http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 29 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :34 & 35. அசற்குரு நெறி, சற்குரு நெறி - பாடல்கள்: 005&018.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............ பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:32: ஐந்திரியம் அடக்கும் அருமை .. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:33: ஐந்திரியம் அடக்கும் முறைமை .பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:34: அசற்குரு நெறி......பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:35: சற்குரு நெறி..........பாடல்கள்: 018

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -035
கூடுதல் பாடல்கள்  (308+005+018 =331)

==============================================
ஏழாம் தந்திரம் - 34. அசற்குரு நெறி பாடல்கள்: 005
பாடல் எண் : 1
உணர்வொன் றிலாமூடன் உண்மைஓ ராதோன்
கணுவின்றி வேதா கமநெறி காணான்
பணிவொன் றிலாதோன் பரநிந்தை செய்வோன்
அணுவின் குணத்தோன் அசற்குரு வாமே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை : ``அசற்குருவாய்`` என்னும் பயனிலையை ``மூடன்`` முதலிய எல்லாவற்றோடும் தனித்தனி கூட்டுக. ``உணர்வு`` என்றது நல்லுணர்வை. `ஒன்று` இரண்டும் `சிறிது` என்னும் பொருளன. `ஒன்றும்` என்னும் இழிவு சிறப்பும்மைகள் தொகுக்கப்பட்டன. உண்மை - பொருள்களின் உண்மையியல்பு. `தத்துவம்` எனப்படுவது இதுவே. கணு - எல்லை, என்றது ஏகதேசத்தை. எனவே, `சற்குரவ ராவார் வேதாகமங்களை முற்ற உணர்ந்திருப்பர்` என்பது போந்தது. பரநிந்தை, புறங்கூறல். அணு - உயிர். அதற்கு இயற்கையாய் உள்ளது அறியாமை. அஃதாவது உணர்த்தினும் உணர மாட்டாமையாம். ``கொடிறும் பேதையும் கொண்டது விடா`` (தி.8 போற்றித் திருவகவல், 63) என்று அருளிச் செய்தது காண்க. `கூறப்பட்ட குற்றங்களுள் ஒன்றையே உடையராயினும் அவர் சற்குருவாகாது, அசற்குரு வேயாவர்` என்றற்கு `அசற்குருவாமே` என்பதனைத் தனித்தனி கூட்டிக் கொள்ள வைத்தார். அசத்தை உணர்த்துவோன் அசற்குரு.
இதனால், `அசற்குருவாவரிடத்துக் காணப்படும் குற்றங்கள் இவை` என்பது கூறி, அவர் `இன்னார்` என்பது உணர்த்தப்பட்டது.
=======================================
பாடல் எண் : 2
மந்திரம் தந்திரம் மாயோகம் ஞானமும்
பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்ச்
சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண் பொருட்டு
அந்தகர் ஆவார் அசற்குரு வாமே.

பொழிப்புரை :  சற்குரவராதற்கு உரியன பலவற்றை உடையோரும் தமது உபதேசத்தை உணரும் தகுதியில்லாதோர்க்கு அவர் வழியாகப் பெறப்படும் சில பயன் கருதி அவரை விலக்கமாட்டாராய் அவர்க்கு உபதேசம் செய்வாராயின், அவரும் அறியற்பாலனவற்றை அறியாத அறிவிலிகளாய், அசற்குரவராய் விடுவர்.
=======================================
பாடல் எண் : 3
ஆமா றறியாதோன் மூடன் அதிமூடன்
காமாதி நீங்காக் கலதி கலதிகட்கு
ஆமாறச் சத்தறி விப்போன் அறிவிலோன்
கோமான் அலன்அசத் தாகுங் குரவனே.

பொழிப்புரை :  `தக்கது இன்னது; தகாதது இன்னது` என உணரும் உணர்வில்லா தவன் மூடன்` என்பது உலகம் அறிந்தது. ஆயினும், அவ்வாறு அவற்றை அறிந்தும் காமம் முதலிய குற்றங்களின் நீங்கி, நல்லவற்றைப் பற்றியொழுகும் நல்லொழுக்கம் இல்லாதவன் அறிவுடையவன் ஆயினும் அதிமூடன் ஆவான். இனிக்குற்றங்களின் நீங்கி வல்லவற்றையே கடைப்பிடித்தொழுகும் நல்லொழுக்கம் உடையனாயினும் நல்லனவற்றை மதித்து உவந்து ஏற்கும் பண்பின்றி அவற்றை உணர்த்துவோரையும் இகழ்கின்ற கீழ்மக்கட்கு நல்லுபதேசத்தைச் செய்வானாயின் அவனும் அறிவிலியேயாவான். ஆகையால் அத்தகையோனும் சற்குருவாகாது, அசற்குருவாயாவன்.
=======================================
பாடல் எண் : 4
கற்பாய கற்பங்கள் நீக்காமல் கற்பித்தால்
தற்பாவம் குன்றும் தனக்கே பகையாகும்
நற்பால் அரசுக்கும் நாட்டிற்கும் கேடாகும்
முற்பாலே நந்தி மொழிந்துவைத் தானே.

பொழிப்புரை :  சற்குருவாவான் தன்னை அடைந்த மாணாக்கனிடத்தில் உள்ள குற்றங்களை முதலில் நல்லனவற்றைக் கூறும் முறையால் நீக்கி அதன் பின்பே ஞானத்தை உணர்த்துதல் வேண்டும். அவ்வாறு செய்யாமலே ஞானத்தை உணர்த்தினால் தனது ஆசிரியத் தன்மையுங் கெட்டுத் தனது செய்கையே தனக்குத் தீங்காய் முடியும். அதனால் நாட்டில் புல்லரே தலையெடுப்பர் ஆதலின் அரசு நல்லரசாய் இருப்பினும் அதற்கும் கேடு விளையும். நாடும் தீய நாடாகி விடும். இதனைப் படைப்புக் காலத்திற்றானே சிவன் தனது ஆகமங்களில் சொல்லி வைத்துள்ளான்.
=======================================
பாடல் எண் : 5
குருடர்க்குக் கோல்காட்டிச் செல்லுங் குருடர்
மருளுற்றுப் பாழ்ங்குழி வீழ்வர்முன் பின்அக்
குருடரும் வீழ்வர்கள் முன்பின் அறவே
குருடரும் வீழ்வார் குருடரோ டாகிலே.

பொழிப்புரை :  குருடர் சிலர், வேறு சில குருடருடனே சேர்ந்து வழிச் செல்வார் களாயின் எல்லோருமாக `முன், பின்` என்பதின்றி ஒருங்கே குழியில் விழுவதைத் தவிர வேறு என்ன நிகழும்! ஆகையால், சில குருடர்கள் வேறுசில குருடர்களுக்கு `நாங்கள் உங்கட்கு வழிகாட்டுகின்றோம்` என்று சொல்லி அவர்கள் கையில் கோலைக் கொடுத்துத் தாங்கள் அக்கோலைப் பற்றிக் கொண்டு முன்னே செல்வாராயின், முதலில் வழிகாட்டும் குருடர் பாழ்ங்குழியில் வீழ்வர். பின்பு அவர்களால் அழைத்துவரப்பட்ட அந்தக் குருடர்களும் அந்தக் குழியிலே வீழ்வார்கள், (அது தான் நிகழும்.)
=======================================
ஏழாம் தந்திரம் - 35. சற்குரு நெறி – பாடல்கள்: 018
பாடல் எண் : 1
தாள்தந் தளிக்கும் தலைவனே சற்குரு
தாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்
தாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்
தாள்தந்து பாசம் தணிக்கும் வசனத்தே.

பொழிப்புரை :   சற்குருவே தன்னையடைந்த மாணாக்கர்க்குத் திருவருளை வழங்கிக் காக்கும் பதியாவான். அவனையடைந்த மாணவனுக்கு அவன் தனது திருவடியைச் சென்னிமேல் சூட்டித் திருவடி ஞானத்தை அருளுமாற்றால் மாணவன் தனது உண்மை இயல்பை அறியும்படி செய்யவல்லான். அவன் தனது ஒரு வார்த்தையாலும், திருவடி சூட்டலாலும் தன்னை யடைந்த மாணவனாகிய பசுவை மாயா கருவிகளினின்றும் விடுவித்து, ஆணவக் கட்டினையும் அவிழ்த்து விடுவான்.
=======================================
பாடல் எண் : 2
தவிரவைத் தான்வினை தன்னடி யார்கோள்
தவிரவைத் தான்சிரத் தோடுதன் பாதம்
தவிரவைத் தான்நமன் தூதுவர் கூட்டம்
தவிரவைத் தான்பிற வித்துயர் தானே.

பொழிப்புரை :   (சற்குரு) தன் அடியார் வினை நீங்கவும் ஒன்பான் கோள்களின் தீங்கு நீங்கவும் யம தூதரது கூட்டம் விலகி ஓடவும், முடிவாகப் பிறவித் துன்பம் நீங்கவும் தனது திருவடிகளை அவர்தம் தலையோடு பொருந்துமாறு வைத்தருளினான்.
=======================================
பாடல் எண் : 3
கறுத்த இரும்பே கனகம தானால்
மறித்திரும் பாகா வகையது போலக்
குறித்தஅப் போதே குருவருள் பெற்றான்
மறித்துப் பிறவியில் வந்தணு கானே.

பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  பொருளில், ``குருவருள் பெற்றான்`` என்றதற்கு ஏற்ப உவமையில், `இரத குளிகை சேரப்பட்டு` என்பதும் உவமையில் ``கனக மதனால்`` என்றதற்கு ஏற்ப, `சிவமாகியவன்` என்பதும் வருவித்துக் கொள்க. ``குரு அருள் பெற்றான்`` என்பதை மூன்றாம் அடியில் முதற் கண் கூட்டியுரைக்க. குறித்தல் - சற்குரு தன் மாணவனைச் சிவமாகப் பாவித்தல். ``குரு`` என்றது, அதிகாரத்தால் சற்குரு மேலதாயிற்று. இதனால், சற்குருவின் பெருமை மேலும் கூறப்பட்டது.
=======================================
பாடல் எண் : 4
பாசத்தை நீக்கிப் பரனோடு தன்னையும்
நேசத்து நாடி மலம்அற நீக்குவோன்
ஆசற்ற சற்குரு ஆவோன் அறிவற்றுப்
பூசற் கிரங்குவோன் போதக் குருவன்றே.

பொழிப்புரை :  உலகப்பற்றை ஒழித்து வீடுபேற்றில் விருப்பம் கொண்டு தன்னையும், தலைவனாகிய சிவனையும் ஆசிரியர் அருள் மொழியைக் கேட்டுச் சிந்தித்துத் தெளியுமாற்றால் தனது அறி யாமையைப் போக்கித் தன்னை அடைந்தவரது அறியாமையையும் முற்றப்போக்க வல்லவனே குற்றம் அற்ற உண்மை ஞான குரு ஆவான். அவ்வாறன்றி, அனுபவ ஞானம் இன்றி, நூலறிவு மாத்திரையால் செய்யும் ஆரவாரத்தில் மயங்கித் தானும் அதனையே செய்பவன் உண்மை ஞான குரு ஆகான்.
=======================================
பாடல் எண் : 5
நேயத்தே நிற்கும் நிமலன் மலம்அற்ற
நேயத்தை நல்கவல் லான்நித்தன் சுத்தனே
ஆயத் தவர்தத் துவம்உணர்ந் தாங்கற்ற
நேயத் தளிப்பன்நன் நீடுங் குரவனே.

பொழிப்புரை :   நித்தியனாகிய சிவன் நின்மலன் ஆகலின், அவன் மலம் நீங்கித் தன்பால் மெய்யன்பு செலுத்துவோரது அறிவிலே விளங்கி நின்று அம்மெய்யன் பினை மேலும் மேலும் பெருக்க வல்லவனாவன். ஆகையால், மலம் நீங்கிச் சுத்தான்மாவாய் நிற்கின்றவனே தன்னை அடைந்த மாணவக் கூட்டத்தாரது உண்மை நிலையை உணர்ந்து, அவர்களில் பாசப் பற்று அறும் பக்குவத்தை எய்தி னோர்க்கே ஞானத்தை உணர்த்துவன். ஆதலால் அவனே நிலைபெற்ற சற்குரு ஆவன்.
=======================================
பாடல் எண் : 6
பரிசன வேதி பரிசித்த எல்லாம்
வரிசை தரும்பொன் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலயம் எல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி ஆமே.

பொழிப்புரை :   இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  வேதித்தல் பற்றி இரச குளிகை `வேதி` எனப் பெயர் பெற்றது. வேதித்தல் - மாற்றுதல். பரிசனம் - பரிசித்தல்; தீண்டுதல். தீண்டிய மாத்திரத்தில் பொன்னாக மாற்றுவது பரிசன வேதி. வரிசை - மேன்மை. குவலயம் - நிலவட்டம். அஃது ஆகுபெயராய் அதன்மேல் வாழும் உயிர்களை உணர்த்திற்று. உயிர்களுள்ளும் சிறப்புப் பற்றி மக்கள் உயிரையே உணர்த்திற்று. ``குரு பரிசித்த எல்லாம்`` எனப் பொதுப்படக் கூறினாராயினும், `சிவோகம் பாவனையோடு பரிசித்த எல்லாம்` என்பதே கருத்து. `தீர` என்பது. `தீர்ந்து` எனத் திரிந்து நின்றது. ஆம் - உண்டாம்; கிடைக்கும். முன்பு, ``கறுத்த இரும்பே வகையதுபோல`` என்றது மாணவன் அடையும் பேற்றின் சிறப்பை உணர்த்தற்கும், இங்கு ``பரிசன வேதி ... பொன்னாகுமாபோல்`` என்றது சற்குருவினது திருவருள் ஆற்றலின் சிறப்பை உணர்த்தற்கும் கூறப்பட்டன ஆகலின் கூறியது கூறல் அன்றாம்.  இதனால் சற்குருவினது அருளாற்றலின் சிறப்பு உவமையில் வைத்து உணர்த்தப்பட்டது.
=======================================
பாடல் எண் : 7
தானே எனநின்ற சற்குரு சந்நிதி
தானே எனநின்ற தன்மை வெளிப்படின்
தானே தனைப்பெற வேண்டும் சதுர்பெறல்
ஊனே எனநினைந் தோர்ந்துகொள் உன்னிலே.

பொழிப்புரை :  `யான் சிவனே` என மாணாக்கற்கு அறிவுறுத்துகின்ற அந்தக் குருவின் சந்நிதியில் அவன் சிவனே ஆன தன்மை எவ்வாற்றாலேனும் மாணாக்கனுக்கு இனிது புலப்படுமாயின், அவனது மனித உடம்பைச் சிவனது அருள் திருமேனியாகவே உணர்ந்து, தான் அவனால் சிவமாந்தன்மையைப் பெறல் வேண்டும். (பின்னர் வேறு நினைத்தல் கூடாது.) இதனை உன் உள்ளத்திற்குள்ளே ஆராய்ந்து கொள்க.
=======================================
பாடல் எண் : 8
வரும்வழி போம்வழி மாயா வழியே
கருவழி கண்டவர் காணா வழியைப்
பெருவழி யாநந்தி பேசும் வழியைக்
குருவழி யேசென்று கூடலும் ஆமே.

பொழிப்புரை :  பிறப்பும், இறப்பும் ஆகிய மாயையின் வேறுபாடுகளே `பிறவி நெறி` எனப்படும். அதனையே கண்டு அவ்வழியே உழல்பவர் கண்டறியாத பெருவழியாக எங்கள் நந்தி பெருமான் தம்மை யடைந்தவர்க்குக் காட்டியருள்கின்ற வீட்டு நெறியை அவரைப்போலும் சற்குரு காட்டும் வழியிலே சென்று பிறரும் பெறுதல் கூடும்.
=======================================
பாடல் எண் : 9
குருஎன் பவன்வேத ஆகமம் கூறும்
பரஇன்ப னாகிச் சிவோகமே பாவித்
தொருசிந்தை யின்றி உயர்பாசம் நீக்கி
வருநல் லுயிர்பரன் பால்வைக்கும் மன்னனே.

பொழிப்புரை :   `குரு` என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன் வேதாகமங்களால் சொல்லப்படுகின்ற பேரின்பத்தை நுகர்பவனாய், சிவோகம் பாவனை தவிர வேறு பாவனை எதுவும் இன்றிப் பக்குவம் வாய்ந்த உயிரை மிகவாய் உள்ள பாசங்களினின்றும் நீக்கிச் சிவத்தில் சேர்க்கும் தலைவன் ஆவான்.
=======================================
பாடல் எண் : 10
சத்தும் அசத்தும் சதசத்தும் தான்காட்டிச்
சித்தும் அசித்தும் சிவபரத் தேசேர்த்துச்
சுத்தம் அசுத்தம் அறச்சுக மானசொல்
அத்தம் அருட்குரு வாம்அவன் கூறிலே.

பொழிப்புரை :   சிவனது அருளே தன் வடிவாய் நிற்கின்ற உண்மைக் குருவாகிய அவன் தன் மாணாக்கர்க்கு ஒரு வார்த்தையைச் சொல்வானாயின் அந்த ஒரு வார்த்தை முப்பொருளின் இயல்பை உள்ளவாறு விளங்கச்செய்து, ஏனை எல்லாப் பொருளும் சிவ வியாபகத்தை விட்டு வேறு நில்லாமையைப் புலப்படுத்தி, சுத்தம், அசுத்தம் என்னும் இருவகைப் போகங்களும் அல்லாத வேறு ஒரு தனிப் போக மாகிய பரபோகத்தை விளைத்து நிற்கும் வார்த்தையாய் இருக்கும்.
=======================================
பாடல் எண் : 11
உற்றிடும் ஐம்மலம் பாச உணர்வினால்
பற்றறும் நாதன் அடியில் பணிதலால்
சுற்றிய பேதம் துரியம்மூன் றால்வாட்டித்
தற்பரம் மேவுவோர் சாதக ராமே.

பொழிப்புரை :   பக்குவம் இன்மையால் உயிர் பாச ஞானத்தையே உண்மை ஞானமாகக் கருதி நிற்றலால் அனாதியே அதனைப் பற்றிய ஐம்மலங்களும் அதனை விட்டு நீங்காது அதனைப் பற்றியே நிற்கும். பக்குவம் வந்தபொழுது பாச ஞானத்தை வெறுத்துப் பதியாகிய சிவனை நோக்கி நின்று அவனைப் பல முறையால் வணங்குதலால் முன் கூறிய ஐம்மலங்களும் அற்றொழியும். ஆகவே, தம்மைக் கட்டியுள்ள பாசக் கூட்டத்தால் தாம் சிவனை விட்டு நீங்கியிருக்கும் நிலையை முத்துரிய நிலைகளால் முறையே போக்கிச் சிவனை அடைய முயல்பவரே சற்குருவின் அருள்வழி நிற்கும் சாதகர் ஆவார்.
=======================================
பாடல் எண் : 12
எல்லாம் இறைவன் இறைவி யுடனின்பம்
வல்லார் புலனும் வருங்கால் உயிர் தோன்றிச்
சொல்லா மலம்ஐந் தடங்கியிட் டோங்கியே
செல்லாச் சிவகதி சேர்தல் விளையாட்டே.

பொழிப்புரை :   ஞானம் வரும்பொழுது ஆன்ம இயல்பு உள்ளவாறு விளங்கப்பெற்று, ஐந்து மலங்களும் சத்தியடங்கி நிற்க அவற்றைக் கடந்து மோனம் உடையராய் நிலைபெயராத வீட்டு நிலையை அடைதல் எளிதாகும். அந்நிலை சிவானந்தமே. ஞானியர் எல்லாரும் அதனைப் பெறவல்லவராவர்.
=======================================
பாடல் எண் : 13
ஈனப் பிறவியில் இட்டது மீட்டூட்டித்
தானத்து ளிட்டுத் தனையூட்டித் தாழ்த்தலும்
ஞானத்தின் மீட்டலும் நாட்டலும் வீடுற்று
மோனத்துள் வைத்தலும் முத்தன்றன் செய்கையே.

பொழிப்புரை :   இழிவான பிறப்பு நிலையில் அதன் இழிவு தோன்றாதவாறு மறைத்து மீள மீள அதிலே நின்ற கருவிக் கூட்டத்தின் இயல்பை உணர்த்தி, அதனின்றும் பிரித்து உயிர் தனது இயல்பினைத் தான் உணருமாறு செய்து அவ்வுணர்விலே சிறிது காலம் நின்று தாமதிக்கச் செய்தலும், பின்பு இறைவன் இயல்பை உணர்த்தி உயிருணர்வினின்றும் பிரித்து இறை உணர்விலே நிலைத்திருக்கச் செய்தலும், பின் இறையின்பத்திலே தோய்ந்து பேச்சற்றிருக்கச் செய்தலும் ஆய இவையெல்லாம் முத்தான்மாவாய் நின்ற சற்குருவின் செய்கைகளாய் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 14
அத்தன் அருளின் விளையாட் டிடம்சடம்
சித்தொ டசித்துத் தெளிவித்தச் சீவனைச்
சுத்தனு மாக்கித் துடைத்து மலங்களைச்
சத்துடன் ஐங்கரு மத்திடுந் தன்மையே.

பொழிப்புரை :   சிவன் தனது கருணை காரணமாகச் செய்யும் முத்தொழில் களாகிய விளையாட்டு நிகழும் இடம் சடமாய மாயையினிடத்திலாம். ஆயினும் அவ்விளையாட்டிற்குப் பயன் அறிவுடைப் பொருளாகிய உயிரை, `சித்து இவை, அசித்து இவை` என்பதை அறியச் செய்து மும்மலங்களைத் துடைத்துத் தூய்மையுறப் பண்ணி வேறு இரு தொழில்களால் மெய்ப்பொருளை அடையச் செய்தலேயாகும்.
=======================================
பாடல் எண் : 15
ஈசத்து வம்கடந் தில்லையென் றப்புறம்
பாசத்து ளேயென்றும் பாவியும் அண்ணலை
நேசத்து ளேநின்ற நின்மலன் எம்மிறை
தேசத்தை யெல்லாம் தெளியவைத் தானே.

பொழிப்புரை :   உலகீர், எங்கள் சிவபெருமான் `தனக்கு வேறாய் விலகி நிற்கும் பொருள் எதுவும் இல்லை` என்று அறிந்து தன்பால் செலுத்தப்படும் அன்பிலே விளங்கி நிற்பவன். அத்தகைய அன்பர்க்கு அவன் அனைத்துப் பொருளின் உண்மைகளையும் தெளிவாக உணரக் காட்டினான். ஆதலால் நீங்கள் `அவனது வியாபகத்தைக் கடந்து அவனின் வேறாக யாதொரு பொருளும் இல்லை` என உணர்ந்து உடம்பில் உள்ள பொழுதும் அவனை எவ்வகையிலேனும் உணர்ந்து போற்றுங்கள்.
=======================================
பாடல் எண் : 16
மாணிக்க மாலை மலர்ந்தெழு மண்டலம்
ஆணிப்பொன் னின்றங் கமுதம் விளைந்தது
பேணிக்கொண் டுண்டார் பிறப்பற் றிருந்தார்கள்
ஊணுக் கிருந்தார் உணராத மாக்களே.

பொழிப்புரை :  மாணிக்க மணிகளைக் கோத்த ஒரு வடத்தைத் தூங்கவிட்டது போல உடம்பினுள்ளே ஒன்றின்மேல் ஒன்றாய் அமைந்து ஒளிவிட்டு விளங்கும் ஏழு மண்டலங்கள் உள்ளன, அங்கெல்லாம் அவற்றுக்கு மேல் உள்ள மாற்றுயர்ந்த பொன் போல்வதொரு நற்பொருளினின்றும் ஓர் அமுதம் ஊற்றெடுத்துப் பாய்கின்றது. அதனையறிந்து போற்றிக்கொண்டு உண்டவர்களே பிறப்பற்றிருக் கின்றார்கள். அதனை அறியாதவரெல்லாம் விலங்கொடொத்து உணவை உண்டு வயிறு வளர்ப்பதற்காகவே வாழ்கின்றனா.
=======================================
பாடல் எண் : 17
அசத்தொடு சத்தும் அசற்சத்து நீங்க
இசைத்திடு பாசப்பற்று ஈங்கறு மாறே
அசைத்திரு மாயை அணுத்தானும் ஆங்கே
இசைத்தானும் ஒன்றறி விப்போ னிறையே.

பொழிப்புரை :  சத்தோடு கூடியவழிச் சத்தாம் தன்மையும், அசத்தோடு கூடியவழி அசத்தாம் தன்மையும் உடைத்தாதல் பற்றி, `சதசத்து` எனப் பெயர் பெற்ற உயிரை அநாதியில் சத்தோடு சேராது நீங்கச் செய்து, அசத்தோடு சேர்த்த ஆணவ மலத்தொடர்பு இப்பெத்த காலத்தில் அற்றொழிதற் பொருட்டு, `சுத்த மாயை, அசுத்த மாயை` என்னும் இருமாயைகளைச் செயற்படுத்தி, உயிரையும் அச்செயற் பாட்டிற்கு உள்ளாக்கியவனும், பின் என்றும் திரிபின்றி ஒருபடித்தாய் நிற்பதாகிய உண்மையை உணர்த்தி, அவ்வுயிரை உய்யக் கொள்கின்ற வனும் இறைவனேயன்றிப் பிறர் இல்லை.
=======================================
பாடல் எண் : 18
ஏறு நெறியே மலத்தை யிரித்தலால்
ஈறில் உரையால் இருளை அறுத்தலால்
மாறின் பசுபாசம் வாட்டலால் வீடுறக்
கூறு பரனே குருவாம் இயம்பிலே.

பொழிப்புரை :   சத்திநிபாதம் படிமுறையால் நாளும் நாளும் மிகுந்து வரும் வகையால் ஆணவத்தைச் சிறிது சிறிதாக முறையே நீக்கி வருதலாலும், முடிவில் என்றும் நீங்காது நிலைத்து நிற்கும் உபதேச மொழியால் அவ்வாணவங் காரணமாக இருந்து வந்த அறியாமையைப் போக்கி அறிவைத் தருதலாலும், பின்னும் பண்டை வாசனையால் பாச உணர்வு தோன்றுமாயின் அதனைத் தோன்றும் பொழுதே பசையின்றி உலர்ந்து கெடும்படி வாட்டி விடுதலாலும், ஆராய்ந்து சொல்லுமிடத்து எல்லா முதன்மையும் உடையவனாக உண்மை நூல்களில் கூறப்படுகின்ற இறைவனே உயிர்கட்கு வீடுபேறு கிடைக்கும்படி குருவாய் வருபவனாவான்.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!