http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 15 February, 2013

திருமந்திரம்-தந்திரம்08: பதிகம் 17, 18:: அடிதலை அறியும் திறங்கூறல், முக்குற்றம் – பாடல்கள்: 10 & 02.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
 

பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
எட்டாம் தந்திரம்:பதிக எண்:01: உடலில் பஞ்சபேதம்..பாடல்கள்: 018 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:02: உடல் விடல்.................பாடல்கள்: 003  
 எட்டாம் தந்திரம்:பதிக எண்:03: அவத்தை பேதம்.............பாடல்கள்: 025 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:04: மத்திய சாக்கிராவத்தை .பாடல்கள்: 016
எட்டாம் தந்திரம்:பதிக எண்:05: அத்துவாக்கள்....................பாடல்கள்: 003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:06: சுத்த நனவாதி பருவம் .பாடல்கள்: 040
எட்டாம் தந்திரம்:பதிக எண்:07: கேவல சகலசுத்தம்.......பாடல்கள்: 042 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:08: பராவத்தை..........................பாடல்கள்: 026  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:09: முக்குண நிற்குனங்கள்.பாடல்கள்: 001 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:10: அந்தாதி பேதம்................பாடல்கள்: 002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:11:பதினொன்றாந்தானமும் `அவத்தை` எனக்காணல் பாடல்கள்:003 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:12:கலவு செலவுகள் – பாடல்கள்:002 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:13: நின்மலாவத்தை. ..........பாடல்கள்: 051 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:14: அறிவுதயம்......................பாடல்கள்: 014 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:15: ஆறந்தம்............................பாடல்கள்: 034  
எட்டாம் தந்திரம்:பதிக எண்:16: பதி, பசு, பாசம்...............பாடல்கள்: 020
 
எட்டாம் தந்திரம்:பதிக எண்:17: அடிதலை அறியும் திறங்கூறல் .பாடல்கள்: 010 

எட்டாம் தந்திரம்:பதிக எண்:18: முக்குற்றம்....................பாடல்கள்: 002  ==============================================  
தந்திரம் 8- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -018
கூடுதல் பாடல்கள்  (300+10+02=312)
==============================================
 
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பாடல் எண் : 1
காலும் தலையும் அறியார் கலதிகள்
கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.

பொழிப்புரை :  முற்செய்தவம் இன்மையால் இப்பிறப்பில் நல்லறிவின்றிப் புல்லறிவேயுடையார், தம்மை எல்லாம் அறிந்தவராக மதித்துக்கொண்டு, ஏவவும் செய்கலாது, தாமும் தேராதுl பயனிலவற்றைப் `பயனிடைய` எனவும், பயனுடையவற்றை `பயனில` எனவும் கொண்டு தாம் வேண்டியவாறே செல்பவர்களை, `தலை கால் தெரியாது திரிபவர்` என்றல் வழக்கு. அதன் பொதுப் பொருள் வெளிப்படையாயினும், சிறப்புப் பொருள் குறிப்பாகவே உள்ளது. அஃது யாதெனின், `கால்` என்பது சிவனது சத்தி. அஃதே திருவருள். அஃதே எல்லா வற்றிற்கும் வினை முதல் `தலை` என்பது உயிர். `உயிர்க்கு அறிவு உண்டாதல் தலையிலே` என்பது யாவரும் அறிந்தது. எனவே, ஞானம் உதயமாவது `தலை` எனப்படுகின்ற உயிரினிடத்திலேதான். அந்த ஞானம் தானே உதயமாகாது. `கால்` எனப்படுகின்ற சிவசத்தி உதிப்பிக்கவே உதயமாகும். (ஞானகுரு மாணாக்கனது தலையில் தமது காலை வைத்துத் தீக்கைசெய்தல் இந்த உண்மையை நன் குணர்த்தும். தாழ்ந்தோர் உயர்ந்தோர் காலில் தங்கள் தலைபடும் படிவணங்கும் மரபும் இது பற்றியது. ``பொல்லார் இணை மலர் நல்லார் புனைவரே``8 என மெய்கண்டதேவர் அருளிச்செய்த குறிப்பும் உணரத்தக்கது.  ``கோள் இல் பொறியிற் குணம் இலவே, எண்குணத்தான் தாளை வணங்காத் தலை``*  என்றதும் இக்குறிப்பினதே. காலாகிய சிவசத்தி உதிப்பிக்கின்ற ஞானத்தின் பயன் அந்த உயிர் வீடு பெறுதலாம்.
**********************************************
பாடல் எண் : 2
தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

பொழிப்புரை :  (முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.
**********************************************
பாடல் எண் : 3
நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.

பொழிப்புரை :  `அடி தலை அறியும் திறம்` என்பது, `இறைவனது அடி தலைகளை அறிதல்` எனவும் பொருள் தரும். அம்முறையில் பார்க்கும்பொழுது, `அவனது அடி தலைகள் உயிர்களால் அறிய இயலாதவை` என்று அறிதலே மெய்யறிவாகும் அந்த உண்மையை அறிவிக்கவே அவன் மாலும், அயனும் போர் செய்தபொழுது அப்போரினால் மிக்க வலிமையையுடைய அசுரரும், தேவருங்கூட அழியாது வாழ்தற்பொருட்டுத் தனது திருவடிகள் நிலம் முழுதும் கடந்து கீழாகவும், முடி அண்டங்களை யெல்லாம் கடந்து அவற்றிற்கு மேலாகவும் இருக்கும்படி நெடியதோர் உருவத்தோடு அவர்கட்கு இடையே தோன்றி நின்றான். (அவர்கள் அவனது அடியையும், முடியையும் தேடிக் காணாது இளைத்தனர். அங்ஙனமாகவே) உலகம் முழுவதையும் படைத்தல் முதலிய ஐந்தொழிலைச் செய்யும் முதல்வன் அவனே ஆகின்றான். அவன் `நந்தி` என்பதைத் தனது பெயராக உடையவன். அவனது திருவடியிணை தான் தலைமேல் உள்ளது.
**********************************************
பாடல் எண் : 4
சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
எந்தையும் என்னை அறியகி லா னாயின்
எந்தையை யானும் அறியகி லேனே.

பொழிப்புரை :  முன் மந்திரத்தில் சொல்லியவாறு சிவனது திருவடியினை எனது தலைமேல் மட்டும் உள்ளதன்று எனது சித்தத்தினுள்ளேயும் உள்ளது. இனி எனது சித்தத்தை உள்ளடக்கி, வெளியிலேயும் உள்ளது. இந்நிலை, அவன்தானே இரங்கி எனக்குச் செய்த அருட்செயலாகும். ஏனெனில், முதற் கண் அவன் என்னை நினையாதிருப்பின், நான் அவனை நினைப்பதற்கே வழியில்லை.
**********************************************
பாடல் எண் : 5
பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.

பொழிப்புரை :  சொற்களால் சொல்லவராராத ஒரு நிலம்; அவ்வாறான ஓர் ஓளி; இவ்வாறெல்லாம் சொல்லப்படுகின்ற அதற்கு அப்புறத்தாகிய இடமே என்னுடைய தலைவர் இருக்கும் இடம். அவர் அவ்வாறிருக்கவும் மனக் கண்ணிற்கும் காணப் படாத ஓர் ஒளியாயும், வாக்கிற்கு வாராத ஒரு மந்திரமாயும் உள்ள அதனது இயல்பையும், அதனை அடையும் வழியையும் ஒருவன் எனக்குச் சொன்னான். அந்த வழியிலே நின்றமையால், முன் தந்திரத்திற் கூறியவாறு என் தலைவனது திருவடியை யான் அடைந்தேன்.
**********************************************
பாடல் எண் : 6
பதியது தோற்றும் பதமது வைம்மின்
மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.

பொழிப்புரை :  பதியாகிய சிவன் உங்கட்குக் காட்டாவிடினும் அன்பர்கட்குக் காட்டிய திருவடிகளை பதி வரலாறு உணர்ந்து அவைகளைப் பாவனையால் உங்கள் தலை மேல் வையுங்கள் மற்றும் மலர்போன்று அவைகளை உங்கள் உள்ளத்திலே வைத்துத் தியானிப்பதுடன், வாயால் புகழ்ந்து பாடுங்கள். இவைகளையெல்லாம் இடையறாது செய்யாவிடினும் இவற்றிற்குரிய காலங்களைத் தெரிந்து அக்காலங் களில் செய்யுங்கள்.
**********************************************
பாடல் எண் : 7
தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.

பொழிப்புரை :  எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவைகளைத் தாங்கி நிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந்தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.
**********************************************
பாடல் எண் : 8
ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.

பொழிப்புரை :  மக்கள் உடம்பிற்குள் தாமரைக் கொடி ஒன்றே உள்ளது: அதில் மலர்கள் மூன்று உள்ளன. அந்த மூன்று மலர்களிலும் என்றும் அவற்றால் வருந்துதல் இல்லாத சிவனது திருவடியிணையும் உள்ளது. ஆயினும் அத்திருவடி யிணையைக் காண்பதற்கு அந்த மூன்று மலர்களும் மலராக மலர்தல்வேண்டும். அவ்வாறு மலர்தற்கு அவை பக்குவப்படவேண்டும். அதற்கு உடம்பிற்றானே உள்ள நெருப்பை எழுப்பி வெதுப்பினால், அம்மலர்கள் பக்குவப் பட்டு மலரும் மலர்ந்தால், அங்ஙனம் மலர்விக்க வல்லவர்கட்குச் சிவனை அடைதல் இப்பொழுதே எளிதாகிவிடும்.
**********************************************
பாடல் எண் : 9
கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

பொழிப்புரை :  சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.
**********************************************
பாடல் எண் : 10
பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.

பொழிப்புரை :  தாம் பெற்ற புதல்வரிடத்தில் உள்ள தீ நாற்றத்தையும், அதற்குக் காரணமான அசுத்தப் பொருள்களையும் அனுபவித்த போதிலும் அப்புதல்வரிடத்தில், வெறுப்புக் கொள்ளாமலே பெற்றோர்கள் அவை நீங்குதற் பொருட்டுப் புதல்வர்க்கு வெறுப்பான செயல்கைளச் செய்வார். (அவை நெய்யிட்டு, நலங்கிட்டு முழுக் காட்டுதல், மருந்தூட்டுதல் முதலியனவாம்) அது போலவே, சிவனும் உயிர்கள் பக்குவம் எய்தற் பொருட்டு உலகப் பற்றை அவைகட்கு உண்டாக்குதலால், அப்பற்றின் வழியவான செயல்களைச் செய்வான் ஆகவே, அது கருணை காரணமானது அன்றி, வன்கண்மை காரணமானது அன்றாம்.
**********************************************
எட்டாம் தந்திரம் - 18. முக்குற்றம்
பாடல் எண் : 1
மூன்றுள குற்றம் முழுதும் நலிவன
மான்றிருள் தூங்கி மயங்கிக் கிடந்தன
மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார்
மூன்றினுட் பட்டு முடிகின்ற வாறே.

பொழிப்புரை :   உயிர்களை எப்பொழுதும் வருத்துவனவாய் மூன்று குற்றங்கள் உள்ளன. அதனால் ஆணவத்தின் சத்தி முற்றும் மடங்காது செயற்பட, சில வேளைகளில் ஒன்றை மற்றொன்றாக உணர்ந்தும், சில வேளைகளில் எதனையும் அறியாதே கிடந்தும் உயிர்கள் துன்புறு கின்றன. ஆகவே அம்முக்குற்றம் நீங்கப் பெற்றவரே துன்பத்தை நீக்கினவர் ஆகின்றனர். நீங்கப் பெறாதவர் அக்குற்றங்களில் கிடந்து கெடும் முறைமையை உடையவர் ஆவர்.
**********************************************
பாடல் எண் : 2
காமம் வெகுளி மயக்கம் இவைகடிந்(து)
ஏமம் பிடித்திருந் தேனுக் கெறிமணி
ஓமெனும் ஓசையி னுள்ளே உறைவதோர்
தாமம் அதனைத் தலைப்பட்ட வாறே.

பொழிப்புரை :  `காமம், வெகுளி, மயக்கம்` என்னும் மூன்று குற்றங்களையும் நான் முற்றக்கடிந்து, எனக்குப் பாதுகாவலாய் உள்ள பொருளை நோக்கிக்கொண்டிருந்தேன். அப்பொழுது, அடிக்கப்பட்ட மணியினின்றும் எழும் ஓசை போல, `ஓம்` என்னும் ஓர் ஓசை என் உடம்பினின்றும் எழுந்தது. அவ்வோசையை நுணுகி நோக்கியபோது அதனுள்ளே ஓர் அரியபொருள் வெளிப்பட அதனை நான் அடைந்தேன். இது வியப்பு.
**********************************************
மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!