http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 25 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 33&34. சுத்தா சுத்தம், மோட்ச நிந்தை – பாடல்கள்: 11 & 07.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   
எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:21: பர லக்கணம்............பாடல்கள்: 014
எட்டாம் தந்திரம்:பதிக எண்:22: முத்துரியம்...............பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:23: மும்முத்தி..................பாடல்கள்: 004

எட்டாம் தந்திரம்:பதிக எண்:24: முச்சொருபம்..........பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:25: முக்கரணம்...............பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:26:
முச்சூனிய தொந்தத்தசி.பாடல்கள்: 007
எட்டாம் தந்திரம்:பதிக எண்:27: முப்பாழ்.....................பாடல்கள்: 006 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:28: காரண காரிய உபாதி ..பாடல்கள்: 004  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:29: உபசாந்தம்..........பாடல்கள்: 006  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:30: புறங்கூறாமை...பாடல்கள்: 015
எட்டாம் தந்திரம்:பதிக எண்:31: அட்டதள கமல முக்குண அவத்தை ..பாடல்கள்: 010  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:32: நவாத்தை அபிமானி.......பாடல்கள்: 009 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:33: சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
எட்டாம் தந்திரம்:பதிக எண்:34: மோட்ச நிந்தை: பாடல்கள்: 07
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -034
கூடுதல் பாடல்கள்  (427+11+07=445)
==============================================



எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம்-பாடல்கள்:பாடல்கள் :011
பாடல் எண் : 1
நாசி நுனியினின் நான்மூ விரலிடை
ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர்
பேசி யிருக்கும் பெருமறை அம்மறை
கூசி யிருக்கும் குணம் அது வாமே.

பொழிப்புரை : மூன்றாம் தந்திரத்தில், நாசிக்கதோமுகம் பன்னிரண்டங்குலம்`` என்னும் மந்திரத்திற் கூறியபடி, `மூக்கின் நுனிக்குக் கீழே பன்னிரண்டங்குலத்தில் உள்ள இருதயம் சிவன் எழுந்தருளியிருக்கும் இடம்` என்பதை உங்களுள் ஒருவரும் அறியார். (அதனால் அவர்கள் புறத்தே உள்ள இடங்களில் சிவனைக் காணும் அளவிலே அமைந்து, அதனையே சிவக்காட்சியாகக் கொண்டு இருந்துவிடுகின்றனர்.) ஆயினும் பெரிய மறைநூல்கள் மேற்கூறிய ஈசன் இருப்பிடத்தைச் சொல்லியிருக் கின்றன. எனினும் அந்த மறைநூல் அந்த இடத்தை அணுக இயலாதவர்கட்கு அதனைக்கூற நாணமுற்று, வெளிப்படையாக அன்றிக் குறிப்பாகவே கூறியமைந்தன. அது மறைநூல்கட்கு இயல்பு.
**********************************************
பாடல் எண் : 2
கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.

பொழிப்புரை : உயிர்களால் செய்யப்படும் செயல்கள் யாதேனும் ஒரு பயனைக் கருதிச் செய்யும் செயல்களாகுமிடத்து `அச்செயல்களைச் செய்தோன் அவனே` என்னும் உரிமை தோன்றுதலையும், செய்த செயல்களும், `இனி வரும்` எனக் கருதப் படுகின்ற பிறவிக்கு வித்தாம் ஆகாமியம் ஆதலையும் உணர்ந்து, அச்செயல்களில் பற்று வையாது `எச்செயலையும் செய்யும் வாய்ப்பினை நமக்கு அளித்தவன் சிவன்` என்பதை யுணர்ந்து, அவனிடத்து அன்பு செய்து, எச்செயலையும் அவன் பணியாகச் செய்யின் அம்முறையில் அறிந்தோ, அறியாமலோ நிகழும் செயல்கள் யாவும் வினை நீக்கத்திற்கு வாயிலான தவமாகி, அவற்றைச் செய்தவனை வினை நீக்கத்தில் சேர்ப்பிக்கும்.
**********************************************
பாடல் எண் : 3
மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள்
மாயை மறைய வெளிப்படும் அப்பொருள்
மாயை மறைய மறையவல் லார்கட்குக்
காயமும் இல்லைக் கருத்தில்லை தானே.

பொழிப்புரை : வேதங்களால் முடிநிலைப் பொருளாகக் கொள்ளப்பட்ட முதற்  பொருள் உயிர்கட்கு வேறாய் இன்றி அவைகளிடத் திற்றானே இருக்கின்றது. ஆயினும், மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்கள் உயிரினது அறிவைத் தம் வயப்படுத்தியே வைத்திருத்தலால் உயிர்கள் அம்முதற்பொருளை அறியாதிருக் கின்றன. அதனால் முதற்பொருள் மறைந்து நிற்கும் பொருளாக அறியப்படுகின்றது. மாயா காரியங்களாகிய கருவிக் கூட்டங்களின் வயப்படாது விடுபட்டவர்க்கு அக்கருவிக் கூட்டங்கள் மறைந்துவிட, முதற்பொருள் வெளிப்பட்டுத் தோன்றும். அதன் பின்பும் அக்கருவிக் கூட்டங்கள் தம்மை மயக்காதபடி அம்முதற் பொருளுக்குள்ளே அடங்கி நிற்க வல்லவர்கட்கு உடம்பு இருந்தும் இல்லையாம். அதனால் அவை பற்றி யெழுகின்ற, `யான், எனது` என்னும் செருக்கும் இல்லையாம்.
**********************************************
பாடல் எண் : 4
மோழை அடைத்து முழைதிறந் துள்புக்குக்
கோழை அடைக்கின்ற(து) அண்ணற் குறிப்பினில்
ஆழ அடைத்தங் கனலிற் புறஞ்செய்து
தாழ அடைப்பது தன்வலி யாமே.

பொழிப்புரை : ர் புறம் போய் வீணாவதற்கு உரிய, வயல்களின் சிறு புழை போல, விந்து வெளிச்சென்று வீணாகின்ற வழியாகிய குறியைச் செயற்படாமல் தடுத்து, பிராணனைச் சுழுமுனை வழியாகச் செலுத்தி அதனோடே மேல்நிலமாகிய ஆஞ்ஞையில் உணர்வினால் சென்று புகுந்து, அங்கு நிற்கின்ற நிலை சலித்தலை நீக்க முயலு மிடத்துச் சிவ நினைவால் அதனை அடியோடு நீக்கி, உடம்பையும் விரைவில் வீழ்ந் தொழியாதபடி யோகக் கனலால் கற்பஞ்செய்து தன்னைச் சிவத்திற்குள்ளே அடைத்து வைத்தலே ஒருவனுக்கு உண்மையான தன்வலிமையாகும்.
**********************************************
பாடல் எண் : 5
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆம்இடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானுடம் ஆசூசம் ஆமே.

பொழிப்புரை : அறிவில்லாதவர்கள் தங்கள் உடம்பு அசுத்தத்தைத் தீண்டிவிட்ட தனால் `தீட்டு உண்டாகிவிட்டது தீட்டு உண்டாகி விட்டது` என்று சொல்வார்கள். அவர்களில் ஒருவருமே, உண்மையில் தீட்டு எங்கு உண்டாகின்றது` என ஆராய்ந்தறியமாட்டார். யாராயினும் அதனை ஆராய்ந்து அறிவார்களோயானால் `உயிர் மக்கள் வடிவாய் உள்ள உடம்பைத் தீண்டியதே தீட்டு` என்பது அவர்கட்கு நன்கு புலப்பட்டுவிடும்.
**********************************************
பாடல் எண் : 6
ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்(கு)
ஆசூசம் இல்லை அரனைஅற் சிப்பவர்க்(கு)
ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்(கு)
ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே.

பொழிப்புரை : சிவனது முதன்மையை உணர்ந்து அவனைச் `சரியை, கிரியை, யோகம், ஞானம்` என்னும் நால்நெறியில் எவ்வகையில் நின்று வழிபடுவார்க்கும் புறத்தூய்மை வாயாவிடினும் அகம் திருவருளில் படிந்திருத்தலால் அவர்கட்கு எந்த வகையான அசுசியும் இல்லையாம்.
**********************************************
பாடல் எண் : 7
வழிபட்டு நின்று வணங்கு மவர்க்குச்
சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும்
குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள்
கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை : முன்னர்ப் புறத்தொண்டுகளைச் செய்து, பின்பு அகத்தும், புறத்தும் சிவனை வழிபடுவார்க்குச் சுழித்தோடுகின்ற நீரில் மூழ்கினார்போலும் ஓர் உண்மைத் தூய்மை தொடங்குவதாகும். (பின்னர் அகத்தும், புறத்தும் அங்கி வளர்த்தலால் அத்தூய்மை முதிரும்.) இவைகளைச் செய்யாது புறத்தூய்மையை மட்டுமே வலியுறுத்திக் கூறு கின்ற நூல்களாகிய குழிகளில் வீழ்ந்தவர்கள் தூய்மையைப் பொருந்தார். இனி முற்கூறிய தூய்மையைப் பொருந்தியவர் களில்கூட, உருவம், அருவுருவம், அருவம் என்னும் குறிகளைக் கடந்து குறியிறந்து உணரும் உணர்வுடையார்க்கன்றிச் சிவனை நேர்படக் காணுதல் இயலாது.
**********************************************
பாடல் எண் : 8
தூய்மணி தூய்அனல் தூய ஒளிவிடும்
தூய்மணி தூய்அனல் தூர்அறி வார்இல்லை
தூய்மணி தூய்அனல் தூரறி வார்கட்குத்
தூய்மணி தூய்அனல் தூயவும் ஆமே.

பொழிப்புரை : உலகத்தில், மாசு நீங்கக் கழவுவப்பட்ட இரத்தினமும், தூய பொருள்களாலே வளர்க்கப்பட்ட தீயும் தூய ஒளியையே தரும். `அதுபோல உடம்பினுள் தூய ஒளிகளைத் தரும் தூய இரத்தினமும், தூய தீயும் எவை` என்பதை அறிபவர் உலகருள் எவரும் இல்லை அவற்றை அறிய வல்லவர்கட்கு அவை தாம் தூயவாய் இருத்தலேயன்றி உடம்பிற்குத் தூய்மையைத் தருவனவாய் அமையும்.
**********************************************
பாடல் எண் : 9
தூயது வாளாக வைத்தது தூநெறி
தூயது வாளாக நாதன் திருநாமம்
தூயது வாளாக அட்டமா சித்தியாம்
தூயது வாளாகத் தூய்அடிச் செல்லே.

பொழிப்புரை : `முதல்வனாகிய முக்கண்ணன் முன்னெறியாகிய* தனது நெறியை உலகிற்கு வைத்தது உயிர் தூயதாதற் பொருட்டேயாம். அந்நெறியிற் செல்வார்க்கு உறுதுணையாக அவன் வைத்தது அவனது திருப்பெயராகிய திருவைந்தெழுத்து மந்திரம். அந்த மந்திரத்தைப் பல்காலும் ஓதி உயிர் தூய்மையுற்றால் அட்டமா சித்திகள் தாமே வந்து அதனை அடையும். ஆதலின் உயிர் தூய்மை அடைவதற்கு முன்பு அங்ஙனம் தூயராயினார் சென்ற அடிச்சுவட்டில் செல்.
**********************************************
பாடல் எண் : 10
பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவ ரன்றிச்
சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின்
மருளவர் சிந்தை மயங்குகின் றாரே.

பொழிப்புரை : மெய்ப் பொருளாய், என்றும் ஒரு பெற்றியனாய் நிற்பவன் சிவபெருமானே. அவனே எங்கட்குத் தந்தை. அவனது திருவருளைப் போற்றுகின்ற அடியவர்களே சுருண்டு சுருண்டு வருகின்ற கடலின் அலைபோல முடிவின்றி வருகின்ற பிறப்பாகிய துன்பச்சூழலினின்றும் நீங்குவர். அவனது திருவருளைப் போற்றாது ஒழிகின்றவர் எல்லாம் அச்சூழலில் அகப்பட்டுத் திகைக்கின்றார் ஆதலின் அவர் அருளுடையாராகாது மருளுடையவரேயாவர்.
**********************************************
பாடல் எண் : 11
வினையால் அசத்து விளைவ துணரார்
வினைஞானந் தன்னிலே விடாதுந் தேரார்
வினைவீட வீடென்னும் பேதமும் ஓதார்
வினையாளர் மிக்க விளைவறி யாரே.

பொழிப்புரை : `நிலையில்லனவாகிய பல வகை உடம்புகள் ஒன்றழிந்தபின் மற்றொன்று தோன்ற, அஃதழிந்தபின் வேறொன்று தோன்ற, இவ்வாறு முடிவின்றி வந்து உயிரை அலைக் கழிப்பது வினையே` என்பதையும், `அந்த வினை பொருள்களை உற்றவா றுணரும் மெய்யுணர்வால் கெடும்` என்பதையும் ஆசான் அருள் பெறாதார் அறியமாட்டார். இனி, `வினை நீக்கமே வீடுபேறாம்` எனக் கூறுகின்ற வேதத்தையும் அவர்கள் ஓதுவதில்லை ஆகவே, அவர்கள் வினையை ஆண்டு, அதிற்றானே மகிழ்கின்றவராவர். அவர் பின்னும் பின்னும் எல்லையின்றி வரும் துன்பவினை அறிய மாட்டார்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 34. மோட்ச நிந்தை: பாடல்கள்: 07
பாடல் எண் : 1
பரகதி உண்டென்ன இல்லை என் போர்கள்
நரகதி செல்வது ஞாலம் அறியும்
இரகதி செய்திடு வார்கடை தோறும்
துரகதி உண்ணத் தொடங்குவர் தாமே.

பொழிப்புரை : `பிறப்பிறப்பினின்றும் நீங்கிப் பரம்பொருளை அடைந்து இன்புற்றிருக்கும் நிலை உண்டு` என்று உண்மை நூல்களெல்லாம் கூறாநிற்கவும், `அஃது இல்லை` எனப்பிணங்கி, மனஞ் சென்றவாறே செல்பவர்கள் நரகலோகத்தை அடைதல் உலகத்தில் உயர்ந்தோர் பலரும் நன்கறிந்தது நரகத்தின் நீங்கிப்பின்னும் அவர் மக்களாய்ப் பிறப்பின் கடைதொறும் சென்று இரக்கும் செயலையே உடையராவர். அங்ஙனம் இரக்குங்கால் வயிறு நிரம்பாமல் உணவு வேளை முடிவதற்குள் பலரிடம் சென்று இரக்க வேண்டி ஓடவும் தொடங்குவர்.
**********************************************
பாடல் எண் : 2
பறப்பட்டுப் போகும் புகுதும்என் நெஞ்சில்
திறப்பட்ட சிந்தையைத் தெய்வம்என் றெண்ணி
அறப்பட் டமரர் பதி யென் றழைத்தேன்
இறப்பற்றி னேன் இதிங் கென்னென்கின் றானே.

பொழிப்புரை : பிராண வாயு வெளியே செல்லுங்கால் தானும் வெளிச்சென்றும், அஃது உள்ளே வருங்கால் தானும் உள்ளே வந்ததும் இவ்வாறு உழல்கின்ற எனது மனத்தின் அலைவுக்கிடையே அந்தப் பிராணனை அடக்கியதனால் நிலைபெற்ற சித்தத்தையே பரம் பொருளின் இருப்பிடமாகக் கருதி, அவ்விடத்தில் நின்றே, `புண்ணியங்களின் பயனாய் எதிர்ப்படுகின்ற தேவதேவனே என்று அழைத்தேன் அங்ஙனம் ஒருமுறை யழைத்ததோடன்றித் தொடர்ந்து பன்முறை அழைத்து அவனை உள்ளத்தால் இறுகப் பற்றினேன் அதன்பின்பு அவன் தோன்றி, `நீ இங்கு என்ன செய்கின்றார்` என்று வினாவுகின்றான்.
**********************************************
பாடல் எண் : 3
திடலிடை நில்லாத நீர்போல ஆங்கே
உடலிடை நில்லா உறுபொருள் காட்டிக்
கடலிடை நில்லாக் கலம்சேரு மாபோல்
அடல்எரி வண்ணனும் அங்குநின் றானே.

பொழிப்புரை : மேட்டு நிலத்தில் பொழியப்பட்ட மழைநீர் அங்கு நிலைத்து நில்லாது நீங்குவதுபோல, வினையால் உடம்பினிடத்துச் சேர்க்கப்பட்ட உயிர் அதன்கண் நிலைத்து நில்லாது நீங்குவதாகும். ஆயினும், தழல் வண்ணனாகிய சிவனும் அவ்வுயிரோடு கூட அவ்வுடம்பின்கண் நிற்கின்றான். ஏனெனில், கடலிடத்தே நில்லாது கரையையே சேர்வதாகிய மரக்கலம் கடலிடை நின்றாருடன் தானும் நிற்பதுபோல, உயிரைப் பந்தத்தினின்றும் விடுவித்து வீட்டை அடைவித்தற் பொருட்டாம்.
**********************************************
பாடல் எண் : 4
தாமரைநூல் போலவ தடுப்பார் பரத்தொடும்
போம்வ வேண்டிப் புறத்தே உதர்வர்
காண்வ காட்டக்கண் காணாக் கலதிகள்
தீந்நெறிச் சென்று திரிகின்ற வாறே.

பொழிப்புரை : தாமரைத் தண்டின் நூல்போல் அறிவுடையார் முன் எளிதில் அற்றுப்போகின்ற நூல்களால், உண்மை நூல்களின் வழிச் செல்வாரைத் தடுக்கின்றவர்கள் தாங்கள் மேல்நிலையை அடைய விரும்பி, அதற்கு மாறான வழிகளில் சென்று அலைவார்கள் அவர்களது செயல்கள், தெரிய வேண்டிய வழியைத் தெரிந்தவர் காட்டினாலும் அதனைக் கண் கொண்டு பாராத குருடர்கள் தாங்கள் அறிந்ததே வழியாகக் கொண்டு துன்பம் தரும் வழிகளில் திரியும் செயல் போன்றனவேயாம்.
**********************************************
பாடல் எண் : 5
மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள்
கூடுவர் நந்தி யவனைக் குறித்துடன்
காடும் மலையும் கழனி கடல்தொறும்
ஊடும் உருவினை உன்னகி லாரே.

பொழிப்புரை : பாசக் கூட்டம் மறைக்கின்ற மறைப்பு நீங்கி உடல் வீடும் மனிதர்கள் உடலில் இருக்கும்பொழுது, ``மாயோன் மேய காடுறை யுலகம்``3 என்பது முதலாக முறைப்படுத்துச் சொல்லப்பட்ட நால்வகை நிலங்கள் தோறும் உள்ளிடத்துச் சிவபெருமான் கொண்டிருக்கும் திருவுருவங்களைக் குறித்துச் சென்று வணங்கி யிருந்து, உடல் நீங்கிய பொழுது பேரின்ப வடிவினனாகிய சிவபெருமானை அடைந்து அவனோடு இரண்டறக் கலப்பர். ஆயினும், பாசக் கூட்டத்தின் மறைப்பு நீங்கப்பெறாத மனிதர்கள் அத்திருவுருவங்கள் எங்கும் இருப்பினும் அவைகளைப் பற்றி யாதும் நினைக்க மாட்டார்கள்,
**********************************************
பாடல் எண் : 6
ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள்
போவர் குடக்கும் குணக்கும் குறிவ
நாவினில் மந்திரம் என்று நடுஅங்கி
வேவது செய்து விளங்கிடு வீரே.

பொழிப்புரை : (தலையில் வலக் கன்னத்தை, `தெற்கு` என்றும், இடக் கன்னத்தை `வடக்கு` என்றும், நெற்றியை, `கிழக்கு` என்றும், பிடரிக்கு மேல் உள்ள பகுதியை `மேற்கு` என்று குழூஉக் குறியாக வழங்குதல் சித்தர் மரபு. அம்முறையில்.) தெற்கும், வடக்கும் உயர்வுடையன. அத்திசையிகளில் தேவர்கள் உலாவுவார்கள். (சூரிய கலை சந்திர கலைகளாகிய பிராணங்கள் வியாபிக்கும்.) மேற்கும், கிழக்கும் யோகி தன் தியானப் பொருளைக் குறித்துச் செல்லும் வழிகளாம். அங்ஙனம் செல்லும் பொழுது நாவால் உச்சரிக்கப் படுவன மந்திரங்கள். இவற்றை யெல்லாம் இவ்வாறு உணர்ந்து, மூலாக்கினியை எழுப்பி  நடுநாடி வழியாக ஓங்கச் செய்து, அதனால் அறிவு விளங்கப் பெறுவீர்களாக.
**********************************************
பாடல் எண் : 7
மயக்குற நோக்கினும் மாதவம் செய்வார்
தமக்குறப் பேசின தாரணை கொள்ளார்
சினக்குறப் பேசின தீவனை யாளர்
தமக்குற வல்வினை தாங்கிநின் றாரே.

பொழிப்புரை : சமயப் பூசலை மேற்கொண்டு, பிற சமயத்தவர் சினங்கொள்ளுமாறு கடுஞ்சொற்களைப் பேசின பாவத்தை யடைந்தவர் தாம் `நெறியல்லா நெறி தன்னை நெறியாக மயங்கும் மயக்கம்* தம்மிடத்தில் பொருந்துதலால் நெறிகளைத் திரிய நோக்கினாராயினும், `நாம் பெரிய தவத்தைச் செய்கின்றோம்` என்பது தான் அவர்கள் கருத்து அவர்கள் தங்களுக்கு உண்மை மனோலயம் வரும்படி சொல்லிய முறையைக் கைக்கொள்ளாமையால் அக் கருத்துப் போலியேயாய் உண்மையில் அவர்கள் தம்மை வந்து சார வேண்டிய வினைகள் வந்து சார்தலினாலே அவற்றைச் சுமந்து நிற்பவரேயாவர்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!