http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Thursday 11 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 05: பதிகம் எண் :17. புறச் சமய தூடணம்.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:01: சுத்தசைவம் ................பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:02:
சுத்தசைவம் ............பாடல்கள்: 004
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:03: மார்க்க
சைவம் ...........பாடல்கள்: 011
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:04: கடுஞ் சுத்தசைவம் .....பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:05: சரியை..........................
..பாடல்கள்: 008
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:06: கிரியை...........................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:07: யோகம் ..........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:08: ஞானம்...........................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:09: சன்மார்க்கம்.................பாடல்கள்: 010
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:10: சகமார்க்கம்..................பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:11: சற்புத்திரமார்க்கம்.......பாடல்கள்: 007
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:12: தாசமார்க்கம்................பாடல்கள்: 005
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:13: சாலோக மாதி..............பாடல்கள்: 003
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:14: சாரூபம்.........................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:15: சாயுச்சம்.......................பாடல்கள்: 002
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:16: சத்திநிபாதம்...............பாடல்கள்: 016 
ஐந்தாம் தந்திரம்:பதிக எண்:17: புறச் சமய தூடணம்..பாடல்கள்: 020
==========================================
தந்திரம் 5- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் 17
கூடுதல் பாடல்கள்  (109+020= 129)


தந்திரம் 5- பதிகம் 17. புறச் சமய தூடணம்-பாடல்கள்: 020


பாடல் எண் : 01
ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை  முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள் தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.
==============================================
பாடல் எண் : 02
உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொழிப்புரை  உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தியிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக் கமலத்தில் தியானப் பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள்வள்ளலும், அனைத்துல கிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல்களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச்சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.
==============================================
பாடல் எண் : 03
உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொழிப்புரை   எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச்சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்குகின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.
==============================================
பாடல் எண் : 04
ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்
ஆறு சமயப் பொருளும் அவனலன்
தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்
மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொழிப்புரை  புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினாரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.
==============================================
பாடல் எண் : 05
சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொழிப்புரை  சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப் பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழைமின்கள்.
==============================================
பாடல் எண் : 06
அண்ணலை நாடிய ஆறு சமயரும்
விண்ணவ ராக மிகவும் விரும்பியே
முண்ணின் றழியும் முயற்றில ராதலின்
மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

பொழிப்புரை  சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டினின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.
==============================================
பாடல் எண் : 07
சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்
பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு
தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்
அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

பொழிப்புரை  சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந்துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப்படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்குமாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத்தன்மையவாய்ப்போம்.
==============================================
பாடல் எண் : 08
நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

பொழிப்புரை  சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறியனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப்பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.
==============================================
பாடல் எண் : 09
கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

பொழிப்புரை  தம் குரல் பிற உயிர்கட்கெல்லாம் கடியனவாய் வெறுக்கப் படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்டமாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.
==============================================
பாடல் எண் : 10
மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை
முயங்கி இருவினை மூழை முகப்பா
இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்
பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

பொழிப்புரை  புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர்களும் சைவ சமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப் பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும் பொழுது யமபயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.
==============================================
பாடல் எண் : 11
சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொழிப்புரை  சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணியனாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.
==============================================
பாடல் எண் : 12
வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

பொழிப்புரை  `பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உபதேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.
==============================================
பாடல் எண் : 13
மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்
நாதம தாக அறியப் படும்நந்தி
பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்
ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

பொழிப்புரை   பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன்பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறியவாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.
==============================================
பாடல் எண் : 14
அரநெறி அப்பனை ஆதிப் பிரானை
உரநெறி யாகி உளம்புகுந் தானை
பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்
பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

பொழிப்புரை  `உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவநெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்குபவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டுநெறிக்கு மிகச்சேய்மைப்பட்டனவேயாகும்.
==============================================
பாடல் எண் : 15
பரிசறி வானவன் பண்பன் பகலோன்
பெரிசறி வானவர் பேற்றில் திகழும்
துரிசற நீநினை தூய்மணி வண்ணன்
அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொழிப்புரை  மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந்தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.
==============================================
பாடல் எண் : 16
ஆன சமயம் அது இதுநன் றெனும்
மான மனிதர் மயக்க மதுவொழி
கானங் கடந்த கடவுளை நாடுமின்
ஊனங் கடந்த உருவது வாமே.

பொழிப்புரை  `அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.
==============================================
பாடல் எண் : 17
அந்நெறி நாடி அமரர் முனிவரும்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொழிப்புரை  தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக் கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்குகின்றது இரங்கத்தக்கது.
==============================================
பாடல் எண் : 18
உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

பொழிப்புரை    அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந்தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.
==============================================
பாடல் எண் : 19
வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்
கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்
சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்
பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

பொழிப்புரை  பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.
==============================================
பாடல் எண் : 20
வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

பொழிப்புரை  ``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக் கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!