http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 14 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 16. பதி, பசு, பாசம் வேறின்மை – பாடல்கள்: 20.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020 
==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -016
கூடுதல் பாடல்கள்  (280+20=300)
============================================== 

எட்டாம் தந்திரம்-16. பதி பசு பாசம் வேறின்மை-பாடல்கள்:20
பாடல் எண் : 1
அறிவறி வென்ற அறிவும் அனாதி
அறிவுக் கறிவாம் பதியும் அனாதி
அறிவினைக் கட்டிய பாசம் அனாதி
அறிவு பதியின் பிறப்பறுந் தானே.

பொழிப்புரை :  உலகத்தாரால், `அறிவு, அறிவு` என்று சொல்லப்படுவதாகிய உயிர்களும் அனாதியே உள்ளன. அவற்றின் அறிவுக்கு அறிவாய் உள்ள இறைவனும் அனாதியே உளன். அறிவாகிய உயிர்களைக் கட்டியுள்ள அறிவற்றனவாகிய பாசங்களும் அனாதியே உள்ளன. ஆயினும் அனாதியாகிய சிவனது ஞான சத்தி உயிரினிடத்துப் பதியுமாயின், உயிர் பிறவித்தொடர்ச்சி அறப்பெறும்.
**********************************************
பாடல் எண் : 2
பசுப்பல கோடி பிரமன் முதலாப்
பசுக்களைக் கட்டிய பாசம்மூன் றுண்டு
பசுத்தன்மை நீங்கி அப் பாசம் அறுத்தால்
பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில், ``அனாதி`` எனப்பட்ட பசுக்கள் பிரமதேவன் முதலாகக் கோடிக் கணக்கில் உள்ளன. ஆயினும், அவற்றைக் கட்டியுள்ள பாசங்கள் மூன்றே. (ஆணவம், மாயை, கன்மம்). பதி பசுக்களைக் கட்டியுள்ள பாசங்களை அறுத்துவிட்டால், பசுக்கள் பசுத்தன்மை நீங்கிப் பதியைப் பற்றிக்கொள்ளும். பின்பு அவை பதியை விட்டு நீங்கமாட்டா.
**********************************************
பாடல் எண் : 3
கிடக்கின்ற வாறே கிளர்பயன் மூன்றும்
நடக்கின்ற ஞானத்தை நாள்தோறும் நோக்கித்
தொடக்கொன்று மின்றித் தொழுமின் தொழுதால்
குடக்குன்றில் இட்ட விளக்கது வாமே.

பொழிப்புரை :  உயிர்கள் அனாதியே கிடந்த பாசநிலையிலே கிடந்தாலும் அப்பொழது அவைகட்கு உண்டாகின்ற பயன் மூன்று. அவை, `அறம், பொருள், இன்பம்` என்பனவாம். நான்காவதாகிய வீடு அந்நிலையிலே கிட்டாது. அது கிடைக்க வேண்டுமாயின், அந்த மூன்றும் நீங்குதற்கு ஏதுவாகிய ஞானம் ஒன்றையே விரும்பிப் பதியை உலகப்பற்றுச் சிறிதும் இன்றி, நாள்தோறும் வழிபடுங்கள். வழிபட்டால் அந்தப் பதி, குடத்தில் இட்ட விளக்குப் போல மறைந்திருந்த நிலையினின்றும் நீங்கிக் குன்றில் இட்ட விளக்குப் போல வெளிப்பட்டு விளங்கும்.
**********************************************
பாடல் எண் : 4
பாசம்செய் தானைப் படர்சடை நந்தியை
நேசம்செய் தாங்கே நினைப்பர் நினைத்தலும்
கூசம்செய் துன்னிக் குறிக்கொள்வ தெவ்வண்ணம்
வாசஞ்ய் பாசத்துள் வைக்கின்ற வாறே.

பொழிப்புரை :  முற்பாசத்தை நீக்குதற்குப் பிற்பாசங்களைக் கூட்டிப் பிறப்பு இறப்புக்களில் சூழலவைத்து இவனை, `அஃதும் கருணையே` என அறிந்து அவன் மாட்டு அன்பு செய்து அவனை நினைப்பவர். அவ்வாறு நினைத்தபின், அவன் பிறப்பு இறப்புக்களில் வைத்துள்ளமை பற்றி நாணம் உறுதலும், அந்நாணத்தால் அதனை வன் கண்மையாகக் கருதுதலும் எங்ஙனம் உளவாகும்? உளவாகா.
**********************************************
பாடல் எண் : 5
விட்ட விடம்ஏறா வாறுபோல் வேறாகி
விட்ட பசுபாசம் மெய்கண்டான் மேவுன்றான்
கட்டிய கேவலம் காணும் சகலத்தைச்
சுட்டு நனவில் அதீதத்தில் தோயுமே.

பொழிப்புரை :  ஒருவனுடைய உடலில் பற்றிய விடம், மணி மந்திர ஔடதங்களால் நீங்கிப் போனபின்பு மீண்டும் அஃது அவன் உடலில் ஏற இயைபில்லாதது போல, மெய்ஞ்ஞானத்தை உணர்ந்தவன், அவ்வுணர்வினால் அவனோடு ஒன்றியிருந்த பாசங்கள் வேறாகி நீங்கிவிட்ட பின்பு, அவன் அப்பாசங்களோடு பொருந்துதற்கு இயைபில்லை. அதனால், அவன் தன்னைத் தடை செய்திருந்த கேவல சகல நிலைகளைப் போக்கி சாக்கிரத்தில் அதீதமாகிய நின்மல துரியாதீதத்தில் அழுந்திச் சீவன் முத்தனாகியே நிற்பான்.
**********************************************
பாடல் எண் : 6
நாடும் பதியுடன் நற்பசு பாசமும்
நீடுமா நித்த நிலையறி வார்இல்லை
நீடிய நித்தம் பசுபாச நீக்கமும்
நாடிய சைவர்க்கு நந்தி யளித்ததே.

பொழிப்புரை :  சத்தி நிபாதம் வரப்பெற்றமையால், `நாம் உய்யும் வழியாவது யாது` என ஏக்கற்று ஆராயும் பக்குவிகள் அவ்வழியை உணர்தற் பொருட்டுச் சிவாகமங்கள் வழியாகச் சிவபெருமான் அருளிச் செய்தவை, பதியேயன்றிப் பசு பாசங்களின் அனாதி நித்தத் தன்மையும், அவற்றுள் பசுக்கள் பாசத்தினின்றும் நீங்கிப் பதியை அடையும் முறைமையும் ஆகும். ஆயினும் அவைகளை அறியும் பக்குவிகள் உலகத்து அரியர்.
**********************************************
பாடல் எண் : 7
ஆய பதிதான் அருட்சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல்ஏ றெனநிற்கும்
ஆய பலிபீடம் ஆகும்நற் பாசம்ஆம்
ஆய அரன்நிலை ஆய்ந்துகொள் வார்கட்கே.

பொழிப்புரை :  சிவாலயங்களின் அமைப்பை உற்று நோக்கி உணரவல்லார்க்குக் கருவறையில் முதலிடத்தில் உள்ள இலிங்கமே பதியாயும், அவ்விலிங்கத்தின் திருமுன்பில் உள்ள இடபமே பசுவாயும், (உயிராயும்) இடபத்திற்குப் பின் உள்ள பலிபீடமே அடக்கிஒடுக்கப்பட்ட பாசமாயும் காட்சியளிக்கும்.
**********************************************
பாடல் எண் : 8
பதிபசு பாசம் பயில்வியா நிற்கப்
பதிபசு பாசம் பகர்வர்க்கா றாக்கிப்
பதிபசு பாசத்தைப் பற்றற நீக்கும்
பதிபசு பாசம் பயில்நில் லாவே.

பொழிப்புரை :  முப்பொருள் இயல்பை மாணாக்கர்க்கு முன்னர்க் கேட்பித்துப் பின்னர் மீள மீள அவற்றைச் சிந்திப்பித்தற்பொருட்டு அவற்றை உபதேசிக்கின்ற ஆசிரியன் மார்கட்கு உபதேச மொழியை ஆக்கி, அதுவழியாகச் சிவன் பசுக்களின் பாசங்களை அறிவே நீக்குவான். அம்முறையில் முப்பொருள் இயல்பைச் சிந்தித்துத் தெளியின் பாசங்கள் தம்மியல்பில் நிற்கமாட்டா `நிலைகெட்டு ஒடுங்கும்` என்பதாம்.
**********************************************
பாடல் எண் : 9
பதியும் பசுவொடு பாசமும் மேலைக்
கதியும் பசுபாச நீக்கமும் காட்டி
மதிதந்த ஆனந்த மாநந்தி காணும்
துதிதந்து வைத்தனன் சுத்தசை வத்திலே.

பொழிப்புரை :  சித்தாந்தத் தத்துவங்களைச் சிவாகம ஞான பாதத்தில் அருளிச்செய்த சிவபெருமான், அப்பொருளைப் பயக்கும் தோத்திரங்களையும் கிரியா பாதத்தில் சொல்லிவைத்திருக்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 10
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.

பொழிப்புரை :   மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.
**********************************************
பாடல் எண் : 11
படைப்பாதி ஆவ பரசிவம் சித்தி
இடைப்பால் உயிர்கட் கடைத்திவை வாங்கல்
படைப்பாதி சூக்கத்தைத் தற்பரம் செய்யப்
படைப்பதி தூலம்அப் பாசத்து ளாமே.

பொழிப்புரை :  படைப்பு முதலிய செயல்கள் நிகழ்தல் `பரசிவம், பராசத்தி` என்னும் இருவராலேயாம். படைப்பு முதலிய ஐந்தொழில் களாவன, தனுகரண புவன போகங்கைள உயிர்களுக்குச் சேர்ப்பித் தலும், நீக்குதலுமேயாம். இவ்வைந்தொழில், `சூக்குமம், தூலம்` என்னும் இருவகையில் நிகழும். சூக்கும ஐந்தொழிலைச் சிவன் சுத்தமாயையில் தான் நேரே செய்வான். தூல ஐந்தொழிலை அவன் அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் அனந்ததேவர், சீகண்டர் வழியாகச் செய்விப்பான்.
**********************************************
பாடல் எண் : 12
ஆகிய சூக்கத்தை அவ்விந்து நாதமும்
ஆகிய சத்தி சிவம்பரம் மேல்ஐந்தால்
ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன்
ஆகிய தூலத்தீ சானனும் ஆமே.

பொழிப்புரை :  அபரவிந்து, அபரநாதம், பரவிந்து, பரநாதம், பராசத்தி என்னும் மேலான ஐந்து நிலைகளில் நின்று சூக்கும ஐந்தொழில் செய்பவன். அருவத்தையும் கடந்த பரமசிவன். தூல ஐந்தொழிலைச் செய்பவன் மகேசுரன்.
**********************************************
பாடல் எண் : 13
மேவும் பரசிவம் மேற்சத்தி நாதமும்
மேவும்ப ரின்விந்து ஐம்முகன் வேறீசன்
மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி
ஆகும் படிபடைப் போன்அரன் மே.

பொழிப்புரை :  இம்மந்திரத்தில் கூறப்படும் பொருள் எழாம் தந்திரத்தில், ``சிவமொடு சத்தி நிகழ்நாதம் விந்து``, ``தலையான நான்கும் தனதருவாகும்`` என்னும் மந்திரங்களில் கூறப்பட்டதேயாம். ஆகையால், அவற்றில் கண்டு கொள்க.
**********************************************
பாடல் எண் : 14
படைப்பும் அளிப்பும் பயில்இலைப் பாற்றும்
துடைப்பும் மறைப்பும்முன் தோன்றும் அருளும்
சடத்தை விடுத்த அருளும் சகலத்(து)
அடைத்த அனாதியை ஐந்தென லாமே.

பொழிப்புரை :   `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்றனுள் சகலத்தில் படைத்தல், காத்தல், உயிர்களை இளைப்பாற்றுதற் பொருட்டு அழித்தல், சிற்றின்பத்தை அதன் இழிவு அறிந்து வெறாது விரும்பி நுகருமாறு மறைத்தல் ஆகிய முன்னர் நிகழும் அருட் செயல்களையும், சடமாகிய பாசங்களை விடுவித்துத் தன்னைக் காட்டி யருளும் அருளலாகிய பின்னர் நிகழும் அருட்செயலையும் உயிர்கள் பொருந்த வைத்த அனாதியாகிய பரமசிவனை, இத்தொழில்களை நோக்கி, `ஐவர்` என்று கூறலாம்.
**********************************************
பாடல் எண் : 15
ஆறாறு குண்டலி தன்னின் அகத்திட்டு
வேறாகும் மாயையில் முப்பால் முகுத்திட்டங்(கு)
ஈறாம் கருவி யிவற்றால் வகுத்திட்டு
வேறாம்பதி பசு பாசம்வீ டாகுமே.

பொழிப்புரை :   பதி, முப்பத்தாறு தத்துவங்களைச் சுத்த மாயையில் வியாப்பியமாகச் செய்து, அம்முப்பத்தாறு தத்துவங்கட்குக் காரணமாய் வேறுநிற்கும் மாயையை, சுத்த, சுத்தாசுத்தம், அசுத்தம்` என மூன்றாக வகுத்து, அந்த மாயை மாயேயங்களின் பின்னவாகிய `தாத்துவிகம்` என்னும் காரிய பூதங்களையும் இந்தமாயை மாயேயங்களால் ஆக்கி, அனைத்துப் பொருள்கட்கும் வேறாய் நிற்கும். (எனவே, `பசு, மாயை, மாயேயம், தாத்துவிகம் ஆகியவற்றில் கட்டுண்டு நிற்கும் என்பது பெறப்பட்டது. எனினும்) பாசங்கள் நீங்கியவழிப் பசு, பதியாகும்.
**********************************************
பாடல் எண் : 16
வீட்கும் பதி பசு வைப்பாசம் மீதுற
ஆட்கும் இருவினை ஆங்கவற் றால்உணத்
தாட்கும் நரக சுவர்க்கத்தில் தான்இட்டு
நாட்குற நான்றங்கு நற்பாசம் நண்ணுமே.

பொழிப்புரை :  பதி, பசுவை இயல்பாகவே உள்ள ஒரு பாசத்தின்மேல் மற்றொரு பாசம் பற்றும்படி அதனுள்ளே புகுத்தும். (இப்பாசம் மாயை, இயல்பாக உள்ளது ஆணவம்) அதன்பின், இருவினைகளாகிய குழியிலே ஆழச் செய்யும். அதன்பின், அந்த இருவினைகளுக்கு ஈடான துன்பத்தையும், இன்பத்தையும் பசு நுகர்தற்பொருட்டு அதனை நரகத்திலும். சுவர்க்கத்திலும் சேர்த்து, அங்கே சிலநாள் தங்க வைக்கும், இவையெல்லாம் இப்படித் தொடர்ச்சியாக நிகழ்தல் திரோதான சத்தியாலாம். அச்சத்தி இவ்வாறு செய்வித்தல், பசுக்கள் தம் பசுத்துவத்தின் நீங்கிப் பதியை அடையும் நாளைக் கிட்டுதற் பொருட்டாம்.
**********************************************
பாடல் எண் : 17
நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம்
பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன்
கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள்
அண்ண லடிசேர் உபாயம தாகுமே.

பொழிப்புரை :  உயிர்களைப் பற்றியுள்ள பாசங்களில், `நான்` என்னும் முனைப்பை உண்டாக்குவது ஆணவமே. (இம் முனைப்பே, `தற்போதம்`) என்றும், `சீவ போதம்` என்றும் சொல்லப்படும். மாயையைக் கருவியாகப் பற்றி உயிர்கள் செயற்படும்பொழுது, இந்த `நான்` என்னும் முனைப்போடு செயற்படுவதால்தான் அவைகட்கு வினைகள் உண்டாகின்றன. `நான் செய்கின்றேன்` என்னும் உணர் -வோடு செய்தலால், அச் செயல்களின் பயனைச் செய்த உயிரையே நுகரச் செய்ய இறைவன் திருவுளங் கொள்கிறான். அதற்குக் காரணமும் அவன் அவ்வுயிர்கள் மாட்டு வைத்த கருணையே யன்றிப் பிறிதில்லை. அதனால், வினைப் பயனை ஊட்டுவித்தலும் அவை அவனது திருவடியை அடைதற்கு உபாயமேயாகும்.
**********************************************
பாடல் எண் : 18
ஆகும் உபாயமே யன்றி அழுக்கற்று
மோகம் அறச்சுத்தன் ஆதற்கு மூலமே
ஆகும் அறுவை அழுக்கேற்றி எற்றல்போல்
ஆகுவ எல்லாம் அருட்பாசம் ஆகுமே.

பொழிப்புரை :  இறைவன் உயிர்கட்கு ஆணவ பாசத்தின்மேல் மாயை கன்ம பாசங்களைச் சேர்த்தது பல உபாயங்களுள் ஓர் உபாயம் அன்று. உயிர்கள் ஆணவ மலத்தினின்றும் நீங்கித் தூய்மை பெறுதற்கு அவற்றைச் சேர்ப்பது தவிர வேறு வழியேயில்லை. அஃது எதுபோலும் எனின், புதிதாகத் தோன்றிய ஆடையில் இயல்பாய் உள்ள அழுக்கினை மேலும் பிற அழுக்கை ஏற்றித் துவைத்தும் போக்குதல் போல்வதாம். அதனால், இயற்கையாக அன்றி இறைவனால் சேர்க்கப்பட்ட பாசங்கள் யாவும் அருளால் சேர்க்கப்பட்ட பாசங்களே.
**********************************************
பாடல் எண் : 19
பாசம் பயில்உயிர் தானே பரம்முதல்
பாசம் பயில்உயிர் தானே பசுஎன்ப
பாசம் பயிலப் பதிபரம் ஆதலால்
பாசம் பயிலப் பதிபசு ஆகுமே.

பொழிப்புரை :  பசு தன்னைக் கட்டியுள்ள பாசங்கள் குறும்பு செய்தலால், `நானே பரம்` என்கின்றது. ஆயினும், அங்ஙனம் நினைப்பதும், சொல்வதும் என்றும் நிலைத்து நில்லாமல் பின் நீங்கிப் போவதால், உயிர்க்கு அந்நிலை செயற்கை நிலையாதல் விளங்குதலின், `உயிர் அனாதியே செயற்கையோடு கூடிப் பசுவேயாய் நிற்கின்று? என, அறிந்தோர் கூறுவர். ஆயினும், `பதிதான் முதலிலே பாசத்தோடு கூடிப் பசுவாய் இருந்து பின் பாசத்தினின்றும் நீங்கிப் பதி யாகின்றது` எனச் சிலர் கூற முற்படுவாராயின், அங்ஙனம் கூறுவார்க்குப் பதியின் வேறாய்ப் பசு இல்லையாம் ஆகலானும், பாசங்கள் சடம் ஆகலின் தாமே செயற்படமாட்டா ஆகலானும் பதியே தன்னின் மிக இழிந்த பாசங்களை மேலிட்டுக்கொண்டு பசுவாதல் கூடுமோ?
**********************************************
பாடல் எண் : 20
அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர்
அத்தத்தில் உத்தர மாகும் திருமேனி
அத்தத்தி னாலே அணையப் பிடித்தலும்
அத்தத்தில் தம்மை அடைந்திநின் றாரே.

பொழிப்புரை :  வேதாகமங்களின் அர்த்தத்திலே தெளிவு பிறவாமல் ஐயுற்று வினாவிய முனிவர்களை, அந்த வேதாமகப் பொருள்களில் முடிந்த பொருளாய் உள் அருட்டிரு மேனியானது தனது கையினாலே அணைத்துத் தழுவிக் கொள்ளுதலும், அவர்கள் அத்திருமேனியில் அமைந்த கைக்குறிப்பினாலே தம்மை உள்ளவாறு உணர்ந்துகொண்டார்கள்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

3 comments:

  1. mikavum pajanullathai amaikirathu

    ReplyDelete
    Replies
    1. கருத்துப் பதிவு செய்தமைக்கு மிக்க வந்தனங்கள் இனிய நட்பே!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!