http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 29 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :37. கேடு கண்டிரங்கல் - பாடல்கள்: 018.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை ..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி............. .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:20: விந்துற்பனம்.......... .பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:21: விந்துசயம்...............பாடல்கள்: 037
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:22: ஆதித்தநிலை.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:23: பிண்டாதித்தன்......பாடல்கள்: 003
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:24: மனவாதித்தன்...... .பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:25: ஞானாதித்தன்........பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:26: சிவாதித்தன்............ பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:27: பசு லக்கணம்-பிராணன்-பாடல்கள்: 002
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:28: புருடன்.......................பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:29: சீவன்...........................பாடல்கள்: 004
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:30: பசு................................பாடல்கள்: 002 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:31: போதன.......................பாடல்கள்: 006
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:32: ஐந்திரியம் அடக்கும் அருமை .. பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:33: ஐந்திரியம் அடக்கும் முறைமை .பாடல்கள்: 013
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:34: அசற்குரு நெறி......பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:35: சற்குரு நெறி..........பாடல்கள்: 018
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:36: கூடா ஒழுக்கம்.....பாடல்கள்: 005 

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:37: கேடு கண்டிரங்கல்.பாடல்கள்: 018

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -036
கூடுதல் பாடல்கள்  (347+018 =365)

==============================================
ஏழாம் தந்திரம் - 37. கேடு கண்டிரங்கல்-பாடல்கள்:018
பாடல் எண் : 1
வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

பொழிப்புரை :   மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ்நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.
=======================================
பாடல் எண் : 2
போது சடக்கெனப் போகின் றதுகண்டும்
வாதுசெய் தென்னோ மனிதர் பெறுவது
நீதியு ளேநின்று நின்மலன் தாள்பணிந்து
ஆதியை அன்பில் அறியகில் லார்களே.

பொழிப்புரை :   நாள்கள் மிக விரைவாக வந்து வந்து போவதை அறிந்திருந்தும் பலர் அந்நாள்களை வாது செய்வதிலே கழித்து விடுகின்றனர். ஒழுக்கத்தில் நில்லாமல் வாதுசெய்வதனால் அவர் என்ன பயனை அடையப் போகின்றனர்! ஒரு பயனும் இல்லை. ஒழுக்கத்தில் நின்றும், இறைவன் திருவடியை வணங்கியும் வருவராயின் நாளடைவில் இறையன்பு தோன்றி வளர அவனை அவர்நேரே அறிந்து இன்புறுவர். அதனை அவர் அறிகின்றாரில்லையே!
=======================================
பாடல் எண் : 3
கடன்கொண்டு நெற்குற்றுக் கையரை ஊட்டி
உடம்பினை யோம்பி உயிராய்த் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண் டுடலார் கிடக்கின்ற வாறே.

பொழிப்புரை :   நெல்லைக் கடனாகவேனும் வாங்கிக் குற்றி, குற்றிய அரிசியைக் கொண்டு ஒரு சாண் வயிற்றினுள் இருக்கும் சிறு கருவிகளின் வேகத்தைத் தணிக்கும் முகத்தால் உடம்பைப் பாதுகாக்கின்றவர்களும் தங்களை `உயிர்` என்று சொல்லிக்கொண்டு திரிகின்றார்கள். அவ்வாறு திரிகின்றவர் தம்மைப்போன்றோர் பலரது உடம்புகளும் முடிவில், மலைச்சாரலில் பற்றி எரிகின்ற தீப்போன்ற பெரிய தீயை உடைய முருட்டணையில் ஏறிப் பின் அதினின்றும் இறங்காமல் அதனையே இடமாகக்கொண்டு கிடந்து ஒழிந்துபோதலைப் பல முறை கண்டிருந்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்துதல் இல்லை.
=======================================
பாடல் எண் : 4
விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

பொழிப்புரை :   தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப்பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.
=======================================
பாடல் எண் : 5
நின்ற புகழும் நிறைதவத் துண்மையும்
என்றும்எம் ஈசன் அடியவர்க் கேநல்கும்
அன்றி உலகம் அதுஇது தேவென்று
குன்றுகை யாலே குறைப்பட்ட வாறே.

பொழிப்புரை :   அனைத்திற்கும் முதல்வனாகிய எங்கள் சிவ பெருமான் உலகியலில் நிலைத்த புகழையும், நிரம்பிய மேலான தவத்தையும், அதன் பயனாகிய உண்மை ஞானத்தையும் தன்னையடைந்த அடியார்களுக்கே அளித்தருள்வான் ஆகையால், உலகர் அவற்றை இழத்தற்குக் காரணம் அவ்வடியவரோடு மாறுபட்டு, `அது கடவுள், இது கடவுள்` எனத் தத்தமக்கு எட்டிய பொருள்களைத் தனித்தனி கூறித் தம்முள் கலாய்த்துக்கொண்டு, ஞானம் குறை கையாலேயாம். இஃது இரங்கத்தக்கது.
=======================================
பாடல் எண் : 6
இன்பத்து ளேபிறந் தின்பத்தி லேவளர்ந்
தின்பத்து ளேதிளைக் கின்ற திதுமறந்து
துன்பத்து ளேசிலர் சோறொடு கூறையென்
துன்பத்து ளேநின்று தூங்குகின் றார்களே.

பொழிப்புரை :   மக்கள் யாவரும் பிறக்கும்பொழுதே இன்பத்தில் பிறந்து, வளரும் பொழுதும் இன்பத்திலே வளர்ந்து இன்பத்திலே திளைக்கின்றவர்களேயாயினும் சிலர் இதனையறியாது தாங்கள் துன்பத்திலே மூழ்கியிருப்பதாகக் கருதிக்கொண்டு அத்துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியாக, `உணவு` என்றும், `உடை` என்றும் அவாவி, அவற்றைப் பெறவேண்டி அல்லற்பட்டு, அவ்வல்லலை விட்டு நீங்க நினையாமல் அதிலேயே செயலற்றிருக்கின்றார்கள்; இஃது இரங்கத் தக்கது.
=======================================
பாடல் எண் : 7
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

பொழிப்புரை :   பெறுதற்கரிய பிராணிகள் ஞானத்தையும், அது வழியாக வீட்டையும் பெற இயலாத பிராணிகள். அவை மக்களை யொழித்து ஏனைய உயிர்கள். அவைகளால் பெறுதற்கரிய பேறு இறைவன் திருவடி. ``பெறார் பேறிழந்தார்`` என்க, ஏனைய வெளிப்படை.
குறிப்புரை``அரிய`` என்னும் பெயரெச்சக் குறிப்பு நான்கனுள் மூன்றாவது வினைமுதற்பெயர் கொண்டது. ஏனைய செயப்படு பொருட் பெயர் கொண்டன. இறைவன் திருவடிப் பேற்றை `ஏனை உயிர்கள் பெற இயலாத பேறு` என்றமையால், `மக்கட் பிறவியைப் பெற்றும் அப்பேற்றைப் பெற நினையாதவர்கள் மக்களாகாது, ஏனை உயிர்களேயாவர்` என்பது கருத்தாயிற்று. இதனால், கிடைத்த சாதனத்தின் அருமையை அறியாது அதனை வீண்படுத்துகின்ற அறியாமை நோக்கி இரங்கியவாறு.
=======================================
பாடல் எண் : 8
ஆர்வ மனமும் அளவில் இளமையும்
ஈரமும் நல்லஎன் றின்புறு காலத்துத்
தீர வருவதோர் காமத் தொழில்நின்று
மாதவன் இன்பம் மறந்தொழிந் தார்களே.

பொழிப்புரை :   யாவரிடத்தும் நட்பையே பாராட்டும் மனமும், எச் செயலிலும் சோர்வடையாத ஊக்கமும், கிளைஞர் எல்லோரிடத்திலும் செல்லுகின்ற ஈரமும் குறைவின்றியிருத்தலால் தாமும், பிறரும் `இது மிக நல்லதாகிய பருவம்` என மகிழ்ச்சியுறுவதாகிய இளமைப் பருவத்திலே அந்நல்லவற்றை யெல்லாம் உமையொருபாகனுக்குப் பணி செய்வதில் பயன்படுத்தாது, அவனது இன்பத்தைப் பெறாமல் மறந்து, அந்நல்லனவெல்லாம் விரையக் கெடுதற்கு ஏதுவாகிய சிற்றின்பச் செயலிலே சிலர் ஈடுபட்டு ஒழிகின்றார்களே; ஈதென்ன அறியாமை!
=======================================
பாடல் எண் : 9
இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

பொழிப்புரை :   முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!
=======================================
பாடல் எண் : 10
கூடவல் லார்குரு வைத்த குறிகண்டு
நாடகில் லார் நயம் பேசித் திரிவர்கள்
பாடகில் லார்அவன் வைத்த பரிசறிந்து
ஆடவல் லார் அவர் பேறெது ஆமே.

பொழிப்புரை :   சிலர் பெரியோரைக் குருவாக அடுத்து உண்மையைக் கேட்டுணர்ந் தாராயினும் அவர் தங்கட்கு ஒருதலைப் பட உணர்த்திய குறிக்கோளை அங்ஙனமே உணர்ந்து அடைய மாட்டார். `அடைய வேண்டும்` என நினைக்கவும் மாட்டார். குருவானவர் தம்மை மலம் கழுவித் தூயராகச் செய்த செயலின் அருமையை அறிந்து, அவரைப் புகழ்ந்து பாடவும் மாட்டார். ஆயினும் பிறர் தம்மை மதிக்கும் வண்ணம் இனிமை உண்டாகப் பேசுவர். அப்பேச்சுக்கு ஏற்றவாறு நடிக்கவும் வல்லவராவர். அவர் அடையும் பயன்தான் எதுவோ!
=======================================
பாடல் எண் : 11
நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

பொழிப்புரை :   சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.
=======================================
பாடல் எண் : 12
மிருகம் மனிதர்கள் மிக்கோர் பறவை
ஒருவர் செய் தன்புவைத் துன்னாத தில்லை
பருகுவர் ஓடுவர் பார்ப்பயன் கொள்வர்
திருமரு மாதவம் சேர்ந்துணர்ந் தாரே.

பொழிப்புரை :   விலங்குகள், மக்கள், தேவர்கள், பறவைகள், மற்றும் இவர்கள்போல் உள்ள இனத்தவர் ஆகியோரில் ஓரினத்தவரும் சிவபிரானிடத்தில் அன்பு வைத்து, அதனை மேலும் மேலும் பெருக்கி வழிபடாமையில்லை. அதனை அறிந்தவர்கள் அப்பெருமானது திருவருளைப் பெறுதற்குரிய பெரிய தவத்தைச் செய்து, அதன் பயனாக விளைந்த அன்பினால் சிவபெருமானைக் கண்டால் இனிய பாலைப் போலப் பருகிவிடுவார் போல்வார்; `அவன் வெளிப்படும் இடம் எது` என்று தேடிப்பல திசைகளிலும் ஓடுவர். அதனால், தாம் மண்ணில் மக்களாய்ப் பிறந்த பயனை எய்துவர்.
=======================================
பாடல் எண் : 13
நீதி யிலோர்பெற்ற பொன்போல் இறைவனைச்
சோதியில் ஆரும் தொடர்ந்தறி வார்இல்லை
ஆதி அயனென் றமரர் பிரானென்று
நாதியே வைத்தது நாடுகின் றேனே

பொழிப்புரை :   அற உணர்வு இல்லாதார் பொன்னைப் பெற்றால் அதனது பயனை யறிந்து அப்பயனை எய்தாது பொன்னை வாளா வைத்திருந்தே இறந்தது போலச் சிலர் சிவனை அறிந்தும் அவனால் அடையத் தக்க பயனை அறிந்து அம்முறையில் அவனை வழிபட்டு அப்பயனைப் பெறுகின்றவர் யாரும் இல்லை. ஆயினும் யான் உலகத்தைச் செயற்படுத்துதற்கு, `படைப்புக் கடவுளாகிய பிரமன்` என்றும், மற்றும் `தேவேந்திரன்` என்றும் இப்படிப் பல தேவரைத் தக்கவாறு சிவன் நியமித்திருக்கின்ற பெருஞ்செயலை நினைந்து அவனால் அடையத்தக்க பயனை அடைகின்றேன்.
=======================================
பாடல் எண் : 14
இருந்தேன் மலரளைந் தின்புற வண்டு
பெருந்தேன் இழைக்கின்ற பெற்றிமை ஓரார்
வருந்தேன் நுகராது வாய்புகு தேனை
அருந்தேனை யாரும் அறியகி லாரே.

பொழிப்புரை :   வண்டுகள்தாம் இன்புற வேண்டும் என்றுதான் மிகுந்த தேன் உள்ள மலர்களை அறிந்து அவற்றினுட்புகுந்து கிண்டிச் சிறிது சிறிதாகக் கொணர்ந்து மிகுந்த தேனைச்சேர்க்கின்றன. ஆயினும் அத்தேனில் ஒருசிறிதையும் அவை பருகுவதில்லை. அதனை எண்ணிப் பாராதவர்களாய், அவற்றினும் கீழ்மையராக, தானாகவே வாயில் ஒழுகுவதும், எவ்வுலகத்திலும் கிடைத்தற்கரியதும் ஆகிய தேனை மக்களில் ஒருவரும் அறிந்து பருகுகின்றார்களில்லை. ஆயினும் யான் அவர்களைப்போல அத்தேனை நுகராமல் விட்டு வருந்தமாட்டேன்.
=======================================
பாடல் எண் : 15
கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

பொழிப்புரை :   தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.
=======================================
பாடல் எண் : 16
குதித்தோடிப் போகின்ற கூற்றமும் சார்வாய்
விதித்தன நாள்களும் வீழ்ந்து கழிந்த
அதிர்த்திருந் தென்செய்தீர் ஆறுதி ராயின்
கொதிக்கின்ற கூழில் துடுப்பிட லாமே.

பொழிப்புரை :   உலகீர், உங்களுக்கு இவ்வுடம்போடு கூடி வாழ்தற்கு வரையறுத்த நாள்கள் யாவும் தவம் செய்யாமையால் அவமே கழிந்தொழிந்தன. ஆகவே, உங்களை இவ்வுடம்பினின்றும் பிரித்தெடுத்துக் கொண்டு துள்ளி ஓடுபவனாகிய கூற்றுவனும் வந்துவிட்டான். இப்போது நடுங்கி என்ன செய்யப்போகின்றீர்கள்? நீங்கள் அமைதியுற வேண்டின் கொதிக்கின்ற கூழில் கையையிடாமல் அகப்பையை இட்டு அள்ளி ஆற்றி உண்பதுபோலும் செயலைச் செய்தலே தக்கது.
=======================================
பாடல் எண் : 17
கரையரு காறாக் கழனி விளைந்தது
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவம் நோக்கின்
நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.

பொழிப்புரை :   ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.
=======================================
பாடல் எண் : 18
வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி

பொழிப்புரை :   பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!