http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Tuesday 9 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :16. சத்திநிபாதம்.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:09: சன்மார்க்கம்.................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:10: சகமார்க்கம்..................பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:11: சற்புத்திரமார்க்கம்.......பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:12: தாசமார்க்கம்................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:13: சாலோக மாதி..............பாடல்கள்: 003
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:14: சாரூபம்.........................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:15: சாயுச்சம்.......................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:16: சத்திநிபாதம்...............பாடல்கள்: 016 
==========================================
தந்திரம் 5- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் 16
கூடுதல் பாடல்கள்  (093+016= 109)
 
தந்திரம் 5- பதிகம் 16. சத்திநிபாதம்-பாடல்கள்: 016

பாடல் எண் : 01
இருட்டறை மூலை யிருந்த கிழவி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
னருட்டி அவனை மணம்புணர்ந் தாளே.

பொழிப்புரை  இதன் சொற்பொருள் வெளிப்படை.
==============================================
பாடல் எண் : 02
தீம்புல னான திசையது சிந்திக்கில்
ஆம்பு லனாய்அறி வார்க்கமு தாய்நிற்கும்
தேம்புல னான தெளிவறி வார்கட்குக்
கோம்புலன் நாடிய கொல்லையு மாமே.

பொழிப்புரை  `உண்மையில் இன்பப் பொருளாய் உள்ள சிவனை அறிந்து அவனை அடையும் வழியை நாடினால், அங்ஙனம் அறிந்து நாடுவோர்க்கு அவன் தான்ஒருவனே இன்பப் பொருளாய்த் தோன்றித் தேவாமுதம்போலத் தித்தித்து நிற்பான். அவ்வாற்றால் அதற்குமேல் அவனது உண்மை நிலையைத் தெளிந்தவர்கட்கு அவன், தனக்கு நல்ல புல்லும், நீரும், நிழலும் உள்ள இடம் யாது என நோக்கிய பசுவிற்கு அங்ஙனமே உள்ளதாய்க் கிடைத்த புனம்போல நின்று எல்லையில்லாத இன்பத்தை அளிப்பான்.
==============================================
பாடல் எண் : 03
இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி
அருள்நீங்கா வண்ணமே ஆதி அருளும்
மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்
பொருள்நீங்கா இன்பம் புலம்பயில் தானே.

பொழிப்புரை  `ஆதி` எனப்படும் சத்தி (முற்பக்கத்து நிலவுபோல) ஆணவ இருளை நாள்தோறும் படிமுறையாகப் பல பிறவிகளிலும் நின்று கழித்து, அம்மலம் பரிபாகம் உற்ற காலத்து அருளாகிய தனது இயற்கை தன்னைவிட்டு நீங்கியது போலக் காட்டிய அதனைவிடுத்து அருளேயாதலில் மாறாது நின்று, தனது மறைத்தலினின்றும் நீங்கமாட்டாத தேவர்களை அவரவர்க்கு ஏற்ற நிலையில் வைத்து ஆள்பவனாகிய சிவனோடு  நீங்காது நின்று அழிவில்லாத இன்பத்தை நுகர்தலாகிய நிலையை ஆன்மாவுக்கு அருளுவாள்.
==============================================
பாடல் எண் : 04
இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்
பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போல்
மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி
அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.

பொழிப்புரை  இருள் சூழ்ந்திருந்த அறையில் உள்ள பொருளைக் காணலுறும் பொழுது ஒளிமிக்க விளக்குச் சென்று எரிந்தாற்போல, அறியாமை சூழ்தலால் மயக்கம் பொருந்தி நின்ற உள்ளத்தாமரையின்கண் சிவன், அருள் மிகுந்து, அப்பனும், அம்மையுமாய் நிற்பான்.
==============================================
பாடல் எண் : 05
மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி
வெருட்டி வினைஅறுத் தின்பம் விளைத்துக்
குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி
அருட்டிகழ் ஞான மதுபுரிந் தாளே.

பொழிப்புரை  ``இருட்டறை மூலை`` என்னும் மந்திரத்திற் கூறியவாறு, ஆன்மாவைத் தன்வயமாக்கிப் பதிந்த சத்தி, பின்பு, ஆன்மாவின் மயக்க உணர்வை முற்றிலும் போக்கி, வினைகளை வெருண்டோட ஓட்டி, அவ்வினைகளால் உளவாகிய அலமரல் நீங்கியதனால் உண்டாகும் அமைதியை உணர்த்தி, சிவனை உணரமாட்டா திருந்த அந்நிலையை நீக்கி, அவனது அருட்குணங்கள் பலவற்றை உணரப் பண்ணி, அவனது அருளில் விளங்கி நிற்கும் உணர்வைத் தருவாள்.
==============================================
பாடல் எண் : 06
கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேல்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.

பொழிப்புரை  கன்னியாகுமரிக் கடல் துறையில் மூழ்கி விளையாடும் மாந்தர் அந்நீர் வடிவாய் நிற்கும் சத்தியின் பதிவில் மூழ்கி விளையாடும் எண்ணத்தினைக் கொள்கின்றாரில்லை. அக்கருத்து அவருக்கு உண்டாகுமாயின், அடுத்து ஒரு பிறவிதானும் உண்டாகமாட்டாது; வீடு பெறுவர்.
==============================================
பாடல் எண் : 07
செய்யன் கரியன் வெளியன் பசியனென்
றெய்த உணர்ந்தவர் எய்வர் இறைவனை
ஐயனற் கண்ணல் லடுகரி போர்த்தவெங்
கைய னிவனென்று காதல்செய் வீரே.

பொழிப்புரை  சிவனை யடையும் வேட்கை யுண்டாயினோரே, அவனை, `சிவப்பன்` என்றோ, `கறுப்பன்` என்றோ. `வெளுப்பன்` என்றோ, `பச்சையன்` என்றோ நன்கு உணர வல்லவராவர். ஆதலால், அவனை, `நெருப்புமிழுங் கண்களையுடைய பெரிய கொலை யானையை யாவரும் வியக்கும் வண்ணம் உரித்து அத்தோலைப் போர்த்த வெவ்விய கையை உடையவன்` என்று அறிந்து அவனை அடையும் வேட்கையுடையீராகுங்கள்.
==============================================
பாடல் எண் : 08
எய்திய காலங்கள் எத்தனை யாயினும்
தையலும் தானும் தனிநா யகம்என்பர்
வைகலும் தன்னை வணங்கு மவர்கட்குக்
கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.

பொழிப்புரை  `பிறந்து இறந்து உழன்ற காலங்கள் எத்துணையன கழியினும், அவ்வுழலலை நீக்கி நிலைபெறச் செய்யும் தலைவர் சத்தியும், சிவனுமாய அவரன்றிப் பிறர் இலர்` என, அனுபவம் வந்தோர் அறுதியிட்டுரைப்பர். இனித் தன்னை நாள் தோறும் தப்பாது வழிபடுவோர்க்குச் சிவன் கைமேல் பயனைப் பெறுவிக்கின்ற துணைவனாய் விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 09
கண்டுகொண் டோம்இரண் டுந்தொடர்ந்தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடும் மலர்வார் சடைஅண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.

பொழிப்புரை  `சந்திரகலை, சூரியகலை` என்னும் இரு வாயுக்களை முறைப்படி தொடருமாற்றால் அவை ஒரு வழிப்பட்டு முடியும் அவ்விடத்தை அடைந்து, அங்குள்ள ஒளியை நாங்கள் கண்டு பற்றிக்கொண்டோம். அவ்வொளியே முன்னே முன்னே பலர் காண முயன்று காணாது இளைத்த பெரியோன்; எல்லா ஒளிகட்கும் மேலான ஒளியாய் இருப்பவன்; (சிவன்) அவன் அவ்விடத்தில் நிலைத்து நின்று தன்னைக் காண்பவர்க்கு அஞ்ஞான இருளைப்போக்குவான்.
==============================================
பாடல் எண் : 10
அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் [கொட்டத்தில்
எண்ணிக்கும் ஏழேழ் பிறவி உணர்விக்கும்
உண்ணிற்ப வெல்லாம் ஒழிய முதல்வனைக்
கண்ணுற்று நின்ற களியது வாமே.

பொழிப்புரை  இனி, நான்கு மந்திரங்களால் மூன்றாவதாகிய சத்திநிபாதம் உணர்த்துகின்றார். முன் துன்பமாய் நின்ற நிலை மாறி இப்பொழுது இன்பமாய் நிற்கின்ற சத்தி, சிவனால் கட்டிக்கொடுக்கப்பட்ட குடிலாகிய ஓர் உடம்பினுள் நின்று, `ஏழ்` என்னும் வகையுட்டானே மாறி மாறி வருகின்ற பலவாகிய பிறப்புக்களிலும் உளவாகின்ற துன்பங்களையெல்லாம் உணரச்செய்வாள். பின் அவ்வுணர்ச்சி காரணமாக உயிரின் அகத்தேயுள்ள பல வகையான விருப்பு வெறுப்புக்களும் ஒழிந்து போக, முதல்வனாகிய சிவனைக் கண்டு களிக்கும் களிப்புமாவாள்.
==============================================
பாடல் எண் : 11
பிறப்பை அறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை அறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.

பொழிப்புரை  இமய மலையில் தோன்றி வளர்ந்த மகளும், அபர ஞான பரஞானங்களையே இருதனங்களாகக் கொண்டு உயிர்கட்கு அந்த ஞானமாகிய பாலை ஊட்டி வளர்ப்பவளும் ஆகிய சத்தி, மேற் கூறியவாறு முதல்வனைக் கண்ணுற்று நிற்கும் ஞானத்தால் வழிபடு கின்றவர்கட்குத் தவங்கள் எல்லாவற்றினும் சிறந்த தவமாகிய சிவ புண்ணியத்தை வழங்குவாள்; அதனால் பிறப்பை ஒழிப்பாள்; சிவனை மறக்கும் மறதியாகிய அஞ்ஞானத்தை நீக்குவாள்; யாவரும் அவரை வழிபடும் நிலையில் உயர்த்து வைப்பாள்.
==============================================
பாடல் எண் : 12
தாங்குமின் எட்டுத் திசைக்கும் தலைமகன்
பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்
ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்
தூங்கொளி நீலம் தொடர்தலு மாமே.

பொழிப்புரை  எட்டுத் திசைக்கும் தலைவனாகிய சிவனை அவன் துணைவியோடும் அறிவினுள் அறிந்து மறவாதிருங்கள். ஏனெனில், அவ்வாறு இருக்கும் அறிவை உடையவர்கட்கே சத்திநிபாதம் தொடர்ந்து முதிர்வதாகும்.
==============================================
பாடல் எண் : 13
நணுகினும் ஞானக் கொழுந்தொன்றும் நல்கும்
பணிகினும் பன்மலர் தூவிப் பணிவன்
அணுகிய தொன்றறி யாத ஒருவன்
அணுகும் உலகெங்கும் ஆவியு மாமே.

பொழிப்புரை  தனு காரணங்களின் வழிவருபவற்றுள் ஒன்றையும் நோக்குதல் இல்லாத சத்திநிபாதன், தன்னை யார் அணுகினாலும் அவர்கட்கு முதிர்ந்த ஞானம் ஒன்றையே உணர்த்துவன். சிவனைப் புறத்தில் மலர் தூவி வழிபடினும் படுவான். தான் அடையும் எவ்விடத் திலும் அங்கு உள்ளார்க்கு உயிர்போலச் சிறந்து விளங்குவான்.
==============================================
பாடல் எண் : 14
இருவி னைநேரொப்பில் இன்னருட் சத்தி
குருவென வந்து குணமல நீக்கித்
தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்
திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.

பொழிப்புரை  இருவகை வினைகளும் ஒரு தன்மையவாக ஒத்து நிற்குங் காலத்தில் உண்டாவதே இனிய அருட்சத்தியது பதிவு. `அஃது உண்டானபொழுது சிவன் குருமூர்த்தியாய் வந்து குற்றங்கள் யாவற்றையும் நீக்கி வழங்குவான்` எனப்படுகின்ற அந்த ஞானத்தாலே புருடன் தன் செயல் அற்று அருள் வழியில் நிற்பானாயின், மும்மலங்களும் பற்றற்று ஒழிய, அந்தச் சிவனே தானாவான்.
==============================================
பாடல் எண் : 15
இரவும் பகலும் இறந்த இடத்தே
குரவஞ்செய் கின்ற குழலியை உன்னி
அரவசெய் யாமல் அவளுடன் சேரப்
பரிவொன்றி யாளும் பராபரை தானே.

பொழிப்புரை  உயிர் தனு கரணாதிகளைப் பெறாது ஆணவத்தோடு மட்டுமே கூடிச் சடம்போலக் கிடந்த இராக்காலமாகிய கேவல நிலையும், பின் தனு கரணாதிகளைப் பெற்றுப் பிறப்பு  இறப்புக்களில் உழன்ற பகற்காலமாகிய சகல நிலையும் பின் ஒருபோதும் உண்டாகாது ஒழிந்த சுத்தநிலையாகிய முத்திக் காலத்திலே, சத்தியாகிய திருவருள் ஒன்றையே நோக்கித் தற்போதத்தைச் சிறிதும் எழாதபடி அடக்கி அவ்வருளோடே ஒன்றியிருக்க, அவ்வருளாகிய சத்தியும் இவன்பால் இரக்கம் மிக்கவளாய் இவனைத் தன் அடியவனாக ஏற்றுக்கொள்வாள்.
==============================================
பாடல் எண் : 16
மாலை விளக்கும் மதியமும்ஞாயிறும்
சால விளக்கும் தனிச்சுடர் அண்ணல் உள்
ஞானம் விளக்கிய நாதன்என் னுள்புகுந்
தூனை விளக்கி உடனிருந் தானே.

பொழிப்புரை  என்னுள் விளங்காது மறைந்து கிடைந்த ஞானத்தை அம்மறைவு நீக்கி விளங்கி எழச்செய்த என் குருநாதன் `மாலை, இரவு, பகல்` ஆகியவற்றில் ஒரோவொரு காலத்தில் விளக்கத்தைத் தருகின்ற `விளக்கு, சந்திரன், சூரியன்,` என்னும் ஒளிகளுக்கும் ஒளியைத் தருகின்ற ஒப்பற்ற பேரொளி` அவன் என் உள்ளே புகுந்து உயிரை மட்டுமின்றி உடலையும் ஒளியாய் விளங்கச் செய்து, பின் என்னைவிட்டு அகலாது உடனாயே இருக்கின்றான்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!