அவர்க்கு, `ஏன்` என மறுகுரல் கொடுக்கும் அத்துணைப் பக்குவமும் இலர். அவர் தாயின் முலை அவர் பெற்ற குழவி தன்வாயில் வைத்த பொழுதே பால் சுரத்தலல்லது, எப்பொழுதும் பால் சுரவாத தன்மையை உணர்தல் இயலாததே. அவ்வியல்புடைய இனத்தவரது உள்ளத்திலும் உருவமற்றவனாகிய சிவபெருமான் அங்ஙனம் உருவமற்றவனாகவே நிலை பெற்றிருக்கின்றான்.
==============================================
பாடல் எண் : 04
 வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்க
நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்
தீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்
பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே.

பொழிப்புரை :  பெருந்தகுதியாகிய பக்குவத்தை எய்திய மாணவனே, நீ யாதொரு செயலிலும் `மனம், மொழி மெய்` என்னும் மூன்றும் ஒருவழிப்பட நிற்றல் வேண்டுமன்றி, அவை தனித்தனி வேறு வேறு வழிப்பட நிற்றல் கூடாது. அங்ஙனம் அவை ஒருவழிப்பட நிற்றலே உனக்கு நன்மையைப் பயப்பதாகும். அவை வேறு வேறு வழிப்படல் இழந்தோரது இயல்பாதலின், நீ அவை அவ்வாறுபட நிற்பின், உன்னை யான், `பக்குவம் வாயாத இழிமகன்` என்று உறுதியாகக் கொண்டு விலக்குவேன். ஆனால், உணர்விலாராய உலகர் அது பற்றி என்னைப் பின் வெகுளி மிகுதியால் பேய்த்தன்மை எய்தியவன் என இகழ்வர்.
==============================================
பாடல் எண் : 05
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தன்மையும்
அஞ்சச் சமையத்தோர் வேந்தன் அருந்தண்டம்
விஞ்சச்செய் திப்புவி வேறுசெய் யாவிடின்
பஞ்சத்து ளாய்ப்புவி முற்றும்பா ழாகுமே.

பொழிப்புரை :  பஞ்சமா பாதகத்தோடு ஓத்த, வாயொன்று சொல்ல, மனம் ஒன்று சிந்திக்க, மெய்யொன்று செய்தலாகிய இப்பாதகத்தைச் செய்வோரையும் அரசன் அவ்வமையம் பார்த்து யாவரும் அஞ்சும்படி பொறுத்தற்கரிய தண்டனையை மிகச்செய்து திருத்தாவிடின், அவனது நாடு பஞ்சத்துட்பட்டு வருந்திப் பின் உருவும் அழிந்துவிடும்.
==============================================
பாடல் எண் : 06
தவத்திடை நின்றவர் தாமுன்னும் கன்மம்
சிவத்திடை நின்றது தேவர் அறியார்
தவத்திடை நின்றறி யாதவர்க் கெல்லாம்
பவத்திடை நின்றதோர் பாடது வாமே.

பொழிப்புரை :  தவத்தில் நிற்கும் பக்குவிகளுக்கு நுகர்ச்சியாய் நிற்கின்ற கன்மங்கள் அனைத்தும் அவற்றை ஊட்டுவிக்கின்ற முதல்வனுடையனவேயாய், அவர்க்கு நுகர்ச்சி யாகாயையைத் தேவரும் அறியாமாட்டார். அதனால், கன்மங்கள், எடுத்த பிறப்பில் நுகர்ச்சி யாதல், பக்குவம் இன்மையால் தவத்தில் நிற்குமாற்றை உணராதவர்கட்கேயாம்.
==============================================
பாடல் எண் : 07
விடிவ தறியார் வெளிகாண மாட்டார்
விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார்
கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின்
விடியாமை காக்கும் விளக்கது வாமே.

பொழிப்புரை :  ஒளியைக் காணும் கண் இல்லாதவர் இருள் புலர்ந்தாலும் புலர்ந்ததனை அறியமாட்டார். அதனால், விடிந்தபின் ஒளியில் பொருள்களை நன்கு கண்டு பயன் கொள்ளவும் மாட்டார். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர் தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டார். அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரமாட்டார். அதனால் நீவிர் அவ்வாறின்றிப் பெரியதாகிய ஊனக் கண்ணை மூடி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காணுங்கள்; அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகும்.
==============================================
பாடல் எண் : 08
வைத்த பசுபாசம் மாற்றும் நெறிவைகிப்
பெத்தம் அறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்
தத்துவம் முன்னித் தலைப்படா தவ்வாறு
பித்தான சீடனுக் கீயப் பெறாதானே.

பொழிப்புரை :  `உயிர்களையே பற்றுதற்கு உரியன` என நூல்களில் சொல்லி வைக்கப்பட்ட, பசுத்துவத்தைத் தரும் பாசத்தை அகற்றுவதாகிய தவநெறியில் நின்று, அதனால் அப்பாசங்களின் கட்டு நெகிழ, வீடு பெறும் பக்குவத்தை எய்தி, முன் சென்ற உலகியலினின்றும் மாறி மெய்ந் நெறியைப் பற்றி, மெய்ப் பொருளையே அடைய விரும்பி அதற்கேற்ற முயற்சியால் அதனை அடையாது, மேற்கூறியவாறு விடிவதறியாப் பேதைமை மிக்கார்க்கு மேற்கூறிய விளக்கு நல்லாசிரியரால் ஈயப்படா.
==============================================
பாடல் எண் : 09
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகைஓரான்
துன்னிய காமாதி தோயும் தொழில் நீங்கான்
பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்
அன்னிய னாவான் அதற்சீட னாமே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!