http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 25 March, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 18 & 19. சத்திய ஞானானந்தம், சொரூப உதயம் - பாடல்கள்:09 & 11.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
*************************************************

தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -019 

கூடுதல் பாடல்கள்  ..................................................(167+009+011=187)

*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்: பாடல்கள்:009
பாடல் எண் : 1
எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.

பொழிப்புரை : (காரியங்கள் ஒடுங்குதற்கு இடமாதல் பற்றிக் காரணங்கள் `பாழ்` எனப்படும். அதனால்,) ``எப்பாழும் பாழாம் யாவுமாய்`` என்றது, எக்காரணங்களும் ஒடுங்குதற்குக் காரணமாய் உள்ள பரம காரணங்கள் எல்லாமாகி` என்றதாம். உலகிற்குக் காரணம் தத்துவங்கள். அவை தோன்றி ஒடுங்குதற்கு இடமான பரம காரணங்கள் சுத்த மாயையும், அசுத்த மாயையும். ஓராற்றால் பிரகிருதி மாயையும் பரம காரணமாகக் கொள்ளப்படும். கலப்பினால் மெய்ப்பொருள் அம்மும்மாயையாகியும் நிற்கும். ஆயினும் மாயைகளின் தன்மே வேறு; மெய்ப்பொருளின் தன்மை வேறு ஆதலின் பொருள் தன்மையால் மெய்ப்பொருள் அம்மாயைகளின் வேறாகியும் நிற்கும்.
*************************************************
பாடல் எண் : 2
மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம் 
பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.

பொழிப்புரை : சிவனது சத்தி `பரா சத்தி` என்றும், `ஆதி சத்தி` என்றும் இரண்டாய் இருக்கும். (பராசத்தியே அருட் சத்தியும், ஆதி சத்தியே திரோதான சத்தியும் ஆகும்.) அவையிரண்டும் வேறு வேறல்ல. அஃது எது போல்வது எனின், மணியின்கண் (இரத்தினங் களில்) அதனிடத்தே நின்று அதனையே விளக்கி நிற்பதும், வேறிடத் திலும் சென்று பிற பொருள்களைப் பற்றுவதும் ஆகிய ஒளி செய்கையால் இரண்டாதல் அல்லது பொருளால் இரண்டாகாமை போல்வது. மணியொளி மணியையே விளக்கி நிற்குமிடத்து `பிரகாசம்` என்றும், பிற பொருள்மேல் பாயுமிடத்து `காந்தி` என்றும் சொல்லப்படும். (காந்தியே சோபை) இனி ஆதிசத்தியும் `இச்சை, ஞானம், கிரியை` என மூன்றாம். ஆதி சத்தி இவற்றின் வேறல்ல வாயினும் அதனையும், பரை ஆதியின் வேறல்ல வாயினும் அதனை -யும் வேறு வேறாக வைத்து எண்ணினால், `பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை` எனச் சத்திகள் ஐந்தாகும். அதுவும் எதுபோலும் எனின், குவளை மலரின் குணம் ஒன்றேயாயினும் அதனை, பொலிவு, சிறப்பு, நிறம், மணம்,அழகு` என இவ்வாறு வேறுவேறாக உணர்வது போலும். சத்தி குணமும், சிவன் குணியும் ஆகலின், குணமாகிய சத்தி வேறுபாடு ஐந்தனோடு குணியாகிய சிவம் ஒன்றையும் கூட்டி எண்ண மெய்ப்பொருள் ஆறு கூற்றதாம்.
*************************************************
பாடல் எண் : 3
சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.

பொழிப்புரை : சத்தி, சிவம் இவற்றது இயல்பைச் சொல்லுமிடத்து முறையே பர ஞானமும், அதனால் தரப்படுகின்ற முடிவில் பொருளும் ஆகும். இனிச் சிவம் பிறிதொன்றிலும் இல்லாத, தனி ஒரு பேரானந்தப் பொருளுமாம். அந்தச் சிவத்தின் மேனிலைச் சத்தியே பக்குவான் மாக்களை ஆட்கொள்ளுதற்கு இந்நிலவுலகில் வந்து உலாவச் செய்கின்ற குரு வடிவும் ஆகும். இங்குக் கூறிய பரஞானம், முடிவின்மை, ஆனந்தம், ஆன்மாக்களை ஏற்ற பெற்றியால் ஆட்கொள்ளும் பேரருள் என்பனவற்றுக்கு முன் மந்திரத்திற்கூறிய குவளை மலரே உவமையாம்.
*************************************************
பாடல் எண் : 4
உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.

பொழிப்புரை : மேல் உவமையாகக் கூறிய குவளை மலரின் நிறம், பொலிவு, மணம், அழகு என்பன அம்மலரின் வேறாகாததுபோல உயிர் சிவனிடத்தில் வேற்றுமையின்றி ஒன்று பட்டு நின்றால், `சிவாய` எனவும், `சிவத்துவமசி` எனவும் சொல்லப்படும் மகாவாக்கியங் களின் பொருளாய் உள்ள சிவனது அனந்த சத்தி, அலுத்த சத்தி முதலிய எண்குணங்களும் உயிரினிடத்து விளங்கி நிற்க, உயிர் சிவனாகியே நிற்கும்.
*************************************************
பாடல் எண் : 5
நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
நினையும் அளவில் நினைப்பித் தனனே.

பொழிப்புரை : சிவனை அன்பால் நினைதற்குப் பக்குவம் வேண்டும். அது வாய்க்கப் பெற்று, அவனை அன்பினஆல் நினைந்தும், வணங்கியும், புகழ்ந்து பாடியும் நின்றால் ஒன்றிலும் அகப் படாத அவனை நம்முள்ளே அகப்படுத்திக் கொள்ளலாம். எங்கள் ஆசிரியராகிய நந்தி பெருமானும் எனக்கும் பக்குவம் வாய்த்தமையை அறிந்தே தமது அருளை வழங்கிச் சிவனை நினைக்கச் செய்தார்.
*************************************************
பாடல் எண் : 6
பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
வாலிய பேரமு தாகும் மதுரமும்
போலும் துரியம் பொடிபட உள்புகச்
சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

பொழிப்புரை : முன் தந்திரத்திற் கூறிய முத்துரியத்துள்  நிலையிற் புக்கபொழுது, பாலுந்தேனும் கலந்த கலப்பின்கண் உள்ளதும், கனிந்த பழத்தின் சாற்றில் உள்ளதும், மிகத் தூயதாகிய தேவரது அமுதத்தில் உள்ளதுமாகிய இனிமைகள் போன்ற ஓர் இனிமை அவ்வுயிரினது உடம்பில் உள்ள மயிர்க்கால்கள்தோறும் தேங்கி நிற்கும்.
*************************************************
பாடல் எண் : 7
அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

பொழிப்புரை : சிவன், `இறவா நிலை` எனப்படும் அபர முத்தி நிலையையும், அந்நிலைக்கு ஏற்புடைய சுத்தமாயா புவனங்களையும் கடந்து, அவ்விடத்தை அடைந்த தன் அடியார்களோடே கூடி, அவர்கட்கு ஒப்பற்ற தலைவனாய் இருப்பவன். (எனவே, `நிரதிசய சுத்த போகத்தையே தருபவன்` என்றதாம்.) ஆயினும் அவன், பவழம் போன்ற இதழையும், அதற்குள்ளே அரும்பும் முத்துப்போன்ற நகையினையும், அதற்குள்ளே மெல்ல மிழற்றுகின்ற இனிய சொல்லையும் உடைய மாதராளாகிய, கெடுதல் இல்லாத ஞானசொரூபியைத் துணையாகப் பற்றி நிற்கின்றான்.
*************************************************
பாடல் எண் : 8
மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

பொழிப்புரை : மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.
*************************************************
பாடல் எண் : 9
சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
தவமான சத்திய ஞானனந் தத்தே
துவமார் துரியம் சொரூபம தாமே.

பொழிப்புரை : பயன் இலதாம் பிறவியிற் செலுத்துகின்ற மும்மலங்களும் நீங்கி உயிர் சிவமாதற்பொருட்டு உண்மையான மூன்று துரிய நிலைகளைப்பிற பற்றுக்கள் நீங்குதற் பொருட்டுப் பற்றினால், தவத்தின் பயனான சத்திய ஞானானந்தம் கிடைக்கும். அந்நிலையில் அந்த ஆனந்தத்தையுடைய பொருளும் காட்சிப்படும்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம் : பாடல்கள்:011
பாடல் எண் : 1
பரம குரவன் பரம்எங்கும் ஆகி
திரம்உற எங்கணும் சேர்ந்தொழி வற்று
நிரவு சொரூபத்துள் நீடும் சொரூபம்
அரிய துரியத் தணைந்துநின் றானே.

பொழிப்புரை : குருமார்களில் எல்லாம் மேலான குருவாகிய ஞான குருவே எங்கும் நிறைந்த பரம்பொருளாவான்` என்பது நன்கறியப் பட்டது. அதற்கேற்ப அவன் தன் மாணாக்கனை விட்டு நீங்காது, அவன் செல்லுமிடமெல்லாம் சென்று நிலையாகப் பொருந்தி, கண்ட பொருள்களில் எல்லாம் அது அதுவாகும் இயல்புடைய அவனது ஆன்ம சொரூபத்தினுள் அஃது அவ்வாறாகாமல் நிலைபெற்று விளங்கும் அறிவின்பப் பொருளாய், அடைதற்கரிய துரிய நிலையில் கிடைத்திருப்பான்.
*************************************************
பாடல் எண் : 2
குலைக்கின்ற நீரிற் குவலயம் நீரும்
அலைக்கின்ற காற்றும் அனலொடா காசம்
நிலத்திடை வானிடை நீண்டகன் றானை
வரைத்து வலஞ்செயு மாறறி யேனே.

பொழிப்புரை : மண் தன்னை அழிக்கும் தன்மையுடைய நீரினுள் அழியும், அவ்வாறே நீரும், காற்றும் முறையே நெருப்பினுள்ளும் ஆகாயத்தினுள்ளும் அழியும். எனவே, இப்பொருள்களுள் அடங்கியிருப்பவர் அல்லன் சிவன். அவன் பூமியையும் கடந்து மேற்போகியும் அளவின்றியிருப்பவன். (``பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாத மலர் - போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே``* அவனை ஒரு சிறுகுடிலுள் அடக்கி வைத்துக் கண்ணாற் கண்டு, காலால் வலம் வந்து, வாயால் வாழ்த்தி, மெய்யால் வணங்கி இன்புறுதல் எளிதாயிருக்க, அம்முறையை யறியாமல் யான் அல்லல் உறுகின்றேன்.
*************************************************
பாடல் எண் : 3
அங்குநின் றான்அயன் மால்முதல் தேவர்கள்
எங்குநின் றாரும் இறைவனென் றேத்துவர்
தங்கிநின் றான்தனி நாயகன் எம்மிறை
பொங்கிநின் றான்புவ னாபதி தானே.

பொழிப்புரை : அயன், மால் முதலிய தேவர்கள் முதலாக எங்குள் ளவர்களும் இறைவனை, `அவன் பரமாகாசத்தில் இருக்கின்றான், ஆயினும் ஏத்துவார்க்கு அருள்புரிகின்றான் என அவனைக் காணாமலே கருதிநின்று ஏத்துவார்கள். ஆயினும் எங்கட்கு அவன் குருஉருவாகி எதிர் வந்து எங்களோடு நீங்காது உறைகின்றான்.
*************************************************
பாடல் எண் : 4
சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.

பொழிப்புரை : ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.
*************************************************
பாடல் எண் : 5
மூவகைத் தெய்வத் தொருவன் முதல்உரு
ஆயது வேறாம் அதுபோல் அணுப்பரன்
சேய சிவமுத் துரியத்துச் சீர்பெற
ஏயும் நெறியென் றிறைநூல் இயம்புமே.

பொழிப்புரை : முக்குணங்களால், `அயன், அரி, அரன்` எனச் சொல்லப்படும் மூவருள், `தனி ஒருவன்` எனச் சுட்டப்படும் அரன், குணம் பற்றி ஏனையிருவரோடு ஒத்தவனாகச் சொல்லப்படினும் ஏனையிருவர்போலச் சகலனாகாது, பிரளயாகலருள் பக்குவம் உற்ற வனாய், சிவனை மறந்து, `தானே முதல்வன்` என மயங்கும் மயக்கம் இன்றிச் சிவனையே முதல்வனாகத் தெளிந்து அவன் பணியையே ஆற்றுபவன் ஆதலின் வேற்றியல்புடையனாதல் போல முத் துரியத்திலும் சீவனும், சிவனும் ஒரு பெற்றியராய் நின்ற போதிலும் பல வகையில் சிவன் சீவனின் வேறு பட்டவன்` என்று சிவநூல்கள் செப்பும்.
*************************************************
பாடல் எண் : 6
உருவன்றி யேநின் றுருவம் புணர்க்கும்
கருவன்றி யேநின்று தான்கரு வாகும்
மருவன்றி யேநின்ற மாயப் பிரானைக்
குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே.

பொழிப்புரை : சிவன் தான், தனக்கு ஓர் உடம்பில்லாமலே பல உயிர்கட்கும் பல்வேறு வகையான உடம்புகளைப் படைத்துக் கொடுக்கின்றான். தனக்கு ஒரு காரணம் இன்றித் தானே அனைத் திற்கும் காரணமாய் உள்ளான். எந்தப் பொருளின் தன்மையும் தன்னைப் பற்றாது தான் அனைத்துப் பொருளிலும் தாமரை இலையில் தண்ணீர் போலப் பொருந்தி நிற்கின்றான். ஆகவே, அவனது நிலை யாவராலும் அறிய ஒண்ணாத பெருமறையாய் இருத்தலின், அம்மறையை அறிந்த நல்லா சிரியன் வழியாக அன்றித் தாமே நேராக அவனை அடைதல் யாவர்க்கும் இயலாது.
*************************************************
பாடல் எண் : 7
உருவம் நினைப்பவர்க்(கு) உள்ளுறும் சோதி
உருவம் நினைப்பவர் ஊழியும் காண்பர்
உருவம் நினைப்பவர் உம்பரும் ஆவர்
உருவம் நினைப்பார் உலகத்தில் யாரே.

பொழிப்புரை : குருவின் உருவத்தை உள்ளத்தில் உள்கியிருப்பவர் கட்கு அங்குச் சிவ சோதியே பிரகாசிக்கும். அவர்கள் ஊழிக் காலம் நிலவுலகில் வாழ்வர்; பின்பு சிவலோக வாழ்வினரும் ஆவர். அங்ஙன மாகவும் குரு உருவத்தின் சிறப்பை அறிந்து அதனை உள்ளத்தில் உள்குவோர் உலகத்தில் எத்துணைப் பேர்!
*************************************************
பாடல் எண் : 8
பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.

பொழிப்புரை : முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.
*************************************************
பாடல் எண் : 9
சொரூபம் உருவம் குணம்தொல் விழுங்கி
அரியன உற்பலம் ஆமாறு போல
மருவிய சத்தியாதி நான்கும் மதித்த
சொரூபக் குரவன் சுகோயத் தானே.

பொழிப்புரை : கவர்ச்சியான வடிவம், நிறம், மணம் முதலிய பிற பண்புகள் ஆகியவற்றை இயல்பாகவே கொண்டிருத்தலாலே குவளை மலர்கள் பிற மலர்களினும் கிடைத்தற்கரிய சிறந்த மலர்களாகக் கருதப்படுகின்றன. அதுபோலவே, `சத்தியம், ஞானம், அனந்தம், ஆனந்தம் என்னும் மெய்ப்பொருள் இயல்புகளைத் தனது ஞானமாக அடைந்த உண்மைக் குருவே வீட்டின்பத்தைத் தர வல்லவனாவான்.
*************************************************
பாடல் எண் : 10
உரையற்ற ஆனந்த மோனசொரூ பத்தன்
கரையற்ற சத்திஆதி காணில் அகாரம்
மருவுற் றுகாரம் மகாரம தாகி
உரையற்ற தாரத்தில் உள்ளொளி யாமே.

பொழிப்புரை : (`சொரூபம்` என்பதைப் பொதுப்பட இயல்பு` - என வைத்துக் காணும்பொழுது அது, `மேனிலைச் சொரூபம், கீழ்நிலைச் சொரூபம்` என இரண்டாகும். அவற்றுள்) சிவனது மேனிலைச் சொரூபம் சொல்லைக் கடந்தது; இன்ப உருவானது. அநாதி; சிவமாவது கீழ்நிலைச் சொரூபம். `அகார உகார மகாரம்` என்னும் பகுதிகளாயும், அங்ஙனம் பகுக்கப்படாத தொகுதியாயும் உள்ள தாரக மந்திரத்தின் உள்ளொளியாகும். ஆதி; சத்தியாவது.
*************************************************
பாடல் எண் : 11
ஆமா றறிந்தேன் அகத்தின் அரும்பொருள்
போமா றறிந்தேன் புகுமாறும் ஈதென்றே
ஏமாப்ப தில்லை இனிஓர் இடமில்லை
நாமாம் முதல்வனும் நாமென லாமே.

பொழிப்புரை : பாச ஞான பசு ஞானங்களால் எளிதில் அறியப் படும் பொருள்கள் யாவும் நமக்குப் புறத்தே நிற்பனவாக, அந்த ஞானங்களால் அறிதற்கரிய பொருள் நம்மின் வேறாகாது நம் உள்ளே யிருத்தலை நான் அறிந்தேன். மேலும், அந்தப் பொருள் நம்மை விட்டு நீங்குதற் காரணத்தையும் நான் `இது` என அறிந்தேன்; நீங்கிப் போன அது மீட்டும் வந்து புகுதற் காரணத்தையும் `இது` என அறிந்தேன். இனி நான் `யான், எனது` எனச்செருக்கு மாட்டேன்; அந்தப் பொருளை யன்றி வேறொரு புகலிடமும் எனக்கு இல்லை. இந்நிலைமை, `முன்பு தானாய் இராது நாமாகவேயிருந்த முதல்வனும் நாமே` எனத் தக்கதாய் உள்ளது.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!