http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Sunday 31 March, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 23 & 24/I. முத்திபேதம், கரும நிருவாணம்-பாடல்கள்: 02 & 67/I.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067 
*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -024 
கூடுதல் பாடல்கள்  .........................................(204+002+067=273)

*************************************************


ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை : பாடல்கள் 067 பாகம்-II
பாடல் எண் : 26
கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்
நாகையும் பூழும் நடுவில் உறைவன
நாகையைக் கூகை நணுக லுறுதலும்
கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

பொழிப்புரை : கருடனைப் போலக் கூகையும் பாம்பைக் கண்டவுடன் கொல்லும். அதனால் கூகையும், பாம்பும் தம்முட் பகையாவன. கிளியும் பூனையும் தம்முட் பகையினவாதல் தெளிவு. நாகை - நாகணவாய்ப் புள். இதுவும் கிளியைப்போலப் பேசும் தன்மையுடையது; குறும்பூழ் (காடை) அத்தன்மையைப் பெறாமையால் அவையும் ஒன்றுவன அல்ல. இவை அனைத்தும் வாழ்கின்ற ஒரு காட்டில் எலிகளும் வாழ்கின்றன. ``கிள்ளை பாடுவ; கேட்பன பூவைகள்``3 என்றதனால், `பேசும் தன்மையோடு, கேட்கும் தன்மையுடையது நாகணவாய்ப்புள்` என்பது விளங்கும்.
*************************************************
பாடல் எண் : 27
குலைக்கின்ற நன்னகை யான்கொங் குழக்கின்
நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்
உலைக்குப் புறம்எனில் ஓடும் இருக்கும்
புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

பொழிப்புரை : (சிலர் இனிய நகை முகங்காட்டித் தீங்கு விளைவித்தல் உண்டு; சிலர் அவ்வாறன்றிக் கோபச் சிரிப்புச் சிரித்துத் தீமையை ஒழித்தல் உண்டு.) அவர்களில் பின்னர்க் கூறிய வகையைச் சார்ந்தவன் ஒருவன் கொங்கு நாட்டு உழக்கில் அடைத்து மூன்று வெள் ளெலிகளைக் கொணர்ந்தான். அவைகள் கொல்லனது உலை போல எரிகின்ற எரிக்கு அப்பால் இருப்பின், ஓடும்; இருக்கும்; இன்னும் பிற வற்றை யெல்லாம் செய்யும். ஆகவே, அவைகளை எரியில் இட்டால், இட்டவனுக்கு உணவாய் விடும். தொல்லை நீங்கும். எனவே, இழிந்த இனத்தவாகிய அவைகளை ஒழிப்பதற்கு வழி அதுவே.
*************************************************
பாடல் எண் : 28
காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளி
கூடுபுக் கானது ஐந்து குதிரையும்
மூடுபுக் கானது ஆறுள ஒட்டகம்
மூடு புகாவிடின் மூவணை யாமே.

பொழிப்புரை : இருள் செறிந்த காட்டிற்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள், அதினின்றும் நீங்கி, ஒளி விளங்கும் வெளியிடத்தைக் காணுதல் அரிதேயாம். இனி, நாம் குறிப்பிடும் காட்டிற்குள்ளே காட்டுக் குதிரைகள் ஐந்தும், எப்பொழுதுமே நற்குணத்தை அடையாத ஒட்டகங்கள் ஆறும் உள்ளன. (என்றால், இதர்குள் புகுந்துவிட்டவர்களது நிலைமை என்ன!) அந்தக் காட்டிற்குள் புகாமல் இருந்தால், வெளியில் மூன்று நல்லரசுகள் உள்ளன. அவைகளின் கீழ் நல்வாழ்வு வாழலாம்.
*************************************************
பாடல் எண் : 29
கூறையும் சோறும் குழாயகத் தெண்ணெயும்
காறையும் நாணும் வளையலும் கண்டவர்
பாறையின் உற்றுப் பறக்கின்ற சீலைபோல்
ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :பரத்தையர் உடுத்துகின்ற ஆடை, அவர் நல்லுணவு உண்டு வளர்த்துக் கொள்ளும் தசை, குழாய்களில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்போல வெளியே தோன்றாது உள்ளே ஓடுகின்ற இரத்தத்தால் விளங்கும் மேனியழகு, கழுத்தில் அணிகின்ற காறையும், மார்பில் அணிகின்ற பொன் வடமும், கைகளில் அணிகின்ற வளையலும் முதலான அணிகலன்கள் ஆகியவற்றைக் கண்டவர்கள் அவவைகளிலே மயங்கி, பாறைமேல் உலர்த்தப்பட்ட சீலை விரைவில் ஈரத்தை இழந்து காற்றில் பறப்பதுபோலப் பறந்துபோய், அவர்களது உந்திக் குழியில் வீழ்கின்றனர்.
*************************************************
பாடல் எண் : 30
துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்
விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்
வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பான்
ஒருத்திஉள் ளாள்அவள் ஊரறி யோமே.

பொழிப்புரை : ஆற்றிடைக் குறை ஒன்று உள்ளது; அந்த ஆற்றின் அக்கரையில் மலை ஒன்று இருக்கின்றது. அந்த மலைமேல் நின்று தமது செயல்களைக் கண்காணிக்க நாள்தோறும், `காலை, மாலை, இரவு` என்பவற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் ஒருவர் போகின்றார்`; திரும்பி வருகின்றார். அவரது கண்காணிப்பை முதலில் சிறிது சிறிதாகவும், பின்பு முழுமையாகவும் தன்பால் ஈர்த்து, அவரை அந்த மலைக்குச் செல்லாதபடி தடுக்கின்ற ஒருத்தி அவரோடு கூடவே இருக்கின்றாள். அவள் எந்த ஊரைச் சேர்ந்தவள் என்பதை நாம் அறியமாட்டோம்.
*************************************************
பாடல் எண் : 31
பருந்துங் கிளியும் படுபறைக் கொட்டத்
திருந்திய மாதர் திருமணப் பட்டார்
பெருந்தவப் பூதம் பெறல்உரு ஆகும்
இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.

பொழிப்புரை : கானக மக்களில் மங்கைப் பருவம் எய்திய மகளிர், உண்மை வாச்சியங்களில் ஏதும் இன்றிப் பருந்தும் பறவையும், ஓசை வேறுபட்டபோதிலும் அடிநிலையிசை ஒன்றேயாக முழக்குகின்ற ஓசைகளையே வாச்சியமாகக் கொண்டே எப்பொழுதும் திருமணம் செய்து கொள்ளப்படுகின்றார்கள். அவர்கட்குப் பிறக்கின்ற பிள்ளை களும் பேயும், பூதமுமாகவே பிறக்கின்றன. ஆயினும் அவர்களில் யாரும் இதைப் பற்றி வருந்துவதாகத் தெரியவில்லை. மகிழ்ச்சி யுடனேயே வாழ்கின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 32
கூடு பறவை இரைகொத்தி மற்றதன்
ஊடுபுக் குண்டி யறுக்குறில் என்னாக்கும்
சூடெறி நெய்யுண்டு மைகான றிடுகின்ற
பாடறி வார்க்குப் பயன்எளி தாமே.

பொழிப்புரை : கூட்டில் வாழும் பறவை இரையைத் தேடித் தின்று விட்டுக் கூட்டிற்குள் புகுந்து பின் அதனைச் சீரணிக்கப் பண்ணிக் கொண்டுமட்டும் இருந்தால், அந்தப் பறவை தனக்கு என்ன உறுதிப் பயனைச் செய்துகொள்ளும்? (ஒன்றையும் செய்து கொள்ளாது. ஆகலின் தம் உயிர்க்கு உறுதி செய்துகொள்ள விரும்புவோர் அந்தப் பறவையின் செயலைக் கைக்கொள்ளாமல் விடுத்து,) நெய்யை உணவாக உண்டு அதனாலே ஓங்கி எரிகின்ற நெருப்புப் பின் நறுமணமும், குளிர்மையும், அழகையும் உடைய சாந்தத் தருகின்ற அந்த மேலான செயலை நோக்கி, அதனைக் கடைப்பிடிக்க.
*************************************************
பாடல் எண் : 33
இலையில்லை பூவுண்(டு) இனவண்டிங் கில்லை
தலையில்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்
குலையில்லை கொய்யும் மலர்உண்டு சூடும்
தலையில்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

பொழிப்புரை : எல்லாச் சமயங்கட்கும் வேர்போன்றது திருவருள். அஃதாவது, `திருவருட் குறிப்பின்றி, எந்தச் சமயமும் உலகில் இருக்கவில்லை` என்பதாம். அத்திருவருளே உணர்ந்த சமயங்கள் வேரின்மேல் வளர்ந்து தழைத்த மரங்களாகும். திருவருளை உணராத சமயங்கள் வளராது முடம்பட்ட மரங்களாம். அவைகளையே, ``வேர் உண்டு; தலையில்லை`` என்றார்.
*************************************************
பாடல் எண் : 34
அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டு
நக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்
மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்
தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை : மக்கள் யாவரும் வினைத் தொடர்ச்சியாகிய ஆற்று வெள்ளத்தில் போய்க் கொண்டிருப்பவரே. ஆயினும் அவருள் ஒரு சிலர் மட்டும் ஆற்றின் அக்கரையில் ஓர் ஆலமரத்தையும், அதன் கீழே உடையின்றியிருக்கும் ஓர் அந்தணரையும் கண்டு வாழ்த்து கின்றார்கள். அதனால் அவ்வந்தணரால் தாம் கடலிற் சென்று விழுவதற்கு முன்னே கரை சேர்க்கவும் பெறுகின்றார்கள். மற்றவர்களும் அவ்வாறே கரை சேரலாம். ஆயினும் அவ்வாறு செய்யாமல் ஐந்து வகையான துன்பங்களை அனுபவித்துக் கொண்டு வெள்ளத் திலே மிதந்து போய்க் கொண்டிருக்கின்றார்கள்.
*************************************************
பாடல் எண் : 35
கூப்பிடும் ஆற்றிலே வன்கா(டு) இருகாதம்
காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்
காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்
கூப்பிடும் ஈண்டதோர் கூரைகொண் டாரே.

பொழிப்புரை : கூப்பிடு தூரத்தளவேயான குறு வழி ஒன்று உள்ளது. அதற்குள்ளே கடுமையான இரண்டு காடுகள் தனித்தனி ஒவ்வொரு காதம்போல உள்ளன. அந்தக் காடுகளில் வழிச் செல்வாரே மறித்துக் கொண்டுபோய் சிற்றறையில் அடைத்து வைக்கின்ற கள்வர்கள் வாழ்கின்றார்கள். ஒன்றும் அறியாத வழிப்போக்கர்கள் அந்தக் கள்வரை வழிகாட்டுபவராகக் கருதி அவரைப் பின் பற்றிச் சென்று, தமக்கு உதவுபவரை அழைக்க வேண்டிய நிலைமையராய் இச்சிறுவழியில் சிறு குடில் ஒன்றே புகலிடமாக அடைகின்றனர்.
*************************************************
பாடல் எண் : 36
கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடை
எட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்
கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்
எட்டிப் பழத்துக் கிளைக்கின்ற வாறே.

பொழிப்புரை : குளம் ஒன்றில், பொருட்படுத்தி எண்ணலாகாத கொட்டியும், சிறந்தனவாகிய வெல்ளாம்பல் செவ்வாம்பல்களும் பூத்துள்ளன. அதுபோலவே, பார்வைக்கு அழகாய் உண்டால் கொல்லும் எட்டிப் பழமும், அழகும் இன்றி, இனிமையும் இன்றி, உண்டால் நோயைத் தீர்க்கும் வேப்பம் பழமும் அழகும், இனிமையும் உடையதாய், உண்டால் பசியைத் தீர்த்து, உடல் நலத்தை நல்குவ தாகிய வாழைப் பழமும் அந்தக் குளக்கரையில் பழுத்திருக்கின்றன. வாழையே மேலும் சுவைப்படுத்தி உண்ண வேண்டுமாயின், கட்டியும், தேனும் மக்கட்குக் கிடையாதன அல்ல; எங்கு கிடைப்பனவே. ஆகவே, வாழப்பழத்தைப் பறித்துக் கட்டியும், தேனும் கலந்து உண்டு, நாவிற்கு நறுஞ்சுவை பெற்றுப் பசி தீர்ந்து, உடல் நலத்தையும் எய்துமளவிற்கு அறிவில்லாத மக்கள், பார்வைக்குக் கவர்ச்சியாய் உள்ள எட்டிப் பழத்தையே பெவேண்டி, `அதனை அம்மரத்தில் ஏறிப் பறிப்பது எவ்வாறு` என்று எண்ணுவதிலேயே காலம் கழித்து இளைக்கின்றார்கள். இஃது இரங்கத் தக்கது.
*************************************************
பாடல் எண் : 37
பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்
குடைகொண்ட பாசத்துக் கோலம்உண் டானும்
கடைவண்டு தான்உண்ணும் கண்கலந் திட்ட
பெடைவண்டு தான்பெற்ற தின்பமு மாமே.

பொழிப்புரை : வண்டினங்களில் `அரசவண்டு` (கோத்தும்பி) எனச் சிறப்பித்துச் சொல்லப் படுகின்ற அந்த இனத்தில் பெண் வண்டும், ஆண் வண்டும் உயர்ந்த தாமரை மலர்களையே நாடிச் சென்று தேன் நுகர்தலுடன், அவற்றை அரியணையாகவும், வெண்கொற்றக் குடையாகவும் கொண்டு அன்புடன் கலந்து அரசு வீற்றிருக்கும். சிற்றின வண்டுகளும் இனத்தால் அவற்றோடு ஒப்பனவாயினும் அவை அத்தன்மையின்றிச் சிறு பூக்களையும் நாடி ஒடுலுடன், மற்றும் தம் கண் சென்று கலந்த பொருள்களின் மேல் எல்லாம் ஓடிச்சென்று விழும். ஆகவே, அவ்வினத்துப் பெண்வண்டு அதன் ஆண் வண்டினால் இன்பம் பெற்றதாயினும் அந்த இன்பம் அரசப் பெண் வண்டு, அரச ஆண் வண்டினால் பெற்ற இன்பம் ஆகுமோ! ஆகாது.
*************************************************
பாடல் எண் : 38
தட்டத்து நீரிலே தாமரை பூத்தது
குட்டத்து நீரில் குவளை எழுந்தது
விட்டத்தி னுள்ளே விளங்கவல் லார்கட்குக்
குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

பொழிப்புரை : தட்டம் - ஆழம் இன்றிப் பரவலாகத் தேங்கியுள்ள நீர். குட்டம் - ஆழமாய்ச் சிறிது இடத்தில் நிற்கும் நீர்; குளத்து நீர் போல்வது முன்னதில் குவளையும், பின்னதில் தாமரையும் பூத்தல் இயல்பு. ஆயினும் இங்கு அவை மாறிக் காணப்படுகின்றன. ஆகவே, இவற்றை விரைந்து சென்று பறியாமல், பக்கத்தில் இருக்கும் மரக்கிளையில் சிறிது நேரம் யாரேனும் காத்திருப்பார்களாயின், இந்த முரண்பாட்டு நிலை நீங்குதல் தெரியவரும்.
*************************************************
பாடல் எண் : 39
ஆறு பறவைகள் ஐந்தத் துள்ளன
நூறு பறவை நுனிக்கொம்பின் மேலன
ஏறு பெரும்பதி ஏழும் கடந்தபின்
மாறுத லின்றி மனைபுக லாமே.

பொழிப்புரை : ஐந்து இல்லங்கள் உள்ளன. அந்த ஐந்திலும் ஆறு வாவல்கள் வாழ்கின்றன. ஐந்து இல்லங்களில் ஒன்றில் உள்ள ஒரு மரத்தின் நுனிக் கிளையில் நூறு வாவல்கள் வாழ்கின்றன. (இந்த இல்லங்களில் எப்படி நாம் குடியிருக்க முடியும்?) வாவல் முதலிய எந்த இடையூறும் இல்லாத வேறோர் இல்லம் உள்ளது. அது போகப் போக உயரமாய் உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஏறு நிலை முறையில் ஏழு பெரிய ஊர்களைக் கடந்தால், அந்த இல்லத்துட் புகலாம்.
*************************************************
பாடல் எண் : 40
கொட்டனம்- செய்து குளிக்கின்ற கூவலுள்
வட்டனப் பூமி மருவிவந் தூறிடும்
கட்டனம் செய்து கயிற்றால் தொழுமியுள்
ஒட்டனம் செய்தெளி யாவர்க்கு மாமே.

பொழிப்புரை : [`அனம்` என்பது ``வட்டனம்`` என்பதில் பண்புப் பெயர் விகுதியாகவும், ஏனைய மூன்றிலும் தொழிற்பெயர் விகுதியாகவும் வந்துள்ளது. `கட்டு` என்பது அடியாக. `கட்டணம், கட்டடம்` என்னும் சொற்கள் இக்காலத்தில் வழங்கக் காண்கின்றோம். இங்கும் `அனம்` என்பதற்கு ஈடாக, `அணம்` என்ற பாட வேறுபாடும் காணப்படுகின்றது. கூலிக் நெற்குற்றுதலை, `கொட்டணம் குற்றுதல்` என்பர். எனவே, இம்மந்திரத்தின் முதற்சீர் நான்கும் முறையே, `கொட்டுதல், வட்டம், கட்டுதல், ஒட்டுதல்` என்னும் பொருளவாம். கொட்டுதல் - நிலத்தைத் தோண்டுதல்.]  நிலத்தைத் தோண்டி, மண் அல்லது மணலை அப்பால் குவிக்கின்ற கிணற்றில், அல்லது ஊற்றுக்குழியில் நீரோடு, சுற்றிலும் மண், அல்லது மணலும் உடன் சேர்ந்துவரும். அந்நீர் கலங்கல் நீராய் இருக்கும். மரத்தாலான வட்டத்தின் மேல் சுடுமட் பலகைகளால் ஓரளவு சுவர் எழுப்பி, அதனைக் கயிற்றால் இறுகக் கட்டிப் புறஞ்சுவரோடு ஒட்டிவைத்தால், மண், அல்லது மணல் வாராது, நீர் மட்டுமே ஊறி வந்து தெளிந்து எல்லார்க்கும் பயன்படும்.
*************************************************
பாடல் எண் : 41
கொட்டுக் குந்தாலி இரண்டே இரண்டுக்கும்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரை வலிதென்பர்
கொட்டுக்குந் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்
இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

பொழிப்புரை : கொட்டு - மண்வெட்டி. குந்தாலி - கோடலி. `இந்த இரண்டே உள்ளன` என்க. `உள்ளன` என்பது சொல்லெச்சம்.

குறிப்புரை : ``இரண்டுக்கும்`` என்பதை இரண்டாம் அடியில், ``குந்தாலிக்கும்`` என்பதன் பின்னர்க் கூட்டுக. இரண்டாம் அடியில் `கோட்டுக் குந்தாலி` என்பது உம்மைத் தொகையாய் நின்றது. அதன் ஈற்றில் நான்கனுருபு. உறழ்பொருளாகிய ஐந்தாவதின் பொருளில் வந்தது. ஈற்றில் உள்ள உம்மை சிறப்பு.  பாரை - கடப்பாரை. ``பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின் - வேருக்கு நெக்குவிடும்``l என்னும் ஔவையார் வாக்கைக் காண்க.
மண்வெட்டி ஈர மண்ணைத்தான் பறிக்கும். கோடாலி மரத்தை மேலோடு வெட்டும். பாரை வலிய நிலைத்தையும் அகழும். மரத்தை வேரேடும் சாய்க்கும். ஆகவே, மண்வெட்டி, கோடாலி இரண்டையும் விடப் பாரை வலியது. ``இரண்டே உள; பாரை வலியது`` என்றதனால், பாரை கிடைத்தற்கரிதாதல் கூறப்பட்டது.
மண்வெட்டி இடைகலை நாடி, இது பூரிப்பால் நோயைப் போக்கும். கோடலி, பிங்கலை நாடி, இஃது இரேசகத்தால் மாசு நீக்கும். பாரை, சுழுமுனை நாடி. இது கும்பகத்தால் இறப்பு நீக்கல், அறியாமையைப் போக்கல் ஆகியவைகளைச் செய்யும். எனவே, முன்னிரண்டடிகளால் வாசி யோகத்தின் சிறப்புணர்த்தப்பட்டதாம்.
இட்டம் - வெளிப்படை பொருளில், `இட்ட+அம்` எனப் பிரித்து, மேகம் பெய்த மழையையும். (அம்-நீர்) உள்ளுறைப் பொருளில் அன்பையும் குறித்தது. அன்பு, சிவ பத்தி.
மழை நீர் நிலத்தையும் எளிதில் அகழும்; மரங்களையும் எளிதில் வேரோடு கல்லிவிடும். ஆகவே அது, மண்வெட்டி, கோடாலி, பாரை மூன்றையும் விட வலியதாம்.
`வாசியோகத்தைவிடப் பத்தி வலிது` என்றபடி,
`ஈசன் அருள் நிலை இவ்வாறு உள்ளது` என்க.
``ஆறு பார்ப்பானுக்கு இரண்டே கண்கள்;
மாறுகோள் இல்லை; மதியுள்ளோர் சொல்லுங்கள்``
என்றால், பின்னடி முன்னடியைச் சார்ந்து வந்ததேயன்றி, உள்ளுறைப் பொருளதாகாது. (ஆறு - வழி, அல்லது யாறு. பார்ப்பான் - பார்ப்பவன்.) அஃதே போல், இங்கு, ``ஈசன் அருள்`` என்பது உள்ளுறைப் பொருள் இன்றி, முற்கூறிய பொருளைச் சார்ந்து நின்றது.
*************************************************
பாடல் எண் : 42
கயலொன்று கண்டவர் கண்டே யிருப்பர்
முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்
பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்
மறையொன்று கண்ட துருவம்பொன னாமே.

பொழிப்புரை : குளத்தில் கயல் மீன்களில் ஒவ்வொன்றை அதன் துள்ளல், பிறழ்ச்சி முதலியவற்றின் கவர்ச்சியால் கண்டு மயங்கினோர் அதைக் கண்டுகொண்டிருப்பதோடே ஒழிவர். (இஃது, `உலகத்தில் மாயையின் விசித்திரத்தில் மயங்கினோர் அம்மயங்குதலோடே ஒழிவர்` என்பதைக் குறித்தது.)  கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது, ``மறை`` என்பது சிலேடையாய், காட்டுப் புதர் மறைவையும், வேதத்தையும் குறித்தது.  ``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.
உருவம் - பொருள். `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க. ``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.  கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின் வழி நில்லாதாரைக் குறித்தது.)
கரையில் முயல் ஒன்றைக் கண்டவர் அதனைப் பிடிக்க அஃது ஓடும் வழியே ஓடி, இறுதியில் பெரும் பயனைப் பெறுவர். (அஃது எங்ஙனமெனில்,) அவ்வழியின் முடிவில் மறைவில் ஒரு பொருள் உள்ளது; அது பொன். (`அதனைப் பெறுவர்` என்றபடி.) (``முயல்`` என்பது சிலேடை வகையால் `முயற்சி` எனப் பொருள் தந்து, சரியை, கிரியை, யோகம் ஆகிய தவங்களைக் குறித்தது. முயல் ஓடி அடையும் புதரில் சில வேளைகளில் புதையல்கள் இருப்பதுண்டு. அஃது இங்குச் சிவஞானத்தைக் குறித்தது.
``மறை ஒன்று கண்டது`` என்னும் தொடரை, வெளிப்படைப் பொருட்டு, `மறைவில் ஒரு பொருள் காணப்பட்டது` எனவும், உள்ளுறைப் பொருட்டு, `வேதம் முடிவாக ஒரு பொருளைக் கண்டது` எனவும் விரித்துக் கொள்க.  உருவம் - பொருள் `அவ்வுருவம்` எனச் சுட்டு வருவிக்க.  ``பொன்`` என்பது, பொன்னையும், பொன்னோடொக்கும் சிவத்தையும் குறித்தது. சிவம் பொன்னாகவும், உயிர் செம்பாகவும் சித்தாந்தத்தில் சொல்லப்படுதல் வெளிப்படை.
கயலைக் காண்போரும், முயலைக் காண்போரும் ஆகிய அவ்விருத் திறத்தாருமன்றித் தனியே நின்று. `நான் கயலைப் பிடிப்பேன், முயலைப் பிடிப்பேன்` என்று வாய்ப்பறை சாற்றுதலையே உறுதிப் பொருளாகக் கொண்ட ஒருவன் யாதொரு பயனையும் பெறாமல், வாய்ப்பறை சாற்றுதலோடே நிற்பன். (இஃது அறம் முதலிய பொருள் நூல்களை ஓதுதல் - பிறருக்கு உரைத்தல்களை மட்டுமே செய்து, தாம் அவற்றின்வழி நில்லாதாரைக் குறித்தது.
``பிறருக்குப் பயன்படத் தாம்கற்ற விற்பார்,
தமக்குப் பயன்வே றுடையார்; ... ... ...
... ... ... தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்`` *
என்றார் குமரகுருபரரும். பூசல் - ஆரவாரம்.
*************************************************
பாடல் எண் : 43
கோரை யெழுந்து கிடந்த குளத்தினில்
ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்தது
நாரை படிகின்றாற் போல்நல்ல நாதனார்
பாரைக் கிடக்கப் படிகின்ற வாறே.

பொழிப்புரை : இயல்பாகவே வலிய கோரைப் புற்கள் முளைத்துப் படர்ந்து கிடக்கின்ற ஒரு குளத்தில், அதற்கு மேல் மெல்லிய ஆரைக் கொடிகளும் தொடர்ந்து படர்ந்துவிட்டன. இந்நிலையில் அந்தக் குளத்தை உடைய நல்ல தலைவர் ஒருவர், அதில் நாரைகள் மூழ்குவதுபோலத் தரையளவும் செல்ல மூழ்குவது எங்ஙனம்?
*************************************************
பாடல் எண் : 44
கொல்லைமுக் காதமும் காடரைக் காதமும்
எல்லை மயங்கிக் கிடந்த இருநெறி
எல்லை மயங்கா தியங்கவல் லார்களுக்(கு)
ஒல்லை கடந்துசென்(று) ஊர்புக லாமே.

பொழிப்புரை : இரண்டு வழிகள் தனித்தனியே பிரிந்து விளங்காமல் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. ஒருவழி மூன்றுகாததூரம் உள்ளது. அதிற்சென்றால், விளைவுள்ள கொல்லையை அடைந்து இன்புறலாம்.  மற்றொரு வழி அரைக்காத தொலைவே உள்ளது. அது கருதி அதிற் சென்றால் அஃது இருள் அடர்ந்த காட்டில் கொண்டுபோய்ச் சேர்க்கும். ஆகவே, அவ்வழிகளில் முக்காத வழியை ஊன்றியுணர்ந்து கண்டு நடக்க வல்லவர் உளரானால், அவர் மேற்குறித்த கொல்லையை யேயன்றி, அதைக் கடந்துள்ள நல்லதோர் ஊரையும் விரைவில் அடையலாம்.
*************************************************
பாடல் எண் : 45
உழவொன்று வித்து ஒருங்கிய காலத்(து)
எழுமழை பெய்யா(து) இருநிலம் செவ்வி
தழுவி வினைசென்று தான்பய வாது
வழுவாது போவன் வளர்சடை யானே.

பொழிப்புரை : வெள்ளிதாய் எழுந்த மேகம் மழை பெய்தல் இல்லை. அப்பொழுது உழவுக்கு வேண்டுவதாகிய விதைகள் சேமித்து வைக்கப்பட்ட இடத்திலே கிடக்க, நிலமும் பதப்படாது, உழவுத் தொழிலும் நிகழ்ந்து பயன் தாராது.  (இதனானே, `கரிதாய் எழுந்த மேகம் மழைபொழிந்த காலத்து, மேற்கூறியன மேற்கூறியவற்றிற்கு மறுதலையாய் நிகழும்` என்பதும் பெறப்படும்.) ஆகவே, மழையைப் பெய்விப்போனாகிய சிவன் பெய்வியாது ஒழிதல் இல்லை.
*************************************************
பாடல் எண் : 46
பதுங்கினும் பாய்புலி பன்னிரு காதம்
ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவ
அதுங்கிய ஆர்கலி ஆரமு தூறப்
பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.

பொழிப்புரை : காட்டிலே வாழ்கின்ற ஒருவன் அங்குள்ள ஒரு புலிக்கு அஞ்சி எங்கே பதுங்கியிருந்தாலும் அந்தப் புலி பன்னிரண்டு காதம் வரையிலும் பாய்கின்றது. அதனால் அவன் அந்தக் காட்டை விட்டு ஒரு கடற்கரையை அடைந்தான். அங்கே புலிப் பாய்ச்சல் இன்றிக் குளிர்ச்சியான அலைகள் அழகாக வந்து வந்து சென்றன. பின் அவன் பெற ஒட்டாமல் ஐவர் வந்து கூர்மையான கருவியாற் குற்றினர். ஆயினும் அவன் அவர்களை வளைத்துக் கொண்டு அடித்துத் துரத்தினான். (பின்பு அவன் அமிர்தத்தை உண்டு மகிழ்ந்தான் என்பதைச் சொல்ல வேண்டுமோ!.)
*************************************************
பாடல் எண் : 47
தோணிஒன் றேறித் தொடர்ந்து கடல்புக்கு
வாணிபம் செய்து வழங்கி வளர்மகன்
நீலிக் கிறைக்குமேல் நெஞ்சின் நிலைதளர்ந்(து)
ஆலிப் பழம்போல் அளிகின்ற அப்பே.

பொழிப்புரை : கடலில் தோணி ஒன்றில் ஏறிப் புகுந்து சென்றும், மீண்டும் தொடர்ந்து வாணிபத்தைச் செய்தும் ஆக்கம் பெற்று வருகின்ற ஒருவன் தனது ஆக்கத்தை மனைவியர்க்குக் கொடுத்து வாழ்க்கை நடத்தச் சொல்லாமல் பரத்தைக்கு வழங்குவானாயின், நாளடைவில் அவன் கவலை மீதூர, ஆலங்கட்டி பழம்போலத் தோன்றிச் சாற்றைத் தாராமல் நீரையே தருதல் போலும் நிலையை அடைவான்.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!