http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 28 March, 2012

திருமந்திரம்-பாயிரம் (பாடல்கள்:26-39/39) பகுதி-III



பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம்  
 

237 பதிகங்கள், 3000 பாடல்கள் : பொழிப்புரை மற்றும் குறிப்புரை : முனைவர் சி.அருனைவடிவேல் முதலியார்.

 

விநாயகர் வணக்கம் ..................................... பாடல்கள்: 01
பாயிரம் : பதிக வரலாறு: .............................பாடல்கள்: 39
==============================================(01+39=40) 
பாயிரம்: பாடல்கள் (26-39/39) பகுதி: III


பாடல் எண் : 26

அங்கி மிகாமைவைத் தான்உடல் வைத்தான்
எங்கும் மிகாமைவைத் தான்உல கேழையும்
தங்கி மிகாமைவைத் தான்தமிழ்ச் சாத்திரம்
பொங்கி மிகாமைவைத் தான்பொருள் தானுமே.  

பொழிப்புரை :  உடம்பைப் படைத்த இறைவன், அதனுள் வேண்டும் அளவிற்கே நெருப்பை அமைத்துள்ளான். நிலவுலகைப் படைத்த அவன் அளவின்றி எங்கும் பரந்து கிடப்பப் படையாது, ஏழென்னும் அளவிற்படவே படைத்தான். அவ்வாறே தமிழ் நூல்களையும் கற்பாரின்றி வீணே கிடக்க வையாது, அளவாக வைத்தான். பொருளையும் அவற்றால் மிகைபடாது இன்றியமையாத அளவிலே புலப்பட வைத்தான்.
****************************************************
பாடல் எண் : 27
ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை
மாயத்தை மாமாயை தன்னில் வரும்பரை
ஆயத்தை அச்சிவன் றன்னை அகோசர
வீயத்தை முற்றும் விளக்கியிட் டேனே.

பொழிப்புரை :இம்மூவாயிரம் பாட்டுக்களிலே, `அறியப்படும் பொருள், அறிவு, அறிபவன், அசுத்தமாயா காரியம், சுத்தமாயா காரியம், அனைத்திற்கும் மேலான பரம்பொருளாகிய சிவன் என்று சொல்லப்படுகின்ற வாக்கு மனங்கட்கு எட்டாத முதல்கள் ஆகிய அனைத்தின் இயல்பையும் முற்றக் கூறுவேன்.
****************************************************
பாடல் எண் : 28
விளக்கிப் பரமாகும் மெய்ஞ்ஞானச் சோதி
அளப்பில் பெருமையன் ஆனந்த நந்தி
துளக்கறும் ஆனந்தக் கூத்தன்சொற் போந்து
வளப்பிற் கயிலை வழியில்வந் தேனே.

பொழிப்புரை :  இவை அனைத்தையும் விளக்கிச் சிவபெருமானது உபதேச முறையில் நின்று, `திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஆசிரியன்` என்னும் பேற்றைப் பெற்றவனாவேன்.
****************************************************
பாடல் எண் : 29
நந்தி அருளாலே மூலனை நாடிப்பின்
நந்தி அருளாலே சதாசிவ னாயினேன்
நந்தி அருளால்மெய்ஞ் ஞானத்துள் நண்ணினேன்
நந்தி அருளாலே நான்இருந் தேனே.

பொழிப்புரை :  சிவபெருமானது திருவருளால் மூலனது உடலைப் பற்றி நின்றபின், அவனது திருவருளாலே ஆகமத்தைப் பாடும் நிலையை அடைந்தேன். அந்நிலையில் அவன் அருளால் நிட்டையும் பெற்றுச் சீவன் முத்தி நிலையில் பல்லாண்டுகள் இருக்கின்றேன்.
****************************************************
பாடல் எண் : 30
இருக்கில் இருக்கும் எண்ணிலி கோடி
அருக்கிய மூலத்துள் அங்கே இருக்கும்
அருக்கனும் சோமனும் ஆரழல் வீச
உருக்கி யுரோமம் ஒளிவிடுந் தானே.

பொழிப்புரை :  பல்லாண்டுகள் ஓர் உடம்பிலே இருத்தல் கூடுமோ? உடம்பு தளர்ச்சியுற்று அழிந்தொழியாதோ எனில் மறைவிடமாகிய மூலாதாரத்துள், எழாது கிடக்கின்ற அரிய நெருப்பை, `சூரியகலை. சந்திரகலை` என்னும் இருகாற்றும் அடங்கி நின்று மூட்டி வளர்க்கும்படி இருந்தால், உடம்பு நெடுங்காலம் தளர்வின்றி இருக்கும்; உரோமமும் வெளிறாது கறுத்து அழகுற்று விளங்கும்.
***************************************************

பாடல் எண் : 31
பிதற்றுகின் றேன்என்றும் பேர்நந்தி தன்னை
இயற்றுவன் நெஞ்சத் திரவும் பகலும்
உயற்றுவன் ஓங்கொளி வண்ணன்எம் மானை
இயற்றிகழ் சோதி இறைவனும் ஆமே.


பொழிப்புரை இவ்வாறிருக்கின்ற நிலையில் நான் இரவும் பகலும் சிவபிரானது பெயரையே பிதற்றுவேன். நெஞ்சில் நினைப்பேன்; காயத்தால் அவனை வழிபடுவேன். அதனால், விளக்க விளங்குகின்ற என் அறிவும், இயல்பாய் விளங்குகின்ற சிவனது அறிவேயாய்த் திகழும்.


****************************************************
பாடல் எண் : 32
ஆர்அறி வார்எங்கள் அண்ணல் பெருமையை
ஆர்அறி வார்அவ் வகலமும் நீளமும்
பேர்அறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின்
வேர்அறி யாமை விளம்புகின் றேனே.

பொழிப்புரை : எங்கள் சிவபெருமானது திருவருளின் பெருமையை முற்ற உணர்வோர் யாவர்! அவனது பரப்பைத்தான் யாவர் உணரவல்லார்! சொல்லுக்கு அகப்படாத பேரறிவுப் பொருள் தன்னோடு ஒப்பது பிறிதொன்றில்லதாய் உளது. அதனது மெய்ந்நிலையை அறியாமலே நான் பலரும் அறியக்கூறத் தொடங்கினேன்.
****************************************************
பாடல் எண் : 33
பாடவல் லார்நெறி பாடஅறிகி லேன்
ஆடவல் லார்நெறி ஆடஅறிகி லேன்
நாடவல் லார்நெறி நாடஅறிகி லேன்
தேடவல் லார்நெறி தேடகில் லேனே..

பொழிப்புரை : இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழுள் ஒன்றையும் நெறிப்பட அறிகிலேன். அளவை நூல் முறையால் ஆராயவும் வல்லனல்லேன். பேரன்பினால் இறைவனையே தேடி அலையும் நிலைமையும் இல்லேன்.
****************************************************
பாடல் எண் : 34
மன்னிய வாய்மொழி யாலும் மதித்தவர்
இன்னிசை உள்ளே எழுகின்ற ஈசனைப்
பின்னை உலகம் படைத்த பிரமனும்
உன்னும் அவனை உணரலும் ஆமே.

பொழிப்புரை :   தன்னை அறிகின்றவரது உள்ளத்தில் வீணையுள் இனிய இசை போல மெல்ல எழுகின்றவனும், உலகத்தைப் படைத்த பிரமனாலும் தியானிக்கப் படுகின்றவனும் ஆகிய இறைவனது பெருமையை, நிலைபெற்ற மெய்ந்நூல் வழியாகவும் சிறிது உணர்தல் கூடும்.
****************************************************
பாடல் எண் : 35
தத்துவ ஞானம் உரைத்தது தாழ்வரை
முத்திக் கிருந்த முனிவருந் தேவரும்
ஒத்துடன் வேறாய் இருந்து துதிசெயும்
பத்திமை யால்இப் பயன்அறி யாரே.

பொழிப்புரை மன்னிய வாய் மொழியாகிய சிவாகமங்கள், வீடு பேற்றை அடைவதற்கு விரும்பியிருந்த முனிவரும், தேவரும் கருத்தொருமை கொண்டு உலகப் பயன் விரும்பும் மக்களை விடுத்துத் தனி இடத்திலிருந்து வேண்டிக் கொண்ட அன்பு காரணமாக இறைவன் உண்மை ஞானத்தைக் கயிலைத் தாழ்வரைக்கண் இருந்து உணர்த்தியருளிய நூல்களாம். பக்குவம் இல்லாதோர் இவ்வுண்மையை அறிய மாட்டார்.
****************************************************
பாடல் எண் : 36
மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது
காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்
ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே..  

பொழிப்புரை : மூலன் பாடிய மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் முதற் கடவுளாகிய சிவபெருமானை அடைவர்.
****************************************************
பாடல் எண் : 37
வைத்த பரிசே வகைவகை நன்னூலின்
முத்தி முடிவிது மூவா யிரத்திலே
புத்திசெய் பூர்வத்து மூவா யிரம்பொது
வைத்த சிறப்புத் தரும்இவை தானே..



பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.
****************************************************
பாடல் எண் : 38
வந்த மடம்ஏழு மன்னும்சன் மார்க்கத்தின்
முந்தி உதிக்கின்ற மூலன் மடவரைத்
தந்திரம் ஒன்பது சார்வுமூ வாயிரம்
சுந்தர ஆகமச் சொல்மொழிந் தானே.

பொழிப்புரை : பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப் பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போக தேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே. 
****************************************************
பாடல் எண் : 39
கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்
நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்
புலங்கொள் பரமானந் தர்போக தேவர்
நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

பொழிப்புரை :   பொழிப்புரை எழுதவில்லை. குறிப்புரை : இப்பாட்டுக்கள் பின்வந்தோர் செய்தவை. இவை முறையே `முத்தி சாதனமாகிய இந்நூற்கு முதற்கண் உள்ள இப்பாட்டுக்கள் பாயிரம்` என்பதும், `திருமூலரது முதல் மடத்தினின்றும் அவர் மாணாக்கர் எழுவரது கிளைமடங்கள் தோன்றின; அவை அனைத்திற்கும் நூல் இத்திருமந்திரம்; இஃது ஒன்பது தந்திரங்களையும் உடையது` என்பதும், `திருமூலர் மாணாக்கர் எழுவருள், `காலாக்கினி` என்பவரது மரபு, அகோரர், திருமாளிகைத் தேவர், நாதாந்தர், பரமானந்தர் போகதேவர், மூலர் என்னும் முறையில் தொடர்ந்து விளங்கிற்று` என்பதும் கூறுவன. இறுதிக்கண் சொல்லப்பட்ட `மூலர்` என்பவர்தம் மாணாக்கரே இப்பாட்டுக்களைச் செய்தார் போலும்! அல்லது முதல் இரண்டை முன்னவருள் சிலர் செய்திருத்தலும் கூடுவதே.
****************************************************

மேலும் பயணிப்போம்  பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரை மற்றும் குறிப்புரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா...

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!