http://thirumoolar-andkm.blogspot.in/THIRUMOOLAR-THIRUMANTHIRAM

Wednesday 31 October, 2012

திருமந்திரம்-தந்திரம்07: பதிகம் எண் :11 . சிவபூசை -பாடல்கள்:021.




பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000 பாடல்கள்.
பொழிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.

==============================================
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:01: ஆறாதாரம்..............பாடல்கள்: 008
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:02: அண்டலிங்கம்........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:03: பிண்டலிங்கம்........பாடல்கள்: 004 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:04: சதாசிவலிங்கம்.....பாடல்கள்: 023
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:05: ஆத்மலிங்கம்.........பாடல்கள்: 010 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:06: ஞான லிங்கம்.........பாடல்கள்: 010
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:07: சிவலிங்கம்.............பாடல்கள்: 005 
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:08: சம்பிரதாயம்..........பாடல்கள்: 014
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:09: திருவருள்வைப்பு .பாடல்கள்: 005
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:10: அருளொளி..............பாடல்கள்: 009
ஏழாம்  தந்திரம்:பதிக எண்:11: சிவபூசை..................பாடல்கள்: 021
============================================== 
தந்திரம் 6- இல் இதுகாறும் பதிவானவை.-பதிகங்கள் -011
கூடுதல் பாடல்கள்  (118+021 =139)

==============================================
ஏழாம் தந்திரம் - 11. சிவ பூசைபாடல்கள் 021
பாடல் எண் : 1
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

பொழிப்புரை :  ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இலிங்க பூசை செய்தற்கு அவர்களது இருதயமே அவ்விலிங்கம் எழுந்தருளியிருக்கும் கருவறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறை உள்ளடக்கிச் சூழ்ந்துள்ள திருச்சுற்றுக்களாயும், வாயே அவ்விலிங்கத்தின் நேர் நோக்கு வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க இரத்தின தீபங்களாயும் அமையும்.
=======================================
பாடல் எண் : 2
வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் யாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளங் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பால்அவி யாமே.

பொழிப்புரை :  வேள்வித் தீயில் சிவனை வழிபடுவோர் அவனை நோக்கி அத்தீயில் இடும் உணவை அவன் உண்டு மகிழ்வதாகவே கருதுகின்றனர். ஆயினும் அவர் கருத்தை அவன் உடன் பட்டு நின்றே அவர்கட்கு அருள் புரிகின்றான். இனி இலிங்கத்தில் அவனை வழிபடுவோர் அவ்விலிங்கத்தின் முன் வைத்துக் கையை அசைத்துக் காட்டுகின்ற பொருளை அவன் காணும் அளவிலே மகிழ்வதாகக் கருதுகின்றனர். அவர்கட்கும் அவர் கருத்தை உடன்பட்டே அவன் அருள் புரிகின்றான். அம்முறையில் அவனை உள்ளத்தலே உயிராகிய இலிங்கத்தில் வழிபடுகின்ற நாம் புறத்திலே வழிபடுவாரைப்போலப் பூசாகாலங்கலில் காட்டுதற்கு அங்கு எதனையுடையோம்? ஒன்றையும் உடையேமல்லோம். அதனால் அங்கு அவனுக்குக் காட்டும் உணவாவன அவனது திருவுள்ளத்தை மகிழ்விக்கின்ற தோத்திரப் பாடல்களே யாகும். அதனால் அந்த உணவையே அங்கு நாம் காட்டுவோம். அஃது உண்மையில் சொல் வடிவாகவே யிருப்பினும் நமது கருத்து வகையால் அவனுக்கு அது பாலடி சிலேயாய் மகிழ்ச்சியைத் தரும்.
=======================================
பாடல் எண் : 3
பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே.

பொழிப்புரை :  பெருமையுடைய சதாசிவமூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங்கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழி பாட்டில் சதாசிவமூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடுவானாயின், அவன் சிவனாம் தன்மைப்பெரும் பயனைப்பெறுவான்.
=======================================
பாடல் எண் : 4
நினைவதும் வாய்மை மொழிவது மல்லால்
கனைகழல் ஈசனைக் காண்பரி தாகும்
கனைகழல் ஈசனைக் காணவல் லார்கள்
புனைமலர் நீர்கொண்டு போற்றவல் லாரே.

பொழிப்புரை :  சிவனை இலிங்கத்தின்கண் சதாசிவ வடிவில் வைத்து மேற்கூறிய வாரெல்லாம் நினைதலும், அந்நினைவுகட்கு ஏற்ற மறை மொழிகளை அவ்வப் பொழுது முறையாகச் சொல்லுதலும், அவற்றோடு அவ்வவ்வுறுப்புக்களைப் பூவும், நீரும் கொண்டு போற்றுதலும் தவிர அவனைக் காண்பதற்கு வழி வேறில்லை. ஆகையால் அவனைக் காண வேண்டுவோர் பலரும் அவற்றையே செய்வர்.
=======================================
பாடல் எண் : 5
மஞ்சனம் மாலை நிலாவிய வானவர்
நெஞ்சினுள் ஈசன் நிலைபெறு காரணம்
அஞ்சமு(து) ஆம்உப சாரம்எட் டெட்டொ
பொழிப்புரை : 
குறிப்புரை :
=======================================
பாடல் எண் : 6
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண் டருள்புரி யாநிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறி யாமல் நழுவுகின் றார்களே

பொழிப்புரை :  சிவனை அடைதற்குச் செயற்பாலதாகிய தவம் யாது` எனத் தேர்பவர்க்கு, பூவும், நீருமே சாதனங்களாகும். அவை எவவிடத்தும் எளிதிற் கிடைப்பனவே. அவை சாதனங்களாதல் எவ்வாறு எனின், நீரைச் சொரிந்து பூவைச் சாத்துதலாகிய அதைக் கண்டவுடனே சிவன் அதனைச் செய்தவர்க்கு அருள் புரிகின்றான். அங்ஙனமாகவும், நல்லூழ் இல்லாத பலர் இதனைச் செய்யாது வாளா பொழுது போக்கிப் பிறப்பில் வீழ்கின்றனர்.
=======================================
பாடல் எண் : 7
சீர்நந்தி கொண்டு திருமுக மாய்விட்ட
பேர்நந்தி என்னும் பிறங்கு சடையனை
நாநொந்து நொந்து வருமளவும் சொல்லப்
பேர்நந்தி யென்னும் பிதற்றொழி யேனே.

பொழிப்புரை :  (இங்கு இருக்க வேண்டிய இப்பாடல் பதிப்புக்களில் `மாகேசுர பூை\\\\u2970?` என்னும் அதிகாரத்திலும் அங்கு இருக்க வேண்டிய பாடல் இங்குமாக மாறியுள்ளன.)  புகழ்மிக்க நந்தி பெருமானாகிய எம் ஆசிரியர் எம்மை ஆளாக ஏற்றுக் கொண்டுபோய்த் திருமுன்பு சேர்ந்த, `நந்தி` என்பதையே தன் பெயராக உடைய சிவபெருமானை என்னால் ஆம் அளவும் துதிப்பதற்கு அந்த `நந்தி` என்னும் பெயரையே எப்பொழுதும் சொல்வேன்.
=======================================
பாடல் எண் : 8
மறப்பதுற் றெவ்வழி மன்னிநின் றாலும்
சிறப்பொசு பூநீர் திருந்தமுன் ஏந்தி
மறப்பின்றி நின்னை வழிபடும் வண்ணம்
அறப்பெற வேண்டும் அமரர் பிரானே.

பொழிப்புரை :  தேவர்கட்கெல்லாம் தேவனாகிய சிவபெருமானே! யான் இப்பிறப் பினின்று நீங்கி எப்பிறப்பை அடைந்து எங்கேயிருந்து எதனை மறந்து போனாலும் திருத்தமான பூ, நீர் முதலியவற்றைக் கொண்டு உன்னைச் சிறப்புடன் பூசிக்கின்ற இந்த வழக்கத்தை மட்டும் மறவாமல் கடைப்பிடித்து நிற்கும் வரத்தை அடியேன் முற்றாகப் பெறும்படி அருள் செய்யவேண்டும்.
=======================================
பாடல் எண் : 9
ஆரா தனையும் அமரர் குழாங்களும்
நீரார் கடலுள் நிலத்துள வாய்நிற்கும்
பேரா யிரமும் பிரான்திரு நாமமே
ஆராய் வுழியெங்கள் ஆதிப் பிரானே.

பொழிப்புரை :  தெய்வ வழிபாடுகளும், வழிபடப்படும் தேவர் கூட்டங்களும் நீர் நிறைந்த கடல் சூழ்ந்த நிலத்தில் எங்கும் அளவின்றி உள்ளன. உண்மையாக ஆராய்ந்தால், அவ்வழிபாடுகளில் வேறு வேறாகச் சொல்லப்படுகின்ற அளவற்ற பெயர்களும் சிவன் பெயர்களே என்பதும், `அனைத்துத் தெய்வங்களும் சிவனே` என்பதும் விளங்கும்.
=======================================
பாடல் எண் : 10
ஆன்ஐந்தும் ஆட்டி அமரர் கணந்தொழத்
தான்அந்த மில்லாத் தலைவன் அருளது
தேன்உந்து மாமலர் உள்ளே தெளிந்த(து)ஓர்
பான்ஐங் குணனும் படைத்துநின் றானே.

பொழிப்புரை :  பசுவினின்றும் பெறப்படுகின்ற அரிய பொருள் ஐந்தினாலும் திருமுழுக்காட்டித் தேவர் கூட்டம் வழிபட, ஆதியும், அந்தமும் இல்லாதவனாகிய சிவனது திருவருள் அவர்கள் உள்ளங்களில் மலர்ந்த தாமரை மலரில் தோன்பேல வெளிப்பட்ட விளங்கிற்று. (அதனால் அவர்கள் பேரின்பம் பெற்றனர் என்றபடி.) இங்ஙனம் தன்னை வழிபட்டு உய்தற்காகவே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகப் பத்து இந்திரியங்களையும் அவை செயற்படுதற்கு ஆற்றலைத் தருகின்ற தன்மாத்திரைகள் ஐந்தினையும் சிவன் உயிர்கட்குப் படைத்துக் கொடுத்தான்.
=======================================
பாடல் எண் : 11
உழைக்கொண்ட பூநீர் ஒருங்குடன் ஏந்தி
மழைக்கொண்ட மாமுகில் போற்சென்று வானோர்
தழைக்கொண்ட பாசம் தயங்கிநின் றேத்திப்
பிழைப்பின்றி எம்பெரு மான்அரு ளாமே.

பொழிப்புரை :  `தேவர்` என்பார் யாவரும் ஒவ்வொரு பொருட்கு அதன் எல்லையளவும் உரிமை பூண்டு நிற்பவரே. அவ்வுரிமையை அவரெல்லாம் நல்ல இடத்திலிருந் எடுக்கப்பட்ட பூவையும், அவ்வாறே நல்ல இடத்திலிருந்து எடுக்கப்பட்ட நீரையும் கையில் ஏந்திக் கொண்டு நீரை முகந்து வரும் கரிய மேகங்கள் போல ஓரோர் தலத்தில் சென்று மிக்க அன்புடன் சிவபெருமானைப் பூசித்து அவன் பெரிதும் அருள் செய்யவே பெற்றனர்.
=======================================
பாடல் எண் : 12
வெள்ளக் கடல்உள் விரிசடை நந்திக்கு
உள்ளக் கடற்புக்கு ஓர்சுமை பூக்கொண்டு
கள்ளக் கடல்விட்டுக் கைதொழ மாட்டாதார்
அள்ளற் கடலுள் அழுந்துகின் றாரே.

பொழிப்புரை :  உள்ளே ஓட்டத்தையுடைய கடலாகிய கங்கை விரியப்பெறுகின்ற சடைமுடியை உடைய சிவபெருமான் பொருட்டு உள்ளத்திலே நிறைவதாகிய அன்பு என்னும் கடலுள் மூழ்கிப் பூவை நிறையப் பறித்துச் சுமந்துகொண்டு போய் போலியாகிய நற் குணங்களை ஒழித்து உண்மை நற்குணங்களை உடையவராய் வழிபட நினையாதவர்கள் துன்பமாகிய கடலுள் மூழ்குகின்றனர்.
=======================================
பாடல் எண் : 13
கழிப்படு தண்கடற் கௌவை உடைத்து
வழிப்படு வார்மலர் மொட்டறி யார்கள்
பழிப்படு வார்பலரும் பழி வீழ
வெளிப்படு வார்உச்சி மேவிநின் றானே.

பொழிப்புரை :  `தம் பிறவியை கழிக்கின்றார்கள்` எனக் கூறப் படும் பழியைப் பொருட்படுத்தாது அதனுள் அகப்பட்டு நிற்கின்ற உலகர் பலரும், கழி பொருந்திய கடலின் ஆரவாரம் போலும் உலகியல் ஆரவாரங்களை ஒழித்துச் சிவனை வழிபடுகின்றவர்கள் இட்ட பூக்களும், போதுகளும் நிரம்பக் கிடத்தைப் பலகால் கண்டா ராயினும் அவை விளைக்கும் பயனை அறியமாட்டார்கள். ஆயினும், அப்பழி நீங்க அவரது கூட்டத்தினின்றும் வேறுபட்டு நின்று வழிபடுவோரைத்தான் சிவன் தனது திருவருள் வியாபகத்துள் வைத்துப் பாதுக்காக்கின்றான்.
=======================================
பாடல் எண் : 14
பயனறி வொன்றுண்டு பன்மலர் தூவிப்
பயனறி வார்க்கரன் தானே பயிலும்
நயனங்கள் மூன்றுடை யான்அடி சேர
வயனங்க ளால்என்றும் வந்துநின் றானே.

பொழிப்புரை :  `பயனுடைய செயலாவது இது` என அறியும் அறிவு ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகில் உள்ளது. அஃது யாதெனின், பலவகை மலர்களைத் தூவி வழிபட்டு, அதனால் விளையும் பயனை அறிந்து அதனையே மேலும் மேலும் செய்பவர்க்குச் சிவன் தானே பலகாலும் வலியவந்து அருள் செய்தலை அறிதலேயாகும். ஆகையால் அவ்வறிவின்வழி ஒழுகுவார்க்குச் சிவன் அவர் சொல்லியவாறெல்லாம் என்றும் எளிவந்து அருளுவன்.
=======================================
பாடல் எண் : 15
ஏத்துவர் மாமலர் தூவித் தொழுதுநின்
றார்த்தெம தீசன் அருட்சே வடிஎன்றன்
மூர்த்தியை மூவா முதல்உரு வாய்நின்ற
தீர்த்தனை யாரும் திதித்துண ராரே.

பொழிப்புரை :  சிவனைக் காணலுறுவார் யாவரும் அவனது திருவருள் வடிவாகிய அவனது திருவடியின் கீழ்த்தம்மைத் தாமே கட்டி வைத்து, அவனை மிக்க மலர்களைத் தொழுது துதித்தலையே செய்வர். அங்ஙனமன்றி, எனக்கு எதிர் தோன்றிக் காட்சி வழங்கியவனும், என்றும் கெடுதல் இல்லாத முதற்பொருளாய் உள்ளவனும் ஆகிய அவனை யாரும் தாம் இருந்த நிலையிலேயிருந்து காணமாட்டார்கள்.
=======================================
பாடல் எண் : 16
தேவர்கள் ஓர்தீசை வந்துமண் ணோடுறும்
பூவோடு நீர்சுமந் தேத்திப் புனிதனை
மூவரிற் பன்மை முதல்வராய் நின்றருள்
நீர்மையை யாவர் நினைக்கவல் லாரே.

பொழிப்புரை :  தேவர்கள் தத்தமக்கு வாய்ப்பான ஓரோர் இடத்தை அடைந்து நிலத்தல் நால்வகையாகத் தோன்றுகின்ற பூக்களையும், நீரையும் சுமந்து சென்று சிவனைத் திருவுருவங்களில் வழிபட்டு, அதனாலே மூவரில் ஓரோரொருவராயும், அவர் தவிர ஏனைத் தேவரில் ஓரொருவராயும் தலைமை பெற்ற அத்திருவருட் சிறப்பினை யறிந்து அவ்வாறு அவனை வழிபட வல்லார் யாவர்!
=======================================
பாடல் எண் : 17
உழைக்கவல் லார்நடு நீர்மலர் ஏந்திப்
பிழைப்பின்றி ஈசன் பெருந்தவம் பேணி
இழைக்கொண்ட பாதத்(து) இனமலர் தூவி
மழைக்கொண்டல் போலவே மன்னிநில் லீரே.

பொழிப்புரை :  நீரும், பூவும் சுமந்து சென்று நோற்க வல்லவர் நடுவிலே நீவிரும் அமர்ந்திருந்து அவரைப்போல நீவிரும் சிவனிடத்தும் பெரிய தவத்தைச் சிறிதும் குற்றமறச் செய்தலில் கருத்துடையீராய் அவனது திருவடிகளில் பலவகைப் பட்ட மலர்களைத் தூவி, அன்புக் கண்ணீரைப் பொழிதலால் மழையைப் பெய்யும் மேகத்திற்கு ஒப்பாகும்படி அச்செயலில் நிலைத்து நில்லுங்கள்.
=======================================
பாடல் எண் : 18
வென்று விரைந்து விரைபணி என்றனர்
நின்று பொருந்த நிறைபணி நேர்படத்
துன்று சலமலர் தூவித் தொழுதிடிற்
கொண்டிடும் நித்தனும் கூறிய தன்றே.

பொழிப்புரை :  உலகியலை அது மயக்காதவாறு வென்று போக்கி, `இனியாம் விரைந்து செய்யத்தக்க பணியாது` என எண்ணி நின்றவர் யவரும், என்றும் நல்லதொரு பணியில் நின்று சிவனை அடை வதற்கும், சிவனுக்கு மன நிறைவான பண தமக்குக் கிடைத்தற்கும் மிகுந்த நீலையும், பூவையும் கொண்டு ஆட்டியும், தூவியும் வழி பட்டால், சிவன் அதனை விரும்பி ஏற்றுக் கொள்வான். இது படைப்புக் காலத்திற்றானே அப்பெருமானால் சொல்லப்பட்டது.
=======================================
பாடல் எண் : 19
சாத்தியும் வைத்தும் சயம்புஎன் றேற்றியும்
ஏத்தியும் நாளும் இறையை அறிகிலார்
ஆத்தி மலரிட் டகத்தழுக் கற்றக்கால்
மாத்திக்கே செல்லும் வழிஅது வாமே.

பொழிப்புரை :  சிவனை நாள்தோறும் இலிங்கததில் வைத்து, `சுயம்பு` முதலிய பெயர்களை மிகவும் சொல்லி மலர்களைச் சாத்தியும். திருப்பாடல்கள் பலவற்றால் மிகத் துதித்தும் நின்றால் காணுதல் கூடும். அஃது இயல்வதொன்றுறாய் இருக்கவும் அதனைச் செய்யாது புறக்கணித்துப் போவதால் உலகத்தார் சிவனைக் காண்கிலர். ஆயினும் இங்குக் கூறியவாறு ஆத்தி முதலிய மலர்களைத் தூவி அருச்சித்தலே அக அழுக்காகிய மும்மலங்களும் நீங்குதற்குரிய வழி. மும்மலங்களும் நீங்கினால் பெருந்திசையாகிய வீட்டு நிலையிற் செல்லுதல் எளிதாகும்.
=======================================
பாடல் எண் : 20
ஆவிக் கமலத்தினை அப்புறத் தின்புறம்
மேவித் திரியும் விரிசடை நந்திக்
கூவிக் கருதிக் கொடுபோய்ச் சிவத்திடைத்
தாவிக்கும் மந்திரம் தாம்அறி யாரே.

சாணாகத் துள்ளே அழுந்திய மாணிக்கம்
காணு மளவும் கருத்தறிவா ரில்லை
பேணிப் பெருக்கிப் பெருக்கி நினைவோர்க்கு
மாணிக்க மாலை மனம்புகுந் தானே.

பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
வருந்தன்மை யாளனை வானவர் தேவர்
தருந்தன்மை யாளனைத் தாங்கிநின் றோரே.

சமைய மலசுத்தி தன்செயல் அற்றிடும்
அமையும் விசேடமும் ஆமந் திரசுத்தி
சமையுநிர் வாணம் கலாசுத்தி யாகும்
அமைமன்று ஞானமா னார்க்கபி டேகமே.

பொழிப்புரை :  உடம்பில் கீழாக உள்ள மூலம் முதலிய ஆறும், அதற்குமேல் ஏழாவதாக உச்சியில் உள்ளதும் ஆக ஏழு உறுப்புக்களும் தாமலை மலர் வடிவின அவை, ``ஆதாரங்கள்`` எனப்படும். ஏழாம் தானத்திற்குமேல் பன்னிரண்டங்குல அளவு அருவமாய் நிற்றலால் அது `நிராதாரம்` எனப்படும். அந்த நிராதாரத்தையே, ``ஆவிக் கமலத்தின் அப்புறம்`` என்றார் இனி, அப்பன்னிரண்டங்குலத்திற்கு அப்பால் உள்ளது ``மீதானம்`` எனப்படும். `துவாதசாந்தம்` என்பதும் இதுவே. இதனையே, ``அப்புறத்தின் புறம்`` `மீதானமே பரமசிவனுக்கு இடமாவது` எனக் கூறப்படுதலால், அவ்விடத்தில், ``மேவித் திரியும் விரிசடை நந்தியை`` என்றார்.
``
ஆதாரத் தாலே நிராதாரத் தேசென்று
மீதானத் தேசெல்க உந்தீபற;
விமலற் கிடமதென் றுந்தீபற``  ...என்றது காண்க.
கூவி - அழைத்து. ஆதாரங்களையும், நிராதாரங் களையும், அதற்கு மேலேயுள்ள மீதானத்துயம் கடந்து அப்பால் உள்ள பரமசிவனை அழைக்க வேண்டுதலால், அதன் பொருட்டடு மலர்களை இருகைகளையும் தாமரைப் போது வடிவமாகக் குவித்தலும், மலர்த்தலும் இன்றி இடைப்பட்ட வடிவமாக வைத்து அதனுட் கொண்டு, இருதயம் முதலாக மேலுள்ள ஆதாரங்களில் பிராசாத மந்திர உச்சாரணத்துடன் முறையே மீதானம் மட்டும் உயர்த்துவர். அதன்பின்பு அங்கு இருகைகளையும் மலர்த்தி அவற்றுள் பரமசிவன் அளவிடற்கரிய ஒளிவடிவாய் வந்ததாகக் கருதி, கைகளை உயர்த்திய முறையிலே மீள இறக்கிக் கொணர்ந்து சிவலிங்கத்தின் உச்சியில் அம் மலர்களைச் சொரிந்து முன்னமே சதாசிவ மூர்த்தமாகப் பாவித்து நிறுத்தப்பட்ட அம்மூர்த்தியின் இருதயத்தில் இருகைகளையும் கவிழ்த்து அமைக்கும் முறையால் இருக்கப் பண்ணுவர். அழைத்தல், அல்லது கொணர்தல் `ஆவாகனம்` எனவும், இருத்துதல் `தாபனம்` எனவும் சொல்லப் படும். அவற்றையே, ``கூவிக் கருதி`` எனவும் ``கொடுபோய்ச் சிவத்திடைத் தாபித்தல்`` எனவும் கூறினார்.
=======================================
பாடல் எண் : 21
ஊழிதோ றூழி உணர்பவர்க் கல்லது
ஊழிவ் வுயிரை உணரவுந் தானொட்டா(து)
ஆழி அமரும் அரிஅயன் என்றுளோர்
ஊழி கடந்தும்ஓர் உச்சி யுளானே.

பொழிப்புரை :  பாற்கடலில் பள்ளி கொள்பவனாகிய திருமாலும், மற்றும் பிரமனும் எத்துணையோ யுகங்கள் வாழ்பவராயினும் சிவபெருமான் அவர்கட்கு எட்டாதவனாகவே யிருக்கின்றான். அதனால், அளவற்ற பிறவிகளில் அளவற்ற யுகங்களில் சிவனைப் பொது நீக்கியுணர்ந்து வழிபடுபவர்கட்கல்லது ஏனையோர்க்கு அவரது வினை அவனை அடைய ஒட்டாது.
=======================================
 


மேலும் பயணிப்போம் பத்தாம் திருமுறையான திருமந்திரத்தினைத் தொடர்ந்து, முனைவர் சி.அருணை வடிவேல் அவர்களின் விளக்கவுரைகளுடன் திருமூலரைக் காண்போமே இனிய நண்பர்களே!!! அன்புடன் கே எம் தர்மா.

No comments:

Post a Comment

தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே !!!