http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Monday 29 October, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :05 & 06 . ஆத்மலிங்கம், ஞானலிங்கம் -பாடல்கள்:010 & 010.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -006
கூடுதல் பாடல்கள்  (049+010+010 =069)
==============================================
ஏழாம் தந்திரம் - 5. ஆத்தும லிங்கம்பாடல்கள் 010
பாடல் எண் : 1
அகார முதலாய் அனைத்துமாய் நிற்கும்
உகார முதலாய் உயிர்ப்பெய்து நிற்கும்
அகார உகாரம் இரண்டும் அறியில்
அகார உகாரம் இலிங்கம தாமே.

பொழிப்புரை :   சிவன் அகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அனைத்துப் பொருளுமாய் நிற்பான். உகார கலைக்கு முதல்வனாம் முகத்தால் அப்பொருள்களைச் செயற்படுத்தி நிற்பான். அதனால் அந்த இருகலைகளை உணரின் அந்த உணர்வுதானே சிவனது வடிவமாகும்.
=======================================
பாடல் எண் : 2
ஆதாரம் ஆதேயம் ஆகின்ற தெய்வமும்
மேதாதி நாதமும் மீதே விரிந்தன
ஆதார விந்து அதிபீடம் நாதமே
போதா இலிங்கப் புணர்ச்சிய தாமே.

பொழிப்புரை :  தனக்குக் கீழ் உள்ள அகாரம் முதலிய எழுத்துக்களை நோக்க அவற்றைத் தாங்கி நிற்கின்ற ஆதாரமாயும், தனக்கு மேல் உள்ள நாதத்தை நோக்க அதன்கண் பொருந்தியுள்ள ஆதேயமாயும் உள்ள விந்துவும், மேதை முதலிய அனைத்துக் கலைகட்கும் முதலாய் உள்ள நாதமும் முறையே ஒன்றின் மேல் ஒன்றாய் விளங்கி நிற்கும். அதனால், அவற்றுள் விந்துவே ஆதாரமாகின்ற பீடமாயும் நாதமே அந்தப் பீடத்தின்பால், வந்து இலிங்கத்தின் சேர்க்கையாயும் இயைந்து நிற்கும்.
=======================================
பாடல் எண் : 3
சத்தி சிவமாம் இலிங்கமே தாபரம்
சத்தி சிவமாம் இலிங்கமே சங்கமம்
சத்தி சிவமாம் இலிங்கம் சதாசிவம்
சத்தி சிவமாகும் தாபரந் தானே.

பொழிப்புரை :  மேற்கூறிய விந்து நாதங்கள் முறையே சத்தி சிவவடிவாகும் ஆதலால் அவ்விரண்டும் ஒன்றாய் இயைந்த நிலையே புறத்தில் உள்ள தாபர சங்கமங்களும், சாதாக்கிய தத்துவத்தில் விளங்கும் சதாசிவ மூர்த்தியும் ஆகும். இனி சிவ வடிவம் யாதாயினும் அது சத்தி, சிவம் இரண்டும் இயைந்த வடிவமேயாகும்.
=======================================
பாடல் எண் : 4
தான்நேர் எழுகின்ற சோதியைக் காணலாம்
வான்நேர் எழுகின்ற ஐம்ப தமர்ந்திடம்
பூநேர் எழுகின்ற பொற்கொடி தன்னுடன்
தான்நேர் எழுந்த அகாரம தாமே.

பொழிப்புரை :  பொன்னால் இயன்ற, பூவொடு கூடிய கொடிபோலும் சத்தியுடன் சிவன் ஆன்ம சிற்சத்தியை நேரே பற்றி அதற்குப் பொருள் தருகின்ற நாதமே தன் வடிவாகக் கொண்டு ஆன்மாவின் உணர்வில் விளங்குவான். அதனால் அந்த நாதத்தின் காரியமாய் ஆகாயத்தின் ஒலியால் விளங்கி நிற்கின்ற ஐம்பது எழுத்துக் களும் பொருந்தியுள்ள இடத்தில் அடியவன் அடியார்களுக்கு நேரே விளங்கி நிற்கும் சிவசோதியைக் காண இயலும்.
=======================================
பாடல் எண் : 5
விந்துவும் நாதமும் மேவும் இலிங்கமாம்
விந்துவதே பீடம் நாதம் இலிங்கமாம்
அந்த இரண்டையும் ஆதார தெய்வமாய்
வந்த கருஐந்தும் செய்யும்அவ் வைந்தே.

பொழிப்புரை :  சத்தி சிவங்கட்கு வடிவமாய் நிற்கின்ற விந்து நாதங்களின் வடிவமே இலிங்க வடிவம். அவற்றுள் விந்துவே பீடமாயும், நாதமே இலிங்கமாயும் நிற்கும். அந்த விந்து நாதங்களை முதலாகக் கொண்டு தோன்றிய `சிவன் சத்தி, சதாசிவன், மகேசுரன், வித்தியேசுர` என்னும் முதல்வர் ஐவரும் முறையே, சிவம், சத்தி, சதாக்கியம், ஈசுரம், சுத்த வித்தை என்னும் சுத்த தத்துவம் ஐந்தையும் தோற்றுவிப்பார்கள்.
=======================================
பாடல் எண் : 6
சத்திநற் பீடம் தகும்நல்ல ஆன்மா
சத்திநற் கண்டம் தகுவித்தை தானாகும்
சத்திநல் லிங்கம் தகும்சிவ தத்துவம்
சத்திநல் லான்மாச் சதாசிவந் தானே.

பொழிப்புரை :  அருளே திருமேனியாகக் கொள்ளும் சிவனது திருவடியாகிய இலிங்கத்தில் பீடம் ஆன்ம தத்துவமும், நடுக் கண்டம் வித்தியா தத்துவமும், கண்டத்திற்குமேல் உள்ள பகுதி சிவதத்துவமும் ஆகும். அந்த வகையினதாகிய இலிங்க மூர்த்திமான் சதாசிவராவர்.
=======================================
பாடல் எண் : 7
மனம்புகுந் தென்னுயிர் மன்னிய வாழ்க்கை
மனம்புகுந் தின்பம் பொகின்ற போது
நலம்புகுந் தென்னொடு நாதனை நாடும்
இலம்புகுந் தாதியும் எற்கொண்ட வாறே.

பொழிப்புரை :  மனத்தின் தொழிற்பாடு நிகழ்தலால் நடைபெறுகின்ற என்னுடைய உயிர் வாழ்க்கையில் அந்த மனம் உலக இன்பத்தையே மிகுவித்துக் கொண்டிருக்கின்ற நிலைமையின் இடையே சிவனது திருவருள் புகுந்து செயலாற்றத் தொடங்கினமையால், அந்த மனமும் முன்னை நிலையை விடுத்து, என்னையும், என் தலைவனையும் நினைவதாயிற்று. சிவன் எனது உடம்பையே தனது இல்லமாகக் கொண்டு என்னை ஆட்கொண்டது இம் முறைமையினாலாம்.
=======================================
பாடல் எண் : 8
பராபரன் எந்தை பனிமதி சூடி
தராபரன் தன்அடி யார்மனக் கோயில்
சிராபரன் தேவர்கள் சென்னியில் மன்னும்
மராமரன் மன்னி மனத்துறைந் தானே.

பொழிப்புரை :  மேற்கூறியவாறு என்னை ஆட்கொண்டபின் இறையியல்பு அனைத்தையும் உடைய சிவன் எனது உயிரையேதான் இருக்கும் இடமாகக் கொண்டான்.
=======================================
பாடல் எண் : 9
பிரான் அல்லன் ஆம்எனில் பேதை உலகம்
குரால் என்னும் என்மனம் கோயில்கொள் ஈசன்
அராநின்ற செஞ்சடை அங்கியும் நீரும்
பொராநின் றவர்செய்அப் புண்ணியன் தானே.

பொழிப்புரை :  `பசு` எனப்படுகின்ற எனது மனத்தைப் பசுமனமாய் இல்லாது திருந்தப் பண்ணி அதனைத் தனக்குக் கோயிலாகக் கொண்ட தலைவன் சிவனேயாகும். அவனை, அங்ஙனம் பசுக்களைத் திருத்தி ஆட்கொள்கின்ற தலைவன் அல்லன்` என்றும், `ஆம்` என்றும் இங்ஙனம் ஐயுற்று உலகம் பிணங்குமாயின் அது பேதையுலகமேயாகும்.
=======================================
பாடல் எண் : 10
அன்றுநின் றான்கிடந் தான்அவன் என்றென்று
சென்றுநின் றெண்டிசை ஏத்துவர் தேவர்கள்
என்றுநின் றேத்துவன் எம்பெரு மான்றன்னை
ஒன்றிஎன் உள்ளத்தி னுள்இருந் தானே.

பொழிப்புரை :  உலகர் ஏனைத் தேவர்களை முதல்வராக நினைந்து தாம்கொண்ட கடவுளை `அவன் ஓரிடத்தில் நின்றான், இருந்தான்` என இவ்வாறான வடிவங்களைப் பல இடங்களில் சென்று கண்டு துதிப்பார்கள். நான் சிவபெருமானை, `என் உயிராகிய வடிவத்தில் என்றும் இருக்கின்றான்` என்று நிலையாக நின்று துதிப்பேன்.
=======================================
ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம் பாடல்கள் 010
பாடல் எண் : 1
உருவும் அருவும் உருவோ டருவும்
மருவும் பரசிவன் மன்பல் லுயிர்க்கும்
குருவும் எனநிற்கும் கொள்கைய னாகும்
தருவென நல்கும் சதாசிவன் தானே.

பொழிப்புரை :  யாதோர் உருவும் இலனாகிய பரமசிவன், தன்னைப் போலவே நிலைபெற்ற பொருளாய் உள்ள பல உயிர்களின் பொருட்டு, `உருவம், அருவம், உருஅருவம்` என்னும் திரு மேனிகளைப் பொருந்தி நிற்பான். அஃதேயன்றிப் பக்குவான்மாக்கள் பொருட்டுக் குருவாகி வந்து அவர்களோடு உடன் உறையும் கொள்கையையுடைய, கற்பகத் தருவைப்போல அவர்கள் வேண்டியவற்றை வழங்குகின்ற சதாசிவ மூர்த்தியும் ஆவான்.
=======================================
பாடல் எண் : 2
நாலான கீழ உருவம் நடுநிற்க
மேலான நான்கும் அருவம் மிகநாப்பண்
நாலான ஒன்றும் அருஉரு நண்ணலால்
பாலாம் இவையாம் பரசிவன் தனே.

பொழிப்புரை :  கீழும், மேலும் நான்கு நான்கு திருமேனிகளாய் உள்ள அவற்றிற்கு மிக நடுவிலே உள்ள ஒரு திருமேனி மட்டும் அருவுருவமும், அஃதொழிய அதற்குக் கீழ் உள்ள திருமேனிகள் நான்கும் உருவமும், மேல் உள்ள திருமேனிகள் நான்கு அருவமும் ஆக இவ்வாறு பொருந்துதலால், இவையாய் நிற்கின்ற பரமசிவன் ஒருவனேயாயினும் ஒன்பது பேதங்களாய் நிற்பன்.
=======================================
பாடல் எண் : 3
தேவர் பிரானைத் திசைமுகர் நாதனை
நால்வர் பிரானை நடுவுற்ற நந்தியை
யாவர் பிரான்என் றிறைஞ்சுவார் அவ்வ
ஆவர் பிரான்அடி அண்ணலும் ஆமே.

பொழிப்புரை :  மேற்கூறிய நவந்தரு பேதங்களில் `உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் பேதங்களை ஏனைத் தேவர்போல எண்ணுதல் கூடாது` என்றற்கு அவற்றது சிறப்புணர்த்துவார், `அருவுருவத் திருமேனியும் தனியொரு நிலையது ஆனமை பற்றி இகழ்தல் கூடாது` என்றற்கு அதனையும் உடன் கூறினார்.
=======================================
பாடல் எண் : 4
வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

பொழிப்புரை :  யாண்டும், திங்களும், நாளும் என்று இன்ன வகையாகக் காலத்தை வரையறை செய்கின்ற, ஒவ்வொரு வரும் காலை, நண்பகல், மாலை என்னும் காலங்களில் தவறாது கண்டு வணங்கத் தக்க பகலவனிடத்துக் கருதியுணரினும், உணவு முதலிய உலகியல் ஒழுக்கத்தின் நீங்கி யோகத்தின் நின்று உணரினும் அவ்விடங்களில் உணரப்படும் பொருள் ஒப்பற்றதாகிய அந்தத் தனிமுதற் பொருளே யாகும். அதனால் நான் எனது வினைக்கட்டு நீங்கி அழியுமாறு எவ் விடத்தும் அந்தத் தனிமுதற் பொருளையே விரும்பித் தொழுகின்றேன்.
=======================================
பாடல் எண் : 5
ஆதி பரதெய்வம் அண்டத்து நற்றெய்வம்
சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
நீதியுள் மாத்தெய்வம் நின்மலன் எம்இறை
பாதியுள் மன்னும் பராசத்தி யாமே.

பொழிப்புரை :  மெய்யுணர்வினை உடைய அடியவர்களால், `யாவர்க்கும் முன்னே மேலே உள்ளவன்` எனவும், அனைத்து உலகங்கட்கும் முதல்வனாகிய முழுமுதற் றன்மை உடையவன்` எனவும், `நீதியின் உள்ளே விளங்குகின்ற பெரியோன்` எனவும், `இயல்பாகவே பாசங்கள் இல்லாதவன்` எனவும் கொண்டு வழிநின்று போற்றுகின்ற பெருமையை உடையவன் எங்கள் கடவுள். அவனை அறிதற்கு உரிய அடையாளம் மாதொரு பாகனாய் இருத்தல்.
=======================================
பாடல் எண் : 6
சத்திக்கு மேலே பராசத்தி தன்னுள்ளே
சுத்த சிவபேதம் தோயாத தூவொளி
அத்தன் திருவடிக் கப்பாலுக் கப்பாலாம்
ஒத்தவும் ஆம்ஈசன் தானான உண்மையே.

பொழிப்புரை :  ஆதிசத்திக்குமேல் உள்ளதாகிய பராசத்தியில் விளங்குவதே வாக்கும், மனமும் எட்டாது நிற்கும் தூய ஒளியாகிய சுத்தசிவ நிலை. அதனால், சிவன் பிறிதொன்றோடும் படாது தானேயாய் நிற்கின்ற அவனது உண்மைநிலை, ஞானசத்தி கிரியா சத்திகட்கு முதலாய் உள்ள ஆதி சத்திக்கு அப்பால் உள்ள பராசத்தியின்கண் நிற்பதேயாகும். எனினும் அவனது நிலைகள் ஆதிசத்தி. ஞானசத்தி, கிரியா சத்திகள் ஆகிய அவைகளோடும் இயைந்து நிற்பனவேயாம்.
=======================================
பாடல் எண் : 7
கொழுந்தினைக் காணின் குலயம் தோன்றும்
எழுந்திடம் காணின் இருக்கலும் ஆகும்
பரம்திடம் காணின்பிந் பார்ப்பதி மேலே
திரண்டெழக் கண்டவன் சிந்தை உளானே.

பொழிப்புரை :  `எல்லாப் பொருள்களின் முடிவுக்கும் முடிவாய் உள்ள` ``போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே` பரமசிவனது உண்மையை உணரின் `அவனே உலகம் அனைத்திற்கும் முதல்` என உலகத்தின் முடிநிலைக் காரணம் விளங்கும். பின் அந்தப் பரமசிவன் முதற்பொருளாய் எழுதற்கு காரணமான அவனது குணமாம் பராசத்தியை உணரின் அஃதே எல்லையில் இன்ப வெள்ளமாய் விலைதலால், அப்பால் அலைவுயாதும் இன்றி, அந்த இன்ப வெள்ளத்திலே அமைதியுடன் இருத்தல்கூடும். எப்பொருள் எத் தன்மைத்தாயினும் அப்பொருளில் மெய்ப்பொருளாகிய பரம சிவனைl அலைவின்றிக் காணும் மெய்யுணர்வைப் பெற்றால் அவ்வுணர்விலே முன்னே அருள்நிலை தோன்ற, அதன்பின் அதற்கு மேலாகப் பொருள் நிலையாகச் சிவன் விளங்குவான். அங்ஙனம் விளங்கக் கண்டவனது உள்ளத்தில்தான் அந்தச் சிவன் என்றும் இருக்கின்றான்.
=======================================
பாடல் எண் : 8
எந்தை பரமனும் என்னம்மை கூட்டமும்
முந்த உரைத்து முறைசொல்லின் ஞானம்ஆம்
சந்தித் திருந்த இடம்பெருங் கண்ணியை
உந்திக்கு மேல்வைத் துகந்திருந் தானே.

பொழிப்புரை :  தன்னையே அடைக்கலமாக அடைந்த எனக்குத் தந்தையாய் நிற்கும் பரமசிவனையும் அவன் எனக்குத் தாயாய் நிற்கும் சத்தியோடு கூடிய கூட்டு நிலையையும், ஞானாசிரியர் தம் மாணாக்கர்க்கு முதற்கண் சுட்டளவாக உணர்த்திப் பின்பு அவ்விருவரது முறைமையை எல்லாம் விளங்க உணர்த்துவாராயின், மாணாக்கர்க்கு உண்மை ஞானம் பிறக்கும். எனவே, (`அதுவே அவர்க்கு ஞானலிங்கமாய்ப் பயன் தரும்` என்றபடி) இனி என் அப்பன் என் அம்மையை மக்களது இருதய கமலத்தில் இருக்க வைத்துத் தானும் அந்த இடத்தையே விரும்பி அவளோடு கூடியிருக்கின்றான். ஆகவே, அவ்விருவரும் வீற்றிருக்கின்ற இடம் அதுவே.
=======================================
பாடல் எண் : 9

சத்தி சிவன்விளை யாட்டாம் உயிர்ஆகில்
ஒத்த இருமாயா கூட்டத் திடைஊட்டிச்
சுத்தம தாகும் துரியம் பிரிவித்துச்
சித்தம் புகுந்து சிவம்அகம் ஆக்குமே.

பொழிப்புரை :  `உயிரின் இருப்பு, சத்தயோடு கூடிய சிவனது விளையாட்டே` என்றால், அச்சிவன் அவ்வுயிரை யாதாக்குவான் எனில், ஆணவத்தைப் போகக்தற்கண் தம்மில் ஒரு தன்மைப்பட்ட, `சுத்தம், அசுத்தம்` என்னும் இருமாயையால் ஆகிய கருவிக் கூட்டத்துள் அவ்வுயிரை முதற்கண் புகுவித்து அந்நிலையில் அவற்றின் வினைகளை அவை நுகரச் செய்து, அக்கருவிகள் கூடுதல் குறைதல்களால் உளவாகின்ற கேவல ஐந்தவத்தை சகல ஐந்தவத்தை கட்குப் பின் திருவருளால் உளவாகின்ற சுத்த ஐந்தவத்தையை அடைவித்து இறுதியாகத் துரியத்தையும் நீக்கித் துரியாதீதத்தில் சேர்த்து, அங்ஙனம் சேர்க்கப்பட்ட அந்நிலையில் அதன் அறிவினிடமாகத் தான் விளங்கி, அதனாலே, தனது இன்ப வெள்ளமே அவ்வுயிர்க்கு என்றும் உறைவிடமாகச் செய்வான்.
=======================================
பாடல் எண் : 10
சத்தி சிவன்றன் விளையாட்டுத் தாரணி
சத்தி சிவனுமாம் சிவன்சத் தியுமாகும்
சத்தி சிவனன்றித் தாபரம் வேறில்லை
சத்திதான் என்றும் சமைந்துரு வாகுமே.

பொழிப்புரை :  உலகமே ஆதி சிவனது விளையாட்டாம். அவன் ஆதி சத்தியைக் கொண்டே அனைத்தையும் செய்வனாயினும் அச் சத்தியும், அவனும் உலகத்துத் தலைவியரும், தலைவரும் போல வேறு வேறானவர் அல்லர். சத்தியே `சிவனும்` சிவனே சத்தியும் ஆவர். எனினும் சில வேறுபாடு பற்றி, சத்தி எனவும், `சிவன்` எனவும் பிரித்து வழங்கப்படுகின்றார்கள். அதனாலே இலிங்கத்திலும் அவ்வேறுபாடு காணப்படுகின்றது. அஃதே பற்றி, அதனை, `உலகத்தாரது உருவம் போல இருவேறு பொருள்களின் கலப்பு` என மயங்கற்க. இனி உண்மையாக உணர்ந்தால், சத்தியே அனைத்துத் திருமேனிகளுமாய் நிற்கும்.
=======================================


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!