http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 13 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :03 & 04. ஞாதுரு ஞான ஞேயம் & துறவு - பாடல்கள்: 009 & 010




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: ஞாதுரு ஞான  ஞேயம் .....பாடல்கள்: 009
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: துறவு ...................................பாடல்கள்: 010

==========================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -04
கூடுதல் பாடல்கள்  (031+009+010= 050)

தந்திரம் 6-பதிகம் 03. ஞாதுரு ஞான ஞேயம்-பாடல்கள்: 009
தந்திரம் 6-பதிகம் 04. துறவு ......................................பாடல்கள்: 010
=============================================
தந்திரம் 6- பதிகம் 03. ஞாதுரு ஞான  ஞேயம்   -பாடல்கள்: 009

பாடல் எண் : 01
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்
பாங்கான பாசம் படரா படரினும்
ஆங்கார நீங்கி அதனிலை நிற்கவே
நீங்கா அமுதம் நிலைபெற லாமே.

பொழிப்புரை :   ஞானம் கைவரப் பெற்றவன் அந்த ஞானத்தால் அறியும் பொருள் சிவமேயாகையால், அஃது ஒன்றே அவனுக்கு ஞேயப்பொருளாம். அந்தப் பொருள் ஆனந்தமே வடிவினது ஆகையால், என்றும் நீங்குதல் இல்லாத சிவானந்தத்தையுடைய அந்த ஞேயப்பொருளிலே ஞானி ஒரு பொழுதும் நீங்காதே நிற்பானாயின், அநாதி தொட்டு அவனை விடாது  சூழ்ந்து நிற்கமாட்டாவாய் அகன்றொழியும். அவை முற்ற அகன்றொழியாது ஒரோவொருகால் சிறியவாய் வந்து சூழுமாயினும் அச்சூழல், அவனை முன்போல அஞ்ஞேயப் பொருளை மறந்தொழியும் நிலையை எய்துவிக்கமாட்டா. (ஏனெனில், சிவகுருவின் அருளைப் பெற்ற சிவஞானியின் ஞானத்தை அப்பாசங்கள் முன்போலத் திரிவுபடுத்தி, `யான்` என்றும், `எனது` என்றும் செருக்குவிக்கமாட்டா ஆகலான்.) அவ்வாற்றால் பழக்கம் பற்றிச் சிறிதே தலைப்படுகின்ற அந்தச் செருக்கு ஞானத்தால் முற்றாது கழிய, ஞேயத்தில் நிலைத்து நிற்றல் உண்டாகும். அதனால் அத்தகைய சிவஞானிக்கு, அளவிற் பட்டு நீங்குதல் இல்லாது என்றும் உளதாகிய சிவானந்தம் நிலை பெற்றிருத்தல் கூடுவதாம்.
=============================================

பாடல் எண் : 02
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நீங்கிடும்
ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்
ஞேயத்தின் ஞேயத்தை யுற்றவர்
ஆயத்தில் நின்ற அறிவறி யாரே.

பொழிப்புரை : சிவஞானத்தால் சிவமாகிய ஞேயப் பொருளிலே அன்பையும், பின் அந்த ஞேயப்பொருளையும் அடைந்தோர் தம்மையும், தமது அறிவையும் ஆராய்கின்ற அச்செயலில் நிற்கும் அறிவை உடையவராகார். அதனால், அவர் ஞேயத்தை அடைந்து நிற்கும் நிலையில் ஞானம், ஞாதுரு, ஞேயம் என்னும் முப்பகுப்பு அவர்க்கு நீங்குவதாம். அது நீங்கவே, ஞேயம் ஒன்றிலே நிற்கும் ஞாதுருவுக்கு அந்த ஞேயப் பொருளிலே வீட்டின்பம் எய்துவதாம்.
=============================================

பாடல் எண் : 03
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவம்
தானென் றவனென் றிரண்டும் தனிற்கண்டு
தானென்ற பூவை அவனடிச் சாத்தினால்
நானென் றவனென்கை நல்லதொன் றன்றே.

பொழிப்புரை : `ஆன்மாவும், சிவமும்` எனப்பொருள் இரண்டாம். அவ்விரண்டையும் ஆன்மாவாகிய ஞாதா தனது ஞானத்தின்கண் வைத்து நன்கு காணுதல் வேண்டும். பின் அங்ஙனம் கண்டதன் பயனாக ஞாதா தானாகிய மலரைச் சிவனுக்கு அவனது அருபளாகிய திருவடியிலே சாத்திவிடுவானாயின், முதலில், `ஆன்மா, சிவம் எனப் பொருள் இரண்டுள்ளன` என உணர்ந்த உணர்வு நல்லதோர் உணர்வாய்ப் பயன் தரும்.
=============================================

பாடல் எண் : 04
வைச்சன ஆறாறும் மாற்றி எனைவைத்து
மெச்சப் பரன்றன் வியாத்துவம் மேலிட்டு
நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்
அச்சங் கெடுத்தென்னை ஆண்டனன் நந்தியே.

பொழிப்புரை : எம் குரவராகிய நந்திபெருமான் என் மேல் வைத்த தமது அருளினால், முன்னே என்னைக் கட்டுட்படுத்து வைத்த முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கி என்னை அவற்றினின்று வேறாக்கி வைத்து, என்னை யாவரும் `பெரியோன்` என்று புகழும் படிச் சிவவியாபகத்தை என்பால் மேலிடுவித்துப் பின் உறுதியாக என்னைச் சிவமேயாகச் செய்து பிறவிக்கு அஞ்சும் எனது அச்சத்தை ஒழித்து என்னை ஆட்கொண்டருளினார்.
=============================================

பாடல் எண் : 05
முன்னை யறிவறி யாதஅம் மூடர்போல்
பின்னை யறிவறி யாமையைப் பேதித்தான்
தன்னை யறியப் பரனாக்கித் தற்சிவத்
தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே.

பொழிப்புரை : யான் நந்திபெருமானைக் குருவாக அடைதற்கு முன், அறியத்தக்க பொருளை அறியாது கிடக்கின்ற அறிவிலிகளோடு ஒருங்கொத்திருந்தேனாக, அவரை அடைந்த பின் அவ் அறியா மையை நீக்கிச் சிவத்தை உணருமாறு என்னைக் கருவிக் கூட்டத்திற்கு அயலானாக ஆக்கி, அவ் ஆக்கப்பட்டால் யான் சொரூப சிவத்தில் தோய்ந்த பின்பு மீளக் கருவிக் கூட்டத்திற் செல்லாதவாறு உணர்வைத் தந்து கொண்டிருக்கின்றார்.
=============================================

பாடல் எண் : 06
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியும்
கோணாத போகமும் கூடாத கூட்டமும்
நாணாத நாணமும் நாதாந்த போதமும்
காணா யெனவந்து காட்டினன் நந்தியே.

பொழிப்புரை : `எங்கள் குரவராகிய நந்தி பெருமான், கண் இன்றியே காண்கின்ற காட்சியையும், காது இன்றியே கேட்கின்ற கேள்வியையும், சித்தம் திரியாதே நுகர்கின்ற நுகர்ச்சியையும், கூடாமலே கூடி நிற்கின்ற கூட்டத்தையும், நாணாமலே நாணுகின்ற நாணத்தையும், நாதம் இன்றியே உணரும் உணர்வையும் காண்பாயாக`` என அணுகி வந்து காட்டியருளினார்.
=============================================

பாடல் எண் : 07
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்
மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்
மோனங்கை வந்தூமை யாம்மொழி முற்றுங்காண்
மோனங்கை வந்தைங் கருமமும் முன்னுமே.

பொழிப்புரை : மௌன நிலை கைவரப் பெற்றோர்க்குப் பரமுத்தி உண்டாகும். அதற்கு முன்னே பரசித்திகள் உளவாம். நாதத்தின் பிணிப்பும் விட்டொழியும். இறைவனது ஐந்தொழில்களில் இறுதியதாகிய அருளால் தொழிலும் நிகழ்ந்து, அவை அனைத்தும் இயற்றப்பட்டு முடியும்.,
=============================================

பாடல் எண் : 08
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்
வைத்த கலைகாலை நான்மடங் கான்மாற்றி
உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே
பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே.

பொழிப்புரை : சிவ குருவின் திருவடிப் பேற்றால் எல்லாப் பொருள்களும் அற்றுச் `சிவஞாதா, சிவஞானம், சிவஞேயம்` என்னும் மூன்று பொருளிலே வந்து முடிந்த தன்மையை, `சந்திர கலை, சூரிய கலை, அக்கினி கலை` என்னும் மூன்று வகையில் இயங்கும் பிரணவாயுவை முறைப்படி அடக்குமாற்றால் ஞேயமாகிய ஒன்றில் அடங்கச் செய்தலால் விளைந்த ஆனந்தத்தால் திரிபுடியாகிய கட்டினை அறுத்தோர் அதன்பின் பிறந்தும், இறந்தும் வருதலைச் செய்யார் முத்தி பெறுவர் என்றதாம்.
=============================================

பாடல் எண் : 09
மேலைச் சொரூபங்கள் மூன்றும் மிகுசத்தி
பாலித்த முத்திரை பற்றும் பரஞானம்
ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற
மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

பொழிப்புரைமேலே கூறிவந்த ஞாதுரு முதலிய மூன்றன் இயல் புகளையும் சிவசத்தி இனிது விளங்கக் காட்ட அங்ஙனம் கண்ட உணர்வே ஞேயத்தைப் பற்றுதற்குரிய மேலானஞானம். அந்த ஞானத்தில் ஆரவாரித்து திருநடனத்தையுடைய சிவனே ஞேயம். அந்த ஞேயத்தில் அழுந்தித்தானும், தனது ஞானமும் தோன்றாது. முதற்பொருளின் இயல்பு முற்றும் தனது இயல்பாக விளங்கப் பெற்ற ஆன்மாவே ஞாதுரு.
=============================================
தந்திரம் 6- பதிகம் 04. துறவு :...பாடல்கள்: 010
பாடல் எண் : 01
இறப்பும் பிறப்பும் இருமையும நீங்கித்
துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.

பொழிப்புரைஇறப்பும், பிறப்பும் ஆகிய இரண்டினின்றும் இயல்பாகவே நீங்கி, உயிர்களும் அவற்றினின்றும் நீங்குதற்குத் துறத்தலாகிய தவநெறியின் முறைமையைச் சொல்லியருளிய சுயஞ்சோதியாகிய சிவனை ஒரு ஞான்றும் மறத்தல் இல்லாதவராய், வாயாலும் வாழ்த்தி நிற்பவர்கட்கு அவன் இன்ப உலகமாகிய தனது உலகத்தை வாழும் இடமாகக் காட்டியருளுவான்.
=============================================

பாடல் எண் : 02
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
மறந்த மலஇருள் நீங்க மறைந்து
சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.

பொழிப்புரை : ஆணவ மலம் பரிபாகம் எய்தாத பொழுது சத்தி நிபாதமும் வாராமையால் அம்மலம் பலமாயப் பொருள்களின் வழிப் பலவகை மயக்கத்தைச் செய்தலால் பிறந்தும், இறந்தும் உயிர்கள் தன்னை மறந்து நின்ற பொழுது அவற்றது அறிவினுள்ளே மறைந்து நின்றும், பின் அம்மலம் பரிபாகம் எய்தியபொழுது சத்திநிபாதம் வருதலால் உயிர்கள் தன்னை நினைந்த வழி அச்சத்திநிபாத நிலைகட்கு ஏற்ப வெளியிடத்தும், உள்ளே இதயத்தும் உருவம், அருவுருவம், அருவம் என்னும் தடத்தநிலைகளிலும், அறிவின்கண் சொரூப நிலையிலும் முறையானே விளங்கிநிற்கின்ற சிவன் அச்சத்தி நிபாத நிலைகட்கு ஏற்பத் தோன்றும் துறவுணர்வின் அளவாக, முன்னர்ச் சிறிதாய்த் தோன்றிப் பின் பெரிதாய்ச் சுடர்விட்டு ஒளிர்கின்ற பேரொளி போல விளங்கிநிற்பன்.
=============================================

பாடல் எண் : 03
அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

பொழிப்புரை : ``அறவாழி யந்தணன்``1 என்றற்றொடக்கத் தனவாக நூல்களில், `பலவகை அறங்களையும் தனக்கு வடிவாக உடையன்` எனக் கூறப்படுகின்ற கடவுள், பிறப்பு இல்லாதவனும், அதனால், பற்றுச் செய்தற்குக் கிளைஞர் ஒருவரும் இல்லாதவனும், வாழும் இடம் காடாகவும், உண்ணும் உண் பிச்சையாகவும் உடைய வனுமாதலால் சிறந்த துறவியாய் உள்ள சிவனேயாவன். அதனால், அவன் துறவு பூண்டவர்களையே பிறவியைக் கடப்பித்து உய்விக்கின்ற பேரருளாளனுமாய் உள்ளான். இவற்றை அறிமின்கள்.
=============================================

பாடல் எண் : 04
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.

பொழிப்புரை :   (இம்மந்திரம் பிறிது மொழிதல். இதன் நேர்பொருள் வெளிப்படை.)
இதன் குறிப்புப்பொருள்:- அறநெறியை வகுத்துணர்த்திய இறைவனே மறநெறியையும் வகுத்துணர்த்தினான். அதனால், அறநெறியின் வழுவியவழி மறநெறி உளதாய்த் துன்பம் விளைக்கும். ஆகவே, அறநெறியின் வழுவாது ஒழுக வல்லவர்கட்கு அந்நிலையில் மறநெறி தோன்றித் துன்பம் விளைக்க மாட்டாது.
=============================================

பாடல் எண் : 05
கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
நாடி வளைந்தது நான்கட வேனலேன்
ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.

பொழிப்புரை`தீயன ஆவனவும், நல்லன ஆவனவும் இவை இவை` எனக் குருவினிடத்துக் கேட்டுணர்ந்து` தீயவற்றினின்றும் விலகி வந்து சிவனது திருவடியைச் சேர்தற்குரிய தவத்தைச் செய்த நல்ல கோட்பாட்டையுடையேன். அதனால் நான் ஐம்புல வேடர்கள் நினைத்து வந்து என்னைச் சூழ்ந்து நின்ற செயலுக்கு யாதும் கடவேனல்லேன்.
=============================================

பாடல் எண் : 06
உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே.

பொழிப்புரைஉழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.
=============================================

பாடல் எண் : 07
மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.

பொழிப்புரைஅநாதியே துறவனாய் நிற்கும் இறைவன் அத்தன்மையாலே ஒருவர் விளக்க வேண்டாது தானே விளங்கும் ஒளியாய் உள்ளான். உலகருள் கூற்றுவன் வரும் நாளையிலராயினார்க்கு அவன் தோழனாய் விளங்குகின்றான். ஒரு பொருளிலும் பற்று இல்லாதவனாகிய அவன் `அஞ்ஞானம்` என்னும் இருளின் நீங்கினவர்க்கு அவன் சிவனாய் வெளி நிற்கின்றான். அதனால், உலகப் பற்றின் நீங்கினவர்க்கே தம்மை அவனது நிலையைப் பெறுதற்குத் தக்கவராகச் செய்து கொள்ளுதல் கூடும்.
=============================================

பாடல் எண் : 08
நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.

பொழிப்புரை(இது பிசிச்செய்யுள்) நாகம், உயிர் ஐந்துபடம், ஐம் பொறிகள். போகம் - உணவு. நான்கு உணவு. அந்தக் கரணம் நான்கினும் நால்வகையாய்ப் புலப்படும் பொருள், முட்புற்று, துன்பம் நிறைந்த உடல். நிறைந்தது, மனநிறைவு பெற்றிருந்தது. ஆகம் - உடம்பு. பாம்பு தோலுரிப்பது ஆதலால், இரண்டுடம்பு உடையதாம். அவை இங்குத் தூலமும், சூக்குமமுமாகிய இரண்டுடம்புகளைக் குறித்தன. அவை படம்விரித்து ஆடல், ஐம்பொறிகளின்வழி ஐம்புலன்களையும் பொதுப்படக் கவர்தலும், பின் சிறப்பு வகையில் உணர்ந்து திரிபு எய்தலுமாம். அவ் ஆடலை ஒழிதல் ஐம்புல அவாவை அறுத்தலாம். ஐந்து படங்கள் இன்றி ஒருபடத்தையே எடுத்தலாவது, மெய்ப் பொருள் ஒன்றையே நோக்குதல். உடம்பே இடமாதல் - புற்றைவிட்டு நீங்கி அருள் தாரமாக நிற்றல்.
=============================================

பாடல் எண் : 09
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

பொழிப்புரை :   துறந்தவரது குடிக்குத் தானே முதல் என நிற்கின்ற சிவபெருமான், `இன்ன வகையினன்` என ஒருவராலும் இனங்கண்டு கூறற்கு எளியனாய் நிற்பானல்லன். அதனால், அவன் அளவற்ற உயிர்களில் நிறைந்து அவையேயாயும் நிற்பன்; அவனது அருள் எவ்வாற்றால்வரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.
=============================================

பாடல் எண் : 10
தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.

பொழிப்புரை :   ஓர் ஆம்பற் குழலினுள்ளே, அங்கணத்தை (சலதாரையைத்) திறந்தாற்போலக் காணப்படும், ஒன்பது புழைகளும் அடங்கி அடைபட்டன. அதனால், மாலுமி வெளியே பார்ப்பதற்கு வேறு வழியில்லாமல், வேம்பினால் ஆகிய தன் மரக்கலத்தின்மேலே ஏறியபொழுது பாய்மரத்தைச் சுற்றிய தாமரைக்கொடி ஒன்று அம்மரக் கலத்தின் கூரையில் பூத்தலைக் கண்டான்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!