http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 12 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :01. சிவகுரு தரிசனம்- பாடல்கள்: 016




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================
ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்...............பாடல்கள்: 016 
==========================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -01
கூடுதல் பாடல்கள்  (016= 016)

தந்திரம் 6- பதிகம் 01. சிவகுரு தரிசனம் -பாடல்கள்: 016
==============================================
பாடல் எண் : 01
பத்தி பணித்துப் பரவும் அடிநல்கிச்
சுத்த உரையால் துரிசறச் சோதித்துச்
சத்தும் அசத்தும் சதசத்தும் காட்டலால்
சித்தம் இறையே சிவகுரு வாமே.

பொழிப்புரை மெய்யாய பொருளிடத்து அன்பை உண்டாக்கி யாவராலும் துதிக்கப்படுகின்ற திருவடியைப் பற்றிக் கொள்ளக் கொடுத்து, தூய சொல்லாலே ஐயமும், திரிபும் ஆய குற்றம் முழுதும் போக நீக்கி, `சத்து, அசத்து, சதசத்து` என்னும் மூவகைப் பொருளின் இயல்பையும் நன்கு உணர உணர்த்தலால், அப்பயனைச் சிவநெறி ஆசிரியர்பால் பெற்ற மாணாக்கர் அனைவரது உள்ளமும் அவரை, `சிவன்` எனவே தெளிவன ஆகின்றன.
==============================================
பாடல் எண் : 02
பாசத்தைக் காட்டியே கட்டுப் பறித்திட்டு
நேசத்த காயம் விடுவித்து நேர்நேரே
கூசற்ற முத்தியிற் கூட்டலால் நாட்டகத்
தாசற்ற சற்குரு அப்பர மாமே.

பொழிப்புரை  நாட்டவருள் உள்ள ஒருவன்போலத் தோன்றுகின்ற, குற்றமற்ற ஞானாசிரியன், உயிர்ச் சார்பும் பொருட் சார்புமாகிய தளைகளின் இயல்பைத் தெளிவித்து, அதனானே அவற்றால் உளதாய கட்டினை அறுத்து, உடம்பின் மேல் உள்ள ஆசையாகிய தொடக்கி னின்றும் ஆன்மாவை விடுவித்து, உலகவரது போலியாகிய இகழ்ச்சிக்கு நாணுதல் இல்லாத முத்தி நிலையை இவ்விடத்தே பெறச் செய்தலால், யாவராலும் போற்றப்படுகின்ற அந்தப் பரமசிவனே யாவான்.
==============================================
பாடல் எண் : 03
சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.

பொழிப்புரை இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப்பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத்தின் வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.
==============================================
பாடல் எண் : 04
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்
நல்லார்கள் உள்ளத்து மிக்கருள் நல்கலால்
எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலால்
சொல்லார்ந்த சற்குரு சுத்த சிவமே.

பொழிப்புரை :   உலகங்கள் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்ற சுத்த சிவன், தனது அருள் காரணமாக, மலம் நீங்கியோரது சுத்தான்ம சைதன்னியத்தில் தயிரில் நெய்போல இனிது விளங்கி நின்று, பக்குவிகளுக்கு உண்மை ஞானத்தை அருளுதலாலும், ஏனைய பலர்க்கும் அவரவர்க்கு ஏற்ற பெற்றியால் அருள்புரிந்து ஆட்கொண்டு இவ் விடத்தே நலம் செய்தலாலும் சொல்லுதல் நிறைந்த ஞானகுரு அந்தச் சுத்த சிவனேயாவன்.
==============================================
பாடல் எண் : 05
தேவனும் சுத்த குருவும் உபாயத்துள்
யாவையும் மூன்றாய் உனக்கண் டுரையாலே
மூவாப் பசுபாசம் மாற்றியே முத்திப்பால்
யாவையும் நல்கும் குருபரன் அன்புற்றே.

பொழிப்புரை  சிவன் தான் நேரே அருளுதல், குருமூர்த்தியிடமாக நின்று அருளுதல் என்னும் இருவழிகளில் குருவாய் அருளுமிடத்து அக்குரு மாணாக்கன்பால் மிகவும் அன்பு கொண்டு உபதேச மொழியால் எல்லாப் பொருள்களையும் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களில் அடக்கி உணரவைத்து, அவ்வுணர்வினால், அநாதியே பசுத்துவப்படுத்தி நின்ற பாசத்தை நீக்கி முத்திக் காலத்தில் உளவாகின்ற எல்லா நலங்களையும் அருளுவார்.
==============================================
பாடல் எண் : 06
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்
தத்தனை நல்கருள் காணா அதிமூடர்
பொய்த்தகு கண்ணால் நமர்என்பர் புண்ணியர்
அத்தன் இவனென் றடிபணி வாரே.

பொழிப்புரை  சுத்த சிவனே குருவாய் எழுந்தருளி வந்து மலங்களைப் போக்கித் தூய்மைப்படுத்தி, அங்ஙனம் தூய்மைப் படுத்தப்பட்ட உயிர் ஐம்புலன்களாகிய வேடர் கூட்டத்தினின்றும் நீங்கி அரசனாகிய தன் தந்தையை அடையச் செய்கின்ற அருட் சிறப்பைக் கூறும் ஞானக்கண் இல்லாத பெரும் பேதையர் தமது ஊனக் கண்ணால் மட்டும் கண்டு அக்குருவையும் நம்மில் ஒருவனாக எண்ணுவர். ஆயினும் ஞானக்கண்ணை அடைந்த புண்ணியர் அக்குருவை, `இவன் சிவனே` என்று அறிந்து அவனது பாதங்களை வணங்கி நிற்பர்.
==============================================
பாடல் எண் : 07
உண்மையும் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பால்
திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்
வண்மையும் எட்டெட்டுச் சித்த மயக்கமும்
அண்ணல் அருளன்றி ஆரறி வாரே.

பொழிப்புரை  மெய்ப்பொருள் இன்னது என்பதையும், அதனை உணர ஒட்டாது பொய்ப் பொருள்கள் மறைத்து நிற்கும் தன்மையையும், அப்பொய்ப் பொருள் களினின்றும் நீங்கி, மெய்ப்பொருள்களில் நிலைத்து நிற்கும் முறையையும் அறிவுப் பொருளாம் சிவமாகிய நல்ல மேன்மையை உடைய இறைவன் உயிர்கட்குப் பெத்தம், முத்தி என்னும் இருநிலையிலும் உடனாய் நின்று செய்து உதவி வருதலையும், பெத்த காலத்தில் புத்தியின் அலைவுகளாகிய அறுபத்து நான்கினையும் குருவருளால் அன்றி யார் அறிந்து கொள்ள இயலும்!.
==============================================
பாடல் எண் : 08
சிவனே சிவஞானி யாதலால் சுத்த
சிவனே எனஅடி சேரவல் லார்க்கு
நலமான தத்துவ நன்முத்தி நண்ணும்
பவமான தின்றிப் பரலோக மாமே.

பொழிப்புரை :   இதன் பொருள் வெளிப்படை.
==============================================
பாடல் எண் : 09
குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவம்என் பதுகுறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே.
பொழிப்புரை இதன் பொருளும் வெளிப்படை.
==============================================
பாடல் எண் : 10
சித்த மியாவையும் சிந்தித் திருந்திடும்
அத்தன் உணர்த்துவ தாகும் அருளாலே
சித்த மியாவையும் திண்சிவ மானக்கால்
அத்தனும் அவ்விடத் தேஅமர்ந் தானே.

பொழிப்புரை உயிரின் அறிவு அறிவன அனைத்தும் சிவன் தனது அருளால் அறிவிப்பனவேயாகும். அந்நிலையில் உயிரின் அறிவு அறிவன யாவையும் உறுதியான சிவனேயாய் முடிந்துவிட்டால், சிவனும் அவ்வறிவில் பிறவற்றைத் தோற்றுவியாது தன்னைமட்டுமே தோற்றுவித்து நிற்பான்.
==============================================
பாடல் எண் : 11
தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி எந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி என்று மகிழும் ஒருவற்குத்
தானந்தி அங்கித் தனிச்சுட ராகுமே.

பொழிப்புரை :  `ஞானத்தைப் பெற்றவன் சிவனது இயல்பைத் தனது அறிவில் காணும்படி வைத்த ஆசிரியன் அந்தச் சிவனே என்க` என்னும் சிவனது திருவுள்ளத்தை அறிபவர் உலகில் இல்லை. அதனை அறிய வல்ல ஒருவனுக்கு அச்சிவன் மாலைக் காலத்தில் ஏற்றப்பட்ட புறவிளக்குப் போன்று ஒப்பற்ற அக விளக்காய் நிற்பன்.
==============================================
பாடல் எண் : 12
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை
மருளா அருளும் மயக்கறும் வாய்மைப்
பொருளாய வேதாந்த போதமும் நாதன்
உருவாய் வராவிடில் ஓரவொண் ணாதே.

பொழிப்புரைஞானமாகிய பேறும், முத்திப்பயனும், மெய்ம்மையை மறவாத அருள் நிலையும், மயக்கம் நீங்குதற்கு ஏதுவாகிய உண்மைப் பொருளையுடைய வேதத்தின் விளக்கமும் சிவனே குருவாய் வாராவிடில் ஒருவற்கும் அறிய இயலாது.
==============================================
பாடல் எண் : 13
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர
சித்திக்கு வித்தாம் சிவோகமே சேர்தலால்
முத்தியின் ஞானம் முளைத்தலால் அம்முளை
சத்தி அருள்தரின் தான்எளி தாமே.

பொழிப்புரை சிவபுண்ணியமும், அதன் பயனாகிய மலபரிபாக இருவினை ஒப்புக்களும் ஆகிய இவற்றால் பரமுத்திக்கு ஏதுவாகிய சிவோகம் பாவனையைத் தலைப்படும் நிலையே உண்டாதலாலும், அந்தப் பாவனையாலே அஞ்ஞானம் வாசனையும் இன்றிப்போக, முத்திக்கு நேரே வாயிலாகிய சிவஞானம் தோன்றி நிற்றலாலும் அத்தோற்றம் சிவனது அருள் அவ்விடத்து முன்னின்று அருளிய வழியே உண்டாவதாம்.
==============================================
பாடல் எண் : 14
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே எம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்
மன்னெய்த வைத்த மனமது தானே.

பொழிப்புரை இவ்வுடம்பு நீங்கிய பின்பு அடையுமாறு வைத்துள்ள இன்பத் தோற்றத்தை அதற்கு முன்பே அடையும்படிச் செய்த ஞானகுரு எங்கள் சிவபெருமானே. அவன் தன்னை நிலை பேறாக அடைதற்கு வைத்த மனம் அங்ஙனம் அடையும் காலத்துத் தானே குருவாய் வெளிவந்து அருள் செய்வான்.
==============================================
பாடல் எண் : 15
 சிவமான ஞானந் தெளியஒண் சித்தி
சிவமான ஞானந் தெளியஒண் முத்தி
சிவமான ஞானம் சிவபர தேகம்
சிவமான ஞானம் சிவானந்தம் நல்குமே.

பொழிப்புரை சிவஞானத்தைத் தெளிய உணர்தலாலே (மூன்றாம் தந்திரத்திற் சொல்லப்பட்ட) பரசித்திகளும், பின் பரமுத்தியும் உளவாகும். அவை முறையே அருளேதனுவாய் நிற்றலும், ஆனந்தத்து அழுந்தலுமாம்.
==============================================
பாடல் எண் : 16
அறிந்துணர்ந தேன்இவ் வகலிடம் முற்றும்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை
பிறிந்தொழிந் தேன்இப் பிறவியை நானே.

16
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரைகுருவின் அருளால் நான் இப்பெரிய பூமி முழுவதன் இயல்பையும் முன்னர் பொதுவாகவும், பின்னர் உண்மையாகவும் உணர்ந்தேன். அவ்வாறே அவரது அருளையடைந்து சிவனது இயல்பையும் முன்னர் கேள்வியளவில் உணர்ந்து, பின்பு நூல்களை ஓதி உணர்ந்து, அவனது திருவருள் கிடைக்கப் பெற்றேன். அதனால், அறிவையிழந்துள்ள உலகவரது வாழ்க்கையில் பற்றுச் சிறிதும் இல்லாதவனானேன். அதனால், இவ்வுடம்பில் இருந்தும் அதனில் நீங்கி நிற்கும் நிலையை உடையவனாயினேன்.
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!