http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 1 May, 2013

திருமந்திரம் - தந்திரம் 09: பதிகம் 24/III. சூனிய சம்பாடனை- பாடல்கள்:48-67.

,
 பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
*************************************************
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:01: குருமட தரிசனம்..............................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:02: ஞானகுரு தரிசனம்..........................பாடல்கள்: 019 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:03: பிரணவ சமாதி..............பாடல்கள்:006
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:04: ஒளிவகை......................பாடல்கள்:017
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:05: பஞ்சாக்கரம்-தூலம்........பாடல்கள்:010
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:06: பஞ்சாக்கரம்-சூட்குமம்.பாடல்கள்...:005

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:07: அதிசூக்கும பஞ்சாக்கரம்.பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:08: காரண பஞ்சாக்கரம்........பாடல்கள்:003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:09: மகா காரணபஞ்சாக்கரம்:பாடல்கள்:004

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:10: திருக்கூத்து.....................பாடல்கள்:002  
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:11: சிவானந்தக் கூத்து..........பாடல்கள்:008
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:12: சுந்தரக் கூத்து................பாடல்கள்:006

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:13: பொற்பதிக் கூத்து..........பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:14: பொற்றில்லைக்கூத்து....பாடல்கள்:013
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:15: அற்புதக் கூத்து..............பாடல்கள்:042
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:16: ஆகாசப்பேறு...................பாடல்கள்:010 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:17: ஞானோதயம்..................பாடல்கள்:011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:18: சத்தியஞானானந்தம்...பாடல்கள்:009
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:19: சொரூப உதயம்...........பாடல்கள்: 011
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:20: ஊழ்................................பாடல்கள்: 006 
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:21: சிவரூபம்......................பாடல்கள்: 003
ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:22: சிவதரிசனம்................பாடல்கள்:008 

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:23: முத்திபேதம் கருமநிருவாணம்.பாடல்கள்:002

ஒன்பதாம் தந்திரம்:பதிக எண்:24: சூனிய சம்பாடனை..........பாடல்கள்: 067 

*************************************************
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -024 
கூடுதல் பாடல்கள்  .........................................(204+002+067=273)

************************************************* 
ஒன்பதாம் தந்திரம் - 24. சூனிய சம்பாடணை : பாடல்கள் 48-67 பாகம்-III
பாடல் எண் : 48
முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்
செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தன
பக்குவம் மிக்கார் படங்கினார் கன்னியர்
நக்குமல ருண்டு நடுவுநின் றாரே.

பொழிப்புரை : முக்காத ஆறு - தனித்தனி ஒவ்வொரு காதத் தொலைவுள்ள மூன்று ஆறுகள். அவை, `உலகியல் ஒழுக்கம், மெய்நெறி ஒழுக்கம், மெய்யுணர்வு` என்பனவாம். அந்த ஆறுகளில் தனித்தனி ஒன்றாக, மூன்று வாழை மரங்கள் உள்ளன. அவை அவற்றால் விளையும், அறமும், அருளும், வீடு பேறுமாம்.
*************************************************
பாடல் எண் : 49
அடியும் முடியும் அமைந்ததோர் அத்தி
முடியும் நுனியின்கண் முத்தலை மூங்கில்
கொடியும் படையுங் கொளும்சார்பை யைந்து
மடியும் வலம்புரி வாய்த்தவ் வாறே.

பொழிப்புரை : வேரும், கிளையும் அமைய வேண்டிய முறையிலே அமைந்த அத்தி மரம் ஒன்று உள்ளது (அத்தி - எலும்பு. அது சிலேடையாய், உள்ளுறையில் உடம்பைக் குறித்தது. உடம்பிற்கு வேர் வித்தியா தத்துவத்தில் உள்ள மாயா தத்துவம். கிளை, பிருதிவி தத்துவம்.)
*************************************************
பாடல் எண் : 50
பன்றியும் பாம்பும்பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துள்
குன்றாமைக் கூட்டித் தராசின் நிறுத்த பின்
குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

பொழிப்புரை : ஒரு குறு நரிக் கூட்டத்திற்குள்ளே, பன்றி, பாம்பு, பசு, குரங்கு இவைகளும் நிறைந்துள்ளன. அவைகளின் இயல்பை முற்றவும், துலாக்கோலில் இட்டு நிறுப்பது போல நுட்பமாக ஆராய்ந்து உணர்ந்தால் அவற்றால் விளையும் துன்பங்களைச் சிறிது சிறிதாகக் குறைக்கும் நிலை உண்டாகும்.
*************************************************
பாடல் எண் : 51
மொட்டித் தெழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்
கட்டுவிட் டோடின் மலர்தலும் காணலாம்
பற்றுவிட் டம்மனை பாழ்பட நோக்கினால்
கட்டுவிட் டாலன்றிக் காணஒண் ணாதே.

பொழிப்புரை : ஓர் இல்லத்திற்குள்ளே சிறிதளவே அரும்பிய அரும்பு ஒன்று உள்ளது. அது மலராமைக்குக் காரணம் அதனை இறுக்கியுள்ள பொருள்கள். ஆகவே, இறுக்கிய பொருள்கள் நீங்கினால், அந்த அரும்பை மலர் நிலையிலும் வைத்துக் காண முடியும். (ஆனால், அரும்பு இல்லத்திற்குள் இருப்பதால், கதிரவன் ஒளி, காற்று முதலியன புக முடியாமையினால், இறுக்கியுள்ள பொருள்கள் நீங்குமாறில்லை.) உடையவள் அந்த இல்லத்தின்மேல் உள்ள பற்றைவிட்டு, அதனை வெற்ற வெளியாகச் செய்தால், இறுக்கிய பொருள்களும் நிங்கும்; அரும்பும் மலரும். ஆகவே, அந்தநிலையை அந்தஇல்லம் வெளியானாலன்றிக் காண இயலாது.
*************************************************
பாடல் எண் : 52
நீரின்றிப் பாயும் நிலத்தினில் பச்சையாம்
யாருமிங் கென்றும் அறியவல் லாரில்லை
கூரும் மழைபொழி யாது பொழிபுனல்
தேரின்இந் நீர்மை திடரின்நில் லாதே.

பொழிப்புரை : வயல்கள் யாவும் மேல் நீர் வந்து பாயவே பயிர்களையுடையவாகும். ஆயினும் ஒரு வயல், மேல் நீர் வந்து பாயாமல் உள்ளிருந்தே ஊறும் நீரை உடையதாய்ப் பயிரை உடையதாகும். அந்த வயலை அறிபவர் ஒருவரும் இல்லை. (அதனால் அவர்கள் வானத்தை நோக்கியிருந்து, `பஞ்சம், பஞ்சம்` என்கின் றார்கள்.) மேற் குறித்த வயலில் வானம் எதுவும், எப்பொழுதும் பொழிதல் இல்லை. இனி மழை நீரில் தன்மையை ஆராயுமிடத்து, அது `மேட்டில் ஏறாது` என்பது தெளிவு. (அதனால் பெய்கின்ற மழை நீரும் அந்த வயலில் ஏறிப் பாய்வதில்லை. ஆகவே, `மழையால் விளையும், மழையின்மையால் பஞ்சமும், என்கின்ற நிலை அந்த வயலிடத்தில் இல்லை.)
*************************************************
பாடல் எண் : 53
கூகைக் குருந்தம தேறிக் குணம் பயில்
மோகம் உலகுக் குணர்கின்ற காலத்து
நாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்
பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

பொழிப்புரை : கூகை, கதிரவன் விளங்கி நிற்கவும் கண் தெரியாது அலமரும் பறவை. அது, சிவம் வில்கி நிற்கவும் அதனை அறிய மாட்டாது அல்லர் உறும் பெத்தான்மாவைக் குறித்தது. கூகை பகற் குருடாயினும் அதற்கு நல்லதொரு குருந்த மரம் கிடைத்து, அதில் வாழ்கின்றது. அஃதாவது, வேதாகம வழக்கும், ஆன்றோர் ஒழுக்கமும் மிக்க கரும பூமி. இருப்பினும், அந்தக் கூகை தன் குருடாதல் தன்மையால், அம்மரத்தில் பற்றுவன விடுவனவற்றையும் விலக்குவன கொள்வன ஆகியனவற்றையும் பிரித்தறிய மாட்டாது, தடுமாறிக் கொண்டிருக்கும் பொழுது அத்தடுமாற்றத்தின் நடுவே தெய்வம் ஒன்று திடீரென அதற்குக் கண்கொடுத்தது. ஆகவே, அந்தத் தெய்வந்தான் அந்தக் கூகைகளை வழிநடத்தும் பாகனும், உற்றுழியுதவும் நண்பனும் ஆகும்.
*************************************************
பாடல் எண் : 54
வாழையும் சூரையும் வந்திடங் கொண்டன
வாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்
வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டு
வாழை இடங்கொண்டு வாழ்கின்ற வாறே.

பொழிப்புரை : ஒருவன் வாழும் இல்லத்தில் வாழைச் செடியும், முள் மிகுந்த பிரப்பங்கொடியும் வளர்ந்து, அதில் உள்ள இடம் முழுவதையும் கவர்ந்து கொண்டன, இந்நிலையில், அதில் வாழவேண்டிய தலைவன் எவ்வாறு வாழ்வது? வாழையை அழிப்பதைவிடப் பிரப்பங்கொடியை வேரோடு அறுத்தெறிவது `கடினம்; கடினம்` என்கின்றார்கள். இருப்பினும் வாழை நல்லது போலத் தோன்றினாலும் வாழ இடம் இல்லாமல் செய்வதால் அதையும், பிரப்பங்கொடியையும் ஒருங்கே அறுத்தெறிந்துதான் வாழ வேண்டும்.
*************************************************
பாடல் எண் : 55
நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்
புனத்துக் குறவன் புணர்த்த கொழுமீன்
விலக்குமீன் யாவர்க்கும் வேண்டின் குறையா
அருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

பொழிப்புரை : குறிஞ்சி நிலத்தவனாகிய குறவன் ஒருவன் அவ்விடத்துத் தன்தொழிலை விடுத்து, அதே நிலத்தை அடைந்து நிலத்தை உழுதான். பின்பு அத்தொழிலையும் முற்ற முடியாமல் இடையே உள்ள கொழுத்த மீனைப் பிடித்துக் கொணர்ந்தான். (`இவன் இந்தத் தொழிலையேதான் தொடர்ந்து செய்து நிலைபெறுவான்` என்பது என்ன நிச்சயம்!) ஆகவே, இவனைப்போல நிலையின்றி வாழ்தலைத் தவிருங்கள். தவிராது வேண்டின் நிற்பின், என்றும் நிலைத்து ஊதியத்தைத் தரக்கூடிய முதலைப் பெறுதலும் இன்றி, கொல்வது போலும் நிச்சல் நிரப்பு`` (வறுமை) வந்து பற்றிக் கொள்ளுதலும் கூடும்.
*************************************************
பாடல் எண் : 56
தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்
விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்
களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்
அளிக்கும் பதத்தொன்றாம் ஆய்ந்துகொள் வார்க்கே.

பொழிப்புரை : தட்டான் - எதிலும் அகப்படாதவன். ஆறு அத்துவாக்களையும் துருவித் துருவி ஆராய்ந்தாலும் அறியப்படாதது ஆன்மா. அதன் அகம், தூல உடம்பு. அதில் வளர்கின்ற பிள்ளை மூச்சுக்காற்று. தளிர்த்தல் - வளர்தல். விளித்தல் - அழைத்தல். சங்கு குறிக்கப்பட்டால் குழந்தைகள் அதனை நோக்கி ஓடுதல் இயல்பு. சங்கு, இங்கு `ஹம்ஸம்` என்னும் அசபா மந்திரம். அதுவே மூச்சினை விட்டும், வாங்கியும் இயக்குதலால், அதனை அக்குழந்தையை அழைக்கும் சங்காகக் கூறினார். அம்மந்திரத்தின் பயனை ஆராய்ந்து உணர் பவர்கட்கு அஃது, அரசனைச் சார்ந்த குயவர் முதலிய சிறு தொழிலாளர்க்கும், காவிதிகள் முதலிய பெருமை யுடைய தொழிலாளர்க்கும் அரசன் இடும் கட்டளையாக முடியும். அக்கட்டளைகளாவன `போ, வா` என்பன. சிறுதொழிலாளர்களை அரசன் அகன்று செல்லும் படியும், பெருந்தொழிலாளர்களை அணுகி வரும்படியும் கூறுவான். `போ` என்பது இரேசித்தலையும், `வா` என்பது பூரித்தலையும் குறித்தன. காவிதிகள், வரி தண்டுவோர். பதம்-சொல். `தனித்தனி ஒன்றாம்` என்க. `அச்சங்கு` எனத் தோன்றா எழுவாய் வருவித்து, `பதத்து ஒன்றாம்` எனமுடிக்க. ``குசவர`` என்றது உபலக்கணம்.
*************************************************
பாடல் எண் : 57
குடைவிட்டுப் போந்தது கோயில் எருமை
படைகண்டு மீண்டது பாதி வழியில்
உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்
அடையார் நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

பொழிப்புரை : தலைவன் ஒருவனது இல்லத்தில் கொட்டிலில் இருந்த எருமை அதைவிட்டுப் புறப்பட்டு மேயப் போந்தது. ஆயினும் உயிர்களைத் துன்புறுத்தும் படைகள் எதிரே வருதலைக் கண்டு அந்த எருமை பாதி வழியிலே திரும்பிவிட்டது. அதையறிந்து அந்தத் தலைவனுடைய அமைச்சன் அந்தப் படைகளை விலக்க, அந்த இல்லத்திற்கு உள்ள ஒன்பது வாயில்களுள் ஒன்றையும் ஒருவரும் அடைக்கவில்லை.
*************************************************
பாடல் எண் : 58
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
ஆகப் படைத்தன ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டொடு நாலு புரவியும்
பாகன் விடாவிடிற் பன்றியும் ஆமே.

பொழிப்புரை : வீரன் ஒருவன் ஓர் யானையையும், பன்னிரண்டு குதிரைகளையும் முறையாக வெளியே ஓட்டி நடத்தி, உள்ளே கொணர்ந்து கட்டிப் பணிபுரிதற்கு ஏற்புடைத்தாக அரசன் வெளிச் செல்லும் பொருள் எட்டும், உள்ள வந்து சேரும் பொருள் பதினெட்டுமாக, ஒன்பது வாயில்களையுடைய ஒரு கூடத்தைக் கட்டிக் கொடுத்தான். வீரன் அதில் முறையாக அந்த யானையையும், குதிரையையும் வைத்து நடத்தாவிடில், அவை பன்றிபோல யாவராலும் இகழப் படுவனவாய், அந்தக் கூடத்தையும அருவருக்கத் தக்கதாகிவிடும்.
*************************************************
பாடல் எண் : 59
பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்
கூசி யிருக்கும் குருகிரை தேர்ந்துண்ணும்
தூசி மறவன் துணைவழி எய்திடப்
பாசி கிடந்து பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை : பாசி படர்ந்த குளம், மலத்தால் மறைக்கப்பட்ட ஆன்ம அறிவு. குளத்தில் இரைதேர்ந்து வாழும் குருகு, (பறவை) அவ்வறிவால் பயன்பெற்று வரும் ஆன்மா. பாசி படர்ந்து கிடத்தலால் குருகு தனக்குரிய இரையை எளிதில் காண இயலவில்லை. வருந்தி வருந்திச் சிறிது காண்கின்றது. அஃதாவது ஆன்மாத் தனக்குரிய சிவத்தை எப்பொழுதாவது, எவையோ சிலமுறையில் அறிகின்றது. கூசியிருத்தல் - உயிரற்றது போல ஒடுங்கியிருத்தல்.
*************************************************
பாடல் எண் : 60
கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டு
கொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டு
வம்பாய் மலர்ந்ததோர் பூஉண்(டு)அப் பூவுக்குள்
வண்டாக் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

பொழிப்புரை : கும்பம் - குடம். இதனைக் கவிழ்த்து வைத்த குடமாகக் கொள்க. கவிழ்த்து வைத்த குடம் கீழே குறுகியும், மேலே விரிந்தும் இருக்கும். அதுபோலப் பிருதிவியிலிருந்து பிரகிருதி முடியப் போகப் போக விரிந்துள்ளன ஆன்ம தத்துவங்கள். ஆகவே அவற்றின் தொகுதியை, ``கும்பமலை`` என்றார். கும்பமலை - கும்பம் போன்ற மலை.
*************************************************
பாடல் எண் : 61
வீணையும் தண்டும் வரிவி இசைமுரல்
தாணுவும் மேவித் தருதலைப் பெய்தது
வாணிபம் சிக்கென் றதுஅடை யாமுனம்
காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

பொழிப்புரை : வீணை, நாதத்தைத் தரும் நரம்புகள். அது கன்ம மலத்தைக் குறித்தது. தண்டு, நரம்புகள் கட்டப்பட்டுள்ள கோல். அது மாயா மலத்தைக் குறித்தது. கோல் பற்றுக்கோடாக நின்று நரம்புகள் நாதத்தைத் தருதல் போல, மாயை பற்றுக்கோடாக நின்று நரம்புகள் கன்மம் விளைவுகள் பலவற்றையும் தருவதாதலை அறிக. இசை முரல் தாணு, வீணை வல்லான். அவன் மாயை கன்மங்களைக் கூட்டிச் செயற்படுத்துகின்ற சிவன். வீணை வல்லான் தன் இசை வன்மையைக் கொடுத்து, அரங்கில் உள்ளவர்களது உள்ளங்களைக் கவர்கின்றான். இஃது அவன் செய்யும் ஒரு வாணிபம் ஆகும். இங்கு அவ்வாணிபம், மாயை கன்மங்களைச் செயற்படுத்தும் முறையால், முன்பு தன்னை நோக்காது பிறவற்றை நோக்கியிருந்த உயிர்களைத் தன்னை நோக்கும் படியாகச் செய்தலைக் குறித்தது. சிக்கென்றது - பயனளித்துவிட்டது. அதனையே முன்பு ``தருதலைப்பெய்தது`` என்றார். தகு - தகுதி; உயிர்களின் பக்குவம்; முதனிலைத் தொழிற்பெயர். அடைத்தல், கடையை அடைத்தல்; அஃதாவது, `வாணிபத்தை விட்டுவிடுதல். அது சிவன் தனது ஐந்தொழிலை நிறுத்திவிடுதல். முத்தி பெற்ற உயிர்களிடத்தில் அவன் ஐந்தொழில் நடாத்துதல் இல்லை. எனவே, கடையை அடைப்பதற்கு முன் வாணிபம் தேவைப்படாத, நிலையான காணியுரிமை வாய்த்துவிட்டது. அஃதாவது, `முத்தி நிலை வாய்த்துவிட்டது` என்பதாம்.
*************************************************
பாடல் எண் : 62
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தஅஃ(து)
அங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வார்இல்லை
திங்கள்புக் கால்இரு ளாவ தறிந்திலர்
தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

பொழிப்புரை : பரத கண்டத்திற்கு வெளியே உள்ள யவனர் பரத கண்டத்தில் வந்து இறங்குவது கொங்கு நாட்டிலே. அஃதாவது சேரநாட்டிலே. அவர்களோடு பரத கண்டத்தவர் வாணிபம் செய்து நல்ல அருங்கலம் முதலியவைகளைப் பெறுதலைப் பரத கண்டத்தில் உள்ளவர்கள் அந்தக் கொங்கு நாட்டில் சென்று பார்த்தால் தான் அறிந்துகொள்ள முடியும். அங்குச் செல்லாமல் தொண்டைநாடு. சோழ நாடு, பாண்டி நாடு இவைகளில் இருந்து கொண்டே அறிய முடியாது.  சந்திரன் உதயமானால் இருளைப் பார்க்கமுடியாது. (அது போலக் கொங்கு நாட்டை அடைந்தால் மேற்குறித்த அறியாமை நீங்கிவிடும்.) ஆயினும் நல்லூழ் உள்ள ஒரு சிலரே கொங்கு நாட்டையடைந்து வாணிபத்தில் நற்பயன் எய்தி வாழ்கின்றார்கள். (ஏனையோர்க்கு அஃது இயலவில்லை.)
*************************************************
பாடல் எண் : 63
போதும் புலர்ந்தது பொன்னிறம் கொண்டது
தாதவிழ் புன்னை தயங்கும் இருகரை
ஏதம்இல் ஈசன் இயங்கும் நெறிஇது
மாதர் இருந்ததோர் மண்டலந் தானே.

பொழிப்புரை : பொழுது விடிந்துவிட்டது. அதனால், மலர்களையுடைய புன்னைமரம் விளங்குகின்ற, கடலின் இக்கரை, அக்கரையாகிய இருகரைகளும் பொன்னிறம் பெற்று விளங்குவன வாயின் ஆகவே, அந்தக் கரைகள் சிவனும், சத்தியும் எழுந்தருளியிருக்கும் இடமாகவும் ஆகிவிட்டன.
*************************************************
பாடல் எண் : 64
கோமுற் றமரும் குடிகளும் தம்முளே
காமுற்ற கத்தி யிடுவர் கடைதொறும்
வீவற்ற எல்லை விடாது வழிகாட்டி
யாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

பொழிப்புரை : செங்கோல் அரசன் உண்மையாகவே மிகவும் அன்பு செலுத்தினாலும் அவனது தன்மையை அறியாத குடிகள் வெளிப்படையாக இன்றி, மறைவாகத் தங்களுக்குள்ளே வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் அவ்வரசனைப் பற்றிப் பல தூற்றுதல் மொழிகளைக் கூறிக்கொள்வார். ஆயினும் கால வரையறையின்றிக் குடிகளுக்கு அவை வாழ வழிவகுத்து வரும் அரசன் தன் கடமையினின்று தவறுவானேயானால், நாம் உணவு முதலியவற்றைப் பெற்று வாழ இயலுமோ! (இயலாது.)
*************************************************
பாடல் எண் : 65
தோட்டத்தில் மாம்பழம் தொண்டி விழந்தக்கால்
நாட்டின் புறத்தில் நரிஅழைத் தென்செயும்
மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்
காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

பொழிப்புரை : தோட்டம் - வேதம், ஆகமம், திருமுறை ஆகிய முதல் நூல்களின் தொகுதி. அதில் பழுத்த மாம்பழம், திருவைந்தெழுத்து. ``வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே`` என்னும் அருட்டிரு மொழியைக் காண்க. தொண்டி விடுதல் - பழுத்து விழுதல். பழமையைக் குறிக்கும் `தொண்டு` என்னும் பெயரடியாகப் பிறந்த வினை. பழுத்த முதியோனை. `தொண்டு கிழவன்` என்பர். ``தொந்தி சரிய, மயிரே வெளிற, நிரை தந்தம் அலைய`` எனத் தொடங்கும் திருப்புகழைக் காண்க. திருவைந்தெழுத்துப் பழுத்து விழுதலாவது, சமயாசாரியர்கள் போன்ற பெயியோர்கள் கருணை மீதூர்ந்து அதனை உலகறிய எடுத்தக் கூறி வலியுறுத்துதல். நாயனார் காலத்திலும் அத்தகைய பெரியோர்கள் இருந்திருக்கலாம்.
``நமச்சி வாய வாஅழ்க நாதன்றாள் வாழ்க`` என்றும்,
``தலையாய ஐந்தினையும் சாதித்துத் தாழ்ந்து
தலையா யினஉணர்ந்தோர் காண்பர் - தலையாய
அண்டத்தான், ஆதிரையான், ஆலாலம் உண்டிருண்ட
கண்டத்தான்` செம்பொற் கழல்`` என்றும்,
``வாயிலே வைக்கு மளவின் மருந்தாகித்
தீய பிறவிநோய் தீர்க்குமே - தூயஏ
கம்பெருமான், தேவியொடு மன்னு கயிலாயத்(து)
எம்பெருமான் ஓரஞ் செழுத்து``
``அஞ்செழுத்துங் கண்டீர் அருமறைக ளாவனவும்,
அஞ்செழுத்துங் கற்க அணித்தாகும், - நஞ்சவித்த
காளத் தியில்யார்க்கும் கண்டற் கரிதாய்போய்,
நீளத்தே நின்ற நெறி`` என்றும் அருளிச்செய்த ஆளுடைய அடிகள், காரைக்காலம்மையார், நக்கீர தேவ நாயனார் முதலிய பெரியோர்களை இங்கு நினைவு கூர்தல் நன்று.
நரி - நரிக்கூட்டம் அதனை, ``நாட்டின் புறத்தன`` என்றமையால், ஒரு கூட்டம் வேதத்திற்குப் புறம்பான. மற்றொரு கூட்டம் வேதத்திற்குள் இருப்பினும் சிவாகமத்திற்குப் புறம்பானது. `இவை எவை` என்பதை அறிந்துகொள்க. இந்த நரிக்கூட்டங்கட்கும், மேற்குறித்த மாம்பழத்திற்கும் என்ன தொடர்பு உண்டாகும். யாதும் தொடர்பு உண்டாகாது. அதனையே, ``நாட்டின் புறத்த நரிஅழைத் தென்செயும்`` என்றார். அழைத்தல் - கூப்பிடுதல்.
இனி, அகப்புறச் சமய நூல்களிலும், அகச்சமய உரைகளிலும் திருவைந்தெழுத்தின் சிறப்புக் குறிக்கப்பட்ட தாயினும், அவர் அதனைத் தெளியமாட்டாது புறக்கணித்துவிடுவர். அத்தனையே, ``காட்டிக் கொடுத்தவர் கைவிட்டவாறு`` என்றார். கொடுக்கப்பட்டவர் கொடுத்தவர் அந்நூல்களின் ஆசிரியர்களும், உரையில் ஆசிரியர்களும். `மாம்பழத்தைக் கனவிலும் கருதாது கூப்பிட்டுக் கொண்டிருக்கின்ற நரிக் கூட்டங்கள் போக, ஒரு சில மக்கட் கூட்டமும் அப்பழத்தைக் காட்டுவார் காட்டிக் கொடுக்கவும் எடுத்து உண்டு பயன்பெற்றில என்பதாம்.
மூட்டிக் கொடுத்த முதல்வன், தோட்டத்தை உண்டாக்கி வளர்த்த தலைவன். அவன் சிவன். தோட்டத்தையுடையான் கருணை காரணமாக, பசித்தவர்க்கு இதன் பழத்தைக் கொடுக்க` என்று தன் ஏவலாளர்க்குச் சொல்லியுள்ளான். அஃதே அவன் ஆணை. எனவே, `பிறவிப் பிணியால் துன்புறுவார்க்குத் திருவைந்தெழுத்தின் சிறப்பினை உணர்ந்தோர் உணர்த்துக` என்பதே சிவனது சங்கற்பம் என்பதும், அவ்வாற்றால் உணர்ந்தோர் உணர்த்தினும் மக்கள் அவரவர் பக்குவ பேதங்கட்கு ஏற்ப அதனைச் செவிமடாதோரும், செவிமடுப்பினும் பேணாதோரும், பேணினும் உட்கிடைப் பொருளை முற்ற உணர்ந்து முழுப் பயனைப் பெறாதோருமாய் உளர்` என்பதும் கூறியவாறு.
*************************************************
பாடல் எண் : 66
புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்
புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்
புலம்பி னவளோடும் போகம் நுகரும்
புலம்பனுக் கென்றும் புலர்ந்தின்று போதே.

பொழிப்புரை : தலைவன் தலைவியர் இன்பமாகக் கூடியிருத்தற்குரிய காலம் இராக்காலம். பொழுது விடிந்துவிட்டால், தலைவன் துயிலை விட்டு வெளியே அறம், பொருள் ஆகியவற்றின் செயல்களில் செல்லுதற்கு உரியன். பொழுது விடிதலைத் தலைவன் தானே உணராவிடினும் அதனை அவனுக்கு, ``கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்`` என்றபடி சிறப்பாகக் கோழி கூவ, அதனுடன் மற்றைப் பறவைகளும் ஒலித்து அறிவிக்கின்றன. அதனால் பொழுது விடிந்ததை நன்குணர்ந்தும் தலைவர் சிலர் விரைந்தெழுந்து வெளிச் செல்வதில்லை. அது நிற்கத் தலைவியருள்ளும் ஒரு சிலர் தலைவனை எழ விடாது புலம்புவர். இவ்வகையில் எவ்வகையிலோ, புட்கள் ஒலித்தும் எழுந்து வெளிச் செல்லாதவர்கட்குப் புட்கள் ஒலித்தாலும், மற்றும் என்ன நிகழ்ந்தாலும் எப்பொழுது பொழுது விடிவதேயில்லை. (பகலாயினும் இரவேயாய் இருக்கும்.)
*************************************************
பாடல் எண் : 67
தோணிஒன் றுண்டு துறையில் விடுவது
ஆணி மிதித்துநின்(று) ஐவர்கோல் ஊன்றலும்
வாணிபம் செய்வார் வழியிடை யாற்றிடை
ஆணி கலங்கின் அதுஇது ஆமே.

பொழிப்புரை : அடித் தட்டினைத் தக்கபடி மிதித்து, குறிப்பிட்ட ஐந்துபேர் ஓட்டினால், சென்று சேர வேண்டிய துறையில் கொண்டு போய் விடுகின்ற தோணி ஒன்று உள்ளது. (அது திருவைந்தெழுத்து மந்திரமாகும். ``அஞ்செழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை`` என ஆளுடைய அடிகளும் அருளிச் செய்தார். ``ஆணி`` என்றது அடித்தட்டினை. அதனைத் தக்கபடி மிதித்தலாவது பளு சமமாக இருக்கும்படி வைத்தல். படகின் அடித்தட்டுப் பளுவைத் தாங்கி நிற்பது. பளு சமமாய் இல்லாவிடில் தோணி புரண்டுவிடும். ``தோணி`` என்றது ஒரு மரத்தோணியன்று படகேயாம். பளுவைச் சமமாக வைதத்ல் அது வல்லார்க்கே கூடுவது. அதனால் இங்கு அது திருவைந்தெழுத்தின் மேலோட்டமான பொருளாகாது, உள்ளீடான பொருளாய் நிற்றலாம். அஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன் எனும் நூல்களில் ஐந்தெழுத்திற்கும் சொல்லப்பட்ட ஐந்து பொருள்கள்.) அவைகளையே இங்கு ``ஐவர்`` என்றார். அவர்கள் கோல் ஊன்றி ஓட்டுதலாவது, திருவைந்தெழுத்தை, `தூலம், சூக்குமம், அதிசூக்குமம், காரணம், மகாகாரணம்` என்பனவாகப் படிப்படியாக நுணுகி நுணுகி வர உணர்த்துதல்த. ``அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி``l என, ஐந்தையும், ``ஐந்து பதம்`` என அருளிச் செய்தமையும் உணரற்பாற்று.
*************************************************

மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!