http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Saturday 3 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :18 & 19. பூரண குகைநெறிச் சமாதி, சமாதிக் கிரியை - பாடல்கள்:008 & 013.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை...................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை..................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை......பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை..பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி...........பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:16: பிட்சா விதி..............பாடல்கள்: 006 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:17: முத்திரை பேதம்....பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:18: பூரணக் குகைநெறிச் சமாதி.பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:19: சமாதிக் கிரியை.....பாடல்கள்: 013
============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -019
கூடுதல் பாடல்கள்  (191+008+013 =212)

==============================================
ஏழாம் தந்திரம் - 18. பூரணக் குகைநெறிச் சமாதிபாடல்கள்: 08
பாடல் எண் : 1
வளர்பிறை யில்தேவர் தம்பாலின் மன்னி
உளரொளிப் பானுவி னுள்ளே யொடுங்கித்
தளர்வில் பிதிர்பதம் தங்கிச் சசியுள்
உளதுறும் யோகி உடல் விட்டால் தானே.
 
பொழிப்புரை : இயன்ற அளவு யோக நெறியில் நின்ற யோகி அந்நிலையிலே தனது புறஉடலை விட்டு நீங்கினால் நீங்கின காலம் வளர்பிறைக் காலமாய் இருப்பின் முன்னர்த் தேவருலகை அடைந்து சில காலம் இருந்து, பின் சூரிய மண்டலத்தில் நுட்பமாய்ப் புகுந்து, அப்பால் பிதிரர்கள் உலகத்தில் தங்கி, இறுதியில் சந்திர மண்டலத்துள் தங்கி அங்குள்ள இன்பத்தை நுகர்வான்.
=======================================
பாடல் எண் : 2
தானிவை யொக்கும் சமாதிகை கூடாது
போனவி யோகி புகலிடம் போந்துபின்
ஆனவை தீர நிரந்தர மாயோகம்
ஆனவை சேர்வர் அருளின்சார் வாகியே.
 
பொழிப்புரை : யோக நிலை முற்றப்பெறாது உடல்விட்ட யோகிக்கு மேற்சொல்லியன எல்லாம் பொருந்தும். அவன் அவ்வாறு மேற்சொல்லிய இடங்களிலெல்லாம் தங்கிப் பயன்களை நுகர்ந்தபின் அங்கு நின்றும் பூமியில் வந்து பிறந்து விட்ட குறையாகிய வினையைப் புசித்துத் தீர்ந்தபின் திருவருளின் துணையைப் பெற்று இடைவிடாது யோகத்தின் முதிர்ந்த நிலைகளை எய்துவர்.
=======================================
பாடல் எண் : 3
தானிவ் வகையே புவியோர் நெறிதங்கி
ஆன சிவயோகத்தாம் ஆறாம் அவ்விந்து
தானதில் அந்தச் சிவயோகி யாகுமுன்
ஊனத்தோர் சித்திவந் தோர்காய மாகுமே.
 
பொழிப்புரை : மேற்கூறிய யோகி மேற்கூறியவாறு உலக மக்கள் நெறியிலே தானும் நின்று, அதற்கு இடையிலே யோகம் முதிரப் பெற்றுச் சிவயோகியாவான். அங்ஙனம் அவன் சிவயோகி ஆவதற்கு வழி பிராசாத மந்திரம். அந்த மந்தித்தில் நின்று சிவயோகி ஆவதற்கு முன்பு அவன் பொதுவான யோகப் பயிற்சியால் கிடைக்கும் காய சித்தியைப் பெறுதலும் உண்டு.
=======================================
பாடல் எண் : 4
சிவயோகி ஞானி சிதைந்துடல் விட்டால்
தவலோகம் சார்ந்து பின்தான்வந்து கூடிச்
சிவயோக ஞானத்தால் சேர்ந்தவர் நிற்பன்
புவலோகம் போற்றுநர் புண்ணியத் தோரே.
 
பொழிப்புரை : பிராசாத யோகமாகிய சிவயோகத்தில் நின்றவன் ஞானம் பெற்றவனோடு ஒத்தவனேயாவன். அவன் ஞானம் பெறுதற்கு முன் உடலை விட்டு நீங்கினானாயினி நேரே சிவலோகத்தையே அடைந்து அங்கு இன்பம் துய்த்தபின் மீளப் பிறந்து அந்தச் சிவ யோகத்தின் வழியே பெற்ற ஞானத்தால் மேன்மை எய்தி அத்தன்மையாரோடே இருப்பன். அவ்வாறன்றிச் சிவலோகம் முதலியவற்றிற் செல்வோர் பசு புண்ணியம் செய்தவரேயாகையால் சிவயோகி ஆங்கெல்லாம் புகான்.
=======================================
பாடல் எண் : 5
ஊனமில் ஞானிநல் யோகி உடல்விட்டால்
தானற மோனச் சமாதியுள் தங்கியே
தானவ னாகும் பரகாயஞ் சாராதே
ஊனமில் முத்தனாய் `மீளான் உணர்வுற்றே.
 
பொழிப்புரை ::  குறைவில்லாத ஞானத்தைப் பெற்றவன் `குறைவற்ற யோகி` என்றும் சொல்லப்படுவான். (அதற்குக் காரணம், உடம்புள்ள வரையில் அவன் உடலை விட்டு நீங்கியபின் வேறோர் உடலை எடுத்தல் இன்றியே, உடம்பில் மோன சமாதி நிலையில் தான் வேறின்றி இருந்தவாறே உடனே தான் சிவமேயாவன் ஆகவே, அவன் பரமுத்தனாதலன்றி, உலகியல் உணர்வைப் பொருந்திப் பிறப்பில் மீளான்.
=======================================
பாடல் எண் : 6
செத்தார் பெறும்பய னாவதி யாதெனில்
செத்துநீர் சேர்வது சித்தினைக் கூடிடில்
செத்தார் இருந்தார் செகத்தில் திரிமலம்
செத்தார் சிவமாய திண்சித்தர் தாமே.
 
பொழிப்புரை : `பிறந்தவர் இறத்தல் இயல்பு என்னும் அம் முறையிலே இறந்தவர் என்ன பயனைப்பெறுவர்` என வினவில் அம்முறையில் இறந்தவர் அடையும் பயன் அந்த இறப்பைத் தவிர வேறில்லை. (என்றதில், `அவர் சிறப்பாக அடையும் பயன் வேறில்லை` என்றபடி) இனிப் பொதுவான யோகத்தைச் செய்து அதன் பயனாகச் சித்திகளைப் பெற்றவர் இறந்தாரானால், அவரது புகழ் உலகில் இறவாதிருக்கும். ஆகவே, மும்மலங்களும் கெடப்பெற்றோரே வாழ்விலும், வாழ்விற்குப் பின்னரும் சிவமாய் நிற்கும் சிறந்த பேற்றை உடையராவர்.
=======================================
பாடல் எண் : 7
உன்னக்கருவிட் டுரவோன் அரன்அருள்
பன்னப் பரனே அருட்குலம் பாலிப்பன்
என்னப் புதல்வர்க்கும் வேண்டியிடும் ஞானி
தன்னிச்சைக் கீசன் உருச்செய்யுந் தானே.
 
பொழிப்புரை : ஞானத்தைப் பெற விரும்பும் உறுதியுடையவன், `சிவனையன்றி வேறொன்றையும் நினைத்தல் கூடாது` என்னும் எண்ணமாகிய விதையை முதலிலே தனது உள்ளமாகிய நிலத்தில் ஊன்றி, (அந்த எண்ணம் சத்திநிபாதத்தால் உண்டாகும்) அங்ஙனமே சிவனையே பலகாலும் நினைத்தும், போற்றியும் வருவானாயின், அந்தச் சிவனே அவனுக்கு ஞானியர் குழாத்தை அவனுக்கு அருள் புரியும் வண்ணம் கூட்டுவிப்பான். (சேரமான் பெருமாளுக்கு வன்றொண்டரைக் கூட்டுவித்தது போல.) அங்ஙனம் கூட்டுவிக்கப்பட்ட பின் அவன் தானும் அக்குழாத்து ஞானியர் போல உலகத்தார் அனைவரையும் தன் மக்கள் போலக் கருதி, `அவர்களும் தான் பெற்ற பேற்றைப் பெற வேண்டும்` என விரும்புவான். அத்தகையோனுக்குச் சிவன் அவன் விரும்பியவாறெல்லாம் காட்சி தருவான்.
=======================================
பாடல் எண் : 8
எங்கும் சிவமாய் அருளாம் இதயத்துத்
தங்கும் சிவஞானிக்(கு) எங்குமாம் தற்பரம்
அங்கங் கெனநின் றகமுண்ட வான்தோய்தல்
இங்கே யிறந்தெங்கு மாய்நிற்கும் ஈசனே.
 
பொழிப்புரை : ஓரோரிடத்தில் மட்டுமே உள்ளது போலக் கட்டடங்களுக்கு உள்ளது போலக் காணப்படுகின்ற ஆகாயம் உண்மையில் அவ்வாறின்றி எங்கும் நிறைந்திருத்தல் போல இறைவன் ஓரோரிடத்தில் மட்டும் இருப்பவன் போல அங்கங்குள்ள குருலிங்க சங்கமங்களிலே இருப்பினும் உண்மையில் அவன் அந்த இடங்களை யெல்லாம் கடந்து எங்கும் இருக்கின்றான். இந்த உண்மையைத் திருவருளால் உணர்ந்து அந்தத் திருவருள் வியாபகத்திலே நிற்பவனே சிவஞானியாவான். அவன் உடல் விட்டால் அவனுக்கு சிவன் தனது எங்கும நிறைந்த நிறைவு நிலையை அனுபவமாகச் செய்து எல்லையில்லாத இன்பத்தையும் அருளுவான்.
=======================================
ஏழாம் தந்திரம் - 19. சமாதிக் கிரியைபாடல்கள்: 13
பாடல் எண் : 1
அந்த மிலாஞானி தன் ஆகம் தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெந்திடும் தீயினில்
நொந்தது நாய்நரி நுங்கிடில் நுண்செரு
வந்துநாய்ந ரிக்குண வாம்வை யகமே.
 
பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை :  அந்தம் இன்மை ஞானத்தைச் சிறப்பித்தது. வருகின்ற மந்திரத்தில் எண்ணின்மையும் அன்னது. நோதல் பசியினால். செரு - போர். செருச்செய்வாரது நுட்பமாகிய திறமை செருவின்மேல் ஏற்றப்பட்டது. ``வந்து`` என்றதனில் `வேற்று நாட்டிலிருந்து` என்பது பெறப்பட்டது. இவ்வெச்சம் காரணப்பொருட்டாய் நின்றது. தளை சிதைய ஓதப்படுவன பாடமல்ல. இதனால் யோகியர் ஞானியரது உடலை எரியூட்டுதலும், வாளா விடுதலும் குற்றமாதல் கூறப்பட்டது. அடுத்து வரும் மந்திரமும் எரிப்படுத்தல் கூடாமையைக் கூறும்.
=======================================
பாடல் எண் : 2
எண்ணிலா ஞானி யுடல்எரி தாவிடில்
அண்ணல்தன் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழைவிழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே.
 
பொழிப்புரை :  இதன் பொருளும் வெளிப்படை.
குறிப்புரை :  அண்ணல் - இறைவன். ``ஆங்கு`` அசை. இதனுள் ஞானியின் உடல் இறைவன் கோயிலுக்கு ஒப்பாதல் சொல்லப்பட்டது.
=======================================
பாடல் எண் : 3
புண்ணிய மாம்அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல்கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணி லழியில் மலங்காரப் பஞ்சமாம்
மண்ணுல கெல்லா மயங்குமனல் மண்டியே.
 
பொழிப்புரை : மலங்கு ஆர - மனங்கலங்குதல் மிகும்படி, மண்ணில் அழிதல் - கேட்பாரின்றிக் கிடநத் அழிதல். ஏனையவை வெளிப்படை.
குறிப்புரை :  `பங்கமாம்` என்பது பாடம் அன்று. ``அவர்`` என்றது ஆகுபெயர். இதனால் குகைக்குள் அடக்கும் புண்ணியத்தைப் பயத்தல் கூறப்பட்டது.
=======================================
பாடல் எண் : 4
அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்
அந்த உடல்தான் குகைசெய் திருத்திடில்
சுந்தர மன்னரும் தொல்புவி யுள்ளோரும்
அந்தமில் இன்ப அருள்பெறு வாரே.
 
பொழிப்புரை : இதன் பொருளும் வெளிப்படை.
குறிப்புரை :  இதனால் ஞானியின் உடலைச் சமாதி செய்தலின் பயன் கூறப்பட்டது.
=======================================
பாடல் எண் : 5
நவமிகு சாணாலே நல்லாழம் செய்து
குவைமிகு சூழலைஞ் சாணாகக் கோட்டித்
தவமிகு முட்குகைமுக் கோணமுச் சாணாக்கிப்
பவமறு நற்குகை பத்மா சனமே.
 
பொழிப்புரை : குகையை (நில அறையை) ஒன்பது சாண் ஆழமும் ஒரு பக்கத்திற்கு ஐந்து சாண் சதுரமும் ஆகச் செய்து அடியில் திருமேனி தவநிலையில் அமர்கின்ற ஆசனம் பக்கத்திற்கு மூன்றாக முக்கோணமாக அமைத்து, அதன் மேல் திருமேனியைப் பதுமாசனமாக இருத்துக.
=======================================
பாடல் எண் : 6
தன்மனை சாலை குளங்கரை யாற்றிடை
நன்மலர்ச் சோலை நகரில்நற் பூமி
உன்னருங் கானம் உயர்ந்த மலைச்சாரல்
இந்நிலந் தான்குகைக் கெய்தும் இடமே.
 
பொழிப்புரை :  இதன் பொருளும் வெளிப்படை.
குறிப்புரை : ``தன்`` என்றது உடலை விட்டு நீங்கிய ஞானியை ``மனை`` என்றது ஆச்சிரமத்தையும், தங்கியிருந்த இடத்தையும் பொதுவாகக் குறிக்கின்றது. சாலை - பெருவழி. `குளக்கரை, குளங்கரை` - விகற்பப் புணர்ச்சி. `யாற்றிடைத்திடல்` என்க. நற்பூமி - புனிதமான நிலம். இதனால் நிலக்குகை அமைத்தற்குரிய இடங்கள் வரையறுத்துக் கூறப்பட்டன.
=======================================
பாடல் எண் : 7
நற்குகை நால்வட்டம் பஞ்சாங்க பாதமாய்
நிற்கின்ற பாதம் நவபாதம் நேர்விழப்
பொற்பமர் ஓசமும் மூன்றுக்கு மூன்றணி
நிற்பவர் தாம்செய்யும் நேர்மைய தாமே.
 
பொழிப்புரை : நில அறையின் மேலே அழகிய கோயில் ஐந்து அடிக்கு ஐந்து அடிச் சதுரமாய், உயரம் ஒன்பதடியாக மும்மூன்று அடி உயரத்தில் ஒவ்வொரு நிலையாய் மூன்று நிலைகள் தோன்றும்படி அமைத்தல் முறையாகும்.
=======================================
பாடல் எண் : 8
பஞ்சலோ கங்கள் நவமணி பாரித்து
விஞ்சப் படுத்ததன் மேல்ஆ சனமிட்டு
முஞ்சி படுத்துவெண் ணீறிட் டதன்மேலே
பொன்செய்நற் சுண்ணம் பொதியலு மாமே.
 
பொழிப்புரை :   நில அறையின் அடியில் ஐம்பொன்களும், ஒன்பான் மணிகளும் நிரம்ப இட்டு மூடி, அதன்மேல் மேற்கூறிய முக்கோண பீடத்தை அமைத்து, அதன்மேல் தருப்பையைப் பரப்பி, திருவெண்ணீற்றைத் திருமேனிக்கு அடியிலும், சுற்றிலும், மேலேயும் நிரம்ப இட்டு, அதன்மேல் பொன்னிறமாய் உள்ள நறுமணப் பொடியை மிகுதியாகத் தூவுதலும் சிறப்புடையதாகும்.
=======================================
பாடல் எண் : 9
நள்குகைநால் வட்டம் படுத்ததன் மேற்காகக்
கள்ளவிழ் தாமம் களபம்கத் தூரியும்
தெள்ளிய சாந்து புழுகுபன் னீர்சேர்த்து
ஒள்ளிய தூபம் உவந்திடு வீரே.
 
பொழிப்புரை : நடுவில் நிலஅறை இருக்க, நாற்புறத்திலும் மேலே வரம்பு அமைத்தபின், அதற்கு மேற்கு பக்கத்தில் நிலத்தின்மேல் ஆசனத்தின்மேல் திருமேனியை எழுந்தருளப் பண்ணி, சந்தனத்தின் கருப்பூரம் முதலியவை கலந்த குழம்பு, தனியாக இழைத்த சந்தனம், புனுகு, பனிநீர் முதலியவைகளால் திருமுழுக்குச் செய்வித்து, தேன் துளிக்க மலரும் பூவால் ஆகிய மாலையைச் சார்த்தி, தூப தீபம் காட்டுக.
=======================================
பாடல் எண் : 10
ஓதிடு வெண்ணீற்றால் உத்தூளம் குப்பாயம்
மீதினில் இட்டா சனத்தினின் மேல்வைத்துப்
போதுறு சுண்ணமும் நீறும் பொலிவித்து
மீதி லிருத்தி விரித்திடு வீரே.
 
பொழிப்புரை : தூப தீபம் காட்டுதல் முதலியவற்றைச் செய்தபின் திருநீற்றைத் திருமேனிமேல் குப்பாயம் போல மிகுதியாகப் பூசி, நிலஅறையில் அமைத்துள்ள பீடத்தின் மேல் மலர்கள், நறுமணப்பொடி, திருநீறு இவைகளை இட்டு, மேலே திருமேனியை எடுத்து இருத்திச் சுற்றிலும் ஆடையைச் சூழ வையுங்கள்.
=======================================
பாடல் எண் : 11
விரித்தபின் நாற்சாரும் மேவுதல் செய்து
பொரித்த கறிபோ னகம்இள நீரும்
குருத்தலம் வைத்தோர் குழைமுகம் பார்வை
தரித்தபின் மேல்வட்டம் சாத்திடு வீரே.
 
பொழிப்புரை : குகையில் திருமேனியைச் சுற்றி ஆடையால் மூடியபின் குகையின் மேல நான்கு பக்கங்களிலும் பல வகையான படையற் பொருள்களை வாழைக் குருத்தின்மேல் மேல் இட்டு நிவேதித்த பின்பு திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிவிடுங்கள்.
=======================================
பாடல் எண் : 12
மீது சொரிந்திடும் வெண்ணீறும் சுண்ணமும்
போது பலகொண்டு தர்ப்பைப்புல் வில்வமும்
பாத உதகத்தால் மஞ்சனம் செய்துபார்
மீதுமூன் றுக்குமூன் றணிநிலம் செய்யுமே.
 
பொழிப்புரை : திருமேனியைப் பரிவட்டத்தால் மூடிய பின்பு திருவெண்ணீறு, மணப்பொடி, பலவகை மலர்கள், தருப்பைப்புல், வில்வ இலை முதலியவைகளை நிரம்பச் சொரியுங்கள்; பின் அருக்கியம் முதலியவைகளைக் கொடுத்துக் கோயில் எடுத்தற்குரிய தொடக்கத்தைச் செய்து விடுங்கள்.
=======================================
பாடல் எண் : 13
ஆதன மீதில் அரசு சிவலிங்கம்
ஓதும் இரண்டினில் ஒன்றினைத் தாபித்து
மேதகு சந்நிதி மேவுத் தரம்பூர்வம்
காதலிற் கோடல் காண்உப சாரமே.
 
பொழிப்புரை :  இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை : `குகையின் மேல் கோயில் எடுத்தபின் கருவறையில் ஒரு பீடத்தின்மேல் அரச மரமாயினும், இலிங்கமாயினும் இவற்றுள் ஒன்றை நிறுவி, நாள்தோறும் பதினாறு வகையான உபசாரங்களுடன் வழிபாடு செய்க` என்பதும், `கோயிலை வடக்கு நோக்கியதாக வேனும், கிழக்கு நோக்கியதாகவேனும் அமைக்க` என்பதும் இதனால் கூறப்பட்டன. `இன்னதை` நிறுவலாம்` என்பது குரு ஆணை பற்றியும், திருவருட் குறிப்பு நோக்கியும் அறியப்படும் எனக் கொள்க. `வாயிலை வடக்கு நோக்கியேனும், கிழக்கு நோக்கியேனும் அமைக்க` என்றதனால். `அதற்குமுன் திருமேனியும் அவ்வாறு இருத்தப்படும்` என்பதும், திருமேனி இருத்தப்பட்ட வகையிலே வாயிலும் அமைக்கப்படும்`  என்பதும் உய்த்துணர்ந்து கொள்ளப்படும். கோயிலின் கருவறையிலே வில்வமரம். பாத பீடிகை இவைகளை அமைத்தலும் மரபாக உள்ளது. இங்ஙனம் இறுதியில் சமாதிக்கோயில் முறை சொல்லி முடிக்கப்பட்டது.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!