http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 28 April, 2012

திருமந்திரம்-தந்திரம்02-பதிகம்:14/1. கர்ப்பகிரியை (பாடல்:01-20/40) பகுதி -I







 


பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.
  
========================================================================
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:01: அகத்தியம்..................................பாடல்கள்: 002


இரண்டாம் தந்திரம்:பதிக எண்:02: பதிவலியில் வீரட்டம் எட்டு ....பாடல்கள்: 008
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:03: இலிங்க புராணம் .....................பாடல்கள்: 006 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:04: தக்கன் வேள்வி..........................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:05: பிரளயம் ......................................பாடல்கள்: 005

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:06: சக்கரப் பேறு ...............................பாடல்கள்: 004
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:07: எலும்பும் கபாலமும்..................பாடல்கள்: 001 
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:08: அடிமுடி தேடல்..........................பாடல்கள்: 010
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:09: சருவசிருட்டி ...............................பாடல்கள்: 030
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:10: திதி.................................................பாடல்கள்: 009
இரண்டாம் தந்திரம்:பதிக எண்:11: சங்காரம்.....................................பாடல்கள்: 010 

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:12: திரோபவம்.................................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:13: அனுக்கிரகம்...............................பாடல்கள்: 009

இரண்டாம் தந்திரம்:பதிக எண்:14: கர்ப்பக் கிரியை ..........................பாடல்கள்: 040

=================================================(பாடல்கள்: 112 + 040 = 152 )


இரண்டாம் தந்திரம் –பதிக எண்:14. கர்ப்பக் கிரியை 
(பாடல்கள்: 01-20/40) பகுதி-I
பாடல் எண் : 1
ஆக்குகின் றான்முன் பிரிந்த இருபத்தஞ்
சாக்குகின் றானவன் ஆதிஎம் ஆருயிர்
ஆக்குகின் றான்கர்ப்பக் கோளகை யுள்ளிருந்
தாக்குகின் றான்அவன் ஆவ தறிந்தே.  

பொழிப்புரை :  ஓர் உயிரைக் கருப்பையுள் தோற்றுவிக்கின்ற சிவ பெருமான் அதன் முன்னைத் தூல உடம்போடு ஒழிந்த ஐந்து ஞானேந் திரியம், ஐந்து கன்மேந்திரியம், ஐந்து பூதம், சத்தாதி ஐந்து விடயம், வச னாதி ஐந்து விடயம் என்னும் இருபத்தைந்தையும் மீள அதன் சூக்கும உடம்பினின்றும் தோற்றுவிப்பான். அங்ஙனம் தோற்றுவித்தல், அக் கருப்பையுள் அத்தோற்றத்திற்குத் தடையாகவரும் ஊறுபாடு களையறிந்து அவற்றை நீக்குதற்பொருட்டு அவ்விடத் திருந்தேயாம்.
=================================================
பாடல் எண் : 2
அறிகின்ற மூலத்தின் மேல்அங்கி அப்புச்
செறிகின்ற தானத்துச் செந்தாள் கொளுவிப்
பொறைநின்ற இன்னுயிர் போந்துற நாடிப்
பறிகின்ற பத்தெனும் பாரஞ்செய் தானே.  

பொழிப்புரை :  ஆறு ஆதாரங்களினும் முதலாவதாக அறியப் படுகின்ற மூலதாராத்திற்குமேல் உதராக்கினியும், உணவாக உண்ணப் படும் நீரும் நிறைந்திருக்கின்ற சுவாதிட்டானத் தானத்தில், `பூதசார சரீரம், யாதனா சரீரம்` என்பவற்றிற்கேனும், அவை இரண்டுமின்றித் தனக்கேனும் (சிவனுக்கேனும்) சுமையாய் நின்ற உயிர் வந்து பொருந்துமாற்றை எண்ணி, முதற்கண் செந்நீராகிய நிலைக்களத்தை நிற்பித்து, அந்நிலையை அக்கரு வெளிப்போதுதற்குப் `பத்துத் திங்கள்` என்னும் சுமைக் காலத்தையும் சிவபிரான் ஆக்குகின்றான்.
=================================================
பாடல் எண் : 3
இன்புறு காலத் திருவர்முன்பூறிய
துன்புறு பாசத் துயர்மனை வானுளன்
பண்புறு காலமும் பார்மிசை வாழ்க்கையும்
அன்புறு காலத் தமைத்தொழிந் தானே.  

பொழிப்புரை :  முதற்கண் தந்தை தாயர் இன்பம் நுகர்கின்ற காலத்து அவர்தம் உடம்பினின்றும் வெளிப்படும் வெண்டுளி செந்துளிகளால் அமைந்த இல்லமாவது உடம்பு துன்பத்தைத் தருகின்ற வினையின்வழி அதனை நுகரும் அவ்வில்லமாகிய உடம்பின்கண் அதன் தலைவ னாகிய உயிர்க்கிழவன் பலவகைப் பண்புகள் பெற்று வாழும் காலத்தையும், அக் காலத்து அவனுக்கு உளவாகின்ற வாழ்க்கை முறைகளையும் கருவைத் தோற்றுவித்து வளர்க்கத் திருவுளம்பற்றிய அப்பொழுதே அதன்கண் அமையுமாறு சிவபெருமான் அமைத்து விடுகின்றான்.
=================================================
பாடல் எண் : 4
கருவை ஒழிந்தவர் கண்டநால் மூவேழ்
புருடன் உடலில் பொருந்தும்மற் றோரார்
திருவின் கருக்குழி தேடிப் புகுந்த
துருவம் இரண்டாக ஓடி விழுந்ததே.

பொழிப்புரை :  மெய்யுணர்வால் பிறப்பின் நீங்கிய அறிவர் கண்ட, நில முதல் புருடன் ஈறாக உள்ள இருபத்தைந்து கருவிகளும் (தத்துவங்களும்) தந்தை உடலிலே பொருந்தியிருந்து, பின் தாயது கருப்பைக்குள்ளே, ஆண், பெண் இரண்டில் யாதேனும் ஓர் உருவமாமாறு புகும். இதனை மெய்யுணர்வில்லார் அறியார்.
=================================================
பாடல் எண் : 5
விழுந்தது லிங்கம் விரிந்தது யோனி
ஒழிந்த முதல்ஐந்தும் ஈரைந்தொ டேறிப்
பொழிந்த புனல்பூதம் போற்றுங் கரணம்
ஒழிந்த நுதல்உச்சி உள்ளே ஒளித்ததே. 

பொழிப்புரை :  தந்தையது உடலில் பொருந்தியிருந்த இருபத்தைந்து கருவிகளும் தாயின் கருவில் புகுதற்கு அவ்விருவரது கூட்டம் நிகழும். அப்பொழுது ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, பூதம் ஐந்து ஆகிய பதினைந்து கருவிகளால் பருவுடம்பு வளருமாறு தந்தை உடம்பினின்றும் வெண்பால் (சுக்கிலம்) பொழியும். அதன்பின் பருவுடம்பு வளர ஏனைத் தன்மாத்திரைகளும், அந்தக்கரணங்களும் அவ்வுடம்பினுள் புருவ நடுவிலும், தலையிலும் பொருந்தி நிற்கும்.
=================================================
பாடல் எண் : 6
பூவின் மணத்தைப் பொருந்திய வாயுவும்
தாவி உலகில் தரிப்பித்த வாறுபோல்
மேவிய சீவனில் மெல்லநீள் வாயுவுங்
கூவி அழும்தான் குறிக்கொண்ட போதே. 

பொழிப்புரை :  பூவின் மணத்தைக் காற்றே உலகிடை எங்கும் பரவச்செய்தல்போல, நுண்ணுடம்பின் செயல்களைத் தச வாயுக்களே பருவுடம்பில் கூவி அழுதல் முதலிய தொழில்களாக நிகழச் செய்யும், அவ்வாறு செய்விக்கச் சிவபெருமான் நினைந்தபொழுது.
=================================================
பாடல் எண் : 7
போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும் ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடானெனிற் பன்றியு மாமே.

பொழிப்புரை :  குண்டலியும், `பன்னிரண்டு அங்குலம்` என்னும் அளவு சொல்லப்படுகின்ற பிராணவாயுவும் ஆகிய இவற்றைத் தலைவனாகிய சிவன் தூண்டாதுவிடுவானாயின், `தூலம், சூக்குமம், பரம்` என்னும் சரீரங்களும் அவற்றிற் பொருந்தியுள்ள தத்துவ தாத்துவிகங்களும் சிறிதும் பயன்படாதொழியும்.
=================================================
பாடல் எண் : 8
ஏற எதிர்க்கில் இறையவன் றானாகும்
மாற எதிர்க்கில் அரியவன் றானாகும்
நேரொக்க வைக்கின் நிகர்போதத் தானாகும்
பேரொத்த மைந்தனும் பேரரசாளுமே.  

பொழிப்புரை :  தந்தையும் தாயும் கூடுங்காலத்துக் காமம் மிக்கிருப்பின், பிறக்கும் மகன் தாமத குணம் மிக்கிருப்பான். காமம் குறைந்திருப்பின், மகன் சத்துவகுணம் மிக்கிருப்பான். காமம் மிகுதலும் குறைதலும் இன்றி அளவிற்பட்டதாக இருப்பின், மகன் இராசதகுணம் மிக்கிருப்பான். இம்முத்திறத்து மைந்தருள் சத்துவ குணம் மிக்கவன் அரசனாதற்கும் உரியவனாவான்.
=================================================
பாடல் எண் : 9
ஏயங் கலந்த இருவர்தஞ் சாயற்றுப்
பாயுங் கருவும் உருவா மெனப்பல
காயங் கலந்தது காணப் பதிந்தபின்
மாயங் கலந்த மனோலய மானதே.

பொழிப்புரை :  காமம் பொருந்திய ஒருவனும் ஒருத்தியுமே பற்றுக் கோடாக நின்று அவரின் நீங்கிப் பாய்கின்ற கருமுதற் பொருள்கள், பின்பு கருப்பதிந்து உருவாதற் பொருட்டுப் பதிவிற்கு முன்பே அப்பொருள்களில் அவர் உடம்புகளிலே பல கூட்டுப்பொருள்கள் வந்துசேர, கருப் பதிந்தபின் அக்கருவிற்குக் குணங்கள் மேற்கூறிய முறையில் அமையும்.
=================================================
பாடல் எண் : 10
கற்பத்துக் கேவலம் மாயாள் கிளைகூட்ட
நிற்குந் துரியமும்பே தித்து நினைவெழ
வற்புறு காமியம் எட்டாதல் மாயேயம்
சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே. 

பொழிப்புரை :  கருப்பையுள் முதற்கண் அதீத நிலையில் உள்ள குழவிக்குப் பின் `மாயை` (அசுத்த மாயை) என்பவள் தனது சுற்றமாகிய வித்தியா தத்துவங்களைச் சேர்ப்பிக்கத் துரிய நிலையைப் பெறும். பின்பு அத் துரிய நிலையும் நீக்கிச் சுழுத்தி சொப்பன சாக்கிரங்களாகிய நிலைகள் கூடுமாறு வலிமை மிக்க வினைப் பயன்களாகிய `தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம்` என்னும் பாவங்கள் எட்டும் மாயேயமாய்ப் பொருந்தும். அதனால், குழவி தனது வினை நுகர்ச்சிக்குரிய தன்மைகள் யாவும் நிரம்பப் பெறும்.
=================================================
பாடல் எண் : 11
என்பால் மிடைந்து நரம்பு வரிக்கட்டிச்
செம்பால் இறைச்சி திருந்த மனைசெய்து
இன்பால் உயிர்நிலை செய்த இறையோங்கும்
நன்பால் ஒருவனை நாடுகின் றேனே.  

பொழிப்புரை :  எலும்புகளைக் கழிகளாகவும், நரம்புகளைக் கயிறுகளாகவும், குருதியாகிய நீராற் பிசைந்த இறைச்சியாகிய மண்ணைச் சுவர்களாகவும் பொருந்த அமைத்து, உயிர் இன்புற்று வாழ்தற் பொருட்டு இல்லம் ஒன்றை ஆக்கி, அளித்த, நீதி மிக்கவனாம் நல்லவனாகிய ஒருவனை (சிவபெருமானை) நான் நினைக்கின்றேன்.
=================================================
பாடல் எண் : 12
பதஞ்செய்யும் பால்வண்ணன் மேனி பகலோன்
இதஞ்செய்யும் ஒத்துடல் எங்கும் புகுந்து
குதஞ்செய்யும் அங்கியின் கோபந் தணிப்பான்
விதஞ்செய்யு மாறே விதித்தொழிந் தானே.  

பொழிப்புரை :  கருவிற்குத் தூலதேகம் அமைந்த பின்னர் தாயது சந்திரகலையாகிய மூச்சுக் காற்றுச் சூரிய கலையொடு மாறு கொள்ளாமல் இயங்கிக் குழவியது தூலதேகம் முழுதும் பரவிக் குளிர்ச்சியைத் தந்து வளரப்பண்ணும். அவளது சூரிய கலையாகிய மூச்சுக் காற்றும் அவ்வாறே சென்று குழவியின் உடலில் வெப்பத்தை உண்டாக்கி அதனை அழியாதிருக்கச் செய்யும். இவ்வாறு அவ்விரு வகைக் காற்றினையும் சிவபெருமான் தாயது மூலத்தின்கண் உள்ள வெப்பம் மிக்கெழாது அளவில் நிற்குமாறு அமைக்கின்றான்.
=================================================

பாடல் எண் : 13
ஒழிபல செய்யும்வினையுற்ற நாளே
வழிபல நீராட்டி வைத்தழு வாங்கிப்
பழிபல செய்கின்ற பாசக் கருவைச்
சுழிபல வாங்கிச் சுடாமல்வைத் தானே.  

பொழிப்புரை :  :  கருவினுள் வீழ்ந்த உயிர் அவ்விடத்தே இறக்கும் ஊழ் உளதாயின், பதிந்த கருவைச் சிவபெருமான் பலநிலைகளில் பல்லாற்றான் அழிந்தொழியச் செய்வான். அவ்வாறின்றிப் பிறந்து வாழும் ஊழ் உளதாயின், இடையூறுகள் பலவற்றால் தாக்கப்படுகின்ற வினைக்கட்டுடைய அக்கருவைச் சிவபெருமான் அது பிறப்பதற்கு முன்னுள்ள இடைக்காலத்தில் சுழிகளில் அகப்படாது ஆற்றில் நீராட்டுதல் போலவும் எரிகின்ற வைக்கோற் குவையிலிருந்து வாங்கிச் சுடாது வைத்தல் போலவும் தாயது வயிற்றில் உள்ள நீராலும், நெருப்பாலும் அழியாது காப்பான்.
=================================================
பாடல் எண் : 14
சுக்கில நாடியில் தோன்றிய வெள்ளியும்
அக்கிர மத்தேதோன் றும்மவ்வி யோனியும்
புக்கிடும் எண்விரல் புறப்பட்டு நால்விரல்
அக்கரம் எட்டும்எண் சாணது வாகுமே.  

பொழிப்புரை :  தந்தையது வெண்டுளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த வெண்டுளியும், அவ்வாறே தாயது செந்துளி தோன்றும் நரம்பு வழியாகப் போந்த செந்துளியும் கலந்து, பன்னிரண்டு அங்குலமாகிய தாயது மூச்சுக்காற்றில் நான்கு அங்குலம் புறத்தே போந்தொழிய, எட்டங்குலமே உட்புகுதலால், அக்கரு தனது கையால் எண்சாண் அளவினதாய் வளரும்.
=================================================
பாடல் எண் : 15
போகத்துள் ஆங்கே புகுந்த புனிதனும்
கோசத்துள் ஆகங் கொணர்ந்த கொடைத்தொழில்
ஏகத்துள் ஆங்கே இரண்டெட்டும் மூன்றைந்தும்
மோகத்துள் ஆங்கொரு முட்டைசெய் தானே.  

பொழிப்புரை :  ஒருவன், ஒருத்தி ஆகிய இருவரது இன்பநுகர்ச்சிக் காலத்தில் கருவைத் தோற்றுவிக்கப் புகுந்த சிவபெருமான், அவ்வொருத்தியது கருப் பையினுள் ஓர் உடம்பைக் கொணர்ந்து வைத்த கொடைத் தொழிலாலே வெள்ளிய துளிகள் பலவற்றுள் ஒரு துளியின்கண்ணே முப்பத்தொரு கருவிகள் ஆகிய மாயா காரியங்கள் சேர, அவற்றால் முதற்கண் ஒரு பிண்டத்தை அமைக்கின்றான்.
=================================================
பாடல் எண் : 16
பிண்டத்தி னுள்ளுறு பேதைப் புலன்ஐந்தும்
பிண்டத்தி னூடே பிறந்து மரித்தன
அண்டத்தி னுள்ளுறு சீவனும் அவ்வகை
அண்டத்து நாதத் தமர்ந்திடுந் தானே. 
பொழிப்புரை :  உடம்பிலே பொருந்தியுள்ள மயக்கத்தை உடைய ஐம்பொறிகளும் அவ்வுடம்பையே என்றும் பற்றுக்கோடாகக் கொள்கின்றன. அதுபோலவே முட்டை வடிவாகத் தோன்றும் கருவைப் பற்றியுள்ள உயிரும் அக்கருவையே பற்றுக்கோடாகக் கொண்டு தாயின் கருப்பைக்குள் இருக்கும்.
=================================================
பாடல் எண் : 17
இலைப்பொறி யேற்றி யெனதுடல் ஈசன்
அலைப்பொறி யிற்கரு ஐந்துடல் நாட்டி
நிலைப்பொறி முப்பதும் நீர்மை கொளுவி
உலைப்பொறி ஒன்பதில் ஒன்றுசெய் தானே.  

பொழிப்புரை :  எனது உடலில் நிற்கின்ற சிவபெருமான் ஒவ்வோர் உயிர்க்கும் கருவில் அதன் விதியாகிய எழுத்தோலையைத் தலையிலே வைத்து, தானே இயங்குதல் உடைய யந்திரம் போன்ற ஐந்து உடல்களை நிலைபெறச் செய்தளித்து, அவ் ஐந்துடல்களில் வேறு பட்ட, நிலையான முப்பது கருவிகளை அமைத்து, ஒன்பது வாய்களை உடைய ஒரு துருத்தியைச் செய்து தருகின்றான்.
=================================================
பாடல் எண் : 18
இன்புற் றிருவர் இசைவித்து வைத்தமண்
துன்பக் கலசம் வனைவான் ஒருவனே
ஒன்பது நீர்ச்சால் கலசம் பதினெட்டு
வெந்தது சூளை விளைந்தது தானே.  

பொழிப்புரை :  :  ஒருவனும், ஒருத்தியும் ஆகிய இருவர் இன்பம் நுகர்தற்கண் பொருந்த வைக்கும் மண்ணால் துன்பத்திற்கு ஏதுவான கலங்கள் பலவற்றையும் செய்பவன் ஒருவனே. அப் பலகலங்கள் ஆவன, நீர்ச்சால்கள் ஒன்பதும், அவற்றில் நீரை முகந்து ஆள்கின்ற கலயங்கள் பதினெட்டுமாம். இவ்வாறு குயவனது சூளை கலங்களை உருவாக்கிற்று. அதனாலே கலங்கள் உளவாயின.
=================================================
பாடல் எண் : 19
அறியீ ருடம்பினில் ஆகிய ஆறும்
பிறியீரதனில் பெருகுங் குணங்கள்
செறியீர் அவற்றினுட் சித்திகள் இட்ட
தறிவீர் ஈரைந்தினு ளானது பிண்டமே.  

பொழிப்புரை :  உலகீர், வாழ்க்கையில் வரும் நிகழ்ச்சிகளாகிய ஆறும் கருவிலே அமைக்கப்பட்டன என்பதை அறியமாட்டீர். அதனால், அவற்றில் அழுந்துதலின்றி நீங்கமாட்டீர். அவ்வுடம் பிற்றானே நல்லன பல பெருகுமாற்றையும், சிவபெருமான் அந்நல்லனவற்றால் பல பயன்கள் விளைய வைத்திருத்தலையும் உணர்ந்து அடையமாட்டீர்; ஆயினும், நீவிர் அனைவீரும் பிண்டமாகிய உங்கள் உடம்புகள் தாயர்தம் வயிற்றில் பத்துமாதம் தங்கி வளர்ந்து வந்ததை அறிவீர்கள்.
=================================================
பாடல் எண் : 20
உடல்வைத்த வாறும் உயிர்வைத்த வாறும்
மடைவைத்த ஒன்பது வாய்தலும் வைத்துத்
திடம்வைத்த தாமரைச் சென்னியுள் அங்கிக்
கடைவைத்த ஈசனைக் கைகலந் தேனே. 

பொழிப்புரை :  சிவபெருமான், உடலை அமைத்து, அதில் உயிரைக் கூட்டிய குறிப்பை உணர்ந்து, அவ்வுடல் நிலை பெறுதற் பொருட்டு அதில் நீர்மடைபோல் உள்ள ஒன்பான் துளைகளையும் அமைத்து, உறுதிப்பாடுள்ள நெஞ்சத் தாமரையின் மேல் தனது உருவத்தைத் தீயின் முனைபோல வைத்துள்ள அவனையே கூடி நான் இன்புறுகின்றேன்.
=================================================


மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரமாம் திருவாசகத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருவாசகரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!