http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 13 October, 2012

திருமந்திரம்-தந்திரம் 06: பதிகம் எண் :02. திருவடிப்பேறு- பாடல்கள்: 015




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

======================================================

ஆறாம் தந்திரம்:பதிக எண்:01: சிவகுரு தரிசனம்..............பாடல்கள்: 016
ஆறாம் தந்திரம்:பதிக எண்:02: திருவடிப்பேறு....................பாடல்கள்: 015 
==========================================
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -02
கூடுதல் பாடல்கள்  (016+015= 031)

தந்திரம் 6- பதிகம் 02. திருவடிப்பேறு  -பாடல்கள்: 015
=============================================

பாடல் எண் : 01
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே
பசைந்தெழு நீசரைப் பாசத்தின் ஏகச்
சிவந்த குருவந்து சென்னிகை வைக்க
உவந்த குருபதம் உள்ளத்து வந்தே.

பொழிப்புரை  வினையின் வழி மனம் சென்றவாறே செல்லுதலால், உலகவர் மேற் செல்கின்ற அன்பின் வழியே மனம் நெகிழ்ந்து செல்லுகின்ற கீழோரைப் பாசத்தினின்றும் விடுபடச் செய்தற்கு ஞானகுரு வந்து அவர்களது தலையின்மேல் தனது கையை வைத்தவுடன் அவர்களது உள்ளமாகிய பொய்கையில் அவனது திருவடிகளாகிய தாமரை மலர்கள் மலர்ந்து பொருந்தி மலர்வனவாம்.
==============================================
பாடல் எண் : 02
தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.

பொழிப்புரை  தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவபிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள் போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.
==============================================
பாடல் எண் : 03
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு
ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின
ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்னந்தி
தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே.

பொழிப்புரை  ஆன்மா சிவனாகி, அச்சிவனது உண்மை இயல்பில் தனது உண்மை இயல்பு பொருந்துதலால் இன்புற்று, முன்னே செயற்கையாய் வந்து பற்றிய `ஆணவம், கன்மம், மாயை, மாயேயம்` என்னும் நான்கின் இயல்புகளையும் நீக்கிநின்ற சின்முத்திரை நிலையைத் தந்து ஆட்கொண்ட சிவன், ஆங்ஙனம் ஆட்கொள்வதற்கு முன் தான் குருவாகிவந்து தனது திருவடியைச் சூட்டி, அங்ஙனம் சூட்டப்பட்டவனது உள்ளத்திலே நிலைபெறச் செய்தது உண்மை.
==============================================
பாடல் எண் : 04
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்
திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்
கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த
சொரூபத் திருத்தினன் சொல்லிறந் தோமே.

பொழிப்புரை `இஃது இவ்வாறிருந்தது` எனச் சொல்லும் சொல்லும், `இவ்வாறிருக்கின்றது` என உணரும் உணர்வும் அற்றமையால் உயிர் தன் பசுத்துவம் முற்றும் நீங்கி, அலையில்லாத நிலைநீர் போல அசைவற நிற்கும் சிவமாம் தன்மையை எம் குருநாதன் எமக்கு முற்றத்தந்து, நாத காரியமாகிய நால்வகை வாக்குக்களையும் கடந்த இயற்கை நிலையில் எம்மை இருக்கச் செய்தான்; அதனால் யாம் பேச்சற்று நிற்கின்றோம்.
==============================================
பாடல் எண் : 05
குரவன் உயிர்முச் சொரூபமும் கைக்கொண்
டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு
பெரிய பிரானடி பேர்நந்தி பேச்சற்
றருகிட என்னைஅங் குய்யக்கொண் டானே.

பொழிப்புரை சிவகுரவன் உயிர்களுக்கு உள்ள மூன்று இயல்பு களையும் தான் கைக்கொண்டு, அவன் காட்டிய சின்முத்திரையையே அறியத் தகும் அரிய பொருளாக யான் கொண்டு, `நந்தி` என்னும் பெயருடைய பெரிய பெருமானாகிய சிவனது திருவடிக்கண் உள்ளம் உருகும்படி என்னை அப்போழுதே உய்யக்கொண்டருளினான்.
==============================================
பாடல் எண் : 06
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே
மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்
காச்சற்ற சோதிக் கடன்மூன்றும் கைக்கொண்டு
வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே.

பொழிப்புரை குற்றம் அற்ற அறிவுருவனாகிய சிவகுரவன் மல பரிபாகம் வாய்க்கப் பெற்ற என்னைத் தன் திருவடியைச் சூட்டி, மலம் காரணமாக எனக்கு நியதியாக வந்து பொருந்திய `கேவலம், சகலம், சுத்தம்` என்னும் மூன்று நிலைகளும் இனி நிகழாவாறு தான் கைக் கொண்டு சிவமாகச் செய்து, பேச்சற்றதும், எல்லையில்லாததுமாகிய இன்பத்திலே என்னையே யான் அறியாதபடி மூழ்குவித்து, அதனால் எனக்கு வருகின்ற புகழையும் யான் எண்ணாதபடி என்னோடு உடன் இருந்து அருளுகின்றான்.
==============================================
பாடல் எண் : 07
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்
பதிவித்த பாதப் பராபரன் நந்தி
கதிவைத்த வாறும்மெய் காட்டிய வாறும்
விதிவைத்த வாறும் விளம்பஒண் ணாதே.

பொழிப்புரை : சிவன் குருவாகி வந்து, தனது திருவடிகளை எனது இதயத்திலும், கண்ணிலும், மனத்திலும் நீங்காது பொருந்தியிருக்கச் செய்து, அதனானே ஞானத்தை உணர்த்திய வகையும், அந்த ஞானத்தினால் மெய்ப்பொருளைத் தலைப்படுவித்த வகையையும், பின் அம்மெய்ப்பொருளை நீங்காதிருத்தற்குரிய முறைகளை உணர்த்திய வகையும் யான் சொல்லும் தரத்தன அல்ல.
==============================================
பாடல் எண் : 08
திருவடி வைத்தென் சிரத்தருள் நோக்கிப்
பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்
குருவடி விற்கண்ட கோனைஎங் கோவைக்
கருவடி யற்றிடக் கண்டுகொண் டேனே.

பொழிப்புரைஎனது சென்னிமேல் தனது திருவடிகளைச்சூட்டி, அருளே எனக்கு வடிவாம்படிப்பார்த்து, அதனால், பின்பு பரம்பொருளை யான் பெறும்படி தந்தவரும், குருவடிவில் பலராலும் காணப்பட்ட ஞானத்தலைவரும், எங்கள் தலைவரும் ஆகிய நந்தி பெருமானை நான் எனது பிறவியின் வேர் அற்றொழியுமாறு அடைந்தேன்.
==============================================
பாடல் எண் : 09
திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும்
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும்
திருவடி ஞானம் சிறைமலம் நீக்கும்
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே.

பொழிப்புரை (இதன் பொருள் வெளிப்படை)
==============================================
பாடல் எண் : 10
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை
மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்
பால்வைத்த சென்னிப் படரொளி வானவன்
தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே.

பொழிப்புரை  எம் குரவர் எம் தலைமேல் தம் திருவடியைச் சூட்டிய அந்த முறைமையைச் செய்யாவிடில் அவர் அருள்செய்த பின்பும் வினைகள் தோன்றி, முன்பு மயங்கியிருந்த உள்ளத்தை மீளவும் அப்பழக்கம் பற்றி மயக்கம் உறச்செய்யும். அதனால், பிறை முடித்த, பேரொளி வடிவினனாகிய சிவபெருமான், குருவாகி வந்து தனது திருவடியைச் சென்னி மேல் வைத்துதது போலச் சிந்தையிலும் நீங்காது தங்குவித்தான்.
==============================================
பாடல் எண் : 11
கழலார் கமலத் திருவடி யென்னும்
நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா
அழல்சேரும் அங்கியுள் ஆழிப் பிரானும்
குழல்சேரும் என்னுயிர்க் கூடும் குலைத்தே.

பொழிப்புரைவெற்றியை யுடையனவும், தாமரை மலர்போல் வனவும் ஆகிய குருவின் திருவடி என்னும் நிழலை யான் அடையப் பெற்றேன். அதனால், நெடியோனாகிய மாயோனாலும் அறியப்படாதவனும், ஓங்கி வளர்கின்ற வேள்வித் தீயில் விளங்குபவனுமாகிய சிவபிரான், எனது உயிர்க் கூடாகிய உடம்பின் தன்மையையும் மாற்றி, எனது இதயத் தாமரையில் எழுந்தருளி விளங்குகின்றான்.
==============================================
பாடல் எண் : 12
முடிமன்ன ராய்மூ வுலகம தாள்வர்
அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்
முடிமன்ன ராய்நின்ற மூவர்கள் ஈசன்
குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே.

பொழிப்புரை ஆராயுமிடத்து, சிவனது திருவடியில் அறிவால் நிலைத்திருப்பவர் இந்நிலவுலகத்தில் மூவுலகையும் ஆளும் மன்னராய் இருந்து யாவர்க்கும் பெருந்தலைவராய் உள்ள மூம்மூர்த்திகள் தாமும் சிவனது ஏவலைச் செய்யும் சிற்றரசராய் நின்றே குற்றம் அற்று விளங்குகின்றனர். அதனால், சிவனடியைச் சேர்ந்தவர் அடையும் இன்பத்திற்கு அளவில்லை.
==============================================
பாடல் எண் : 13
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்
பொய்த்தே எரியும் புலன்வழி போகாமல்
எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு
மெய்த்தேன் அறிந்தேன்அவ் வேதத்தின் அந்தமே.

பொழிப்புரை என்னை, மயக்குவனவாயும் கொடியனவாயும் உள்ள ஐம்பொறிகளின் வழிப்போகாமல், என் மனத்துள்ளே சிவனது திருவடிகளை வைத்தேன். அதனால், இணைத்து உழலுதற்கு ஏதுவாகிய இரு வினைகள் என்னும் புதரை அழித்து வேதமாகிய மரத்தின் உச்சிக் கொம்பில் உள்ள மெய்ப் பொருளாகிய தேனை அறிவினால் அடைந்து இன்புறுகின்றேன்.
==============================================
பாடல் எண் : 14
அடிசார லாம்அண்ணல் பாத மிரண்டும்
முடிசார வைத்தனர் முன்னை முனிவர்
படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்
குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே.

பொழிப்புரை முற்காலத்து ஞானிகள் பலரும் இறைவன் திருவடியை அடையவேண்டியே குருவின் திருவடியைத் தம் தலையில் வைத்து அங்ஙனம் நலம் பெற்றனர். அதனால், உலக இன்பத்தையே தருவதாகிய இந்தப் பழைய பௌதிக உடம்பை இகழ்ந்து ஒதுக்கும் அந்த உயர்ந்தோர் கூட்டத்தை  டைதற்குரிய நெறியைப் பற்றினவர்களது கொள்கையும் இதுவே.
==============================================
பாடல் எண் : 15
மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்க ளாவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி யாவதும்
எந்தை பிரான்றன் இணையடி தானே.

பொழிப்புரை (இதன் பொருள் வெளிப்படை.)
==============================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!