http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 19 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 25, 26, 27 & 28. முக்கரணம், முச்சூனிய தொந்தத்தசி, முப்பாழ், காரண காரிய உபாதி – பாடல்கள்: 03, 07, 06 & 04.





பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004
எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ...பாடல்கள்: 004
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -028
கூடுதல் பாடல்கள்  (367+03+07+06+04=387)
==============================================
எட்டாம் தந்திரம் - 25. முக்கரணம் : பாடல்கள்-03
பாடல் எண் : 1
இடன்ஒரு மூன்றில் இயைந்த ஒருவன்
கடன்உறும் அவ்வுறு வேறெனக் காணும்
திடமது போலச் சிவபர சீவர்
உடனுறை பேதமும் ஒன்றென லாமே.

பொழிப்புரை :  உயிர் சகலாவத்தையில் தத்துவங்களோடு கூடி `சீவான்மா` எனப் பெயர் பெற்று நிற்பினும் அது தத்துவங்களின் வேறாதல்போல்வதும், நின்மலாவத்தையில் தத்துவங்களின் நீங்கி வாக்குகளின் வடிவாய் நிற்குமிடத்து `அந்தரான்மா` எனப்பெயர் பெற்று நிற்பினும் அது வாக்குகளின் வேறாதல் போல்வதும் பராவத்தையில் பரத்தோடு கூடிப் பரான்மா எனப் பெயர் பெற்று நிற்பினும் அது பரத்தின் வேறாதல் போல்வதுந்தாம். பரம் பொருள் சீவான்மாவில் நிறைந்து `சிவம்` என நிற்பினும் அது சிவனின் வேறாதலும், பரான்மாவில் நிறைந்து `பரம்` என நிற்பினும் அது பரான்மாவின் வேறாதலும்.
**********************************************
பாடல் எண் : 2
ஒளியை ஒளிசெய்து ஓம்என் றெழுப்பி
வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி
வெளியை வெளிசெய்து மேல்எழ வைத்துத்
தெளியத் தெளியும் சிவபதந் தானே.

பொழிப்புரை :  பொருள்களை மாறாக உணரும் மயக்கத்தை நீக்கி உள்ளவாறுணரும் தெளிவைத் தருதலால் குண்டலி சத்தி ஒளியெனத் தக்கது. அதனை உலகர் இருளாக்கி வைத்துள்ளனர். அவ்வாறில்லாது அதனை ஒளியாகவே விளங்கும்படிச் செய்தல் வேண்டும். அது பிராணாயாமத்தால் மூலாக்கினியை எழுப்புதலால் உண்டாகும். அஃது உண்டாகும் பொழுதுதான் `வெறுங் காற்று` எனப்படுகின்ற மூச்சு சூரிய சந்திர கலைகளாம் சிறப்பு வளியாகும். அதனை அவ்வாறு செய்து, பயன் கிட்டும்படி கும்பகத்தால் சேமித்து, அதனானே சுழு முனை வழி வழியாயில்லாமல் அடைத்தும், உச்சியில் அருள் ஞானம் விளங்குகின்ற இடம் இடமாய் இல்லாமல் பாழ்படுத்தியும் வைத்திருக்கின்ற நிலையை மாற்றி வழியாகவும், இடமாகவும் செய்து குண்டலியை `ஓம்` என்று எழுப்பி மேற்போய் உலாவச் செய்து தெளிவுணர்வைப் பெற்றால், சிவ சீவர்களது உண்மை நிலை விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 3
முக்கா ரணங்களின் மூர்ச்சை தீர்த்(து) ஆவதக்
கைக்கா ரணமென்னத் தந்தனன் காண்நந்தி
மிக்க மனோன்மனி வேறே தனித்தேக
ஒக்கும்அ துன்மனி ஓதுட் சமாதியே.

பொழிப்புரை :  ஆறாதாரங்களில் மணிபூரகம், அனாகதம் ஆஞ்ஞை என்னும் மூன்று ஆதாரங்கள் சிறப்புடையன. சுவாதிட்டத்தினின்றும் எழுகின்ற பிராணன் `உதானன்` எனப் பெயர் பெற்று மேலோங்கி இவ்விடங்களில் சென்று ஆஞ்ஞையில் முடியும். அவ்வாறு முடியும்படி அதனை முடித்த பின்பு அவ்வாறு முடித்ததனால் உண்டாகும் பயனைக் கைம்மேற் பலனாக எமக்கு எம் ஆசிரியர் நந்தி பெருமான் அளித்தருளினார். அப்பயன்தான் யாதெனில், ஆஞ்ஞையில் விளங்கிய மனோன்மணி சத்தி அதற்கு மேலே வியாபினி சமனை உன்மனைகளாய்ச் செல்ல, உன்மனாந்தத்தில் சிவத்தோடு ஒன்றும் சமாதி நிலையாம்.
**********************************************

எட்டாம் தந்திரம்-26. முச்சூனிய தொந்தத்தசி-பாடல்கள்-07
பாடல் எண் : 1
தற்பதம்தொம்பதம் தானாம் அசிபதம்
தொற்பதம் மூன்றும் துரியத்துத் தோற்றவே
நிற்பது உயிர்பரம் நிகழ்சிவ மும் மூன்றின்
சொற்பத மாகும் தொந்தத் தசியே.

பொழிப்புரை :  துவம் தத், அசி, என்னும் மூன்று சொற்கள் தொன்மையான வேதத்தில் சொல்லப்பட்டனவாகும். இவை உலகியலில் தோன்றுதல் போலாது யோக துரியம். நின்மலதுரியம், பரதுரியம் ஆகிய முத்துரியங்களில் உணர்வின்கண் தோன்றும் பொழுது அவை முறையே சீவ அறுதியும், பர அறுதியும், சிவ அறுதியுமாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 2
தொந்தத் தசிமூன்றில் தொல்கா மியமாதி
தொந்தத் தசிமூன்றில் தொல்தா மதமாதி
வந்த மலம்குணம் மாளல் சிவம் தோன்ற
இந்துவின் முன்இருள் நீங்குதல் ஒக்குமே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் கூறிய மூன்று அறுதிகளுள் தொம்பத அறுதியில் (சீவ அறுதியில்) மாயா மலமும், தற்பத அறுதியில் பர அறுதியில்) ஆணவ மலமும், அசிபத அறுதியில் (சிவ அறுதியில்) கன்ம மலமும் நீங்கும். அவ்வாறே அம்மூன்று அறுதிகளிலும் முறையே இராசதம், சாத்துவீகம் தாமதம் என்னும் குறைகள் நீங்கும். இவ்வாறு மூவறுதியில் மும்மலங்களும், முக்குணங்களும் நீங்குதல் நிலாவின் முன் இருள் நீங்குதலை ஒக்கும்.
**********************************************
பாடல் எண் : 3
தொந்தத் தசிய வாசியில் தோற்றியே
அந்த முறைஈரைந் தாக மதித்திட்டு
அந்த மிலாத அவத்தைஅவ் வாக்கியத்(து)
உந்து முறையில் சிவ முன்வைத் தோதிடே.

பொழிப்புரை :  `தொம், தத், அசி` என்னும் மூன்று பதங்களையும் முத்தி பஞ்சாக்கர மூன்றெழுத்துக்களில் முறையே யகார சிகார வகாரங்களில் வைத்து அந்த முறையிற்றானே தூல பஞ்சாக்கரம் ஐந்தும், சூக்கும பஞ்சாக்கரம் ஐந்தும் அடங்கியிருப்பதாகக் கொண்டு அதனையே அழிவில்லாத யோகாவத்தை நின்மலாவத்தை பராவத்தைகளில் `தொந்ததசி` வாக்கியமாகச் சிகார வகாரங்களை முன் வைத்து உச்சரி.
**********************************************
பாடல் எண் : 4
வைத்துச் சிவத்தை மதிசொரூ பானந்தத்து
உய்த்துப் பிரணவ மாம்உப தேசத்தை
மெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்ந்து
அத்தற் கடிமை அடைந்துநின் றாயே.

பொழிப்புரை :  முன் மந்திரத்திற் கூறியவாறு முத்தி பஞ்சாக்கரத்தை சிவ முன்னாக வைத்து உணர்வைப் பரசொரூபமாகிய ஆனந்த நிலையிற் செலுத்தி அதனோடே பிரணவமாகிய அந்த உபதேச மந்திரத்தையும் அவ்வாறே உள்ளத்தில் சேர்ப்பி, சேர்ப்பித்தால், அப்பொழுதே நீ மெய்யுணர்வைப் பெற்றுச் சிவனுக்கு அடிமையாகி விடுவை.
**********************************************
பாடல் எண் : 5
தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம்
அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம்
நம்புறு சாந்தியில் நண்ணும் அவ்வாக்கிய
உம்பர் உரைதொந்தத் தசி வா சியாவே.

பொழிப்புரை :  `தத்துவமசி` மகாவாக்கியத்தில் `துவம்` பதப்பொருளாகிய சீவன் உயிர் தத்துவங்களையே `தான்` என மயங்கும் மயக்கம் மாயையால் தோன்றுவதாகும். தற்பதப் பொருளாகிய பதி ஐந்தொழில் செய்தற் பொருட்டுப் பராசத்தியினின்றும் சிவமாகித் தோன்றும் சீவன் சிவமாதலைத் தெரிவிப்பதாகிய `அசி` பதப்பொருள் உயிர் அனைத்துப் பாசங்களினின்றும் நீங்கித் தூயதாய நிலையில் தோன்றும். இனி, `தத்துவமசி` மகா வாக்கியத்தில் உள்ள `அசி, தத், துவம்` என்னும் முப்பதங்களும் முத்தி பஞ்சாக்கரத்தில் முறையே `வா,சி,` மூன்றெழுத்துக்களில் அடங்கும்.
**********************************************
பாடல் எண் : 6
ஆகிய அச்சோயம் தேவதத் தின்இடத்து
ஆகி யவைவிட்டால் காயம் உபாதானம்
ஏகிய தொம் `தத் தசி` என்ப மெய்யறி
வாகிய சீவன் பரசிவ னாமே.

பொழிப்புரை :  `சோயம் தேவதத்தன்` என்பது `தேவதத்தனாகிய அவனே இவன்` என்பது இதன் பொருள். ஒரு வடமொழி உதாரணம். இதன் விளக்கம் இல்லற நிலையில் அதற்குரிய கோலமும், உடையும், பெயருமுடையவனாய் இருந்த ஒருவன் அவற்றையெல்லாம் விடுத்துத் துறவியாகி, அதற்குரிய கோலம், தண்டு கமண்டலம், வேறு பெயர் ஆகியவற்றைக் கொண்டால், `அவன்` எனப்பட்ட நிலையில் அவனிடம் இருந்த சேர்க்கைப் பொருள்களை யெல்லாம் விடுத்து, அவற்றை உடையவனாய் இருந்த அவனை மட்டுமே கொண்டு, `இவன்` எனச் சுட்டுதல் போல்வதே `சீவன் சிவமாகிறது` என்றலும் - என்பது அஃதாவது பசுத்துவத்தால் `சீவன்` எனப்படுகின்ற உயிர் அப்பசுதுவத்தின் நீங்கித் தூயதாகிய நடுநிலையிலேதான் சிவனைச் சார்ந்து சிவமாகின்றது என்பதாம்.
**********************************************
பாடல் எண் : 7
தாமத காமிய மாதி தகுகுணம்
ஆம்மலம் மூன்றும் அகரா உகாரத்தோடு
ஆம்அறும் அவ்வும்உவ்வும் மவ்வாய் உடல்மூன்றினில்
தாம்ஆம் துரியமும் தொம்தத் தசியதே.

பொழிப்புரை :   முக்குணங்களும், மும்மலங்களும் `, , ` என்னும் பிரணவ கலைகள் செயற்படில் செயற்படும்; ஒடுங்கில் ஒடுங்கும். அச்செயற்பாடு ஒடுக்கங்களும் மூவகை உடம்பின் கண் நிகழும் `தொம், தத், அசி` என்னும் முப்பதங்களின் சூனியங்களும் அவ்வாறேயாம். அஃதாவது `முச்சூனியங்கள் நின்மல துரியத்தில் நிகழும்` என்பதாம்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 27. முப்பாழ்- பாடல்கள்-06
பாடல் எண் : 1
காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்
காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ் விடக்
காரிய காரண வாதனை கண்டறும்
சீர் உப சாந்தம் முப் பாழ்விடத் தீருமே.

பொழிப்புரை :  காரிய தத்துவங்களாகிய தூல உடம்பு, தூல பூதம், சூக்கும பூதம், ஞானேந்திரியம், கன்மேந்திரியம், அந்தக்கரணம், பிரகிருதி ஆகிய ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு அவற்றின் நீங்கிய நிலை `மாயப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து காரண தத்துவங்களாகிய வித்தியா தத்துவம் ஏழினையும் தன்னின் வேறாகக் கண்டு நீங்கிய நிலை `போதப் பாழ்` எனப்படும். அதைக் கடந்து முன் நீங்கியவற்றின் வாசனை உளதாகிய சுத்த தத்துவங்களையும் வேறாகக் கண்டு கடந்த நிலை `உபசாந்தம்` எனப்படும் இதனையும் கடந்த நிலையே பந்தம் முழுதும் நீங்கிய வீட்டு நிலையாம்.
**********************************************
பாடல் எண் : 2
மாயப் பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்
சேயமுப் பாழ்எனச் சிவசக்தி யில்சீவன்
ஆய வியாத்தம் எனும்முப்பாழ் ஆம் அந்தத்
தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

பொழிப்புரை :  மாயப் பாழ், சீவப் பாழ், வியோமப் பாழ் ஆகிய மூன்றும், `நிலைபெற்ற பரம் பொருளைப்போல மிக மேம்பட்ட நிலை` என்று சொல்லப்பட மற்றும் அவையே, `சீவன் சிவனது திருவருளில் அடங்கி நிற்கும் முப்பாழ்` என்றும் சொல்லப்படும். மிகத் தூயதாகிய உண்மை நிலை, அப், `பாழ்` என்னும் பெயரும் அற்ற இடமாகும்.
**********************************************
பாடல் எண் : 3
எதிர்அற நாளும் எருதுவந் தேறும்
பதியெனும் நந்தி பதமது கூடக்
கதியெனும் பாழைக் கடந்துகற் பனையை
உதறிஅப் பாழில் ஒடுங்குகின் றேனே.

பொழிப்புரை :  `என்றும் தன்னோடு ஒப்பார் இன்றி ஆனேற்றையே ஊர்தியாக உவந்து ஏறி உலாவுகின்ற சிவன் ஒருவனே பதி; ஏனையோர் யாவரும் பசுக்களே எனத் துணிந்து அவனது திருவடியை அடைய வேண்டி, முன்னர், `இதுவே கதி`, எனக் கருதிய மூன்று பாழ்களையும் கடந்து முன் கருதிய கருது கோள்களையெல்லாம் உதறித்தள்ளி, அவற்றையெல்லாம் கடந்த வேறொரு தனிப் பாழில் இப்பொழுது நான் அடங்கியிருக்கின்றேன்.
**********************************************
பாடல் எண் : 4
துரியம் அடங்கிய சொல்லுறும் பாழை
அரிய பரம்பரம்` என்பர்கள் ஆதர்
அரிய பரம்பரம் அன்றே உதிக்கும்
அருநிலம் என்பதை ஆர் அறி வாரே.

பொழிப்புரை :  முப்பாழையும் கடந்த, சொல்லற்ற நிலையாம் சொரூபமாகிய உண்மையை, அறியாதார் சிலர், `அஃது உயிர்களால் என்றும் அடையப்படாத மிக மேலேயுள்ள நிலை` எனக் கூறுவர். (உயிர்களால் என்றுமே அடையப்படாது எனின், `அத்தன்மையதாகிய ஒருபொருள் உண்டு` என்பதே பெறப்படாது முயற்கோடு, ஆகாயத் தாமரை முதலியனபோல அதுவும் வெறும் கற்பனைப் பொருளாய் விடும். மிக மேலானதேயானும் ஆதலின்) அஃது என்றுமே உயிர்களால் அடையப்படாதது அன்று; செயற்கரிய சாதனைகளைச் செய்தவழிக் கிடைக்கின்ற ஓர் அரிய இடமேயாம். இவ்வுண்மையை அறிந்து, அவ்வாற்றால் அதனை அடைய முயல்பவர் எத்துணைப் பேர்? ஒரு சிலரேயாவர்.
**********************************************
பாடல் எண் : 5
ஆறாறும் நீங்க நமவாய் அகன்றிட்டு
வேறா கியபரை யாஎன்றும் மெய்ப்பரன்
ஈறான வாசியிற் கூட்டும் அதுஅன்றோ
தேறாச் சிவாய நமஎனத் தேறிலே.

பொழிப்புரை :   `மெய்ப் பொருளை அருளாசிரியர் பக்குவம் வாய்ந்தவர்கட்கு உபதேசிக்கும் உபதேசமொழி, `சிவாய நம` என்னும் மந்திரமே என்பதைச் சைவப் பெருமக்களன்றிப் பிறர் தெளிய மாட்டாராயினும் சைவப் பெருமக்கள் அதனைத் தெளிந்து அதன் உண்மையை ஆராயுமிடத்து, முப்பத்தாறு தத்துவங்களும் தம்மின் வேறாகி நீங்கிய பொழுது அந்த ஐந்தெழுத்தில் பாசத்திற்கு வழியாகிய `நம` என்பதை நீக்கி, முன்பு நகரத்தின் பொருளாய்த் திரோதானமாய் இருந்த சத்தி வேறுபட்டு அருட்சத்தியாய் வகாரத்தின் பொருளாகி, யகாரத்தின் பொருளாகிய ஆன்மாவை, யகாரம் நீங்கிய இரண் டெழுத்தில் ஈற்றெழுத்தாகிய வகாரம், முதலெழுத்தாகிய சிகாரத்தின் பொருளாகிய உண்மைச் சிவத்தில் பின் என்றும் நீங்காதவாறு சேர்ப்பதாகவே யன்றோ உணரப்படும்! `பிறிதாக ஒன்றும் உணரப்படாது` என்பதாம்.
**********************************************
பாடல் எண் : 6
உள்ளம்உரு என்றும் உருவம் உளம்என்றும்
உள்ளப் பரிசறிந்(து) ஓரு மவர்கட்குப்
பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ்இல்லை
உள்ளமும் இல்லை உருவில்லை தானே.

பொழிப்புரை :  `உயிர் உடம்பே; உடம்பே உயிர்` என இவ்வாறு உயிரின் இயல்பை மயங்கி உணர்ந்து, அந்நெறியிலே தங்கள் ஆராய்ச்சியைச் செலுத்தபவர்கட்கு உயிர் இல்பொருளேயாம். உயிர் இல்பொருளாயினமையின், உடம்பின் தன்மையை அவர் உணர்ந்ததும் உணராமையேயாம். ஆகவே, அவர்கட்கு இங்குக் கூறி வந்த இருட்குழியாகிய தத்துவச் சிக்கலும் இல்லை; அக்குழியினின்றும் ஏறும் கரையாகிய முப்பாழும் இல்லை. அவற்றைக் கடந்த வேறு வெளியாகிய பரநிலையும் இல்லை.
**********************************************
எட்டாம் தந்திரம் - 28. காரிய காரண உபாதி- பாடல்கள்-04
பாடல் எண் : 1
செற்றிடும் சீவ உபாதித் திறன்ஏழும்
பற்றும் பரோபாதி ஏழும் பகர்உரை
உற்றிடும் காரணம் காரியத் தோடற
அற்றிட அச்சிவ மாகும் அணுவனே.

பொழிப்புரை :  முன்அதிகாரத் தொடக்கத்தில்l `காரிய தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, சீவஉபாதி` என்றும், `காரண தத்துவம்` எனக் கூறப்பட்டனவே இங்கு, `பரோபாதி` என்றும் கூறப்பட்டன. இங்கு, `பரம்` என்பது, பரம் பொருளைக் குறியாமல், `சீவ உபாதிக்கு மேலே உள்ளவை` எனப் பொருள் தந்தது. `இவ்விருவகை உபாதிகளும் நீங்கினால் காரியம் காரணத்தோடு அற்றுவிட்டதாகும். அங்ஙனம் அவை அற்று விட்டதால், `அணு` எனப்பட்ட உயிர் அவ்வணுத்தன்மை நீங்கி, வியாபகப் பொருளாகிய சிவத்தை அடைந்து தனது வியாபக நிலையைப் பெற்று இன்புறும்` என்பது பின்னிரண்டடிகளின் பொருள்.
**********************************************
பாடல் எண் : 2
ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு
வேறாய் நினைவு மிகுத்த நனா கனா
ஆறா றகன்ற சுழுத்தி அதில் எய்தாப்
பேறாம் நிலத்துயிர் தொம்பதம் பேசிலே.

பொழிப்புரை :  தத்துவங்களுக்குள்ளே சில காரியமும், சில காரணமும் ஆதல் பற்றி அவற்றை, `காரியம், காரணம்` எனப் பிரித்துக் கூறினாலும் தத்துவங்கள் அனைத்திற்கும் மாயையே காரணமாகத் தத்துவங்கள் அவற்றின் காரியம் ஆதல் பற்றி அவை அனைத்தையும் இங்கு ``காரியோபாதி`` என்றார். ``நனவு`` என்றது சகல சாக்கிரத்தை. அதன்கண் நிகழும் `நனவு, கனவு, உறக்கம்` என்பவற்றில், இவற்றிற்கு முன் நிலைகளில் எல்லாம் கிடைக்கப்பெறாத பேறு கிடைக்கப் பெறுகின்ற துரிய நிலையை அடைந்த பொழுதுதான் உயிர் உண்மையில் `துவம்` பதப் பொருளாகும்.
**********************************************
பாடல் எண் : 3
உயிர்க்குயி ராகி ஒழிவற் றழிவற்(று)
அயிர்ப்பறு காரணோ பாதிவெதி ரேசத்து
உயிர்ப்புறும் ஈசன் உபமித்தா லன்றி
வியர்ப்புறும் ஆணவம் வீடல்செய் யாதே.

பொழிப்புரை :  எல்லா உயிர்களிலும் அவற்றிற்கு உயிராய், ஒரு ஞான்றும் விட்டு நீங்காது, அழிவின்றியிருப்பினும் உயிர்கள் முன் மந்திரத்தில் கூறிய உபாதிகள் அனைத்தினின்றும் நீங்கிய பின்பே முன்பு பாலில் நெய்போல விளங்காதிருந்த நிலையினின்றும் நீங்கித் தயிரில் நெய்போல வெளிப்பட்டு விளங்குகின்ற சிவன் அவ்வாறு வெளிப்பட்டாலன்றி யாதோர் உயிர்க்கும் துன்பத்தைத் தருகின்ற ஆணவ மலம் நீங்குதல் உண்டாகாது.
**********************************************
பாடல் எண் : 4
காரியம் ஏழில் கரக்கும் கடும்பசு
காரணம் ஏழில் கரக்கும் பரசிவன்
காரிய காரணம் கற்பனை சொற்பதப்
பாரறு பாழில் பராற்பரந் தானே.

பொழிப்புரை :  `காரிய உபாதி` எனமேற் கூறப்பட்ட உபாதிகள் உள்ள பொழுது, உயிர் தன்னையே அறியாது மயங்கும். காரிய உபாதிகள் நீங்கக் காரண உபாதிகள் நீங்காதிருக்குமாயின் உயிர் தன்னை ஒருவாறு அறியினும் தலைவனை அறியாது மயங்கும். இக்காரிய காரண உபாதிகள் உயிர்கட்கு ஆக்கி வைக்கப்பட்டவை. இன்னும் இவ்வுபாதிகள் பலவாகச் சொல்லப்படுகின்ற பதங்களாகிய உலகங்களைச் சார்ந்து நிற்பனவாம். இவையெல்லாம் அற்ற நிலையே `வெறும் பாழ்` எனப்படுகின்றது. அவ்விடத்தில் தான் மேலானவற்றிற்கெல்லாம் மேலான பரம் பொருள் உள்ளது.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!