http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 24 March, 2013

திருமந்திரம்-தந்திரம்09: பதிகம் 13 & 14. பொற்பதிக் கூத்து, பொற்றில்லைக் கூத்து-பாடல்கள்:11&13.

 
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
*************************************************

தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -014 

கூடுதல் பாடல்கள்  ..............................................(089+011+013=104)

*************************************************



ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து : பாடல்கள் : 011
பாடல் எண் : 1
கொடுகொட்டி பாண்டரம் கோடுசங் காரம்
நடம்எட்டோ(டு) ஐந்(து) ஆறு நாடியுள் நாடும்
திடம்உ ற்றெழும் தேவ தாருவனத் தில்லை
வடம்உற்ற மாவன மன்னவன் தானே.
பொழிப்புரை : தேவதாரு வனம், தில்லை வனம், திருஆலவனம் (திருவாலங்காடு என்பவற்றில் எழுந்தருளியுள்ள தலைவன் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம், ஆகிய சங்காரக் கூத்தக்களையும் அட்ட மூர்த்தத்தில் நின்று அவற்றை இயக்கி ஆடும் எட்டுக் கூத்தினையும், ஐந்தொழிற் கான ஐந்து கூத்தினையும், சுழுமுனை நாடியில் அறியப்படும் ஆறு ஆதாரங்களில் ஆறு கூத்தினையும் உறுதியாகக்கொண்டு ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 2
தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
அற்புத மானஓர் அஞ்சு முகத்திலும்
ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.

பொழிப்புரை : சிவன் `உருவம்; அருவுருவம்` என்னும் இருவகை வடிவில் தலங்களில் எழுந்தருளியிருக்குங்கால் எங்கும் கிழக்கு நோக்கியே எழுந்தருளியிருப்பான். கோயில் வாயில் எத்திசையை நோக்கியிருப்பினும் அது கிழக்குத் திசையாகவே பாவிக்கப்படும். அந்நிலையில் உச்சி, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் ஐந்து பக்கங்களிலும் முறையே ஈசானம், தற்புருடம், அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் முகங்கள் உள்ளனவாம். கோயிலின் வாயில் திசை மாறியிருப்பின் தற்புருட முகம் அந்தத் திசையில் வர அந்தத் திசையின் முகம் தற்புருட முகத்தில் சென்றுவிடும். சிவனது இந்த முகங்கள் ஏனை யோரது முகங்கட்கு இல்லாத பல அதிசய ஆற்றல்களை உடையன. அந்த முகங்களின் ஆற்றலால் சிவன் உயிர்களை நிகரற்ற பேரின்ப நிலையில் செலுத்துதற்கு மேற்கூறிய இருவகைத் திருமேனிகளிலும் இருந்து ஒப்பற்ற திருக்கூத்துக்களைச் செய்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 3
அடியார் அரன்அடி ஆனந்தங் கண்டோர்
அடியா ரவர்அர னத்தனரு ளுற்றோர்
அடிஆர் பவரே அடியவ ராவர்
அடியார்பொன் னம்பலத் தாடல்கண் டாரே.

பொழிப்புரை : பொன்னம்பலம் முதலிய ஐந்து அம்பலங்களிலும், மற்றும் பல இடங்களிலும் ஆடற் பெருமானைக் கண்டு வணங்கினவரே `அடியார்` எனப்படுவர். அவரே சிவானந்தத்தை அடைந்தவர்; சிவன் அருளைப் பெற்றனர்; சிவனது திருவடியைச் சேர்ந்தவர்.
*************************************************
பாடல் எண் : 4
அடங்காத என்னை அடக்கி அடிவைத்(து)
இடங்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு
நடந்தான் செயும்நந்தி தன்ஞானக் கூத்தன்
படந்தான்செய் உள்ளுட் படிந்திருந் தானே.

பொழிப்புரை : பலவகையான நடனங்களையும் செய்பவன் சிவன். அவன் மிக மேலான ஞான டனத்தையும் செய்ய வல்லவன். அந்த ஞான நடனத்தினால், அடங்காத எனது தற்போதத்தைத் தனது வலது தாளால் மிதித்து அடக்கி, இடப்பக்கத்தில் காணப்படுவதாய, எடுத்த பாதத்தை எனது தலைமேல் வைத்து, என்னைப் பேரின்பக் கடலுள் ஆழ்த்தினான். இனி ``உள்ளக் கிழியின் உருவெழிதிப்``* பார்க்கும் யோகிகட்கு அக்கிழி யுருவில் ஒன்றி விளங்குகின்றான்.
*************************************************
பாடல் எண் : 5
உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனை
செம்பொற் றிருமன்றுட் சேவகக் கூத்தனை
சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை
இன்புறு நாடிஎன் அன்பில்வைத் தேனே.

பொழிப்புரை : நான், பிறவியாகிய துன்பத்தினின்று நீங்கி, வீடாகிய இன்பத்தை அடைதற்குரிய வழி யாது` என்று ஆராய்ந்து கூத்தப் பெருமானை என்னுடைய அன்பிற்குள் அகப்படும்படி வைத்தேன். தேவருள் அஅவனே கூத்தாட வல்ல பெருமான். அவனது கூத்து எல்லார் கூத்தினும் மேலாய கூத்து; செம்பொன் அம்பலத்தில் வெற்றியுடன் விளங்குதல் கூத்து; அனைத்துப் பொருள்காவல் இயகத்தோடு மிக நெருக்கமான தொடர்புடைய கூத்து. உபநிடதங்கள், `தத்` என்னும் சொல்லால் சுட்டுகின்ற பரம் பொருளின் கூத்து.
*************************************************
பாடல் எண் : 6
மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்
பூணுற்ற மன்றுட் புரிசடைக் கூத்தனைச்
சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை
ஆணிப்பொற் கூத்தனை யாரறி வாரே.

பொழிப்புரை : சிவன் தனது கூத்தினை மாணிக்கச் சபையில் மாணிக்கக் கூத்தாக இயற்றுவான். தில்லை பொற்சபையில் பொற் கூத்தாக இயற்றுவான். மற்றும் வெள்ளி முதலிய சபைகளில் அது அதற்குத் தக்க கூத்தாக இயற்றுவான். அனைத்தையும் கடந்த தனது இயற்கைப் பரஞ்சோதி வெளியில் சிவானந்தக் கூத்தாக இயற்றுவான். (அது முதலிலே சொல்லப்பட்டது.) ஆகவே, ஒருவகையாய் இல்லாமல் பலவேறு வகையாக இயற்றுகின்ற ஆணிப்பொற் கூத்தனது கூத்து வகைகளையெல்லாம் யார் வரையறை செய்து கூறவல்லவர்!.
*************************************************
பாடல் எண் : 7
விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.

பொழிப்புரை : பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.
*************************************************
பாடல் எண் : 8
தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.

பொழிப்புரை : காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.
*************************************************
பாடல் எண் : 9
காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.

பொழிப்புரை : சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 10
மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூரும்இவ் வானின் இலங்கை குறிஉறும்
சாரும் திலைவனம் தண்மா மலயத்தூ
டேறும் சுழுமுனை இவைசிவ பூமியே.

பொழிப்புரை : (`சிவன் அண்டம், பிண்டம்` இரண்டிலும் நடம் புரிகின்றான்` என்பதனாலும், `பிண்டத்துள் இருதயத்திலே நடம் புரிகின்றான்` என்பதனாலும் அண்டமும், பிண்டமும் சமம் ஆகின்றன. அம்முறையில் நோக்கும் பொழுது) பிண்டத்தில் நடு நாடியாகிய சுழுமுனா நாடியே மேரு மலையும், இடைநாடியே இலங்கையும், பிங்கலை நாடியே மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனையும் ஆகும். `இனி, `மேரு` எனப்படும் நடுநாடி மேல் நோக்கிச் செல்கின்ற மணிபூரகம் பொதிய மலையும். இருதயம் தில்லைவனமும் ஆகும். ஆகவே மேரு முதலியவற்றை உடைய நிலம் சிவனது திருவருள் மிக்கு விளங்குகின்ற சிவநிலம் ஆதல்போல், சுழுமுனை முதலியவற்றை உடைய பிண்டமும் சிவநிலமேயாம்.
*************************************************
பாடல் எண் : 11
பூதல மேருப் புறத்தான தெக்கணம்
ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்
பாதி மதியோன் பயில்திரு அம்பலம்
ஏதமில் பூதாண்டத் தெல்லையின் ஈறே.

பொழிப்புரை : [முன் மந்திரத்தில் பிண்டம் அண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கும் முறை கூறியது போல, அண்டத்தைப் பிண்டத்தோடு ஒப்ப வைத்து நோக்கினால்,]  மேருவிற்கு அப்பால் உள்ள நில உருண்டையின் வடமுனை நிலமகட்குப் பிங்கலை நாடியும், தெற்கேயுள்ள இலங்கை இடைநாடியும், சிவன் நடனம் புரிகின்ற தலங்களுள் தலையாயதாகிய தில்லை நடுநாடியும் ஆகும். பூதகாரியமாகிய அண்டம், பிண்டம் இரண்டனுள் அண்டம் பிண்டத்தோடு ஒப்ப இவ்வாறு வரையறை செய்து உணரப்படும்.
*************************************************
 ஒன்பதாம் தந்திரம் - 14. பொற்றில்லைக் கூத்து : பாடல்கள் : 013
பாடல் எண் : 1
அண்டங்கள் ஓரேழும் அம்பொற் பதியாகப்
பண்டைஆ காசங்கள் ஐந்தும் பதியாகத்
தெண்டினிற் சத்தி திருவம் பலமாகக்
கொண்டு பரஞ்சோதி கூத்துகந் தானே.

பொழிப்புரை : பொன் வகைகளில் சிறந்தமை பற்றி, `அம்பொன்` எனப்படும் செம்பொன் நகரமாகிய தில்லைப் பதியே அனைத்து அண்டங்களாகவும், அப்பதியில் உள்ள ஆலயத்தின் ஐந்து ஆவரணங்களே பூதங்களில் ஒன்றாகிய ஆகாயம் போலாது, அதற்கு மிக முன்னே சுத்த மாயையில் தோன்றி, அனைத்துப் பொருள் களையும் தம்முள் அடக்கி நிற்கின்ற நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைக ளாகவும், அவ் ஆலயத்தின் முதல் ஆவரணத்துள் உள்ள திரு வம்பலமே ஐந்தொழில் செய்யும் சத்தியாகவும் அமையும்படி நின்று, அனைத்தையும் கடந்து நிற்கும் மேலான ஒளியாகிய சிவன் நடனத்தை விரும்பிச் செய்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 2
குரானந்த ரேகையாய்க் கூர்ந்த குணமாம்
சிரானந்தம் பூரித்துத் தென்றிசை சேர்ந்து
புரானந்த போகனாய்ப் பூவையும் தானும்
நிரானந்த மாக நிருத்தஞ்செய் தானே.

பொழிப்புரை : குரு உணர்த்தியருள்கின்ற இன்பக் கதிராய்ப் பின் பெருகி விளைகின்ற தலையாய இன்பத்தைத் தன்னுள் நிரம்பக் கொண்டு சிவன் தென்னாட்டில் தில்லையை அடைந்து மங்கையோடு உடனாம் இன்பப் போக வடிவினனாய், நிலையான இன்பத்தைத் தரும் நடனத்தைச் செய்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 3
ஆதி பரன்ஆட அங்கை அனலாட
ஓதும் சடையாட உன்மத்தம் உற்றாடப்
பாதி மதியாடப் பாராண்டம் மீதாட
நாதமொ டாடினான் நாதாந்த நட்டமே.

பொழிப்புரை : சிவன் தான் ஆடும்பொழுது, அவனோடு உடன் ஆடுவன பல. அவ்வாறு அனைத்தும் ஆடும்படி அவன் தான் நாதாந்தத்தைக் கடந்து செய்யும் நடனத்தைத் தில்லையில் நாதத்தோடு கூடியே ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 4
கும்பிட அம்பலத் தாடிய கோநடம்
அம்பரன் ஆடும் அகிலாண்ட நட்டமாம்
செம்பொரு ளாகும் சிவபோகம் சேர்ந்துற்றால்
உம்பர மோனஞா னாந்தத்தின் உண்மையே.

பொழிப்புரை : அழகிய திருமேனியுடன் பெருமான் தில்லை யம்பலத்தில் ஆடுகின்ற தலைமை வாய்ந்த அந்த நடனம் அகில உலகங்களுக்குமான நடனமாகும், அதனை வணங்க வேண்டி அவ்வம்பலத்தை அடைந்தால், அவ்அடைவே மேலான ஞானத்தின் முடிநிலையாகிய மௌன நிலைப்பேறாகும்.
*************************************************
பாடல் எண் : 5
மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.

பொழிப்புரை : நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.
*************************************************
பாடல் எண் : 6
இடைபிங் கலைஇம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாம் சுழுனை
கடவும் திலைவனம் கைகண்ட மூலம்
படர்வொன்றி யெண்ணும் பரமாம் பரமே.

பொழிப்புரை : பிண்டத்தில் இடைகலை பிங்கலை நாடிகள் அண்டத்தில் உள்ள இலங்கையும், இமயமுமாகவும் நடு நாடியாகிய சுழுமுனை இரேசக பூரக வாயுக்களால் சூழப்படுதலால் சூரிய சந்திரர்களால் வலம் வரப்படுகின்ற மேருவாகவும் மதிக்கப்படும். அந்நிலையில் தில்லை நடுநாடியாக மதிக்கப்படுதலால், அங்கு நடனம் புரிகின்ற பெருமானே யோகியர் தம் மனம் ஒன்றி உள்கும் முதற் பொருளாவான்.
*************************************************
பாடல் எண் : 7
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்பேழும்
பேறான வேதா கமமே பிறங்கலால்
மாறான தென்திசை வையகம் சுத்தமே.

பொழிப்புரை : பரத கண்டத்தின் தென்னெல்லையாகிய, `கன்னி துறை` எனப்படும் குமரித் துறையும், காவிரியும், பிற நவ தீர்த்தங்களும், `ஆனை மலை, பசுமலை, நாகமலை சிராமலை, அண்ணாமலை, மறைமலை, காளத்திமலை` என்னும் ஏழு மலைகளும், வேத ஆகம ஒழுக்கங்களுள் சிறந்து விளங்குதலால், அக்கண்டத்தில் நிலைதிரியாததாகிய தென்பகுதியே நிலவுலகத்தில் முத்தி நிலமாகும்.
*************************************************
பாடல் எண் : 8
நாதத் தினில் ஆடி நாற்பதத் தேஆடி
வேதத் தினில் ஆடித் தழல்அந்தம் மீதாடிப்
போதத் தினில் ஆடிப் புவனம் முழுதாடும்
தீதற்ற தேவாதி தேவர் பிரானே.

பொழிப்புரை : சொல்லுலகத்திற்கு முதலாகிய நாதத்திலும் அதன் காரியமாகிய நால்வகை வாக்குக்களிலும், அவ்வாக்குகளாய் வெளிப் படுகின்ற வேதாகமங்களிலும், அவற்றின்வழி வேட்கப்படுகின்ற வைதிகாக்கினி, சிவாக்கினி என்பவற்றின் கொழுந்திலும், உயிர்களின் அறிவிலும், எல்லா அண்டங்களிலும் ஆடுபவனாகிய சிவபிரான்,
*************************************************
பாடல் எண் : 9
தேவரொ டாடித் திருவம் பலத்தாடி
மூவரொ டாடி முனிகணத் தோடாடிப் பாவினுள் ஆடிப் பராசத் தியில்ஆடிக்
கோவிலுள் ளாடிடும் கூத்தப் பிரானே.

பொழிப்புரை : கூத்துக் கோலம் உடையனாய், `கோயில்` எனப் -படும் தில்லையில் திருச்சிற்றம்பலத்தில் தேவர்களும், மூவர்களும், முனிவர்களும் வேதமும், தமிழும் பாட, உமையம்மைதன் கண்முன் ஆடுகின்றான்.
*************************************************
பாடல் எண் : 10
ஆறு முகத்தின் அதிபதி தான்` என்றும்
கூறு சமயக் குருபரன் தான் `என்றும்
தேறினர் தேறுத் திருவம் பலத்துள்ளே
வேறின்றி அண்ணல் விளங்கிநின் றானே`.

பொழிப்புரை : கூத்தப் பிரான் ஒரு திருமுகத்தையே கொண்டு, ஒருவனேயாய் இருப்பினும் `ஆறு திருமுகங்களையுடைய முழுமுதற் கடவுளும் தானே` எனவும், அநைத்துச் சமய முதல்வனும் தானே` எனவும் தனது திருநடனக் குறிப்பை உணர வல்லவர்கள் உணர்ந்து கொள்ளும்படி தில்லைத் திருவம்பலத்துள் எஞ்ஞான்றும் விளங்கி நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 11
அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.

பொழிப்புரை : எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.
*************************************************
பாடல் எண் : 12
ஆடிய காலும் அதிற்சிலம் போசையும்
பாடிய பாட்டும் பலவான நட்டமும்
கூடிய கோலம் குருபரன் கொண்டாடத்
தேடிஉள் ளேகண்டு தீர்ந்தற்ற வாறே.

பொழிப்புரை : ஞான குருவாய் நின்று ஞானத்தைத் தருகின்ற சிவன், அவ்வாறன்றி, ஊன்றியும் தூக்கியும் ஆடும் கால்களும் அவற்றில் கழலும் சிலமும் ஆகியவற்றின் ஓசைகளும், அருகில் உள்ளவர்கள் பாடுகின்ற பாட்டுக்களும், பலவகையான கரணங்களும் கூடிய கூத்துக் கோலத்தைக் கொண்டு ஆடுதலை அறியாமல், அவனை எங்கெங்கோ தேடியலைந்து, பின்பு என் உள்ளத்திலே அந்தக் கூத்துக் கோலத்தைக் கண்டேன். அக் காட்சியே யான் பிறவிக் கடலினின்றும் நீங்கிக் கரையேறிய நெறியாகும்.
*************************************************
பாடல் எண் : 13
இருதயந் தன்னில் எழுந்த பிராணன்
கரசர ணாதி கலக்கும் படியே
அரதன மன்றினில் மாணிக்கக் கூத்தன்
குரவனாய் எங்கணும் கூத்துகந் தானே.

பொழிப்புரை : (`பிற உலோகங்களை நோக்கப் பொன் உயர்ந்தது` என்பதில் ஐயம் இல்லை. ஆயினும், `பொன்னிலும் மாணிக்கம் உயர்ந்தது` என்பது தெளிவு ஆதலால்) ஐவகை மன்றினுள்ளும் மணிமன்றினுள் ஆடும் ஆடற்பிரானே யோகியர்க்கு யோகமும், போகியர்க்குப் போகமும் ஆகின்ற அருட் கூத்தினை எல்லா இடங்களிலும் சென்று ஆடுகின்றான். அஃது எதுபோலும்  எனின், இருதயத்திலே நிறைகின்ற பிராண வாயுவும் அவ்விடத்தினின்றும் குருதியோடு ஓடி உடம்பெங்கும் நிறைதல் போலும்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!