http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 18 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 22, 23 & 24. முத்துரியம், மும்முத்தி, முச்சொருபம் – பாடல்கள்: 08, 04 & 07.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004
எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -024
கூடுதல் பாடல்கள்  (348+08+04+07=367)
==============================================
எட்டாம் தந்திரம் - 22. முத்துரியம் : பாடல்கள் -08
பாடல் எண் : 1
நனவாதி மூன்றினில் சீவ துரியம்
தனதாதி மூன்றில் பரதுரி யந்தான்
நனவாதி மூன்றில் சிவதுரி யம்மாம்
இனவாகும் தொம்தத் அசிபதத் தீடே.

பொழிப்புரை : [ஆன்மா, `சீவன்` எனப்படுவது பாசநிலையில் ஆகலின், முதற்கண் சொல்லப்பட்ட நனவு, சகலத்தில் கேவலமாய் நிகழும். கீழாலவத்தையிலும், சகலத்தில் சகலமாய் நிகழும் மத்தியாலவத்தையிலும் நிகழும் நனவுகளாம்.] கீழாலவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியம் ஆணவ அனுபவம் மிகுவது ஆதலாலும், மத்தியாலத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும். துரியம் ஐம்புல அனுபவம் மிகுவது ஆதலாலும் அவையிரண்டும் சீவ துரியமாம். (இவை தொடக்கத்தில் நிகழ்வன. மேலாலவத்தையாகிய யோக துரியமும் சீவதுரியமே) இறுதியில் நிகழும் பராவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் உயிர் பாசப்பற்று இன்றிப் பரம்பொருள் அனுபவமே மிகப் பெற்றிருத்த லால் அது பர துரியமாம். (`இஃது இலய முத்திநிலை` என்பது மேலே குறிப்பிடப் பட்டது) இடையில் மத்தியாலவத் தைக்கு மேல் நிகழும் மேலாலவத்தையாகிய யோகாவத்தையில் நிகழும் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும், நின்மல சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியமும் உலகியல் உணர்வு முற்ற நீங்காத நிலையில் சிவானுபவம் மிகப் பெறுவன ஆதலின் அவை பரதுரியம் ஆகாது சிவதுரியமாம். இவற்றுள் சிவதுரியமும், பர துரியமுமே `தத்துவமசி` மகா வாக்கிய அனுபவங்களாம்.
**********************************************
பாடல் எண் : 2
தானாம் நனவில் துரியம் தன் தொம்பதம்
தானாம் துரிய நனவாதி தான்மூன்றில்
ஆனாப் பரபதம் அற்ற(து) அருநனா
வானான மூன்று துரியத் தணுகுமே.

பொழிப்புரை :  சீவன் சீவனாகவே இருக்கின்ற மத்தியாலவத்தைச் சாக்கிரம் முதலியவற்றில் நிகழும் துரியத்தில் ஆன்மா, `துவம்` பதப் பொருளாய் இருக்கும். ஆன்மாச் சிவமாந்தன்மையைப் பெறுகின்ற நின்மல சாக்கிரம், பராசாக்கிரம் முதலியவற்றில் நிகழ்கின்ற துரியங்களில் ஆன்மா சிவமாகி, `தத்` பொருளாய் இருக்கும். ஆகவே, இவ்விரு துரியங்களிலும் ஆன்மாப் பாசம் அற்றதாம். சகலத்தில் கேவலத்திற்கு மேலாக நிகழும் மூன்று துரியங்களிலும் ஆன்மா இவ்வாறான நிலைகளை அடையும்.
**********************************************
பாடல் எண் : 3
அணுவின் துரியத்து நான்கும்அ தாகிப்
பணியும் பரதுரி யம்பயில் நான்கும்
தணிவில் பரமாகிச் சார் முத் துரியக்
கணுவிரு நான்கும் கலந்தஈ ரைந்தே.

பொழிப்புரை : பெத்த துரியம் அனைத்தையும் `சீவ துரியம்` என ஒன்றாகவும் முத்தி துரியம் இரண்டையும் ஒன்றாகவும் ஆக்க. அவ்விரண்டிலும் துரியம் முதலாகக் கீழ் நோக்க உளவாம் அவத்தைகள் இருநான்கு; எட்டு. இனி இவ்விரண்டிலும் உள்ள துரியா தீதங்களைக் கூட்ட அவத்தைகள் பத்தாகும். இவைகளில் பெத்தா வத்தை ஐந்தில் ஆன்மாக்கீழ் நிலையதாயும், முத்தியவத்தை ஐந்தில் மேல்நிலையை எய்தியும் இருக்கும்.
**********************************************
பாடல் எண் : 4
ஈரைந் தவத்தை யிசைமுத் துரியத்துள்
நேரந்த மாக நெறிவழி யேசென்று
பாரந்த மான பராபரத் தைக்கியத்(து)
ஓரந்த மாயீ ருபாதியைச் சேத்ந்திடே.

பொழிப்புரை : கீழாலவத்தை ஐந்து, மத்தியாலவத்தை ஐந்து, மேலாலவத்தை ஐந்து இம் மூவைந்து பதினைந்தவத்தைகளை `சீவாவத்தை` என ஓரைந்தாகவும், நின்மலாவத்தை ஐந்து, பராவத்தை ஐந்து இவ்வீரைந்தையும் `பராவத்தை ஐந்து` என ஓரைந்தாகவும் தொகுக்க அவத்தைகள் ஈரைந்தாகி, `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரியங்களும் அவற்றுள்ளே அடங்கும். அவ் அவத்தைகளை மேலாலவத்தைச் சாக்கிரம் முதலாகத் தொடங்கிப் படி முறையாக மேலே மேலே ஏறிச்சென்று, முடிவில் எல்லாமாய் உள்ள பரம்பொருளில் ஒன்று பட்டு, முடிந்த பயனைப் பெற்று, அதற்கு முன்னே நிகழ்ந்த யோக துரியம், நின்மல துரியம் ஆகிய இரண்டு உபாதிகளையும் பயனுடைய அவத்தைகளாகும் படி ஆக்கிக்கொள்க.
**********************************************
பாடல் எண் : 5
தொட்டே யிருமின் துரிய நிலத்தினை
எட்டா தெனினும் நின் றெட்டும் இறைவனைப்
பட்டாங் கறிந்திடில் பல்நா உதடுகள்
தட்டா தொழிவதோர் தத்துவந் தானே.

பொழிப்புரை : இறைவனை அறியுமாற்றால் அறியின், பல், நா, உதடுகள் இவைகளில் அகப்படாத ஒரு மெய்ப்பொருள் யாராலும் அணுக முடியாதாயினும் அணுக முடியும். ஆகையால், மெய்ப் பொருளை அடைய முயல்கின்றவர்களே, நீவிர் அதனை அடைதற் பொருட்டு துரிய நிலத்திலிருந்து கீழ் இறங்கிவிடாமல் இருங்கள்.
**********************************************
பாடல் எண் : 6
அறிவாய் அசத்தென்னும் ஆறா றகன்று
செறிவாய மாயை சிதைத்(து) அரு ளாலே
பிறயாத பேரரு ளாயிடும் பெற்றி
நெறியான அன்பர் நிலையறிந் தாரே.

பொழிப்புரை : சடங்களாகிய முப்பத்தாறு தத்துவங்களையும் நீக்கும் முகத்தால், அடர்ந்துள்ள மாயையைப் போக்கிச்சித்தாய் நின்றுபின்னர் வெளிப்படுகின்ற திருவருளாலே அதுவேயாய் நிற்கின்ற தன்மையால் உயர் நெறியை அடைந்த அன்பர்களே சிவனது இயல்பை உண்மையாக உணர்ந்தோராவர்.
**********************************************
பாடல் எண் : 7
நனவில் நனவாதி நாலாம் துரியம்
தனதுயிர் தொம்பதம் ஆமாறு போல
வினையறு சீவன் நனவாதி யாகத்
தனைய பரதுரி யம்தற் பதமே.

பொழிப்புரை :  பிராரத்த வினை நீங்காமையால், கருவி கரணங்களோடு கூடிய உடம்பிற்றானே புருவ நடுவின் கண் நிகழும் சுத்த சாக்கிரம் தலிய சிவ ஐந்தவத்தை களில் நாலாவதாகிய சிவ துரியத்தில் சீவன் ஆன்ம சுத்தியைப் பெற்று `துவம்` பதப் பொருளாய் நிற்றல்போல, பிராரத்தவினை நீங்கினமையால், கருவி கரணங்களைக் கடந்து நிற்கின்ற நிலையில் நிகழும் பர சாக்கிரம், பர சொப்பனம் முதலாக நிகழும் பர அவத்தை ஐந்தில் நாலாவதாகிய பரதுரியத்தில் ஆன்மா, `தத்` பதப் பொருளாய் நிற்கும். அஃதாவது, `சிவமேயாய் நிற்கும்` என்பதாம்.
**********************************************
பாடல் எண் : 8
தொம்பதம் தற்பதம் சொல்முத் துரியம்போல்
நம்பிய மூன்றாம் துரியத்து நற்பரம்
அம்புவி உன்னா அதிசூக்கம் அப்பாலைச்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :  `துவம்` பதம், `தத்` பதம் முதலிய சொற்களின் வழியாக நிகழும் `சீவ துரியம், சிவ துரியம், பர துரியம்` என்னும் முத்துரிய அனுபவ நிகழ்ச்சிகளில், பெரிதும் விரும்பப்பட்ட மூன்றாவதாகிய பரதுரியத்தில் முதற்கண் சொல் நிகழ்ச்சி சிறிது உளதாயினும், முடிவில் சொல்லற்றதாகிய பேரொளியாம் பரசிவம் அனுபவப்பட்ட அந்நிலை, உலக வாசனை முழுதும் அற்றுச் சூக்குமத்திலும் சூக்குமமாய் விளங்க, `அவ்விடத்தில் அனைத்துப் பொருட்கும் அப்பாற்பட்ட அந்தப் பரசிவமே தனது பேரருள் காரணமாகக் குறுமூர்த்தியாய் வந்து தனக்கு அருள் செய்தது` என்னும் உண்மையும் விளங்கும்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 23. மும்முத்தி: பாடல்கள்: 04
பாடல் எண் : 1
சீவன்றன் முத்தி அதீதம் பரமுத்தி
ஓவுப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்
மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாம்
ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.

பொழிப்புரை : மும்முத்திகளுள் முதலாவதாகிய சீவன் மும்முத்தி யாவது, உலகத்தில் இருப்பினும் உலகத்தைக் கடந்து நிற்கும் நிலையாம். எனவே, `இஃது உடம்புள்ள பொழுதே நிகழ்வது` என்பது அறியப்படும். நின்மலாவத்தையில் சாக்கிரம் முதலியனவாம். மூன்றாவதாகிய பரமுத்தியாவது, உயிர் முன்பு இருந்த பாச நிலைகள் முற்றும் அற்று நிலையான அமைதியைப் பெறும் நிலையாகும். (ஆகவே, இஃது உடம்பு நீங்கிய பின்னர்ப் பெறப்படுவதால் விளங்கும். பிறர், `விதேக முத்தி` என்பர். இந்நிலையில், `சிவானந்தத்தை நாம் அனுபவிக்கின்றோம்` என்னும் உணர்வும் இன்றி, அந்த ஆனந்தத்துள் மூழ்கியிருக்கும் நிலையாதல் பற்றி இதனை, `ஆனந்தாதீதம்` என்றும் கூறுவர். ஆனந்தாதீதம் ஆனந்தத்தில் ஆதீதம். இவ்வாறன்றி, உலக இன்பத்தில் தோயாது, சிவானந்தத்திலே தோய்தல் சிவமுத்தியாம். (எனவே நின்மலாவத்தையில் துரியாதீத நிலையாம்.) இவ்வாறு மூன்று நிலைகளில், உயிர் மூன்று தன்மைகளை உடையதாக, முத்தி மூன்று வகையாய் இருக்கும். இவற்றுள் சொல்லிறந்த முத்தியாகிய பரமுத்தியே நாதாந்த முத்தியாகக் கருதப்படும்.
**********************************************
பாடல் எண் : 2
ஆவ தறியா உயிர்பிறப்பால் உறும்
ஆவ தறியும் உயிர்அருட் பால்உறும்
ஆவதொன் றில்லை அகப்புறத் தென்றகன்(று)
ஓவு சிவனுடன் ஒன்றுதல் முத்தியே.

பொழிப்புரை :  [``அறிவுடையார் ஆவ தறிவார்;`` அறிவிலார் - அஃதறிகல்லாதவர்``* என்றபடி, பின் வளைவதை முன் கூட்டிக் காரிய காரண இயைபு பற்றி உய்த்துணர்பவரே `அறிவுடையார்` எனப் படுவார். அங்ஙனம் அறியமாட்டாதவர் அறிவிலார் ஆவர். அறிவால் இன்பம் வருதலும், அறியாமையால் துன்பம் வருதலும் நியதி. ஆகவே] பின் விளைவதை முன்கூட்டி அறிந்து வருமுன்னர்க் காத்துக் கொள்ளாத உயிர்கள் பிறப்பாகிய துன்பத்திலே வீழ்ந்திடும். பின் விளைவதை முன்கூட்டியே அறிந்து, `வருமுன்னர்க் காத்துக் கொண்ட உயிர்கள் சிவனது திருவருளிலே சென்று பொருந்தும். `சிவனாலன்றி உடம்பாலும், உலகத்தாலும் உயிர்கட்கு வருவதொன்றில்லை` என்பதை உணர்ந்து, அவனது அருளைப் பெற்று, அந்த அருளாலே அவனுடன் ஒன்றுபடுதலே முத்தியாகும்.
**********************************************
பாடல் எண் : 3
சிவமாகி மும்மலம் முக்குணஞ் செற்றுத்
தவமான மும்முத்தி தத்துவத் தைக்கியத்
துவமா கியநெறி சோகம்என் பார்க்குச்
சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

பொழிப்புரை :  சித்தாந்தம் கூறுகின்ற மும்மலங்களையும், ஏனைச் சமயத்தார் முடிவாகக் கூறுகின்ற முக்குணங்களையும் (சாத்துவிக ராசத தாமதங்கள்) போக்கிச் சிவமாம் தன்மையை எய்திச் சரியை முதலிய தங்களால் உண்டாகும் அந்த ஞானத்தின் பயனாகப் பெறுகின்ற மும்முத்திகளையே, `தத்துவமசி` `ஸோஹமஸ்மி` என்னும் மகா வாக்கியங்கள் கூறும் முத்தி நிலையாக உணர்ந்து, அந்த மகாவாக்கியப் பொருள்களை அனுபவமாக உணர வல்லவர்கட்கு நன்மையே நிறைந்து, தீமை சிறிதும் இல்லாதவனாகிய சிவன், பிற பொருள்களை யெல்லாம் விலக்கித் தான் ஒருவனே விளங்கி நிற்பான்.
**********************************************
பாடல் எண் : 4
சித்தியும் முத்தியும் திண்சிவ மாகிய
சுத்தியும் முத்தித் தொலைக்கும் சுகானந்த
சத்தியும் மேலைச் சமாதியு மாயிடும்
பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.

பொழிப்புரை :  பக்குவான்மாக்கட்குப் பாசத்தை அறுத்துத் தன்னையே அளிப்பதாகிய சித்தாந்த முத்தியைத் தருகின்ற, பெரிய பெருமானாகிய (மகாதேவனாகிய) சிவனே ஏனையோர்கட்கு அவரவர்களது தகுதிக்கு ஏற்ப, பொது யோகிகள் விழைகின்ற அணிமாதி அட்ட மாசித்தியாகிய பயனையும், ஏனைச் சமயத்தார் தாம் தாம் `முத்தி` எனக் கொண்டு விழைகின்ற பல்வேறு பயன்களையும், அகப்புற, அகச்சமயிகள் விழையும் பொதுநிலைச் சிவபதமாகிய பயனையும், இப்பயனுக்கு எதிராய் உள்ள `தாபத் திரயம்` எனப்படும் மூவகைத் துன்பங்களைப் போக்கிக் கொள்கின்ற ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான். ஆற்றலையும், சிவயோகிகள் விரும்புகின்ற அந்தமேலான சமாதியாகிய சீவன் முத்தியையும் தருபவனாவான்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 24. முச்சொரூபம்: பாடல்கள்: 07
பாடல் எண் : 1
ஏறிய வாறே மலம்ஐந் திடைஅடைந்
தாறிய ஞானம் சிவோகம் அடைந்திட்டு
வேறுமென் மேல்முச் சொரூபத்து வீடுற்றங்(கு)
ஈறதில் பண்டைப் பரன்உண்மை எய்துமே.

பொழிப்புரை : பெத்தம் தடத்தமாக, முத்தியே சொரூபம் ஆதலின், முன் அதிகாரத்தில் கூறிய மும்முத்திகளையே இவ்வதிகாரத்தில் `முச்சொரூபம்` என ஏழு மந்திரங்களால் வேறொரு வகையாக விளக்குகின்றார். `பெத்தம் தடத்தமே, முத்தியே சொரூபம்` என உணர்தலே இவ்வதிகாரத்தின் பயன். (தடத்தம் - செயற்கை, சொரூபம் - இயற்கை.)
`ஆணவம், திரோதாயி, மாயை, மாயேயம், கன்மம்` என இவ்வாறு ஐந்து மலங்களும் ஆன்மாவை வந்து பற்றி, ஒன்று, இரண்டு, மூன்று`, என இவ்வாறு தொகை மிகுந்த முறையிலே அவற்றினின்றும் ஒவ்வொன்றாக நீங்கி, முழுதும் விடுபட்ட ஆன்ம ஞானம், பின் `சிவோகமஸ்மி` என்னும் அனுபவத்தைப் பெற்று, அதற்குப் பின்னும் மேலே மேலே சென்று முச்சொரூபமாகிய மும்முத்திகளைப் பெற்று, முடிவில் அநாதியான சொரூப சிவனை அடைந்து நலம் பெறும்.
**********************************************
பாடல் எண் : 2
மூன்றுள மாளிகை மூவர் இருப்பிடம்
மூன்றினில் முப்பதோ ராறு முதிர்வுள
மூன்றினினி னுள்ளே முளைத்தெழும் சோதியைக்
காண்டலும் காயக் கணக்கற்ற வாறே.

பொழிப்புரை : `சகலர், பிரளயாகலர், விஞ்ஞானகலர்` என்னும் மூவகை உயிர்களுக்கும் மூன்றுவகையான மாளிகை போன்ற, `பிராகிருத சரீரம், மாயேய சரீரம், வைந்தவ சரீரம்` என்னும் மூன்று வகையான உடம்புகள் இருப்பிடமாய் உள்ளன. அந்த மூன்று வகை உடம்புகட்குள்ளேதான் தத்துவங்களும் உள்ளன. அவ்வுடம்புகளில் ஒவ்வொன்றிலுமே `ஆன்மா,சிவம், பரம்` என்னும் மூன்று ஒளிப்பொருள்களும் வெளிப்படுகின்றன. அவ்வொளிகளை நேரே உணரும் வாய்ப்பு உளதாயின், அதன்பின் மேற்கூறிய உடம்புகளுக் குள்ளே உயிர் இருக்க வேண்டிய விதி இல்லையாய்விடும்.
**********************************************
பாடல் எண் : 3
உலகம் புடைபெயர்ந்(து) ஊழியும் போன
நிலவும் சுடரொளி மூன்றும்ஒன் றாய
பலவும் பரிசோடு பான்மையுள் ஈசன்
அளவும் பெருமையும் ஆர்அறி வாரே.

பொழிப்புரை : உலகங்கள் எல்லாம் ஒடுக்க நிலையை எய்தி விட்டன. அதனால், உலகம் உள்ளளவும் இருந்த அந்த ஊழியும் போய், அடுத்த ஊழி வரும் நிலைமை தோன்றி விட்டது, உலகம் உள்ள பொழுது விளங்கிக்கொண்டிருந்த, `ஞாயிறு, திங்கள் தீ` என்னும் முச்சுடர்களும் காரண நிலையில் ஒன்றாகி விட்டன. இவை போல எல்லாப் பொருள்களும் தம் தம் காரண நிலைகளை எய்தி விட்டன. ஆயினும் பரமசிவன் முன் இருந்தவாறே இருக்கின்றான் என்றால், அவனது நீளத்தின் எல்லையையும், அகலத்தின் எல்லையையும் யார் அறிய வல்லார்!
**********************************************
பாடல் எண் : 4
பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்(து)
அருவாய் உருவாய் அருவுரு வாகிக்
குருவாய் வரும்சத்தி கோன்உயிர்ப் பன்மை
உருவாய் உடன்இருந்(து) ஒன்றாய் அன் றாமே.

பொழிப்புரை : மகா மாயையை முதலாக வைத்து எண்ணுகின்ற காரணங்களையும், அவற்றின் காரியங்களையும் வேறு வேறு வகைபடத் தோற்றுவித்து, அவற்றை அங்ஙனம் செய்தற்கு ஏற்ற `அருவம், உருவம், அருவுருவம்` என்னும் மூவகைத் திருமேனிகளைக் கொண்டு, மூவகை நிலையில் நின்று, முடிவில் குருவாகியும் வந்து ஆட்கொள்கின்ற அருளாளனாகிய சிவன், அளவில்லாத உயிர்களிலும் அவ்வவற்றோடும் சேர்ந்து உயிர்க்கு உயிராதல் தன்மையால் உடனாயும், கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் உள்ளான்.
**********************************************
பாடல் எண் : 5
மணிஒளி சோபை இலக்கணம் வாய்த்து
அணியென லாய்நின்ற ஆறது போலத்
தணிமுச் சொருபாதி சத்தியால் சாரப்
பணிவித்த பேர்நந்தி பாதம்பற் றாயே.

பொழிப்புரை : இரத்தினங்கள் நிறம், ஒளி, வடிவம் என்பவற்றைப் பெற்றுப் பல அணிகலங்களாய் நிற்கும் முறைமை போலத்தான் `பரம், சிவம், ஆன்மா` என்னும் முச்சொரூபத்தையுடையதாகி அந் நிலைகளில் தனது சத்தியால் சீவனும் அடங்கித் தோன்றும்படி செய்த, `நந்தி` என்னும் பெயரையுடைய அந்த முதல்வனது திருவடி களையே பற்றாகப் பற்றி உய்வாயாக.
**********************************************
பாடல் எண் : 6
கல்லொளி மாநிறம் சோபைக் கதிர்தட்டல்
நல்ல மணிஒன்றில் நாடில்ஒண் முப்பதம்
சொல்லறு பாழில் சொல்லறு பேர்உரைத்(து)
அல்லறு முத்திராந் தத்தனு பூதியே.

பொழிப்புரை :  பிற மணிகளில் ``ஒளி`` என்றும், `நிறம்` என்றும் `சோபை` என்றும் இங்ஙனம் பல பெயர்களால் சொல்லப்பட்டு விளங்குகின்ற கதிர்கள் ஒரு படிக மணியிலே பொருந்த, அப்படிகமணி வேறு பல மணிகளாய்க் காட்சியளிப்பது போன்றதே `தத்துமசி` மகாவாக்கியத்தால் உபதேசிக்கப்படும் பொருள். அஃதாவது, `உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின், பாசத்தைச் சார்ந்து பாசமாய் இருந்த நீ, அந்நிலை நீங்கிச் சிவத்தைச் சார்ந்து சிவம் ஆகிறாய்` என்பதாம். (சீவன் பாசமாய் இருந்த நிலை சொல்லால் சொல்லப்படும். அஃது அந்நிலையினின்றும் நீங்கிச் சிவமாகிய நிலை) சொல்லால் சொல்ல வாராது, முத்தி பஞ்சக்கரமும் மொழியாய் இராது அனுபவமான ஒளி நிலையாகும். இது முப்பாழும் கடந்த நிலையும், குரு பஞ்சாக்கரத்தை உபதேசித்து, சின்முத்திரையால் அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞ்ஞானத்தை உணர்த்திய முடிந்த நிலையும் ஆகும்.
**********************************************
பாடல் எண் : 7
உடந்தசெந் தாமரை யுள்ளுறு சோதி
நடந்தசெந் தாமரை நாதம் தகைந்தால்
அடைந்த பயோதரி அட்டி அடைத்த
இடந்தரு வாசலை மேல்திற வீரே.

பொழிப்புரை :  வரிசையாய் அமைந்துள்ள செந்தாமரை மலர்களின் பல்வேறு வகையாய்க் காட்சியளிக்கின்ற இறைவனை மூலாதாரத்தினின்றும் எழுந்து மேல்நோக்கி நடக்கின்ற அனல் நாதாந்தத்திலே நிறுத்திக்காட்ட, அதனால், அவ்விடத்தை அடைந்த பால் ஒழுகும் தனங்களையுடைய பெருமாட்டி அடைத்து வைத்திருக்கின்ற விசாலமான மேல்வாசலைத் திறக்கும் உபாயம் அறிந்து திறவுங்கள்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!