http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 26 March, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 20, 21 & 22. ஊழ், சிவரூபம், சிவதரிசனம் - பாடல்கள்: 06, 03 & 08.


,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -022 
கூடுதல் பாடல்கள்  .........................................(187+006+003+008=204)

*************************************************


ஒன்பதாம் தந்திரம் - 20. ஊழ்: பாடல்கள்: 06
பாடல் எண் : 1
செத்தில்என் சீவில்என் செஞ்சாந் தணியில்என்
மத்தகத் தேஉளி நாட்டி மறிக்கில் என்
வித்தக நந்தி விதிவழி யல்லது
தத்துவ ஞானிகள் தன்மைகுன் றாரே.

பொழிப்புரை : தங்கள் உடம்பைப் பிறர் செத்தினால்தான் என்ன? சீவினால்தான் என்ன? உச்சந் தலையிலே உளியை நாட்டி அடித்தால்தான் என்ன? இவ்வாறன்றி சிவந்த சந்தனத்தைக் குளிர்ச்சியாகப் பூசினால்தான் என்ன? மெய்யுணர்வு எய்தினோர் ஞானகுரு உபதேசித்த உபதேச வழியில் நிற்றல் அல்லது, அதனினின்றும் பிறழார்.
*************************************************
பாடல் எண் : 2
தான்முன்னம் செய்த விதிவழி தான் அல்லால்
வான்முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாட்டில்லை
கோன்முன்னம் சென்னி குறிவழி யேசென்று
நான்முன்னம் செய்ததே நன்னிலம் ஆயதே.

பொழிப்புரை : ஒவ்வோர் உயிரும் தான் தான் முற்பிறப்பில் செய்த வினையின் பயனைத்தான் இப்பிறப்பில் அனுபவிக்கின்றதே தவிர, இப்பிறப்பில் சிலர் அவ்வுயிர்கட்கு நன்மை தீமைகளைப் புதியனவாகக் கொண்டுவந்து சேர்ப்பிக்கின்றார்கள் இல்லை. (ஆகவே, அவைகளைப் பிறர் கொண்டு வந்து சேர்ப்பிப்பதாகக் கருதி அவர்களை விரும்புதலோ, வெறுத்தலோ செய்தால் அச்செயல்களே அடுத்த பிறப்பிற்குக் காரணமான ஆகாமிய வினையாய்விடும். இதை உணர்ந்த நான் எனது முன் வினையின் பயனைக் கூட்டுகின்ற முதல்வன் என் தலையில் எழுதிய எழுத்துப்படியே இன்பத் துன்பங்களை அனுபவிக்கும் பொழுதெல்லாம் அவைகளை அவனது அருளாகவே கருதி அனுபவித்ததல்லது இன்பத்தில் மகிழ்ச்சியோ, துன்பத்தில் வாட்டமோ கொண்டதில்லை. அவ்வாறு செய்த எனது செயல் எனது நன்மைக்குச் சிறந்ததொரு காரணமாயிற்று.
*************************************************
பாடல் எண் : 3
ஆறிட்ட நுண்மணல் ஆறே சுமவாதே
கூறிட்டுக் கொண்டு சுமந்தழி வாரில்லை
நீறிட்ட மேனி நிமிர்சடை நந்தியை
பேறிட்டென் உள்ளம் பிரயகி லாதே.

பொழிப்புரை : (ஆற்றில் மணல் சமப்பரப்பாய்ப் பரந்திருப்பின் அஃது அதற்கு ஒரு சுமையாய் இராது. ஆனால் ஆறு சமமாய் இல்லாமையால், அதில் வெள்ளம் வரும்பொழுது பள்ளம் மேடுகள் மாறி மாறி அமைய சில இடங்கள் பெரிய மேடுகள் ஆகிவிடுகின்றன.) அந்த மேடுகளை அந்த ஆறு தான் சுமக்க வேண்டுமேயன்றி, அவைகளைப் பங்கு செய்து எடுத்துக் கொண்டு போய்ச் சுமப்பார் ஒருவரும் இல்லை. (அதுபோல, அவரவர் செய்த வினையின் பயனை அவரவரே அனுபவிக்க வேண்டுமன்றி அனுபவிப்பவர் வேறுயாரும் இலர். இதனை நன்குணர்ந்த எனது உள்ளம்) சிவனைப் பெறற்கரிய பேறாக உணர்ந்து அவனைத் தவிர வேறொன்றைப் பற்றுதலை ஒழிந்தது;
*************************************************
பாடல் எண் : 4
வானின் றிடிக்கில்என் மாகடல் பொங்கில்என்
கானின்ற செந்தீக் கலந்துடன் வேகில்என்
தானொன்றி மாருதம் சண்டம் அடிக்கில்என்
நானொன்றி நாதனை நாடுவன் நானே.

பொழிப்புரை : இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.

பொழிப்புரை : `இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்; அஞ்சுவது யாதொன்றும் இல்லை;
அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்?
மால்வரையும் தானம் துளங்கித் தலைதடு மாறில் என்?
தண்கடலும் மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்?
வேலை நஞ்சுண்டு ஊனம் ஒன்றில்லா
ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி,மற்றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும்  அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்; திருப்பாதிரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது. இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 5
ஆனை துரத்தில்என் அம்பூ டறுக்கில்என்
கானத் துழுவை கலந்து வளைக்கில்என்
ஏனைப் பதியினில் எம்பெரு மான்வைத்த
ஞானத் துழவினை நான்உழு வேனே.

பொழிப்புரை : இவ் இருமந்திரங்களின் பொருளும் வெளிப்படை.
குறிப்புரை :  `இயற்கைச் சீற்றங்கள்` என உலகத்தார் வழங்குவன வாகிய பெருங்கேட்டுச் செயல்கள் தேவர் முதலியோர்க்கும் பேரச்சம் விளைப்பயனவாயினும் சிவனடியார் உள்ளங்கள் சிறிதும் அஞ்சமாட்டா` என்பது முன் மந்திரத்திலும், `கொடு விலங்குகளாலும், பகைவராலும் வரும் கேடுகட்கும் அவர்களது உள்ளம் நடுங்கா` என்பது பின் மந்திரத்திலும் சொல்லப்பட்டன.
``ஒருவர் தமர் நாம்;
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை;
``வானம் துளங்கி என்? மண்கம்பம் ஆகில் என்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறில் என்? தண்கடலும்
மீனம் படில் என்? விரிசுடர் வீழில் என்? வேலை நஞ்சுண்டு
ஊனம்ஒன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே``
``மண்பா தலம்புக்கு, மால்கடல் மூடி, மற்றேழுலகும்
விண்பால் திசைகெட்டு, இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே!
தின்பால் நமக்கொன்று கண்டோம்; திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே``
``மலையே வந்து விழினும், மனிதர்காள்`
நிலையி னின்று கலங்கப் பெறுதிரே?
தலைவ னாகிய ஈசன் தமர்களைக்
கொலைசெய் யானைதான் கொன்றிடு கிற்குமே? *
என்னும் திருமொழிகளை இம்மந்திரங்களோடு ஒப்பிடுக.
கான், கானம் - காடு. மாருதல் - காற்று. சண்டம் - வேகம். `சண்டமாய்` என ஆக்கம் விரிக்க. ``நான்`` இரண்டில் முன்னது `நான்` என்னும் போதம். உழுவை - புலி. ஏனைப் பதி - உயிர்கள் வாழும் ஊர் அல்லாத வேறோர் ஊர். அஃது அவன் வாழ்வது; திருவருள். `என்னையும்` `அதில் கொண்டு போய் வை்ததான். அங்கே நான் ஞானத் தொழிலைச் செய்து கொண்டிருக்கின்றேன். அதனால், இடி வீழ்தல் முதலிய அழிவு நிகழ்ச்சிகளைக் கண்டு என் உள்ளம் துணக்குறாது` என்பதாம். ஞானத் தொழில் - ஞானச் செய்தி. அவை தசகாரியம். ஆகவே, இதனால் வருகின்ற அதிகாரத்திற்கும் தோற்றுவாய் செய்யப்பட்டதாம். ``உழுவேன்`` என்றது `செய்வேன்` என்னும் அளவாய் நின்றது.  இதனால், ஞானிகள் தமக்கு வரும் ஊழாலேயன்றி உலகிற்கு வரும் ஊழாலும் உள்ளம் கலங்காமை கூறப்பட்டது.
*************************************************
பாடல் எண் : 6
கூடு கெடின்மற்றோர் கூடுசெய் வான்உளன்
நாடு கெடினும் நமர்கெடு வாரில்லை
வீடு கெடின்மற்றோர் வீடுபுக் காலொக்கும்
பாடது நந்தி பரிசறி வார்கட்கே.

பொழிப்புரை :  குருவருள் வாய்க்கப் பெற்றவர்கட்கு, `ஓர் உயிரின் உடம்பு அழிந்து விட்டால், மற்றோர் உடம்பை அவைகட்குப் படைத்துக் கொடுக்க ஒருவன் இருக்கின்றான்` என்பது தெளிவாம். ஆதலால், `இறப்பு` என்பது அவர்கள் உள்ளத்திற்கு. `உயிர்கள் அழிந்துபோவதன்று; மற்று, ஒருநாடு எவையேனும் காரணத்தால் அழிவுறுமாயின், அதில் உள்ளவர்கள் வேறு நாட்டில் சென்று வாழ்தல் போல்வதும், ஓர் இல்லம் இடிந்து பாழாயின், அதில் வாழ்ந்தவர்கள் வேறோர் இல்லத்தில் குடிபுகுதல் போல்வதுமேயாகும்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 21. சிவ ரூபம்: பாடல்கள் : 03
பாடல் எண் : 1
சிந்தைய தென்னச் சிவன்என்ன வேறில்லை
சிந்தையி னுள்ளே சிவனும் வெளிப்படும்
சிந்தை தெளியத் தெளியவல் லார்கட்குச்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.

பொழிப்புரை :  அறிவுப்பொருளாகிய உயிரும், அறிவுக்கறிவாய் உள்ள சிவனும் பொருளால் வேறேயாயினும், உடல் உயிர்போல ஒன்றுபட்டு நிற்கும் கலப்பினால் வேறு நிற்பவர் அல்லர். ஆகவே, உயிரினது அறிவினுள்ளே, விறகில் தீயும், பாலில் நெய்யும் போலத் தோன்றாது மறைந்து நிற்கும் சிவன் அவ்விடத்தில் தோன்றவும் வாய்ப்பு உண்டு. அதனால், தங்கள் அறிவு மாசற்று விளங்கும்படி அவ்வுண்மை உணர்வில் உறைத்து நிற்க வல்லவர்கட்கு, கடைய வல்லவர்க்கு விறகில் தீயும், பாலில் நெய்யும் வெளிப்படுதல் ஒருதலையாதல் போல அவர்களது அறிவில் சிவன் வெளிப்பட்டு விளங்குதல் ஒருதலை.
*************************************************
பாடல் எண் : 2
வாக்கும் மனமும் மறைந்த மறைப்பொருள்
நோக்குமின் நோக்கப் படும்பொருள் நுண்ணிது
போக்கொன்றும் இல்லை வரவில்லை கேடில்லை
ஆக்கமும் அத்தனை ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் சிந்தையினுள்ளே இருப்பதாகச் சொல்லி சிவன்- வாக்கும், மனமும் அடங்கி ஒடுங்கி நிற்கும் நிலையில் உள்ள ஓர் உள்ளீடான பொருள். ஆகவே, அவனை நேக்கும் முறையறிந்து நோக்குங்கள். அங்ஙனம் நோக்கும்பொழுது அந்நோக்கிற்கு அவன் மிக நுண்ணிதாய்ப் புலனாகும் பொருளாவான். புலனாகியபின் அவன் போதல் இல்லை புலனாகும் பொழுதும் புதியனாய் அப்பொழுது தான் வந்துபுகுதலும் இல்லை முன்பே உள்ளவன் என்பதாம்.) அவனுக்கு என்றும் அழிவில்லை. `அழிவில்லை` எனவே தோற்றமும் இல்லையாம். நன்மையாவன பலவும் அவனை அவ்வாற்றால் நுணுகி நோக்கி அடைவார்க்கே உளவாம்.
*************************************************
பாடல் எண் : 3
பரனாய்ப் பராபர னாகிஅப் பாற்சென்(று)
உரனாய் வழக்கற ஒண்சுடர் தானாய்தர்
தரனாய்த் தனாதென ஆறறி வொண்ணா
அரனாய் உலகில் அருள்புரிந் தானே.

பொழிப்புரை :  (இங்குத் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகின்ற சிவன்) உலகங்கள் பலவற்றிலும் மேல் உள்ள உலகில் உள்ளான். இனிமேல் உள்ள பொருளுக்கும் மேலாய் அவற்றைக் கடந்தும் இருக்கின்றான். ஆயினும் தனக்குக் கீழே உள்ள எல்லா உலகங்களிலும் நிறைந்து நின்று உயிர்களின் பிறவித் தொடர்ச்சி அறுபட அருள் புரிகின்றான். அஃது எங்ஙனம் எனின், பிறிதொரு பொருளால் வெல்லப்படாத ஆற்றலையும், பிறர் அறிவிக்க வேண்டாது தானே எல்லாவற்றையும் ஒருங்கே அறியும் அறிவினையும் உடையனாயும், அனைத்துப் பொருளையும் ஆதாரமாய் நின்று தாங்குபவனாயும், பாசங்களை அறித்தல் தெரியாமலே அரிப்பவனாயும் இருந்து.
*************************************************
ஒன்பதாம் தந்திரம் - 22. சிவ தரிசனம் பாடல்கள்: 08
பாடல் எண் : 1
ஓதின் மயிர்க்கால் தொறும்அமு தூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்தம்
ஆதி சொரூபங்கள் மூன்றகன் றப்பாலை
வேதம தோதும் சொரூபிதன் மேன்மையே.

பொழிப்புரை :  ஐந்தொழில் செய்யக் கருதிய காலத்துக் கொள்ளப்படுகின்ற `உருவம், அருவுருவம், அருவம் என்னும் மூவகை வடிவங்களும் இன்றி, அவற்றைக் கடந்துள்ள, உண்மை நூல்களால் கூறப்படுகின்ற சொரூப சிவனது மேலான இயல்பாவது, அவனைத் தன்னின் வேறாக வாயினும், ஒன்றாகவாயினும் உணரும் பொழுது அவ்வாறு உணரும் உயிரினது மயிர்கால்தோறும் தவறாது ஊறித்ததும்பகின்ற அமுதம்போலும் பேரின்பமேயாம்.
*************************************************
பாடல் எண் : 2
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பொழிப்புரை :  பொருள்களை உணர்தற் கருவியாகிய உணர்வும், அவ்வுணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் சிவன் ஒருவனே. அனைத்துப் பொருள்களையும் தக்கவாற்றால் இயைத்துச் செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் தனியே நினைக்கவும் வாரான். ஆயினும் கொத்தாய் உள்ள மலர்களினின்றும் மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயற்பாட்டில் அவன் விளங்குகின்றான்.
*************************************************
பாடல் எண் : 3
துன்னிநின் றான்தன்னை உன்னிமுன் னாஇரு
முன்னி யவர்தம் குறையை முடித்திடும்
மன்னிய கேள்வி மறையவன் மாதவன்
சென்னியுள் நின்றதோர் தேற்றத்த னாமே.

பொழிப்புரை : முன் மந்திரத்திற் கூறியவாறு மலர்க் கந்தம்போலத் துள்ளி நிற்கின்ற சிவன் தன்னை நினைந்திருப்பவர் குறையை முடிப்பவன். வேதத்தை ஓதும் அயன், மற்றும் மால் முதலியோருடைய தலைக்குள் இருந்து அறிவைப் பிறப்பிப்பவனும் ஆவன். ஆகையால் அவனையே நினைத்து அவன் திருமுன்பில் இரு.
*************************************************
பாடல் எண் : 4
மின்னுற்ற சிந்தை விழித்தேன் விழித்தலும்
தன்னுற்ற சோதித் தலைவன் இணையிலி
பொன்னுற்ற மேனிப் புரிசடை நந்தியும்
என்னுற் றறிவானான் என்விழித் தானே.

பொழிப்புரை :  மின்னல் மின்னினாற்போலத் திடீரெனத் தோன்றி மறைந்த ஓர் ஒளியால் மூடிக்கிடந்த எனது அறிவாகிய கண்ணைத் திறந்தேன். திறந்தவுடன் சிவன் அக்கண்ணில் என் அறிவினுள்ளே அறிவாய் விளங்கினான்.
*************************************************
பாடல் எண் : 5
சத்திய ஞானத் தனிப்பொருள் ஆனந்தம்
சித்தத்தில் நில்லாச் சிவானந்தப் பேரொளி
சுத்தப் பிரம துரியம் துரியத்துள்
உய்த்தல் துரியத் துறுபே ரொளியே.

பொழிப்புரை :  உண்மையாயும், ஞானமாயும், உள்ள ஒப்பற்ற பரம்பொருள் அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கும். அந்த ஆனந்தம் ஆன்ம அறிவு இருந்து கொண்டிருக்கும் பொழுது இராது. (எனவே, ஆன்ம அறிவு தோன்றாத நிலையே அனுபவமாம்.) ஆயினும் ஆன்ம அறிவு உள்ளபொழுது மேற்கூறிய ஆனந்தத்தைக் காட்டுகின்ற அருள் ஒளி உளதாகும். (அந்த அருள் ஒளியால் சிவத்தை உணர்தல் சிவ தரிசனமாகும்.) அதன் பின் அருள் ஒளி ஆன்ம அறிவை விழுங்கி நிற்கும் நிலை நின்மல சிவ துரியமாகும். (இதுவே சிவயோக மாம்.) இத்துரியத்துள் விளங்குகின்ற அருள் ஒளியே ஆனந்த அனுபவமாகிய பர துரியத்துள் ஆன்மாவைச் செலுத்து.
*************************************************
பாடல் எண் : 6
பரனல்லன் நீடும் பராபரன் அல்லன்
உரனல்லன் மீதுணர் ஒண்சுடர் அல்லன்
தரனல்லன் தான்அவை யாய்அல்ல ஆகும்
அரனல்லன் ஆனந்தத் தப்புறத் தானே.

பொழிப்புரை :  ``பரனாய்ப் பராபரன் ஆகி`` என்னும் மந்திரத்திற் கூறியபடி சிவ ரூபத்தில் `பரன்` முதலிய இயல்பினனாய் வேறு தோன்றுகின்ற சிவன், சிவ தரிசனத்திலும் அத் தன்மையனாய், அவற்றிற்கு மேற்பட்ட சிவயோக சிவபோகங்களில் அவ்வாறு காணப்படாது அவற்றைக் கடந்து ஆன்மாவைத் தன்னுள் அடக்கி அருளையும், ஆனந்தமாயும் விளங்குவன்.
*************************************************
பாடல் எண் : 7
முத்தியும் சித்தியும் முற்றிய ஞானத்தோன்
பத்தியுள் நின்று பரந்தன்னுள் நின்றுமா
சத்தியுள் நின்(று) ஓர்க்கும் தத்துவம் கூடலால்
சுத்தி அகன்றோர் சுகானந்த போதரே.

பொழிப்புரை :  வீடு பேறு` என்பதில் வீடு - விடுதல். பேறு - பெறுதல். விடுதல் பாசத்தை; பெறுதல் பதியை. வீடும், பேறுமே இங்கு ``முத்தியும், சித்தியும்`` என ஓதப்பட்டன. முற்றிய ஞானத்தோன் - இவ்விரண்டன் இயல்புகளையும் முற்றும் உணர்ந்தவனே நிறை ஞானி -யாவான். ``இருமை வகைதெரிந்து ஈண்டும் அறம் பூண்டார்`` என்றார் திருவள்ளுவரும். இத்தகையோன் தனது ஞாநத்தின் பயனாகச் சிவனிடத்தில் பேரன்பு செய்து, அதனானே அவனது பெருங்குணமாகிய பேரானந்தத்தில் திளைத்து, அவ்வாற்றால் சிவத்துள் அடங்கி, அதனானே அறிவர் யாவரும் ஆராய்கின்ற மெய்ப்பொருளைத் ``தலைப்படுதலால், சகலத்தில் சுத்தாவத்தையாகிய சிவானந்தத்தை அடைந்த ஞானியர் ஆவர்.
*************************************************
பாடல் எண் : 8
துரிய அதீதமும் சொல்லறும் பாழாம்
அரிய துரியம் அதீதம் புரியில்
விரியும் குவியும் விள் ளாமிளி ரும்தன்
உருவும் திரியும் உரைப்பதெவ் வாறே.

பொழிப்புரை :  எவ்வகை அவத்தையிலும் `துரியாதீதம்` என்பது உயிர் தன்னை மறந்திருக்கும் நிலையாகும். ஆகவே, நின்மலாவத்தைத் துரிய துரியாதீதங்களே யாயினும் அந்நிலைகளை அடைந்த ஆன்மா புறத்துச் செல்லுதல், அகத்தில் மீளுதல், பொருள்களை நோக்கி ஓடுதல் என்பனவாகிய தனது இயல்பு அனைத்தினும் நீங்கி நிற்கும் என்றால், அவ்வான்மாவை முன்னது போல வைத்து, `சீவன்` என்று சொல்வது எங்ஙனம்?
*************************************************
ஒன்பதாம் தந்திரம்-23. முத்திபேதம் கருமநிருவாணம் : பாடல்கள் : 02
பாடல் எண் : 1
ஓதிய முத்தி அடைவே உயிர்ப்பர
பேதமி லாச் சிவம் எய்தும் துரியம்அ
நாதி சொரூபம் சொரூபத்த தாகவே
ஏத மிலாநிரு வாணம் பிறந்தததே.

பொழிப்புரை :  நூல்களில் சொல்லப்பட்ட முத்தி, வரிசைப்பட்ட `துரியம், துரியாதீதம்` என இரண்டாகும். அவற்றுள் துரிய முத்தியாவது, ஆதியாய், ஆயினும் பரத்தோடு வேற்றுமையில்லாத சிவத்தை அடைந்து நிற்றலும், துரியாதீத முத்தியாவது, அநாதியாகிய பரத்தை அடைந்து நிற்றலும் ஆம் பரத்தை அடைந்த உயிர் பின் எவ்வாற்றானும் மீளா நிலையே அனைத்தும் நீங்கிய முடிநிலை முத்தியாகும்.
*************************************************
பாடல் எண் : 2
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்
கற்றவர் கற்றுக் கருதிய கண்ணுதல்
சுற்றற் றவர் சுற்றி நின்றஎன் சோதியைப்
பெற்றுதற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.

பொழிப்புரை :  பரத்தை எய்துதலாகிய அதீத நிலையை அடைந்தவர்களே உலகர் செய்யும் செயல்களினின்றும் முற்றும் நீங்கினவராவர்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!