http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Friday 2 November, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :14 & 15. அடியார்பெருமை, போசன விதி - பாடல்கள்:015 & 002 .




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை..................பாடல்கள்: 021  
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:12: குருபூசை.................பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:13: மகேசுவரபூசை.....பாடல்கள்: 009

ஏழாம்  தந்திரம்:பதிக எண்:14: அடியார்பெருமை.பாடல்கள்: 015 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:15: போசன விதி..........பாடல்கள்: 002

============================================== 
தந்திரம் 7- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -015
கூடுதல் பாடல்கள்  (158+015+002 =175)

==============================================
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமைபாடல்கள்: 15
பாடல் எண் : 1
திகைக்குரி யான்ஒரு தேவனை நாடும்
வகைக்குரி யான்ஒரு வாதி யிருப்பின்
பகைக்குரி யாரில்லை பார்மழை பெய்யும்
அகக்குறை கேடில்லை அவ்வுல குக்கே.

பொழிப்புரை : `இடம்` என்று சொல்லப்படுவன எவையாயினும் அவை எல்லாவற்றையும் தனது உடைமையாக உடைய ஒப்பற்ற ஒரு தனிமுதற் கடவுளை உணருமாறெல்லாம் உணர்ந்து, அவ்வுணர்வினை மயக்கத்தால் குறைத்துப் பேசுபவரது மயக்கத்தை தனது அனுபவ மொழிகளாற் போக்குகின்ற சீரடியான் ஒருவனே ஒரு நாட்டில் இருப்பினும் அந்த நாட்டின்மேல் பகைமை கொள்வார் எவரும் இலராவர். அங்குப் பருவமழை பொய்யாது பெய்யும். எந்த ஓர் இல்லத்திலும் செல்வம் குறைதலோ, அல்லது செல்வம் தீர்ந்து வறுமை உண்டாதலோ நிகழாது.
=======================================
பாடல் எண் : 2
கொண்ட குழியும் குலவரை யுச்சியும்
அண்டரும் அண்டத் தமரரும் ஆதியும்
எண்டிசை யோரும்வந் தென்கைத் தலத்திலும்
உண்டெனில் யாம்இனி உய்ந்தொழிந் தோமே.

பொழிப்புரை : நிலத்தைத் தன்னகத்துக் கொண்ட கடல்களும், நிலத்தை நிலைபெறுத்துகின்ற எட்டுக் குலமலைகளின் சிகரங்களும், வானுலகமும், வானுலகத்திலுள்ள தேவர்களும், அத்தேவர்களுக்கு முதல்வனாகிய இந்திரனும் மற்றும் திசைக்காவலரும் ஆகிய அனைத்தும், அனைவரும் வந்து எனது கையிலும் அடங்கியுள்ளன, உள்ளனர் என்றால், இனி நாங்கள் எந்த இடர்ப்பாட்டிலும் அகப்படாமல் அவற்றினின்றும் தப்பிவிட்டோமன்றோ!
=======================================
பாடல் எண் : 3
அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியும்
கொண்ட சராசர முற்றும் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியும்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை : இதனால், `மேற்சொல்லியவாறு எல்லாப் பொருள்களும் சிவனடியார் வசத்தன ஆதற்குக் காரணம் சிவன் அவர்கள் உள்ளத்தில் வீற்றிருத்தலேயாகும்` என மேலதற்குக் காரணம் கூறப்பட்டது.
``
தம்பி ரானைத்தன் னுள்ளந் தழீஇயவன்
நம்பி யாரூரன்; நாம்தொழும் தன்மையான்``... -தி.12 திருமலைச் சிறப்பு, 19
என்றது காண்க. காரணங் கூறுவார் மேற்கூறிய காரியங்களையும் அனுவதித்து உடன் கூறினார்.
=======================================
பாடல் எண் : 4
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.

பொழிப்புரை : இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும்படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவரா லும் அறியப்படாத அவனது அப்பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.
=======================================
பாடல் எண் : 5
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிச்செல்வர் வானுல காள்வர்
புயங்களும் எண்டிசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.

பொழிப்புரை : சிவனடியார்கள் பிறரைப் போலவே தாமும் மயக்க உலகத்தில் வாழ்வராயினும் அவ்வுலகம் மயக்குகின்ற மயக்கத்துட்படாது தெளிந்த உணர்வோடே வாழ்வர். உடம்பு நீங்கிய பின்னும் பிறரைப் போல மயக்க உலகங்களில் உழலாமல் சிவன் உலகத்தை அடைந்து அதன்கண் சிலபுவனங்கட்குத் தலைவராயும் விளங்குவர். அவையேயன்றித் தாமும் சிவனைப் போலவே எல்லா உலகங்களும் தம்முள் வியாப்பியமாய் அடங்கத் தாம் அவற்றைத் தம்முள் அடக்கி வியாபகமாயும் நிற்பர்.
=======================================
பாடல் எண் : 6
அகம்படி கின்றநம் ஐயனை ஓரும்
அகம்படி கண்டவர் அல்லலிற் சேரார்
அகம்படி யுட்புக் கறிகின்ற நெஞ்சம்
அகம்படி கண்டாம் அழிக்கலும் எட்டே.

பொழிப்புரை : புறநிலையிற் செல்லாது அகநிலையிற் சென்று அங்குள்ள இறைவனை அறிகின்ற அறிவு `நான்` என்னும் முனைப்பு அடங்கி நிற்றலை அனுபவத்தில் யாம் கண்டோம். அதனால் அந்த அறிவு மாயா காரியங்கைள ஒழித்து அவற்றினின்றும் நீங்கித் தூய்மையுறுகின்றது. ஆகவே, அகநிலையிலே நிற்கின்ற நம் பெருமானை அவ்விடத்திற் காண்கின்ற அகநிலையறிவைப் பெற்றவர்கள் துன்பத்தை அடையமாட்டார்கள்.
=======================================
பாடல் எண் : 7
கழிவும் முதலுமெங் காதற் றுணையும்
அழிவும தாய்நின்ற ஆதிப் பிரானைப்
பழியும் புகழும் படுபொருள் முற்றும்
ஒழியுமென் ஆவி உழவுகொண் டானே.

பொழிப்புரை : கடந்த காலத்தில் நிகழ்ந்துபோன அந்தச் செயல் களும், இப்பொழுது கடந்து கொண்டிருக்கின்ற காலத்தில் நிகழ்கின்ற இந்தச் செயல்களும், இவற்றைச் செய்விக்கின்ற முதல்வனும், அவன் செய்விக்கின்றபடி யான் செய்யும்பொழுது அதற்குத்துணையாய் உடன் நிற்கின்ற அன்புள்ள துணைவனும் ஆகிய எல்லாமாய் உள்ள முழுமுதற் கடவுளாகிய சிவனை நான் எனக்கு வருகின்ற பழியாயும், புகழாயும் விளைகின்ற அனைத்துப் பொருள்களுமாக உணர்கின்ற உணர்ச்சியோடே எனது உயிர் போய்க்கொண்டிருக்கின்றது. அதனால், எனது உடல் வழியாக நிகழும் முயற்சிகள் அனைத்தையும் அப்பெருமான் தனது முயற்சியாகவே ஏற்றுக் கொள்கின்றான்.
=======================================
பாடல் எண் : 8
என்தாயொ டென்னப்பன் ஏழேழ் பிறவியும்
அன்றே சிவனுக் கெழுதிய ஆவணம்
ஒன்றா யுலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில்வண்ணன் நேரெழுத் தாயே.

பொழிப்புரை : எனக்குத் தாயாகியவளும், தந்தையாகியவனும் நான் பிறப்பதற்கு முன்பே தங்களைச் சிவனுக்கு அடிமை` என்று எழுதிக் கொடுத்த ஆளோலையை வைத்துத்தான் ஈரேழுலகங்களை யும் ஒக்கப் படைத்தவனாகிய பிரமதேவன் என்னைப் படைக்கும் பொழுது எனது தலையில், `இவன் சிவனுக்கு அடிமை` என்று எழுதினான். `அந்த எழுத்துப் பொய்யானதன்று, மெய்யானதே` என நிலை நாட்டுபவனாகவே காப்போனாகிய திருமால் அமைந்தான்.
=======================================
பாடல் எண் : 9
துணிந்தார் அகம்படி துன்னி உறையும்
பணிந்தார் அகம்படி பாற்பட் டொழுகும்
அணிந்தார் அகம்படி ஆதிப் பிரானைக்
கணிந்தார் ஒருவர்க்குக் கைவிட லாமே.

பொழிப்புரை : `சிவனே நமக்கு எல்லாப் பொருளும்` எனத்துணிந்தவரது உள்ளத்தில் ஒன்றி உறைபவனும், அங்ஙனம் துணிந்தபடியே மனமொழி மெய்களால் தன்னை வழிபட்டு ஒழுகு வசத்தனாய் நின்று அருள்புரிகின்றவனும் ஆகிய, அழகிதாய் அருள்நிறைந்த திருவுள்ளத்தினையுடைய முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானைப் பல் காலும் நினைக்கின்ற ஒருவர்க்கு அவனை விடுதல் கூடுமோ! (கூடாது)
=======================================
பாடல் எண் : 10
தலைமிசை வானவர் தாழ்சடை நந்தி
மிலைமிசை வைத்தனன் மெய்ப்பணி செய்யப்
புலைமிசை நீங்கிய பொன்னுல காளும்
பலமிசை செய்யும் படர்சடை யோனே.

பொழிப்புரை : தேவர்கள் தம் தலையால் தனது திருவடிமேல் வணங்குகின்ற, தாழ்ந்த சடையை உடைய சிவபெருமான் தனக்கு உண்மையான தொண்டினைச் சிலர் செய்ய அதற்குப் பயனாக அவரைத் தேவர்கள் தம் தலைமேல் வைத்துப் போற்றும்படி வைத்தான். அதற்குமேல் அவன் அவரை முக்குணங்களும், கன்மமும், ஆணவமும் இல்லாத ஒளிமயமான மேல் உலகத்தை ஆள்கின்ற பயனையும் கூட்டுவிப்பான்.
=======================================
பாடல் எண் : 11
அறியாப் பருவத் தரனடி யாரைக்
குறியால் அறிந்தின்பங் கொண்ட தடிமை
குறியார் சடைமுடி கூட்டி நடப்பார்
மறியார் புனல்மூழ்க மாதவ மாமே.

பொழிப்புரை : ஒன்றும் அறியாத இளமைப் பருவத்திற்றானே சிவனடியார்களை அவரது வேடத்தால் அறிந்து மகிழ்ச்சியுற்றதே சிவனுக்கு உண்மை அடிமைத் தன்மையாகும். அதன் பின் அவர்கள் செல்லும் செலவைத் தவிர்ந்த அவர்களது திருவடிகளை விளக்கிய நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுதலே அங்ஙனம் செய்வார்க்குப் பெரிய தவமாகும்.
=======================================
பாடல் எண் : 12
அவன்பால் அணுகியே அன்புசெய் வார்கள்
சிவன்பால் அணுகுதல் செய்யவும் வல்லர்
அவன்பால் அணுகியே நாடும் அடியார்
இவன்பாற் பெருமை இலயம தாமே.

பொழிப்புரை : முன்னை மந்திரத்திற் கூறியவாறு இளமையிலே அடியார் பத்தியிற் சிறந்த ஒருவனை அடைந்து அன்பு செய்பவர்கள் சிவனையே அடையவும் வல்லாராவர். இன்னும் அவரிடத்தில் சிவனையே வழிபடும் ஒருவனது பெருமை அடங்கி விடுவதாகும்.
=======================================
பாடல் எண் : 13
முன்னிருந் தார்முழு தெண்கணத் தேவர்கள்
எண்ணிறந் தன்பால் வருவர் இருநிலத்து
எண்ணிரு நாலு திசைஅந் தரம்ஒக்கப்
பன்னிரு காதம் பதஞ்செய்யும் பாரே.

பொழிப்புரை : பதினெண்கணங்களாக வகுத்துச் சொல்லப் படுகின்ற தேவ சாதியர் பலரும் முன்னே நல்வினைகள் பலவற்றைச் செய்து அந்நிலையை அடைந்தார்கள். அதன்பின்பு அந்நிலையில் இருக்க விரும்பாமல் சிவன்பால் அன்பு செலுத்தியுய்தற்கு இந் நிலவுலகத்தில் வருவார்கள். அவ்வாறு வந்து அவர் சிவனை வழி படுகின்ற இடம் எட்டுத் திசையிலும் பன்னிரு காதப்பரப்பிற்குச் சிவலோகமாகும்படி அவர்களது ஞானம் செய்யும்.
=======================================
பாடல் எண் : 14
சிவயோகி ஞானி செறிந்தஅத் தேசம்
அவயோக மின்றி அறிவோருண் டாகும்
நவயோகம் கைகூடும் நல்லியல் காணும்
பவயோக மின்றிப் பரகதி யாமே.

பொழிப்புரை : இதன் பொருள் வெளிப்படை.
குறிப்புரை : ``சிவம்`` என்பதை ஞானிக்கும் கூட்டுக. யோகமாவது `ஒன்றுதல்` ஆதலால், அவயோகம், பயனில் பொருளோடு ஒன்று தலாம். அறிவோர் - ஞானிகள். அறிவோர் வருகை உண்டாகும்` என ஒரு சொல் வருவித்துக் கொள்க. வருகை, அவதாரத்தையும் குறிக்கும். நவம் - புதுமை; அதிசயம். அதிசயங்களை நிகழ்த்துதல் பலர்க்குக் கூடும்` என்க. காணும்-காணப்படும். பவயோகம்-பிறப்பில் சேர்தல். இதனால் அடியாரது பெருமைகளுள் மிக்கன சில எடுத்துக் கூறப்பட்டன.
=======================================
பாடல் எண் : 15
மேல்உண ரான்மிகு ஞாலம் படைத்தவன்
மேல்உண ரான்மிகு ஞாலம் கடந்தவன்
மேல்உண ரார்மிகு ஞாலத் தமரர்கள்
மேல்உணர் வார்சிவன் மெய்யடி யார்களே.

பொழிப்புரை : பிரமன், விட்டுணு, பிறதேவர் ஆகியோரெல்லாம் தாம்தாம் செய்யும் அதிகாரத்தைத் தமது ஆற்றலால் அமைந்தனவாகவே கருதி மயங்குவாரல்லது, `இவை பரம்பொருளாகிய சிவனது ஆணையின்வழி நமக்கு அமைந்தன, என்று உணர மாட்டார்கள் (அதனால் அவர்கள் மெய்யடியாராதல் இல்லை) அந்நிலையில், `நமக்குக் கிடைத்த நலங்கள் யாவும் பரம்பொருளாகிய சிவனது அருளால் கிடைத்தன` எனச்சிவனுக்கு மெய்யடியாராயினாரே உணர்வார்கள்.
=======================================
ஏழாம் தந்திரம் - 15. போசன விதிபாடல்கள்: 02
பாடல் எண் : 1
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு
அட்ட அடிசில் அமுதென் றெதிர் கொள்வர்
ஒட்டி ஒருநிலம் ஆள்பவர் அந்நிலம்
விட்டுக் கிடக்கில் விருப்பில்லை தானே.

பொழிப்புரை : ஒரு வயலையே தங்களுடையதாகக் கொண்டிருப்பவர் அது தரிசாய்க் கிடந்தால் விளைவு ஒன்றையும் பெறமாட்டார். அது போலச் சிவனடியார்கள் `அடியார்களுக்கு` என்று நினைத்துச் சமைத்த உணவையே, `இஃது எட்டுத் திக்கினையும் நிறைவு செய்யும் அமுதமாகும்` என விரும்பி உண்பதன்றி, `தமக்கும் தம் கேளிர்கிளைஞர்கட்குமே` என்று நினைத்துச் சமைத்த உணவை உண்ண மாட்டார்கள்.
=======================================
பாடல் எண் : 2
அச்சிவ னுள்நின் றருளை யறிபவர்
உச்சியம் போதாக உள்ளமர் கோஇற்குப்
பிச்சை பிடித்துண்டு பேதம் அறநினைந்து
இச்சைவிட் டேகாந்தத் தேறி யிருப்பரே.

பொழிப்புரை : தம்முள் நிற்கின்ற சிவனுக்குள்ளே தாம் நின்று அவனது திருவருள் இயல்பை அநுபவமாக உணர்ந்த அடியார்கள் பசிமிகுந்த போது தம்முள்ளே அமர்ந்திருக்கின்ற தலைவனது இல்லமாகிய உடலில் உயிர் நின்றாங்கு நிற்றற் பொருட்டு, பிச்சையேற்று உண்டு சிவனைத் தம்மின் வேறாக நினையாது தாமேயாக நினைந்து உலகப் பற்று அற்று ஒன்றாகிய சிவ நிலையிலே உயர்ந்திருப்பார்கள்.
=======================================
 



மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!