http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 26 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 37&38. விசுவக் கிராசம், வாய்மை – பாடல்கள்: 08 & 14.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010
எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:33: சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
எட்டாம் தந்திரம்:பதிக எண்:34: மோட்ச நிந்தை: பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:35: இலக்கணாத் திரயம்......பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:36: 'தத்துவமசி' மகாவாக்கியம் :பாடல்கள் :017
எட்டாம் தந்திரம்:பதிக எண்:37: விசுவக் கிராசம்: பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:38: வாய்மை....................பாடல்கள்: 014  ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -038
கூடுதல் பாடல்கள்  (464+008+014=486)
==============================================


எட்டாம் தந்திரம் - 37. விசுவக் கிராசம் : பாடல்கள் : 08
பாடல் எண் : 1
அழிகின்ற சாயா புருடனைப் போலக்
கழிகின்ற நீரிற் குமிழியைக் காணின்
எழுகின்ற தீயிற்கர்ப் பூரத்தை யொக்கப்
பொழிகின்ற இவ்வுடல் போம்அப் பரத்தே.

பொழிப்புரை : விரையத் தோன்றி மறைகின்ற சாயா புருடனைப் போலவும், சிறிது நின்று கெடுகின்ற நீர்க்குமிழி போலவும், சிறிது நீட்டித்துக்கெடுகின்ற, தீயிடைப்பட்ட கருப்பூரத்தைப் போலவும், அசுத்தத்தைப்பொழிகின்ற தூலவுடம்பும் ஒரு காலத்தில் சிவத்தில் ஒடுங்குவதேயாம்.
**********************************************
பாடல் எண் : 2
உடலும் உயிரும் ஒழிவற ஒன்றின்
படரும் சிவசத்தி தானே பரமாம்
உடலைவிட் டிந்த உயிர்எங்கு மாகிக்
கடையும் தலையும் கரக்கும் சிவத்தே.

பொழிப்புரை : உடம்பும், உயிரும் நீக்கமற ஒன்றியிருக்கும் பொழுது, உலகத்தை நோக்கிச் செல்லும் சிவ சக்தியே உயிருக்குத் தலைமையாய் நின்று நடத்தும். உடலை அறவே விட்டொழித்தவழி, உயிர் சிவனைப் போலப் போலவே எங்கும் இருப்பதாய், முடிவும், முதலுமாகிய எல்லைகளில் எதுவும் இன்றி வியாபகமாய்ச் சிவனது வியாபகத்தில் அடங்கிவிடும்.
**********************************************
பாடல் எண் : 3
செவி மெய் வாய் கண் மூக்குச் சேர்இந்திரியம்
அவியின் றியமன மாதிகள் ஐந்தும்
குவிவொன றிலாமல் விரிந்து குவிந்து
தவிர்வொன் றிலாத சராசரந் தாமே.

பொழிப்புரை : செவி முதலிய ஐந்து ஞானேந்திரியங்கள், மனம் முதலிய நான்கு அந்தக் கரணங்கள், பிரகிருதி ஆகப் பத்தினையும் பற்றி நின்று செலுத்துகின்ற உயிர்கள் அவற்றைப் பலதலைப்பட்டு விரிந்து செல்லவிடாது சிவம் ஒன்றையே நோக்கிக் குவிந்து செல்லுமாறு செலுத்துதல் வேண்டும். அங்ஙனம் செலுத்தா மையால் அவை பல வழியாக விரிந்து செல்லத் தாமும் அவ்வாறே முதற்கண் உலகில் விரிந்து செல்கின்றன. ஆயினும் அவை முன் சொல்லியவற்றுள் குவிந்த பொழுது, சராசரங்களாகிய அனைத்து உடம்புகளும் உயிர்களும் சிவத்தில் ஒடுங்கிச் சிறிதும் நீங்காதனவாய் இருக்கும்.
**********************************************
பாடல் எண் : 4
பரன் எங்கும் ஆரப் பரந்துற்று நிற்கும்
திரன் எங்கு மாகிச் செறிவெங்கும் எய்தும்
உரன்எங்கு மாய்உல குண்டு முமிழ்க்கும்
வரன்இங்ஙன் கண்டியான் வாழ்ந்துற்ற வாறே.

பொழிப்புரை : சிவன் வியாபகன்; மாற்றம் இல்லாதவன் எவ்விடத்திலும், எப்பொருளிலும் நிறைந்து அதனால், தனது ஆற்றலால் சுத்தமும், அசுத்தமும் ஆய இரு மாயா காரியங்களிலும் தனது ஆற்றலால் தங்கி அவற்றைத் தன்னுள் ஒடுக்கவும் செய்வான். பின்பு விரிக்கவும் செய்வான். நான் மேல்நிலை அடைந்து பேரின்ப வாழ்வில் வாழ்ந்திருத்தற்குக் காரணம் இந்த உண்மையை இவ்வாறு உணர்ந்ததே.
**********************************************
பாடல் எண் : 5
அளந்த துரியத் தறிவினை வாங்கி
உளங்கொள் பரம்சகம் உண்டஃ தொழித்துக்
கிளர்ந்த பரம்சிவம் சேரக் கிடைத்தால்
விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே.

பொழிப்புரை : உயிரினது அறிவின் நிலைமையை அளந்து, அஃது நின்மல துரியத்தை அடைந்தவாற்றினைத் தெரிந்து, அதன்கண் உயிரினது அறிவினை வாங்கித் தன் அறிவினுள் அடக்கிக் கொண்ட நின்மல சிவம். அந்நிலையில் உயிரினது உடம்பும், உலகமும் இருப்பினும் அவையில்லாதது போலத் தனது அருளினுள் அடக்குமாற்றால், உயிரினது, `யான், எனது` என்னும் பற்றை அறுத்துத் துரியத்திற்கு மேற்பட்ட பரசிவமாய்ப் பொருந்தக் கிடைத்தால், ஆன்மா அந்தப் பரசிவமாகிய பராகாயத்தில் அடங்கிவிடும் பேற்றினையும் பெற்றுவிடும்.
**********************************************
பாடல் எண் : 6
இரும்புண்ட நீர்என என்னைஉள் வாங்கிப்
பரம்பர மான பரமது விட்டே
உரம்பெற முப்பாழ் ஒளியை விழுங்கி
யிருந்தனன் நந்தி இதயத்து ளானே.

பொழிப்புரை : உலையிற்பட்ட இரும்பு தன்மேல் வீழ்ந்த நீரை மீள வெளிப் படாதபடி தன்னுள் ஒடுக்கிக் கொள்வது போல, மேலானதற்கும் மேலான பொருளாகிய சிவன், யான் அஞ்ஞானத்தை விட்டு மெய்ஞ்ஞானத்தைப் பெற்றமையால் முப்பாழிலும் முறையானே எனது சீவ போதத்தைத் தான் விழுங்கித் தான் மட்டுமே எனக்கு மேலேயிருந்தான்; என் அறிவினுள்ளும் இருந்தான்.
**********************************************
பாடல் எண் : 7
கரிஉண் விளவின் கனிபோல் உயிரும்
உரிய பரமும்முன் ஓதும் சிவமும்
அரிய துரியத்(து) அகிலமும் எல்லாம்
திரிய விழுங்கும் சிவபெரு மானே.

பொழிப்புரை : `சீவ அவத்தை, சிவ அவத்தை, பர அவத்தை` என மேற்கூறிய மூன்று அவத்தைகளிலும் அரியனவாம் துரிய நிலையில் சிவபெருமான் அனைத்துலகங் களையும், அவற்றில் வாழும் உயிர்களையும் அவற்றது முன்னை இழிநிலை மாறி, உயர்நிலையாகும்படி விழுங்கிவிடுவான்.
**********************************************
பாடல் எண் : 8
அந்தமும் ஆதியும ஆகும் பராபரன்
தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன்
நந்தமை உண்டுமெய்ஞ் ஞானஞே யாந்தத்தே
நந்தி யிருந்தனன் நாம்அறி யோமே.

பொழிப்புரை : சிவபெருமான், அனைத்துப் பொருள்கட்கும் அந்தமும், ஆதியுமாய் உள்ள பெரும் பொருளாய் நின்று, பல உயிர்களும் அடையும் பலவேறு அவத்தைகளில் தடத்த சிவனாய் எல்லாம் அவற்றிற்குத் தலைவனாய்ப் படிமுறையால் அவைகளை உயர்த்தி, முடிவில் சொரூப சிவனாய் அவனது ஞானமே கண்ணாக உணரும் ஞானத்திற்கு ஞேயமாய் இருக்கின்றான். அவனது செயல்களை நாம் அறுதியிட்டு அறியமாட்டோம்.
**********************************************
 எட்டாம் தந்திரம் - 38. வாய்மை: பாடல்கள் :014
பாடல் எண் : 1
அற்ற துரைக்கில் அருளுப தேசங்கள்
குற்றம் அறுத்தபொன் போலக் கனலிடை
அற்றற வைத்திறை மாற்றற ஆற்றிடில்
செற்றம் அறுத்த செழுஞ்சுடர் ஆகுமே.

பொழிப்புரை : உயிர்கள் அடையத் தகும் முடிவான பயனை கூறுமிடத்து, அது வேதாந்த சித்தாந்த மகாவாக்கியங்களின் ஒருமித்த பொருளேயாகும். அதுமேலே சொல்லப்பட்டது. அந்தப்பயன், இறைவன், உயிர்கள் பாச பந்தங்களினின்றும் முற்றாக நீங்கத் திருவுளம் பற்றி, தான் அந்தப் பந்தங்களை நீக்கும் செயல்களைக் குறைவின்றிச் செய்தால் தீயில் இட்டு மாசுக்களை நீக்க நீங்கிய பொன்போல உயிர்கள் தன்னைச் சூழ்ந்துள்ள இருளை ஓட்டி ஒளிவிடுகின்ற விளக்குப்போல ஆகி, பந்தங்கள் அனைத்தையும் துரத்தி விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 2
எல்லாம் அறியும் அறிவு தனைவிட்டே
எல்லாம் அறிந்தும் இலாபம்அங்கில்லை
எல்லாம் அறியும் அறினை `நான்` என்னில்
எல்லாம் அறிந்த இறையென லாமே.

பொழிப்புரை : உயிர்கள் இறைவனைத் தவிர மற்றை எல்லாப் பொருள்களையும் அறிதல் அவற்றிற்குப்பந்தமாகும், அதனைக் குருவருளால் நீங்கிச் சிவனைப்போல முற்றறிவைப் பெற்றபின்னும் இறைவனைத் தவிர வேறுபொருள்களை அறிவதில் பேறு ஒன்றும் இல்லை. (மாறாக, இன்ப இழப்பே உளதாகும், ஏனெனில், பிற எல்லாம் துன்பப் பொருள்களேயாதலின). ஆகவே `சிவன் நான்` என்னும் அந்த ஒற்றுமை உணர்விலே நிலைத்து நிற்பின், உயிர் இறை நிலையினின்றும் பிறழாதிருக்கும்.
**********************************************
பாடல் எண் : 3
தானே உலகின் தலைவன் எனத்தகும்
தானே உலகுக்கோர் தத்துவ மாய்நிற்கும்
வானே பொழிமழை மாமறை கூர்ந்திடும்
ஊனே உருகிய உள்ளம்ஒன் றாகுமே.

பொழிப்புரை : சிவபெருமான் ஒருவனே உலகங்கட்கெல்லாம் முழு முதல் தலைவனும், மெய்ப்பொருளும் ஆவன். அறம் முதலிய உறுதிப்பொருள்களை உணர்த்தும் மறைகளின் வழியே அவைகள் நிலைபெறற் பொருட்டு வானம் மழைபொழியவும் கருணை கூர்வன். இவற்றை உணர்ந்து ஊனும் உருகும்படி எந்த உள்ளம் அன்பினால் உருகுகின்றதோ அந்த உள்ளம் அவனோடு சேர்ந்து ஒன்றாகும்.
**********************************************
பாடல் எண் : 4
அருள்பெற்ற காரணம் என்கொல் அமரில்
இருளற்ற சிந்தை இறைவனை நாடி
மருளுற்ற சிந்தையை மாற்றி அருமைப்
பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே.

பொழிப்புரை : `திருவருளைப் பெற்றவர் அதனைப் பெற்றது எதன்பொருட்டு` என்று அறிய விரும்பினால், அவர் அத்திருவருளால் மலம் நீங்கப்பெற்ற தமது அறிவுகள் அத்திருவருளே கண்ணாக அத்திருவருட்கு முதலாகிய சிவத்தை ஆராய்ந்து அவ்வாராய்ச்சியால் முன்பு நீங்கிப்போன மலத்தின் வாசனை தங்கியுள்ள தங்களது அறிவை அவ்வாசனையும் அற்ற தூய அறிவாய் நிற்கும்படி செய்து, இங்ஙனம் அரிதிலே பெறப்பட்ட பொருளாய் உள்ள இவனது திருவடியையே விடாது பற்றி, அவற்றின்கீழ் அடங்கியிருப்பர்.
**********************************************
பாடல் எண் : 5
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்றன்னைப்
பொய்கலந் தார்முன் புகுதா ஒருவனை
உய்கலந்(து) ஊழித் தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந் தின்பம் விளைத்திடும் மெய்யர்க்கே.

பொழிப்புரை : எவ்வகையிலும் வாய்மையையே பற்றி நிற்பாரோடே அளவளாவு பவன் சிவன். எவ்வகையிலும் பொய்யைப் பற்றி நிற்பவர்க்குத் தனது இருப்பையும் புலப்படுத்தாதவன் அவன். தாம் உய்தி பெறற்பொருட்டு பெறற்பொருட்டு அவனையே சார்தலால், அத்தகைய வாய்மையாளருக்கு அவன் பேரொடுக்கத்தைச் செய்பவனாக இருந்து, நிலையான இன்பத்தை எல்லையின்றி விளையுமாறு செய்வன்.
**********************************************
பாடல் எண் : 6
மெய்கலந் தாரொடு மெய்கலந் தான்மிகப்
பொய்கலந் தாருட் புகுதா ஒருவனைக்
கைகலந் தாவி எழும்பொழு தண்ணலைக்
கைகலந் தார்க்கே கருத்துற லாமே.

பொழிப்புரை : முன் மந்திரத்திற் கூறிய அத்தகைமையனாகிய சிவனை, ஆவி உடலை விட்டு நீங்கும் காலத்தில் நினைத்தல், அதற்கு முன்னெல்லாம் இடைவிடாது நினைந்தவர்கட்கே கூடும்.
**********************************************
பாடல் எண் : 7
எய்திய காலத்(து) இருபொழு தும்சிவன்
மெய்செயின் மேலை விதிஅது வாய்நிற்கும்
பொய்யும் புலனும் புகல்என்றும் நீக்கிடில்
ஐயனும் அவ்வழி ஆகிநின்றானே.

பொழிப்புரை : ஒருவன் எய்தற்கரிய மானுடப் பிறவி தனக்கு எய்தியிருப்பதையும், அதன் நிலையாமையையும் உணர்ந்து காலை, மாலை இருபொழுதும் சிவன் வகுத்த உலகியல் அருளியல் இரண்டிலும் வாய்மையையே கடைப்பிடித்து ஒழுகுவானாயின்` அதுவே வருங்காலத்தில் அவன் பயனடைதற்கு ஏற்ற நெறி முறையாகும். சிவபெருமானும் அவ்வழியில்தான் புலப்பட்டு நிற்பான்.
**********************************************
பாடல் எண் : 8
எய்துவ(து) எய்தா தொழிவ(து) இதுஅருள்
உய்ய அருள்செய்தான் உத்தமன் நந்தி
பொய்செய் புலன்நெறி ஒன்பதும் தாழ்க்கொளின்
மெய்யென் புரவியை மேற்கொள்ள லாமே.

பொழிப்புரை : யாதானும் ஒன்று கிடைப்பது அல்லது கிடையாது ஒழிவது ஆகிய இந்நிலையை திருவருளால் அமைவது. இதனை உத்தம குருவாகிய எங்கள் புகழ்மிக்க நந்திபெருமான் நாங்கள் உய் வடைதற் பொருட்டு எங்கட்கு அருளிச் செய்தார். ஆகவே, ஒன்றைப் பெற வேண்டியோ, அல்லது போக்க வேண்டியோ பொய்யை மேற் கொள்ளத் தேவையில்லை. ஆயினும் யோகியரே இந்நிலை மையைத் தெளிபவர்கள். அந்த யோகம் வாய்க்கவேண்டினால், பொய்ப் பொருளிலே பூசையை உண்டாக்குகின்ற நவத் துவாரங்களையும் அடைத்தலாகிய இமய நியமங்களைக் கைக்கொளல் வேண்டும். கைக்கொண்டால் உண்மையான வாசி யோகம் எளிதாக அமையும்.
**********************************************
பாடல் எண் : 9
கைகலந்தானைக் கருந்தினுள் நந்தியை
மெய்கலந் தான்றன்னை வேத முதல்வனைப்
பொய்கலந் தார்முன் புகுதானைப் புனிதப்
பொய்யொழிந்த தார்க்கே புகலிட மாமே.

பொழிப்புரை : (இவ்வதிகாரத்துள் முன்பே இரு மந்திரங்களில் கூறியபடி) வாய்மை யாளரையே விரும்புதலும்` பொய்ம்மையாளரை வெறுத்தலும் உடையவனும், எல்லா உயிர் உள்ளங்களிலும் உள்ளவனும், வேத முதல்வனும் ஆகிய சிவபெருமானைப் பொய்யை யொழித்து, மெய்யாகப் பற்றினவர்க்கே அவன் புகலிடமாவான். (``மெய்யராகிப் பொய்யை நீக்கி வேதனையைத் துறந்து-செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே`` என அருளிச்செய்தார் ஆளுடைய பிள்ளையாரும்).
**********************************************
பாடல் எண் : 10
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியைக்
கைத்தாள் கொண்டாரும் திறந்தறி வாரில்லைப்
பொய்த்தாள் இடும்பையைப் பொய்யற நீவிட்டங்(கு)
அத்தாள் திறக்கில் அரும்பேற தாமே.

பொழிப்புரை : உயிர்களின் உள்ளங்களாகிய கோயிலுக்கு உள்ளே சிவபெருமான் தனது நிலையான திருவடிகளை விரும்பி வைத்து விளங்குகின்றான் அக்கோயில் பூட்டப்பட்டுள்ளது. ஆயினும் அப்பூட்டைத் திறத்தற்குரிய திறவுகோல்கள் மக்கள் எல்லாரிடத்திலும் உள்ளது. இருந்து அந்தத் திறவுகோலைப் பயன்படுத்தி அந்தப் பூட்டைத்திறந்து சிவனைத் தரிசிப்பவர் யாரும் இல்லை. அதற்குக் காரணம், அருவருக்கத் தக்க பொருள்களைப் பொதித்து வைத்து மூடியுள்ள பைகளை அவர்கள் `பொய்` என்கின்ற கயிற்றால் இறுகக் கட்டி, அவற்றைக் காவல் புரிந்து கொண்டிருப்பதாகும். மாணவகனே, நீயும் அவர்களைப்போல இருந்தும் விடாமல் அந்தப்பைக் காவலை உண்மையாகவே விட்டு, உன் கையில் உள்ள அந்தத் திறவுகோலால் அந்தக் கோயிலைத் திறப்பாயாயின், கிடைத்தற்கரிய பேறு உனக்குக் கிடைக்கும்.
**********************************************
பாடல் எண் : 11
உய்யும் வகையால் உணர்வினால் ஏத்துமின்
மெய்யன் அரன்நெறி மேல்உண்டு திண்ணெனப்
பொய்யொன்று மின்றிப் புறம்பொலி வார்நடு
ஐயனும் அங்கே அம்ர்ந்துநின் றானே.

பொழிப்புரை : பொய்ம்மையைச் சிறிதும் இல்லாது உறுதியாக அப்பாற்போக்கி, அகத்தில் மட்டுமன்றிப் புறத்திலும் வாய்மை விளங்க நிற்பாரது நடுவிலே சிவனும் விரும்பி எழுந்தருளி யிருக்கின்றான். ஆகையால், உய்தியின் பொருட்டு, அந்த நிலைமையை உணர்ந்து சிவனைத் துதியுங்கள் அப்பால், மெய்ம்மையின்கண் உள்ளவனாகிய சிவனை அடையும் வழிதானே கிடைப்பதாகும்.
**********************************************
பாடல் எண் : 12
வம்பு பழுத்த மலர்ப்பழம் ஒன்றுண்டு
தன்பாற் பறவை புகந்துணத் தான்ஒட்டா(து)
அம்புகொண்(டு) எய்திட்(டு) அகலத் துரந்திடில்
செம்பொற் சிவகதி சென்றெய்த லாகுமே

பொழிப்புரை : நறுமணம் மிக்க மலர்களினின்றும் காய்த்துப் பழுத்த நல்ல பழம் ஒன்று தோட்டத்தில் உள்ளது. அதனை தோட்டத்தில் விளைவித்தவன் உண்ணாதபடி ஒரு கொடிய பறவை வந்து கொத்தித் தின்கின்றது. அஃது அவ்வாறு செய்யாதபடி வில்லில் அம்பைத் தொடுத்து எய்து பறந்தோடும்படி ஓட்டினால் சிவந்த பொன்போலும் கிடைத்தற்கரிய சிவகதியைச் சென்று அடையலாம்.
**********************************************
பாடல் எண் : 13
மயக்கிய ஐம்புலப் பாசம் அறுத்துத்
துயக்கறுத் தானைத் தொடர்மின் தொடர்ந்தால்
தியக்கம் செய்யாதே சிவன்எம் பெருமான்
உயப்போ கெனமனம் ஒன்றுவித் தானே.

பொழிப்புரை : தன் அடியார்களுடைய ஐம்புல ஆசையாகிய பாசங்களைப் போக்கி, அவர்கள் கலக்கத்தை நீக்கித் தெளிவைத் தருகின்றவன் சிவன் ஆதலின், அவனை அறிவினாலே பற்றுங்கள்; பற்றினால், அவன் சற்றும் தாழாது, உங்களை `உய்யப் போக` எனத் திருவுளம்பற்றி, உங்களுடைய மனங்களை ஒருவழிப்படுத்துவான்.
**********************************************
பாடல் எண் : 14
மனமது தானே நினையவல் லாருக்(கு)
இனம்எனக் கூறும் இருங்காயம் ஏவல்
தனிவினில் நாதன்பால் தக்கன செய்யில்
புனிதன் செயலாகும் போதப் புவிக்கே.

பொழிப்புரை : ஒருங்கிய மனம் தானாகவே சிவனை நினைக்கும் நிலையுடைய தாகும். அந்நிலைக்கு மனத்தைக் கொணர வல்லவர் கட்கு, அனைத்துயிர்க்கும் துணையாகின்ற முறையில் அவர்கட்கு அமைந்துள்ள தூல உடம்பும் அவர் ஏவியவற்றையே செய்யும் ஏவலாளியாய்க் கீழ்ப்படிந்து நிற்கும். அக்கீழ்ப்படிதலைக் கொண்டு சிவன்பால் ஏற்புடைய செயல்களைச் செய்தால், இப்பிறப்பிலேயே அவர் செய்யும் செயல்கள் எல்லாம் மிகவும் சிவன் செயலேயாய்விடும்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!