http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 15 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 19, 20. முப்பதம், முப்பரம் – பாடல்கள்: 08 & 07.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020
 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010  

எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002   

எட்டாம் தந்திரம்:பதிக எண்:19: முப்பதம்......................பாடல்கள்: 008 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:20: முப்பரம்.......................பாடல்கள்: 007  ==============================================
 
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -020
கூடுதல் பாடல்கள்  (312+08+07=327)
============================================== 


எட்டாம் தந்திரம் - 19. முப்பதம் :பாடல்கள்: 08
பாடல் எண் : 1
தோன்றிய தொம்பதம் தற்பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம்மூன்றோ டெய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பற
ஏன்றன மாறச் சிவாமாய் இருக்குமே.

பொழிப்புரை :  `துவம்` என்பதே சித்தர் மரபில், `தொம்` என மரூஉ மொழியாகக் கூறப்படுகின்றது.] `துவம்` என்னும் பதம் முன்னே எழ, அதனை அடுத்து, `தத்` என்னும் பதம் வந்து பற்ற. அதன்பின் `அசி` என்னும் பதமும் வந்து சேர, இம்மூன்றும் கூடிய கூட்டமாய் அமைந்த வாக்கியத்தின் பொருளாக ஒருவன் ஆகிவிடுவானாயின் அவன் வியாபகப்பொருளாகிய பரம்பொருளேயாவன். பின் முன்பு தான் பொருந்தியிருந்த மும்மலங்களும் நீங்கச் சிவமாகியிருப்பான்.
**********************************************
பாடல் எண் : 2
போதந் தனைஉன்னி பூதாதி பேதமும்
ஓதும் கருவிதொண் ணூறுடன் ஓராறு
பேதமும் நாதாந்தம் பெற்றியிற் கைவிட்டு
வேதம்சொல் தொம்பத மாகுதல் மெய்ம்மையே.

பொழிப்புரை :   `அறிவாவது சடத்தின் குணமாகாது, வேறேயாம்` என்பதை உணர்ந்து பூதம் முதலிய தத்துவ வகைகளையும், அவற்றின் கூறுகளாகிய தாத்துவிக வகைகளையும் ஆகத் தொண்ணூற்றாறு கருவிகளையும் நாதமுடிவாக அவற்றின் இயல்புகளை ஆராயும் முகத்தால், `தான்` என மயங்காது விட்டொழித்து உண்மை யாகவே, `தத்துவமசி` என்னும் வேதாந்த மகாவாக்கியத்தில் உள்ள `தொம்` பதப் பொருளாகி நிற்றலே ஆன்மாவின் உண்மை இயல்பாகும்.
**********************************************
பாடல் எண் : 3
தற்பதம் என்றும் துவம்பதம் தான்என்றும்
நிற்ப(து) அசி அத்துள் நேரிழை யாள் பதம்
சொற்பதத் தாலும் தொடரஒண் ணாச்சிவன்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

பொழிப்புரை :   முப்பதங்களுள், `அசி` என்னும் பதமே தத் பதம் என்றும் `துவம் பதம்` என்றும் சொல்லத்தக்கதாய் உள்ளது. (அஃதாவது, இரண்டையும் ஒன்றாகச் செய்கின்றது.) அந்தப்பதத்தில் தான் அருட்சத்தி இருக்கின்றாள். அதனால், வாக்குக்களால் எட்ட முடியாத சிவனும் அந்தப்பதத்திலேதான் கற்பனையாக அன்றி, உண்மையாகவே கலந்து நிற்கின்றான்.
**********************************************
பாடல் எண் : 4
அணுவும் பரமும் அசிபதத் தேய்த்து
கணுவொன் றிலாத சிவமும் கலந்தால்
இணையறு பால் தேன் அமுதென இன்பத்
துணையது வாய்உரை யற்றிடத் தோன்றுமே.

பொழிப்புரை :   `துவம்` பதப்பொருளாகிய ஆன்மாவும் `தத்` பதப் பொருளாகிய பரமும் `அசி` பதத்தால் ஒன்றான பின்பு, அதில் சிவமும் கலந்துவிடுமாயின், அக்கலவை, பாலும் தேனும் கலந்த கலவையில் அமுதமும் கலந்தாற்போல இனிமையோடு, உறுதியையும் தந்து நிற்கும். அக்கலவையின் சிறப்புச் சொல்லற்ற நிலையாய்த் தோன்றும்.
**********************************************
பாடல் எண் : 5
தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம்
நம்பிய சீவன் பரன் சிவ னாய்நிற்கும்
அம்பத மேலைச் சொரூபமா வாக்கியம்
செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

பொழிப்புரை :   அழகிய சொற்களால் ஆகிய, பழமையான, மெய்ம்மை கூறும் மகாவாக்கியம் `தொம், (துவம்) தத், அசி` என்னும் மூன்று சொற்களை யுடையது. அச்சொற்கள் முறையே புத்தி முத்திகளை விரும்புகின்ற சீவன், பரம்பொருள், அதன் சத்தி ஆகியவற்றைக் குறித்து நிற்கும். அவ்வாக்கியத்தைப் பன்முறையும் உணர்தலால் அடையப்படும் செவ்விய பொருள், குருவாகி வந்து ஆட்கொள்கின்ற சிவனே.
**********************************************
பாடல் எண் : 6
ஐம்ப தறியா தவரும் அவர்சிலர்
உம்பனை நாடி உரைமுப் பதத்திடைச்
செம்பர மாகிய வாசி செலுத்திடத்
தம்பர யோகமாய்த் தான்அவன் ஆகுமே.

பொழிப்புரை :   எழுத்தறி கல்வியில் அறியவேண்டிய எழுத்துக்கள் ஐம்பது. அவற்றுள் ஒன்றையேனும் அறியாதவரும் உளர். அவரும் மக்களுட் சிலராகவே இருக்கின்றனர்: (அவர்கள் நற்கதி அடையுமாறில்லை. ஆகவே,) கல்வி கற்றவர் அக்கல்வியின் முடிநிலையாக முப்பதங்களைக் கொள்ளுதல் வேண்டும். கொண்டு, செம்மையான, உயர்ந்த வாசியோகத்தைச் செய்தல் வேண்டும். அவ்யோகம் `ஹம்ஸ:` என்னும் மந்திரமாக அமைதலின், அதுவே தொம்பதமும், தத்பதமுமாய் நிற்கும். நிற்கவே, அது, `யோஹம்` என்று ஆகி, சீவன் சிவனாகின்ற பயனைத் தகும்.
**********************************************
பாடல் எண் : 7
நந்தி யறிவும் நடுவில் அதீதமாம்
இந்தியம்சத் தாதி விடசிவ னாகும் நால்
நந்திய மூன்றிரண் டொன்று நலவைந்தும்
நந்தில் நனவாதி மூட்டும் அனாதியே.

பொழிப்புரை :   ஆன்மாவிற்குச் சிவனை அறிகின்ற அறிவும் நழுவுவதே `அதீதம்` எனப்படும் முடிவுநிலைவாய்க்கும். அஃதாவது, ஆன்மாச் சிவனை அறியும் பொழுது, `யான் சிவனை யறிகின்றேன்` என அறிகின்ற அறிவும் அதைவிட்டு நழுவினால் அதன் பின்பே துரியாதீதநிலை வாய்க்கும்` என்பதாம். (ஆகவே அவ்வறிவு நழுவிய நிலை துரியமாதல் பெறப்பட்டது.) இனி அவ்வாறின்றி, ஞானேந்திரியம், கன்மேந்திரியம் அவற்றின் விடயங்களாகிய சத்தாதி, வசனாதி முதலிய தத்துவ தாத்துவிகங்கள் நீங்கியபோதிலும், `யான்` என்னும் உணர்வு நீங்காது. ஆகவே, அது நீங்குதல் நின்மல சாக்கிரம் முதலியவற்றிலாம். அவையும் நீங்கினால் பரசாக்கிரம், பரசொப்பனம் முதலியனவே இயற்கை நிலையாகிய முத்தியைக் கூட்டுவிக்கும்.
**********************************************
பாடல் எண் : 8
பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

பொழிப்புரை :  பரதுரியத்தில் உலகத்தை அனுபவித்தலாகிய கேவல சகல அஞ்சவத்தைகள் எஞ்ஞான்றும் நிகழாது அறவே நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரோவொருகால் நிகழினும் நிகழும். ஆகவே, நின்மல துரிய `அசி` பத அனுபவமாய் நிற்பதே. `அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை,` என்பதாம்.
**********************************************

எட்டாம் தந்திரம் - 20. முப்பரம் :பாடல்கள் -07

பாடல் எண் : 1
தோன்றிஎன் னுள்ளே சுழன்றெழு கின்றதோர்
மூன்று படிமண் டலத்து முதல்வனை
ஏன்றெய்தி இன்புற் றிருந்த இளங்கொடி
நான்று நலஞ்செய் நலஞ்செயு மாறே.

பொழிப்புரை :  எனது உடம்பினுள்ளே உற்பத்தியாகி, கீழ்மேலாய் உள்ளது. யோக முயற்சியால் மேல் கீழாய்ச் சுழல்வதற்கு இடமாகின்ற மூன்று மண்டலங்கள் உள. (அவை `தீ, ஞாயிறு, திங்கள்` என்பன) அம்மண்டலங்கட்கு மேலேயுள்ள முதல்வனைப் பற்றியுள்ள ஓர் இளமையான கொடி, அவனைப் பற்றித் தொங்கிக்கொண்டு, உடல் நலத்தையும், உயிர் நலத்தையும் தருதல் அறியத் தக்கது.
**********************************************
பாடல் எண் : 2
மன்று நிறைந்தது மாபரம் ஆயது
நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும்
கன்றை நினைந்தெழு தாய்என வந்தபின்
குன்று நிறைந்த குணவிளக் காகுமே.

பொழிப்புரை :  மண்டல பரம் துவாத சாந்தத்தில் நிற்றலால் ஏனைய கடவுளர்க் கெல்லாம் மேலான கடவுளாயும், அங்கே திருநடனம் புரிவதால் மன்றில் நிறைந்ததாயும், தனது சத்தியால் உடம்பெங்கும் நிறைந்து விளங்குவதாயும், இன்னும் நேரே எழுந்தருளிவந்து அருள் புரியும் குருவடிவாயும் உள்ளது. அந்தப்பரம் உயிர்களைக் கன்றை நினைந்து ஓடிவரும் தாயைப் போல நினைந்து எதிர்வந்து அருள் புரிந்த பின்னர், குடத்துள் இருந்த விளக்குப்போல இருந்த அது, குன்றின் மேல் விளங்கும் விளக்குப் போல இனிது விளங்கி நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 3
ஆறாறு தத்துவத் தப்புறத் தப்பரம்
கூறா வுபதேசம் கூறில் சிவபரம்
வேறாய் வெளிப்பட்ட வேதப் பகவனார்
பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே.

பொழிப்புரை :  பரம்பொருள், `முப்பத்தாறு தத்துவங்களுக்கும் அப்பாற்பட்டது` என உணரப்படும் பொழது `தத்துவ பரம்` எனப்படும். பொருளால் வேறாகாமை பற்றி முன்மந்திரத்தில், `மண்டல பரமே குருவாய் வந்து உணர்த்துவது` எனக் கூறப்பட்ட தாயினும் அவ்வாறு வந்து உணர்த்துவது தத்துவ பரமே. பரம் பொருள் குருவாகி வந்து உணர்த்தியது சைவ வரலாற்றில் அன்றிப் பிற சமய வரலாற்றில் காணப் படாமையால், குருவாகி வந்து உணர்த்தும் தத்துவ பரம் சிவபரமே என்பது தெளிவு. அது செய்த உபதேசமும் சொல்லமாற் சொன்ன உபதேசமே. அஃதாவது, சின் முத்திரையால் உணர்த்திய உபதேசமே. அந்த உபதேச பரத்திற்கு வேறாய் வெளிப்பட்ட, வேதாகமங்களை அருளிச்செய்த சதாசிவ நாயனார் வெளிப்பட்டது. முற்கூறிய கூறா உபதேசம் இனிது தெளியப்பட்டு பயன் தருதற் பொருட்டாம். அவ்விரு மூர்த்திகளது செயலாலும் பயன் கொள்பவரால் அச்செயல்கள் மேலும் மேலும் இன்பம் பெருகும்படி நன்கு பேணப்படும்.
**********************************************
பாடல் எண் : 4
பற்றறப் பற்றில் பரம்பதி யாவது
பற்றறப் பற்றில் பரன்அறி வேபரம்
பற்றறப் பற்றினைப் பற்றவல் லோர்கட்கே
பற்றறப் பற்றில் பரம்பரம் ஆகுமே.

பொழிப்புரை : பரம்பொருள் உயிர்களைப் பாதுகாக்கும் பதியாகி நிற்றல், அவ்வுயிர்கள் வேறு பற்று எதுவும் இன்றி, அனைத்துப் பற்றுக்களையும் விடுத்து, அந்தப் பரம் பொருள் ஒன்றையே பற்றி நிற்கும் பொழுதுதான், (இப்பாதுகாவல், பிறவிக் கடலினின்றும் எடுத்துக் காக்கும் காவல்) பிற பற்றுக்களை யெல்லாம் விடுத்துப் பரம் பொருளையே பற்றுதல், குரு உபதேசத்தைச் சிந்தித்துத் தெளிதலால் உண்டாகும். அதனையே,
``ஓர்த்துள்ளம் உள்ள துணரின், ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு``  -திருக்குறள் - 357.
எனத் திருவள்ளுவர் கூறினார்.  அங்ஙனம் வேறு பற்று அறப் பரம்பொருளையே பற்றும் பொழுது அந்தப் பரம்பொருளின் ஞானமே உயிரினது ஞானமாகிப் பின்பு, அதுவே பரம் பொருளும் ஆகிவிடும். பரம்பொருளாகிய பற்றப்படும் பொருளை இவ்வாறு பற்ற வல்லவர்கட்கு அப்பற்றுதலின்கண் பரம்பொருள் பரம்பொருளாகவே வெளிப்படும்.
**********************************************
பாடல் எண் : 5
பரம்பர மான பதி பாசம் பற்றாப்
பரம்பர மாகும் பரம் சிவம் மேவப்
பரம்பர மான பரசிவா னந்தம்
பரம்பர மாகப் படைப்ப தறிவே.

பொழிப்புரை : பாசங்களோடு சிறிதும் தொடர்பின்றி, மேலானதற்கும் மேலானதாய் நிற்கின் அதுவே மிகமேலான பரம்; பதி. (என்றது `பசு பரம்` என்றபடி பாசங்களின் மேலானது பசு; அது பரம். அதற்கு மேலானது பதி; அது பரம்பரம் `தற்பரம்` என்றும் சொல்லப்படும். தற்பரம் தனக்கு மேலானது. `தன்` என்பது ஆன்மா தற்பரம், பரமான்மா `தத்துவ பரம்` என்பது தத்துவங்களைக் கடந்த நிலையை மட்டும் குறிப்பது. `பசு - பரம்` என்பது, கன்மம் திரோதாயி இவற்றிற்கு மேல் பசு இவற்றையும் கடந்தது பசுபரம்) இவ்வாறான `பரம்` என்றும் `சிவம்` என்றும் சொல்லப்படுகின்ற அந்தப் பொருளை உயிர், மாயா காரியப் பொருள்களில் எந்த ஒன்றினின்றும் அடையப்படாத பேரானந்தத்தையுடையதாகும். அந்த ஆனந்தத்தைப் பொருளாகக் கொண்டு முயன்று அடையும் அறிவே, `அறிவு` என்று சொல்லப்படும்.
**********************************************
பாடல் எண் : 6
நனவில் கலாதியாம் நால்ஒன் றகன்று
தனிஉற்ற கேவலந் தன்னில் தானாகி
நினைவுற் றகன்ற அதீதத்துள் ஞேயந்
தனையுற் றிடத்தானே தற்பரம் ஆமே.

பொழிப்புரை :  சகலத்தில் புருவ நடுவிலே நிகழும் `கேவல சாக்கிரம், சகல சாக்கிரம்` என்னும் இருவகைச் சாக்கிரத்துள், வித்தியா தத்துவங்களில் கலை முதலிய ஐந்து தத்துவங்களும் செயற்படாது ஒடுங்கிய நிலையில் ஆன்மா உயிர்ப்பும் இன்றித் தனித்துக் கிடக்கும் ஒருநிலையை அடையும் அந்நிலையும் ஒருவகைக் கேவலமே. அந் நிலையில் கருவிகள் இல்லாவிடினும், ஆணவம் உள்ளது. கருவிகள் ஒடுங்கிய நிலையில் இந்தக் கேவல நிலை உண்டாகாமல் நீங்கித் திருவருள் அறிவிக்க அறிதலாகிய அறிவினைப் பெற்று அறிகின்ற சாக்கிரம் முதலியவைகளை அடைந்து, முடிவாக அதீதத்தை எய்தி, அதன்கண் விளங்குகின்ற ஞேயத்தில் அழுந்தும் பொழுதே ஆன்மா, மேற்கூறிய பசு பரமாகிய தற்பரமாய் நிற்கும்.
**********************************************
பாடல் எண் : 7
தற்கண்ட தூயமும் தன்னில் விலாசமும்
பிற்காணும் தூடணந் தானும் பிறழ்வுற்றுத்
தற்பர கால பரமும் கலந்தற்ற
நற்பரா தீதமும் நாடக ராதியே.
பொழிப்புரை :  ஆன்மா தன்னைத்தான் வேறு `தத்துவங்கள் வேறு` என உணர்தல் ஆன்ம தரிசனமாம். அதன்பின், கருவிகள் நீங்கிய பின்பும் தனக்கு அறிவு நிகழக் காணுதலால் `எஞ்ஞான்றும் தனக்கு அறிவைத் தருவது சிவமே` என உணர்ந்து சிவனது அறிவையே தனது அறிவிற்குப் பற்றுக்கோடாக உணர்ந்து, அவன் அறிவினாலே அவனை நோக்குதல் சிவதரிசனமாகும். இவ்விடத்தில் ஆன்ம சுத்தியும் ஓரளவு உடன் நிகழும். பின்பு அங்ஙனம் உணரப்பட்ட சிவனிடத்தில் தான் அடங்கி அவனேயாய் நிற்றல் சிவயோகமாகும். இந்நிலையில் ஆன்ம சுத்தி நிறைவுறும். அதனால், பின்பு பிரபஞ்சம் காட்சிப்படினும் ஆன்மா அதனைப் பற்றாது ஒதுக்கிவிடும். இம்மூன்று நிலைகளையும் தாண்டிய பொழுது, காலத்தைக் கடந்து நிற்றலால், `கால பரம்` என்னும், ஆன்மாவைக் கடந்து நிற்றலால், `தற்பரம்` என்றும் சொல்லப் படுகின்ற பசுபரம் தோன்றும். பின் அதனோடு ஒற்றுமைப் படுதல் நின்மல துரியாதீதமாகும். இஃது இம்மையில் அம்மையாம் ஆன்ம லாபமாகும். இவற்றிற்குப்பின் தேகம் நீங்கப் பரசிவத்தில் கலத்தல் பரதுரியாதீதமாகும். இவற்றையெல்லாம் தெரிந்துணர்தல், அகரத்தை முதலாக உடைய எழுத்துக்களால் ஆகிய நூல்களினாலேயாம்.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!